Monday, March 12, 2018

காண்டவ வன தகனம்



அக்னி களைப்படைந்தான். காண்டவ வனத்தை புசிக்கும் ஆசை நிராசையானதால் நேரே பிரம்மதேவரிடம் சென்றான். முறையிட்டான்.

“அக்னியே! நீ இன்னும் சிலகாலம் பொறுத்திருந்தால் நரநாராயணர்கள் உன் உதவிக்கு வருவார்கள்”
சரியென்று தலையாட்டிக் கேட்டுக்கொண்டு திரும்பிவிட்டான் அக்னி.
நீண்டகாலத்திற்குப் பின்னர் அந்த நரநாராயணர்கள் அவதரித்திருக்கிறார்கள் என்று தெரிந்து கொண்டான். மீண்டும் பிரம்மனிடம் சென்றான்.
“நீ இனி கவலை கொள்ள வேண்டாம். அந்த நரநாராயணர்கள் அர்ஜுனன் என்றும் வாசுதேவன் என்றும் பூலோகத்தில் அவதரித்திருக்கிறார்கள். இனி இந்திரனே நேரே வந்தாலும் அடக்கிவிடுவார்கள். அவர்களிடம் சென்று ஒத்தாசை கேள். அந்த வனத்தை நீ இனி தகிக்கலாம்.”
அப்போதுதான் அக்னி கிருஷ்ணார்ஜுனர்களிடம் ஓடி வந்தான். யமுனை சலசலத்து ஓடிக்கொண்டிருந்தது. அந்த நதிக்கரையியிலிருக்கும் காண்டவ வனமருகில் இருவரும் சிரித்துப் பேசிக் கொண்டிருக்கும்போது தனது காண்டவ வனப் பசிக்கு உதவி செய்யுமாறு விண்ணப்பித்தான்.
”அக்னிபகவானே! எவரையும் வீழ்த்தும் திவ்யாஸ்திரங்கள் என்னிடம் நிறைய இருக்கிறது. ஆனால் என்னுடைய வேகத்துக்கு ஈடுகொடுக்கும் வில்லொன்று இன்னும் எனக்கு அகப்படவில்லை. அதே போல நான் ஓய்வில்லாமல் பாணங்களை விடுவேன். அதை போட்டுக்கொள்ளும் அம்பறாத் தூணிகள் வேண்டும். பின்னர் அசுவங்களும் தேரும் போருக்கு இன்றியமையாதவை. ஆகையால் வெண்ணிரப் புரவிகளையும் சூரியனுக்கு ஒப்பான ஒளிச் சுடர் விடும் தேரையும் எனக்களிப்பாயாக.”
அக்னி அனைத்தையும் கேட்டுக்கொண்டிருந்தான். ஒரு கணம் கிருஷ்ணனைத் திரும்பிப் பார்த்த அர்ஜுனன் மீண்டும் சில கோரிக்கைகளை அவனிடம் வைத்தான்.
“ம்... அப்படியே கிருஷ்ணன் எந்த ஆயுதத்தினால் நாகர்களைக் கொல்லுவாரோ அதையும் நீயே அளிக்கவேண்டும். இந்தக் கருவிகளை நீ எங்களுக்குக் கொடுத்தால் நான் உனக்கு உதவுவதில் சிரமம் இருக்காது” என்றான் அர்ஜுனன்.

அக்னிபகவான் கண்களை மூடி தியானம் செய்தான். திக்பாலகர்களுள் அதிதியின் புத்திரனும் ஜலத்துக்கு அதிபதியுமான வருணனைச் சந்திக்க எண்ணினான். அடுத்த கணம் வருணன் அவன் எதிரே தோன்றினான்.
"வருணனே! உனக்கு ராஜாவான சந்திரன் கொடுத்த காண்டீவம் என்னும் வில்லையும் அஸ்திரம் வற்றாத இரண்டு அம்பறாத் தூணிகளையும் அனுமன் கொடியோடு கூடிய ரதத்தையும் கொடு. காண்டீவத்தினால் பார்த்தனும் சக்கரத்தினால் ஸ்ரீகிருஷ்ணனும் மிகப்பெரிய காரியம் ஒன்றை செய்யப்போகிறார்கள்.”
“அப்படியே செய்கிறேன்” என்றான் வருணன்.
பளிச் பளிச்சென்று மின்னல் வெட்டியது போன்று ஒளி தோன்றியது. விண்ணுக்கும் பூமிக்கும் ஒரு கண்ணுக்குத் தெரியாத பாலம் போடப்பட்டது. வெண்புகை தோன்றி ஒரு பெரும் வில் வந்தது. பின்னாலேயே இரண்டு பெரிய அம்பறாத் தூணிகள் வந்தன. இரண்டையும் அர்ஜுனன் கையில் அளித்தான் அக்னி. அவர்கள் அருகில் பொன்மாலை போட்டு கந்தர்வலோகக் குதிரைகள் பூட்டப்பட்ட ஒரு வெள்ளிமயமான ஒரு இரதம் வந்து இறங்கியது. அதன் தலைக்கொடியில் அனுமன் காற்றில் சடசடத்தார்.
அர்ஜுனன் அந்த ரதத்தை வலம் வந்தான். நமஸ்கரித்தான். அக்னிக்கு தனது வந்தனத்தைத் தெரிவித்தான். கவசங்களுடனும் கிரீடத்துடனும் கம்பீரமாக அந்த ரதத்தில் ஏறினான். காண்டீவம் எனும் அந்த தனுஸைக் கையில் எடுத்து அதில் நாண் பூட்டினான். நாணேற்றப்படும் போது ஏற்பட்ட சப்தத்தால் அனைவரும் நடுங்கினார்கள்.
அக்னிக்கு பரம சந்தோஷம். பின்னர் கிருஷ்ணரைத் துதித்து அவருக்கு ஆக்னேயாஸ்திரத்தையும் சக்ராயுதத்தையும் அளித்தான்.


“மதுசூதனரே! உம்மால் யாவரையும் எப்படியும் ஜெயிக்க முடியும். இருந்தாலும் இந்த நாகர்கள் வனம் எரியும் போது வந்தார்களென்றால் இந்த சக்ராயுதத்தால் அவர்களைப் பஸ்பமாக்க முடியும்” என்று பஸ்பம் செய்யும் அக்னியே சொன்னான்.
கிருஷ்ணார்ஜுனர்கள் தயார். அக்னி கொஞ்சம் கொஞ்சமாக பிரகாசமடைந்தான்.
“அக்னிபகவானே! நீர் இப்போதே இந்த வனத்தை எரிக்கலாம். உமக்குத் தடை வந்தால் அதை ஒடுக்குவதற்கு நாங்கள் தயாராக இருக்கிறோம்” என்றான் அர்ஜுனன்.
அக்னி உடனே பெரும் ரூபமெடுத்துக்கொண்டான். மேரு மலையே அக்னியாய் நிற்பது போன்ற தோற்றம். எல்லாப்புறமும் தகித்தது. அப்படியே நெருப்புப் பந்து போல ஏழு பாகங்களாகப் பிரிந்தது. காண்டவ வனத்தை சுற்றிக்கொண்டான் அக்னி. எல்லாப்புறங்களிலிருந்தும் சாம்பலாக்க ஆரம்பித்தான். வனத்துக்குள் விலங்குகளுக்கும் தக்ஷகனுக்கும் அங்கிருந்து எப்படி தப்பிப்பது என்று பெரும் சவால் ஏற்பட்டது. தக்ஷகன் தன் நண்பன் கைவிடமாட்டான் என்று நம்பிக்கை கொண்டிருந்தான்.
காட்டின் இருபுறமும் அர்ஜுனனும் கிருஷ்ணனும் அரண் போல ரதங்களில் நின்று கொண்டார்கள். தீயிலிருந்து தப்பித்து வரும் விலங்குகளை வேட்டையாடினார்கள். வனத்தின் மரங்களிலிலிருந்த பக்ஷிகள் வெப்பம் தாளாமல் விண்ணுக்கு ஏறிய போது அர்ஜுனனின் காண்டீவத்தால் அங்கமெல்லாம் அம்பு தைக்கப்பட்டு எரியும் நெருப்பில் அக்னிக்கு உணவாக விழுந்தன. காட்டுப் பிராணிகளின் கதறும் ஒலி சமுத்திரத்தைக் கடைவது போலக் கேட்டது.
ஜ்வாலைகள் மேரு மலையின் சிகரமளவிற்கு எழும்பியது. தேவலோகம் உஷ்ணமாகி தேவர்கூட்டம் இந்திரனை அடைந்தது.
“இதென்ன பிரளய காலம் போலிருக்கிறதே! வெப்பம் தகிக்கிறதே. யாராலும் பொறுத்துக்கொள்ள முடியவில்லையே” என்று முறையிட்டார்கள்.
காண்டவ வனத்தின் மேலே மிகுதியான மழையைப் பெய்ய வைத்தான் தேவேந்திரன். வானத்திலேயே வற்றிப்போகும்படி செய்தான் அக்னி. காண்டவ வனத்தை அந்த மழை அடையவில்லை. சினமுற்ற இந்தின் இன்னும் பெரும் பெரும் மேகங்களைத் திரட்டி எதிரில் நிற்கும் ஆள் தெரியாதபடி பலத்தை மழையை காண்டவ வனத்தின் மேலே பொழியச் செய்தான். உலகமே இருட்டியது போலானது. சமுத்திரமே காட்டின் மேலே வந்து கொட்டியது போல காண்டவவனத்தின் மீது மழை பெய்தது.
அர்ஜுனன் தனது அஸ்திரங்களால் காண்டவ வனத்தை மூடினான். அங்கிருந்து எந்த பிராணியும் தப்பிக்க முடியாதது போலாயிற்று. காண்டவ வனம் எரியும் போது தக்ஷகன் என்னும் நாகர்களின் அரசன் குருக்ஷேத்திரத்திற்குப் போயிருந்தான். அவன் மகன் அசுவஸேனன் அங்கிருந்தான். தீயிலிருந்து விடுபட்டு ஓடிவிட மிகவும் பிரயர்த்தனப்பட்டான். ஊஹும். முடியவில்லை. அசுவஸேசனனின் தாயாகிய நாககன்னிகை அவனை விடுவிக்கும் பொருட்டு அவனை விழுங்கினாள். பின்னர் மேலே கிளம்பினாள்.
தயாராக நின்றூகொண்டிருந்த அர்ஜுனன் அந்த நாக கன்னிகையின் தலையை அறுத்தான். மேலிருந்து அதை இந்திரன் பார்த்தான். அசுவஸேனனை விடுவிப்பதற்காக தாங்க முடியாத காற்றையும் மழையையும் உடனே வரவழைத்து அர்ஜுனனை மயக்குமுறச் செய்தான். அந்த சமயத்தில் அசுவஸேனன் விடுபட்டான். மூர்ச்சை தெளிந்த அர்ஜுனன் அந்த அசுவஸேனனை “நீ நிலையற்றவனாகப் போகக்கடவாய்” என்று சபித்தான். அப்போது கிருஷ்ணனும் சபிப்பதில் சேர்ந்துகொண்டான் .
அர்ஜுனனுக்கு பெரும் கோபம் ஏற்பட்டது. இந்திரனுடன் துவந்த யுத்தம் செய்ய ஆரம்பித்தான். இருவரும் ஆக்ரோஷமாகச் சண்டையிட்டார்கள். இடி மின்னல்கள் உண்டாக்கு அதிக மழை வர்ஷிக்கும் அஸ்திரத்தை இந்திரன் பிரயோகிக்க அர்ஜுனன் வாயுவாஸ்திரத்தைப் பிரயோகித்து அடக்கினான். சட்டென்று மழைத்தாரகைகள் மறைந்துபோயின. இருள் நீங்கியது. குளிர்ந்த காற்று வீசி அமைதியான சூழல் நிலவியது.
அக்னி இன்னமும் ஆவேசத்துடன் பிராணிகளின் கொழுப்பை விழுங்கி எரிய ஆரம்பித்தான். இப்போது பக்ஷிகள் கூட்டம் கிருஷ்ணார்ஜுனர்களை எதிர்த்தது. அவர்களோடு கூட நாகர்கள் விஷத்தைக் கக்கிக்கொண்டு அர்ஜுனன் அருகில் வந்தார்கள். பாணங்களினால் அவற்றை அறுத்தான் அர்ஜுனன். இந்திரனுக்கு கோபம் பொங்கியது. வஜ்ராயுதத்தை ஓங்கிக்கொண்டு ஐராவதத்தில் ஏறி அர்ஜுனனுடன் சண்டையிடுவதற்கு வந்தான்.
இந்திரனே வஜ்ராயுதத்தை தூக்கிய பிறகு இதர தேவர்களும் ஆயுதபாணிகளாக களம் புகுந்தார்கள். கிருஷ்ணார்ஜுனர்களை எதிர்த்து யுத்தம் செய்ய வந்தார்கள். அர்ஜுனன் அனைவரையும் பந்தாடினான். தேவக்கூட்டத்தையே பின்வாங்கச் செய்த கிருஷ்ண அர்ஜுன பராக்கிரமத்தைக் கண்டு ரிஷிகள் வியந்தார்கள். இந்திரன் சினத்தால் முகம் சிவந்தான்.
அர்ஜுனனின் பராக்கிரமத்தை அறிய விரும்பிய இந்திரன் கல் மழை பொழியச் செய்தான். அர்ஜுனனின் காண்டீவத்திலிருந்து புறப்பட்ட அம்புகள் கற்களை மறைத்து விண்ணுலகம் அனுப்பியது. இந்திரன் அதிர்ந்தான். பின்னர் அதைவிட வேகமாக கல் மழை பொழியச்செய்தான். அர்ஜுனன் அசரவில்லை. மின்னலெனப் புறப்பட்ட அம்புகள் அவைகளைத் தடுத்தன.
இங்கே யுத்தம் நடந்துகொண்டிருக்கையில் அக்னி தனது வேலையில் மும்முரமாக இருந்தான். காண்டவ வனத்தின் முக்கால் பங்கை பக்ஷித்திருந்தான்.
இந்திரன் உடனே மந்த்ர மலையின் மரங்களர்ந்த ஒரு சிகரத்தைப் பெயர்த்து அர்ஜுனன் மீது எறிந்தான். ஜ்வலிக்கின்ற அம்புகளை அதன் மீது எய்தான் பார்த்தன். அந்த மலைச் சிகரம் ஆயிரமாயிரம் துண்டுகளாக உடைந்து காண்டவ வனத்தின் மீது விழுந்து எஞ்சியிருந்த பிராணிகளைக் கொன்றது.
[காண்டவதாஹ பர்வம் முடிந்தது]


கிருஷ்ணர் தனது சக்ராயுதத்தைப் பிரயோகித்தார். வனத்தினுள் புகுந்து சர்ப்பங்களையும் பேய் பைசாசங்களையும் அறுத்து விட்டு திரும்பத் திரும்ப அவர் கைகளில் சக்ராயுதம் தஞ்சமடைந்தது. கிருஷ்ணனின் சக்ரம் அல்லது அர்ஜுனன் காண்டீவம் என்று இருமுனைத் தாக்குதலில் அந்த இடம் பிரளயகாலம் போல காட்சியளித்தது.
தேவர்கள் திரும்பிச் சென்றனர். அர்ஜுனனின் பராக்கிரமத்தைச் சிலாகித்துக் கொண்டிருந்தான் இந்திரன். அப்போது ஒரு அசரீரி ஒலி கேட்டது.
“இந்திரனே! உன்னுடைய ஸ்நேகிதன் தக்ஷகன் காண்டவ வனத்தில் இல்லை. அவன் குருக்ஷேத்திரத்தில் இருக்கிறான். கிருஷ்ணார்ஜுனர்களை எவ்விதத்திலும் உன்னால் தோற்கடிக்க முடியாது. இந்தக் காண்டவ வனம் அழிவது விதியினால் நேர்ந்தது. நீ இதை விட்டுச் செல்லலாம்” என்று கம்பீரத் த்வனியுடன் சொன்னது.
இந்திரன் அந்த இடத்தை விட்டு அகன்றான். அக்னி வாயுவுன் துணையோடு காண்டவ வனத்தை வேகமாக எரிக்க ஆரம்பித்தான். மிருகங்களின் கொழுப்புகள் கால்வாய் போல ஓடியது. ரத்தம் ஆறாக ஒரு புறம் ஓடியது. அக்னி பொறுமையாக அனைத்தையும் குடித்தான்.
அப்போது மயன் என்னும் அசுரன் தக்ஷகன் வீட்டிலிருந்து தப்பித்து ஓடினான். அதைப் பார்த்த கிருஷ்ணன் அவன் மேல் சக்ராயுதத்தை ஏவத் தயாரானான். அப்போது அவன் நேரே அர்ஜுனன் காலடியில் வந்து விழுந்து அபயம் கேட்டான். அர்ஜுனனும் அவனைக் காப்பாற்றுவதாக வாக்குதத்தம் செய்தான்.
மயன் தப்பிக்க நினைத்த தினம் அக்னி காண்டவ வனத்தை எரிக்க ஆரம்பித்து பதினைந்து தினங்கள் ஆகியிருந்தது. அந்த வனத்தில் அசுவஸேனன், மயன் மற்றும் சார்ங்கம் என்ற நான்கு பக்ஷிகள் மட்டும் அழிவில்லாமல் இருந்தது.
*
“வைசம்பாயனரே! அந்த சார்ங்க பக்ஷிகளை மட்டும் அக்னி ஏன் தகிக்கவில்லை?” என்று கேட்டான் ஜனமேஜயன்.

வைசம்பாயணர் மந்தபால ரிஷியின் கதை சொல்ல ஆரம்பித்தார்.
*

ஆத்ம சுத்தியுள்ளவர் மந்தபாலர் என்னும் மஹரிஷி. வேதம் ஓதி தர்மத்தில் நின்றவர். அவர் ஊர்த்துவரேதஸாக இருந்தார். தேகம் விட்ட பிறகு பிதிர்லோகத்தை அடைந்தார். அந்த லோகங்கள் மூடிக்கிடந்தன. தவத்தின் பலனை அடையவில்லை என்று வருத்தமுற்று யமனுக்குப் பக்கத்திலிருந்த தேவர்களிடம் “ஏன் எனக்கு இவ்வுலகங்கள் மூடிக்கிடக்கின்றன.” என்று கேட்டார்.
“பிராம்மணரே! மனிதர்கள் பிறக்கும் போதே மூன்று விதத்தில் கடன்காரர்களாகப் பிறக்கிறார்கள். சாஸ்தோத்திரமான கருமங்களைச் செய்வது, பிரம்மச்சரியமிருப்பது மற்றும் சந்ததி உண்டாக்குவது என்று மூன்று கடன்கள். இதில் நீர் மூன்றாவது கடனை அடைக்கவில்லை. புத் என்ற நரகத்திலிருந்து காப்பதற்கு புத்திரன் இருக்க வேண்டும். உமக்கு சந்தானமில்லை. ஆகையால் இக்கதவுகள் மூடிக்கிடக்கின்றன”
உடனே எளிதில் புத்ர சந்தானம் ஏற்படும் வழி என்ன ஆராய்ந்தார். பக்ஷி ரூபமெடுத்தால் குஞ்சுகள் நிறைய ஒரே நேரத்தில் பிறக்கும் என்பதால் சார்ங்க பக்ஷி ரூபமெடுத்து ஜரிதை என்கிற சார்ங்கியை அடைந்து நான்கு புத்திரர்களைப் பெற்றார். அவைகள் சிறு குஞ்சாக இருக்கும்போதே விட்டுவிட்டு லபிதை என்னும் இன்னொரு சார்ங்கியிடம் சென்றுவிட்டார்.
லபிதையுடன் காண்டவ வனத்தில் சஞ்சரித்துக்கொண்டிருந்த சார்ங்க ரூப மந்தபால மஹரிஷி அக்னியைக் கண்டார். அவன் தனது குஞ்சாக இருக்கும் புத்திரர்களை எரித்துவிடுவானே என்று பயந்து அவனைத் துதித்தார். அவனும் அவரது ஸ்தோத்திரத்தில் மகிழ்ந்து அந்தக் குஞ்சுகளை எரிக்கமாட்டேன் என்று சத்தியம் செய்து கொடுத்தான்.
ஜரிதையுடன் ஒரு உயர்ந்த மரத்தின் கூட்டில் வசித்துக்கொண்டிருந்த அந்த இறகு முளைக்காத குஞ்சுகள் அக்னி தங்களை எரித்துவிடும் என்று பீதியில் இருந்தன. ஜரிதையும் மிகவும் வருத்தமுற்றாள். அப்போது அந்த மரத்தின் கீழியிருக்கும் எலி வளையில் அந்தக் குஞ்சுகளை நுழைத்துக் காப்பாற்ற எண்ணினாள். ஆனால் அவைகள் அதற்கு மறுத்துவிட்டன.
”எலி கடித்து சாவதற்கு பதில் அக்னியில் எரிந்து உயிரை விட்டால் பிரம்ம லோகம் கிடைக்கும். ஆகையால் நாங்கள் வரமாட்டோம்” என்றன.
“அந்த எலியை ஒரு பருந்து தூக்கிக்கொண்டு போய்விட்டது. ஆகையால் அங்கே எலி இல்லை. நீங்கள் எல்லோரும் அதில் நுழைந்துகொள்ளுங்கள். நான் காப்பாற்றுகிறேன்” என்று கெஞ்சினாள் ஜரிதை. ஆனால் அவைகள் அவ்விடம் விட்டு வர மறுத்தன. உடனே ஜரிதை அக்னி பயமில்லாத வேறிடம் பறந்து சென்றுவிட்டாள்.
அக்னி அந்த மரத்தை நெருங்கினான். அப்போது அந்த சார்ங்க பக்ஷிகள் அழுதுகொண்டே அவனைத் துதித்தன. “எங்கள் தந்தை யாருடனோ சென்றுவிட்டார். தாயும் பறந்துவிட்டாள். எங்களை நீ ரக்ஷி” என்று சொல்லி அவனை ஸ்தோத்திரம் பாடின. அதில் அகமகிழ்ந்த அக்னி “உங்கள் தந்தையான மந்தபாலர் ஏற்கனவே என்னைத் துதித்து உங்களை எரிக்காமல் இருக்க வரம் கேட்டார். கொடுத்துவிட்டேன். உங்களைத் தகிக்க மாட்டேன்” என்று வரம் கொடுத்துச் சென்றுவிட்டான்.
லபிதையிடம் இருந்த மந்தபாலருக்கு தனது குஞ்சுகள் எப்படியிருக்குமோ என்று மனம் தவித்தது. ஆகையால் அங்கிருந்து கிளம்பி தனது புத்திர சார்ங்கங்கள் இருக்குமிடத்துக்கு விரைந்தார். ஜரிதையும் என்னாயிற்றோ ஏதாயிற்றோ என்று பயந்து அவ்விடத்துக்கு வந்தது. அவர்களுக்கு தீங்கில்லை என்று தெரிந்ததும் ஜரிதை ஆனந்தக் கண்ணீர் சொரிந்தாள்.
ஜரிதையும் அந்த புத்திர சார்ங்கங்களும் சேர்ந்து மந்தபாலரை அவமானம் செய்தார்கள். “புத்திர சந்தானத்தை அடைந்த பிறகு ஸ்திரீகள் புருஷனிடம் மரியாதை வைப்பதில்லை. அக்னியிடம் நான் வரம் கேட்டுதான் இவர்களைக் காப்பாற்றியுள்ளேன்” என்றதும் அவைகள் மந்தபால மஹரிஷியுடன் சமாதனமாகச் சென்றார்கள்.
**
இருபத்தோறு நாட்களில் அக்னி காண்டவ வனத்தை முழுவதும் தகனம் செய்தான். இந்திரன் கிருஷ்ணார்ஜுனர்களின் முன்னே தோன்றி “தேவர்களாலும் செய்ய இயலாத காரியத்தை நீங்கள் இருவரும் செய்திருக்கிறீர்கள். அர்ஜுனா என்ன வரம் வேண்டும் கேள்” என்றான். “உன்னிடம் இருக்கும் அஸ்திரங்கள் அனைத்தும் வேண்டும்” என்றான் அர்ஜுனன். “சிவபெருமான் உனக்குப் பிரசன்னமாவார். அந்தக் காலம் எனக்கும் தெரிய வரும். அப்போது நானும் வந்து உனக்கு என்னிடமிருக்கும் திவ்யாஸ்திரங்கள் அனைத்தும் தருவேன்” என்றான்.
அக்னி அவர்களுக்கு வந்தனம் செய்து “அர்ஜுனா! சிறந்த புத்தியுள்ளவனே! காண்டீவம் என்னும் வில்லும் பாணம் வற்றாத அம்பறாத் தூணிகளும் ஹனுமத்வஜமுள்ள ரதமும் இருப்பதால் எவரையும் நீ ஜெயிப்பாய். க்ஷேமமாக இரு” என்று ஆசீர்வதித்து விடைபெற்றான்.
கிருஷ்ணன், அர்ஜுனன் மற்றும் அசுரச் சிற்பியான மயன் ஆகியோர் மட்டும் அங்கே இருந்தார்கள். மூவரும் கால்நடையாக நடந்து அந்த அழகான யமுனை ஆற்றங்கரையில் அமர்ந்தார்கள்.
[மயதர்சன பர்வம் முடிந்தது]
[ஆதிபர்வம் நிறைவடைந்தது ]

யமுனை நதிக்கரையில்....


துவாரகா மக்களுக்கு அர்ஜுனன்-சுபத்ரா திருமணத்தில் கிருஷ்ணனின் லீலை இருக்கிறது என்கிற விஷயம் கசிய ஆரம்பித்தது. “விப்ருதுஸ்ரவஸுக்கு முன்னமே தெரியுமாம். அர்ஜுனனைக் கட்டிக்கொண்டு இதைச் சொல்லியிருக்கிறான்” என்று பேசிக்கொண்டார்கள்.

பலராமர், அக்ரூரர், விப்ருது, சாத்யகி என்று பல முக்கிய யாதவர்களை அழைத்து காண்டவபிரஸ்தம் சென்று சுபத்ராவுக்கு சீர் கொடுத்து கௌரவித்து அர்ஜுனனையும் தர்மாதிகளையும் பார்த்துவிட்டு அத்தை குந்தியையும் நமஸ்கரித்துவிட்டு வரலாம் என்று கிருஷணன் ஆலோசனை நடத்தினார். யாரார் என்னென்ன பொருட்கள் கொண்டு வரவேண்டும் எவ்வளவு சேகரிக்க வேண்டும் எப்படியெல்லாம் ஏற்றி இறக்க வேண்டும் என்று விஸ்தாரமாக ஆலோசனை நடத்தப்பட்டது.
ராஜபாட்டை முழுக்க பொன்னாலும் பொருட்களாலும் நிரப்பட்ட ரதங்கள் அணி வகுத்து நிற்க பெருமையோடு முதல் ரதத்தில் கிருஷ்ணரும் பலராமரும் ஏறிக்கொண்டார்கள். துந்துபி வாத்தியங்கள் முழங்க அனைவரும் காண்டவபிரஸ்தம் நோக்கிப் புறப்பட்டார்கள்.
நகரத்தின் எல்லையில் கிருஷ்ணபலராமர்கள் வந்துவிட்டார்கள் என்ற செய்தி கேள்விப்பட்டவுடன் யுதிஷ்டிரர் நகுலசகதேவர்களை அனுப்பி எதிர்கொண்டு அழைக்கச்சொன்னார்.
நகரத்தின் வீதிகளில் துளிக்கூட குப்பை இல்லை. அலம்பிவிட்டது போல பளீரென்று இருந்தது. வீதியின் இருபுறமும் மாடமாளிகைகள் இருக்க அவற்றின் சாளரங்களை இணைத்து தோரணங்கள் கட்டப்பட்டிருந்தது. நடைபாதைகளில் புஷ்பங்கள் இறைத்திருந்தார்கள். அகில் சந்தனக் குழம்புகளை சாலையோரங்களில் தெளித்திருந்தார்கள். மயக்கும் மணம் வீசியது. ஆங்காங்கே ஸ்ரீகிருஷ்ணரின் ரதம் நிறுத்தப்பட்டு அவருக்கு பூஜை செய்யப்பட்டது. பலராமர் இடுப்பில் இருகைகளையும் புதைத்துப் பெருமிதமாக தனது தம்பியைப் பார்த்துக்கொண்டு நின்றார்.
அனைவராலும் பூஜிக்கப்பட்ட ஸ்ரீகிருஷ்ணன் யுதிஷ்டிரரின் அரண்மனை வந்தடைந்தார். யுதிஷ்டிரர் ஓடோடு வந்து எதிர்கொண்டு அழைத்து கண்ணனின் உச்சி மோந்தார். கட்டியணைத்தார். பீமன் அருகில் இருந்தான். கிருஷ்ணன் அவனை விஜாரித்தார். யாதவர்கள் அனைவரையும் தர்மபுத்திரர் தனித்தனியாக விஜாரித்தும் அவரவர்களுக்குத் தக்கபடி ஆசீர்வாதம் செய்தும், ஆசீர்வாதம் வாங்கிக்கொண்டும், ஆலிங்கனம் செய்தும் மரியாதை செலுத்தினார். குந்தியும் திரௌபதியும் பாண்டவர்களுடன் வந்து இணைந்து கொண்டு கிருஷ்ணரையும் பலராமரையும் நலம் விஜாரித்தார்கள்.
”சுபத்ரா எங்கே?” என்று அர்ஜுனனைப் பார்த்து விஜாரித்துக்கொண்டே அருகில் வந்தார் பலராமர். அதற்குள் அக்ரூரர் பின்னால் பார்த்து கண்ணை அசைக்க பெரிய பெரிய அண்டாக்கள் போன்ற பாத்திரங்களில் திரவியங்கள் நிரப்பி யாதவ சேவகர்கள் எடுத்துக்கொண்டு அரண்மனைக்கு உள்ளே சென்றார்கள்.
ஒவ்வொரு அண்டாக்களிலும் ரத்னமும், பவிழமும், முத்தாஹாரங்களும் வாயிலிருந்து வழியும் வரை இருந்தது. தூக்கிக்கொண்டு செல்வோர் ஆட்டியதால் தரையெங்கும் இறைந்திருந்தது. கிருஷ்ணரும் பலராமரும் அங்கு வந்த பிறகு சுபத்திரைக்கு ஏழு ராத்திரிகள் கல்யாண உற்சவம் நடந்தது. அப்போது ஸ்ரீகிருஷ்ணர் விதம்விதமான பொருட்களைப் பாண்டவர்களுக்கு சீதனமாகக் கொடுத்தார்.
ரதங்கள் ஆயிரம், சாரதிகளுடன். கறவைப் பசுக்கள் பதினாயிரம். வெண்ணிறமான குதிரைகள் ஆயிரம், மை நிறமுள்ள கேசத்தையுடைய ஐநூறு கோவேறு கழுதைகளையும், வெளுத்தவை ஐநூற்றையும் கொடுத்தார். நன்றாக அலங்காரம் செய்யப்பட்ட வேலைகளில் சுறுசுறுப்புள்ள இளமைப் பருவத்துப் பெண்டீர் ஆயிரம். ஏறத்தக்க லக்ஷம் குதிரைகள். கட்டிகளாகவும் நெருப்புக்குப் ஒப்பான உயர்ந்த பொன்னை பத்து மனிதர்கள் தூக்கும் அளவிற்குக் கொண்டு வந்து கொட்டினார். பொன் மாலைகள். கன்னியாதனமாக இப்படி மிகுதியான பொருட்களை கிருஷ்ணரும் பலராமரும் பாண்டவர்களுக்கு அளித்தார்கள்.
நிறைய நாட்கள் அந்த வ்ருஷ்ணி குலத்தவர்கள் அந்த அரண்மனையில் ஆடிக் களித்தபிறகு அவர்களிடம் விடைபெற்றுக்கொண்டு தங்கள் தேசம் சென்றார்கள். பலராமரும் புறப்பட தயாரானார். அத்தை குந்தி சுபத்திரையுடன் அங்கே வந்து நின்றாள். பலராமர் சுபத்திரையிடம் சென்று அவளை ஆரத்தழுவிக்கொண்டாள். பக்கத்தில் இருந்த திரௌபதியிடம் கைகூப்பி “இவன் இனிமேல் உன் அடைக்கலம்” என்றார். குந்தியின் காலில் விழுந்து நமஸ்கரித்து ஆசீர்வாதம் வாங்கிக்கொண்டார். விடுவிடுவென்று அந்த சபையை விட்டு நடந்து ரதமேறி துவாரகா சென்றுவிட்டார்.
கிருஷ்ணன் அர்ஜுனனுடன் அங்கேயே இருந்தான். ஒன்றாக வேட்டையாடினார்கள். தோள்மேல் கை போட்டுக்கொண்டு வனமெங்கிலும் திரிந்தார்கள். யமுனைக்குச் சென்று நீராடினார்கள். சந்தோஷமாக நாட்கள் கழிந்தது. சுபத்திரை அபிமன்யுவைப் பெற்றெடுத்தாள். ( அபி-பயமற்றவன்; மன்யு-கோபமுள்ளவன்). இவன் பிறந்ததும் யுதிஷ்டிரர் பதினாயிரம் பசுக்களையும் பிராமணர்களுக்கு பொன்னையும் பொருளையும் வழங்கினார். பத்து வகையான தனுர்வேதத்தையும் தேவலோகம் மற்றும் மானுடலோகத்திலுள்ள அனைத்து வித்தைகளையும் அர்ஜுனனிடமிருந்து அபிமன்யு கற்றுக்கொண்டான்.
பின்னர் திரௌபதி ஐந்து கணவர்களிடமிருந்தும் ஐந்து புத்திரர்களைப் பெற்றாள். யுதிஷ்டிரருக்கு பிரதிவிந்தியன், பீமசேனனுக்கு சுதசோமன், அர்ஜுனனுக்கு சுருதகர்மா, நகுலனுக்கு சதானீகன், சகதேவனுக்கு ஸ்ருதசேனன் என்று ஒவ்வொரு வருட இடைவெளியில் ஈன்றெடுத்தாள். தௌம்யரிஷி இவர்கள் அனைவருக்கும் ஜாதகர்மம் போன்றவைகளைச் செய்துவைத்தார்.
[ஹரணாஹரண பர்வம் முடிந்தது]
பாண்டவர்கள் இந்திரப்பிரஸ்தத்தில் வசித்தாலும் பீஷ்மர் மற்றும் திருதராஷ்டிரனின் கட்டளையினால் அநேக பகையரசர்களை வென்றார்கள். எல்லையை விஸ்தரித்தார்கள். தர்மராஜரின் அரசாட்சியில் தர்மம் தழைத்தோங்கியது. பருவங்கள் தவறாமல் மழை பொழிந்தது. தானியங்கள் செழித்தன. செல்வம் கொழித்தது. பிராமணர்கள் தங்களது வேதக் கடமைகளை தவறாது செய்தார்கள். இந்திரபிரஸ்த வாழ்வு இன்பமயமாக நகர்ந்துகொண்டிருந்தது.
ஒருநாள் அர்ஜுனன் கிருஷ்ணபகவானை நோக்கி
“கிருஷ்ணா! தாபமாக இருக்கிறது. வா யமுனைக்குச் சென்று நீராடி விளையாடிவிட்டு வருவோம்” என்று சொல்லிக் கையைப் பிடித்து இழுத்தான்.
“சரி... நமக்கு வேண்டியவர்கள் சிலரையும் அழைத்துக்கொண்டு போவோம். அப்போதுதான் பொழுது போகும்” என்றார் ஸ்ரீகிருஷ்ணர்.
கிருஷ்ணார்ஜுனர்கள் இருவரும் தர்மரிடம் அனுமதி பெற்று அநேகம் பேருடன் யமுனைக்குச் சென்றார்கள். யமுனைக் கரையில் காண்டவ வனத்தைக் கண்டார்கள். மான், குரங்கு, புலி, சிங்கம் என்று பலவிதமான விலங்குகள் அங்குமிங்கும் திரிந்தன. பன்னக ராஜா தக்ஷகனுக்கு வசிப்பிடம் அதுதான். ஆங்காங்கே பக்ஷிகளின் ஓசை எதிரொலித்தது. அடிபெருத்த பெரிய மரங்களின் அடர்ந்த கிளைகளினால் சூர்ய ரஸ்மி வனத்துக்குள் புகாமல் இருண்டு கிடந்தது.
கிருஷ்ணார்ஜ்ஜுனர்களோடு சத்யபாமா, ருக்மினி, திரௌபதி மற்றும் சுபத்திரை ஆகியோரும் யமுனா நதிதீரம் சென்றிருந்தார்கள். மதுவகைகள் ஏராளமாக இருந்தது. அனைவரும் அதைப் பருகிக் களித்தார்கள். ஜலத்தில் இறங்கி நீந்தி விளையாடினார்கள். மது உண்ட மயக்கத்தால் ஒருவரையொருவர் விளையாட்டாக அடித்துக்கொண்டார்கள். வேண்டுமென்றே சிரித்துக்கொண்டார்கள். புல்லாங்குழல்கள், வீணைகள் மிருதங்கங்கள் போன்ற வாத்தியங்களை இசைத்து மகிழ்ந்தார்கள்.
கிருஷ்ணனும் அர்ஜுனனும் அந்த இடத்திலிருந்து இன்னும் ரம்மியமாக இருக்கும் பிரதேசத்துக்குள் சென்றனர். அங்கே இருந்த உயர்ந்த ஆசனஙக்ளில் இருவரும் வீற்றிருந்தார்கள். இதுவரை நடந்த விஷயங்களைப் பேசிக் களித்திருந்தர்கள்.
அப்போது ஆச்சா மரம் போல பெரிய பிராமணன் ஒருவன் வந்தான். அவன் உருக்கிவிட்ட தங்கம் போன்ற நிறத்தான். செம்பட்டை மீசையும் தலைக் கேசமும். உயரத்துக்கு தக்க பருமனாகவும் இருந்தன். தாமரையிதழ் போன்ற கண்கள். ஜ்வலிப்பதுபோலிருக்கும் அந்த பிராமணன் அவர்களை நெருங்கி வரும்போது அவன் அக்னியாக இருப்பானோ என்ற சந்தேகத்தில் கிருஷ்ணர் ஆசனத்திலிருந்து எழுந்து நின்றார். பக்கத்தில் அர்ஜுனனும் அப்படியே செய்தான்.
“கிருஷ்ணார்ஜுனர்களே! நான் பிராமணன். எப்போதும் அதிக போஜனம் செய்வேன். உங்களிடம் யாசகம் கேட்கிறேன். என் பசியைத் தீர்த்து வையுங்கள்” என்று வேண்டினான்.
“நீர் எவ்வகையான உணவு கொடுத்தால் திருப்தியடைவீர்? அதை அடைய முயற்சிக்கிறோம்” என்று அர்ஜுனன் கேட்டான்.
“எனக்கு அன்னம் வேண்டான். நான் அக்னி. எனக்கு வேண்டிய உணவை நீங்களே அளியுங்கள்”
இருவரும் பார்த்துக்கொண்டார்கள்.
“இந்த காண்டவ வனத்தை இந்திரன் காப்பாற்றுகிறான். இங்கே அவனது ஸ்நேகிதன் தக்ஷகன் வசிக்கிறான்.”
“நீதான் அக்னியாயிற்றே! எரிப்பதில் உனக்கென்ன சிரமம்?” என்று கேட்டான் அனைத்தும் அறிந்த கிருஷ்ணன்.
“நான் எரித்தால் தக்ஷனின் நண்பனாகிய இந்திரன் மழை பொழிந்து அழித்துவிடுகிறான். அதனால் எனக்குப் பிடித்த இந்தக் காட்டை என்னால் எரிக்க முடியவில்லை”
“நீ ஏன் இந்தக் காட்டை எரிப்பதற்கு இவ்வளவு முயற்சி எடுக்கிறாய்?” என்று கேட்டான் அர்ஜுனன்.
”இந்திரனுக்கு ஒப்பானவனும், கொடையளிப்பதில் தனக்கு ஈடு இணையில்லாதவனும், சிறந்த புத்தியுள்ளவனுமாகிய சுவேதகி என்ற அரசன் ஒருவன் இருந்தான். அவன் நிரம்பின தக்ஷணைகள் கொடுத்து நிறைய வேள்விகள் செய்தான். அவனுக்கு யாகங்களும் தானங்களுமே பிரதானமாக இருந்தது. அதை விடுத்து ராஜாங்க காரியம் எதையும் அவன் நடத்தவில்லை.
ரித்விக்குகளைக் கொண்டு பன்னிரெண்டு வருடங்கள் செய்யக்கூடிய சத்ரயாகம் செய்தான். எப்போதும் புகை கண்களைத் தாக்கியதால் ரித்விக்குகள் மிகவும் சிரமம்டைந்தார்கள். கஷ்டப்பட்டு எப்படியோ அந்த சத்ராயாகத்தை முடித்துவிட்டு கிளம்பினார்கள். அந்த ராஜா இன்னும் நூறு வருஷகாலத்துக்கு ஒரு யாகம் செய்ய முடிவு செய்தான். நிறைய தக்ஷிணைகள் கொடுத்தும் பிராமணர்கள் யாரும் அந்த யாகத்தைச் செய்ய முன் வரவில்லை. அவர்களைக் கெஞ்சிக் கேட்டான் சுவேதகி. ஆனால் அவர்கள் அவன் வேண்டுதலுக்குச் செவி சாய்க்கவில்லை.
“எங்களால் உன் வேகத்துக்கு ஈடு கொடுத்து யாகங்கள் செய்ய முடியவில்லை. நீ ஈஸ்வரனை தியானித்துக்கொள். அவரை நோக்கித் தவம் இரு. அவரே இங்கு வந்து உனக்கு யாகங்கள் நடத்தித் தருவார்” என்று சொல்லிவிட்டு சென்றுவிட்டார்கள்.
ஈஸ்வரனை நோக்கிக் கடும் தவம் இருந்தான் சுவேதகி. கடைசியில் அவன் முன்னே சர்வேஸ்வரன் தோன்றினார்.
“என்ன வரம் வேண்டும்?” என்று கேட்டார்.
:நான் இன்னும் நூறு வருஷஙக்ள் யாகம் செய்யப்போகிரேன். நீரே பிராமணராக வந்து யாகம் செய்ய வேண்டும்”
“வீரனே! இப்போது என்னால் அதைச் செய்ய இயலாது. ஆனால் நாம் ஒரு உடன்படிக்கை செய்துகொள்வோம்”
என்ன என்பது போலப் பார்த்தான் சுவேதகி. பேசத் திராணியில்லை அவனுக்கு.
“நீ பன்னிரெண்டு வருஷஙக்ள் நெய்யால் அக்னிக்கு திருப்தி செய். யாகத்தின் முடிவில் நான் திரும்பவும் வருவேன்” என்றார். அவனுடம் இடைவிடாமல் பன்னிரெண்டு வருஷ காலம் அக்னி மூட்டி அதில் நெய் வார்த்தான். இறுதியில் சங்கரர் மீண்டும் தோன்றினார்.
“சுவேதகி இப்பவும் என்னால் உனக்கு யாகம் செய்விக்க இயலாது. என்னுடைய அம்சமாக இப்பூவுலகத்தில் துர்வாசஸ் என்ற மஹரிஷி இருக்கிறார். அவர் எனக்காக உனக்கு யக்ஞம் செய்வார்” என்றார். பின்னர் துர்வாசரைப் பார்த்து சங்கரர் சுவேதகிக்கு யாகம் வளர்க்கச் சொன்னார்.
“அப்படியே ஆகட்டும்” என்று ஈஸ்வரனிடத்தில் தலை வணங்கிச் சென்ற துர்வாசர் பின்னர் சுவேதகி அந்த பன்னிரெண்டு ஆண்டுகள் செய்யப்படும் சத்ரயாகத்தையும் செய்தான். அந்த யாகம் நடத்தவுடன் அனைவரும் தத்தம் தேசம் சென்றார்கள். பின்னர் சுவேதகி என்னும் அந்த ராஜரிஷி எல்லோராலும் போற்றப்பட்டான்.
சத்ரயாகத்தில் பன்னிரெண்டு வருஷகாலம் நெய்யுண்ட அக்னிக்கு திருப்தி உண்டாயிற்று. அதானால் மற்ற ஹோமங்களிலிருந்து திரவியங்களைக் கொண்டு செல்லவில்லை. அதனால் ஒளி குன்றிப்ப்போனான். வாட்டமடைந்தான். பின்னர் நேரே பிரம்மலோகம் சென்று பிரம்மாவைச் சந்தித்தான்.
“அக்னியே! காண்டவவனம் சத்ருக்களின் கூடாரமாகி விட்டது. நீ இவைகளை எரித்துச் சாம்பலாக்கிப் புசித்துவிடு. இந்த நோயிலிருந்து விடுபடுவாய்” என்றார் பிரம்மா.
பின்னர் அக்னி அந்தக் காட்டைத் தின்ன ஆரம்பித்தான். ஆயிரக்கணக்கான யானைகள் துதிக்கையில் நீர் கொண்டு வந்து அணைத்தது. அநேக அநேக பாம்புகள் மிகுந்த கோபத்தோடு தனது தலைகளினால் தண்ணீர் கொண்டு வந்து அழித்தது. இப்படி அக்னி காண்டவனத்தை எரிக்கப் போகும் போது மீண்டும் மீண்டும் தண்ணீர் ஊற்றி அணைக்கப்பட்டது. இது போல எரிந்த அக்னி ஏழு முறை அவிக்கப்பட்டது.
அக்னி மிகவும் ஆத்திரமடைந்தான்.

இல்லம் திரும்பிய இந்திரன் மகன்


துவாரகையிலிருந்து காண்டவபிரஸ்தம் கிளம்புவதற்கு தயாரானான் அர்ஜுனன். புதுமணத் தம்பதிகளாக இருந்ததால் வெட்கத்தினால் சிவந்தும் நாணமேறியக் கண்களுடனும் அவன் அருகிலேயே சுபத்ரா அமர்ந்திருந்தாள். நேற்றைய பொழுதின் காதல் விளையாட்டுகளின் தாக்கம் இன்னும் அவளிடம் இருந்தது. அவன் சோர்வின்றி இருந்தான்.

“சுபத்ரா! நாம் காண்டவபிரஸ்தம் செல்ல வேண்டும். நீயே அரண்மனைக்குச் செல். அங்கு சென்று ஒரு முக்கியமான வேலை நிமித்தம் நான் வெளியே செல்கிறேன், என்று சொல். பின்னர் சைப்யம், ஸுக்ரீவம், மேகபுஷ்பம், வலாஹகம் என்று நான்கு வெண்மையான குதிரைகள் பூட்டப்பட்ட தேரை நீயே இங்கு கொண்டு வா. ஆயுதங்களை எடுத்து ரதத்தில் போட்டுக்கொள். யாரேனும் உன் தோழிகள் கேட்டால் ஒரு முக்கியமான வேலை என்று சொல். எல்லா ஆயுதங்களையும் மறக்காமல் எடுத்துவா. கதாயுதம் கூட.. வில்லும் அம்பறாத்தூணிகளில் சரங்களையும் நிறைத்துக்கொள். தேவைப்படும்”
ஏதோ போருக்குத் தயாராவது போல தனது இளம் கணவன் பட்டியலிட்டதைக் கண்டு ஆச்சரியப்பட்டாள் சுபத்ரா. ஏன் எதற்கு என்றெல்லாம் எதிர்க் கேள்வியெல்லாம் கேட்காமல் பதிவிரதையாதலால் உடனே ராஜ கிருஹம் நோக்கி நடந்தாள். பாதி தூரத்தில் தோழிகளும் அவளோடு சேர்ந்துகொண்டனர். அவர்கள் ஏதோ பாடலை முணுமுணுத்தபடி இவளது கைக்கோர்த்து அரண்மனை நோக்கி நடந்து வந்தார்கள்.
காவலாளிகள் இருவர் அங்கே நின்று கொண்டிருந்தார்கள்.
“நான் ஒரு வேலையாக அவசரமாகக் கிளம்பிக்கொண்டிருக்கிறேன். சைப்யம், ஸுக்ரீவம் ஆகிய குதிரைகளைப் பூட்டிய கிருஷ்ணனின் ரதத்தைக் கொண்டு வாருங்கள்." கட்டளையிட்டாள் சுபத்ரா.
கழுத்தில் கிங்கிங்கிணிகள் ஒலிக்க குதிரைகள் பூட்டிய தேர் வந்து நின்றது. ரதத்தின் பின்னால் ஆயுதங்களை ஏற்றச் சொன்னாள். காவல்காரர்கள் வித்யாசமாகப் பார்த்தார்கள். அவளது சகிகளுக்கு ஆச்சரியம். சுபத்ரா எங்காவது யுத்தம் செய்யப் போகிறாளா? விழிவிரியப் பார்த்துக்கொண்டிருந்தார்கள்.
தேரில் குதித்து ஏறினாள். கடிவாளங்களைப் பற்றினாள். இரண்டு முறை அந்த கயிற்றை சொடக்கினாள். குதிரைகள் பறந்தன. அர்ஜுனன் இருக்குமிடம் வந்தடைந்தாள்.
“உன் கட்டளையை நிறைவேறிவிட்டேன். இனி காண்டவபிரஸ்தம் எளிதாகச் செல்லலாம். ஓட்டுங்கள்” என்று ரதத்திலிருந்து இறங்கினாள்.
அங்கிருந்த பிராமணர்களுக்கு அரண்மனையிலிருந்து கொண்டு வந்த பக்ஷணங்களைக் கொடுத்தாள். புது வஸ்திரங்களை தானமளித்தாள்.
“கடிவாளங்களைப் பிடிப்பதில் உனக்கு நிகர் யாருமில்லைஎன்று முன்னர் என்னிடம் சொன்னாயே.. இன்று நீயே காண்டவபிரஸ்தம் வரை தேரைச் செலுத்து” என்றான் அர்ஜுனன்.
குதிரைகளுக்கு பூஜையிட்டாள். அதற்குள் அர்ஜுனன் சன்னியாசி வேஷத்தைக் களைந்தான். கவசங்களை அணிந்துகொண்டான். தும்பைப் பூ நிறத்தில் வெள்ளை வஸ்திரத்தை தரித்துக்கொண்டான். பிரம்மாண்டமான வில்லைக் கையில் பிடித்துக்கொண்டு துள்ளி ரதத்தில் ஏறினான். சாரதியாக சுபத்திரை. கடிவாளங்கள் கையில் இருக்க போகலாமா? என்பது போல அர்ஜுனனைப் பார்த்தாள். கண்களை மூடித் திறந்து போகலாம் என்பது போல தலையசைத்தான் பார்த்தன்.
கன்னியாந்தபுரத்துப் பெண்கள் அனைவருக்கும் இது பெரும் ஆச்சரியத்தை அளித்தது. ஒருவருக்கொருவர் இதைப் பற்றிப் பேசிக்கொண்டு இரைச்சல் அதிகமானது.
“சுபத்திரை பாக்கியமானவாள். அர்ஜுனனுக்கு மனைவியாக காண்டவபிரஸ்தம் ஆளப் போகிறாள்.” என்றெல்லாம் தோழிகள் இரைந்து பேசி வாழ்த்தினார்கள். ஒவ்வொருவருடைய குரலும் சுபத்திரையின் செவியை எட்டியபோது அவள் கால் ரதத்திலிருந்து மேலேறி மிதந்தது போல உணர்ந்தாள்.

“சட்...” என்ற கடிவாளத்தின் உதறலில் குதிரை ஓட்டம் பிடித்தது. ரதத்தின் பின்னால் புழுதி மேகம் போல சூழ்ந்தது.
“ஆஹா.. யாதவ குல லக்ஷ்மியான சுபத்ரை அர்ஜுனனுடன் நாடாளப் போகிறாள்” என்று வழியில் பார்த்த சிலர் கூறினார்கள்.
“ஹே! நமது தேசத்துப் பெண்ணை அர்ஜுனன் கவர்ந்து செல்கிறான். அவனை விடாதீர்கள். பிடியுங்கள். அடியுங்கள்” என்று பலர் துரத்த ஆரம்பித்தார்கள். அர்ஜுனன் அவர்களை நோக்கி அம்பு மழை பொழிந்தான். சிதறி ஓடினார்கள்.
ரைவதக மலையை இப்போது தாண்டிக்கொண்டிருக்கிறான். அந்த மலையில் விப்ருதுஸ்ரவஸ் என்னும் யாதவன் கிருஷ்ணனின் கட்டளையினால் அங்கு ஒரு பெரும் சேனையுடன் காவல் இருந்தான். அவன் பலத்தில் பலராமருக்கு ஒப்பானவன். கிருஷ்ணன் ஊரில் இல்லாததால் அவன் தான் அப்போது தேச ரக்ஷகன். ஜனங்கள் ஒரு ரதத்தைத் துரத்திக்கொண்டு ஓடி வருவதும் அவர்களை நோக்கி அந்த ரதத்திலிருப்பவன் அம்பெய்வதையும் பார்த்தவுடன் தனது சேனையை ஏவினான்.
ரைவதக மலைச்சாரலில் ஒரு பெரும் படை புழுதி கிளப்பி இறங்குவதைப் பார்த்தாள் சுபத்திரை.
“பிரபோ! தேரை நிறுத்தட்டுமா? இல்லை நீங்கள் செலுத்துகிறீர்களா? என்ன செய்ய வேண்டும்?” என்று தயங்கினாள்.
“இல்லையில்லை. நிறுத்தாதே. அந்த சைனியத்தின் நடுவே செலுத்து. நான் போர் புரிந்து நீ பார்க்க வேண்டாமா?”
“ஆஹா! ஊரார் உங்கள் வில் வித்தையைப் பாராட்டும் போது நாம் பார்க்க மாட்டோமா என்று ஏங்கியிருக்கிறேன். இன்று அந்த பாக்கியம் எனக்கு. உள்ளே விடுகிறேன் பாருங்கள்”
கடிவாளங்களை இழுத்து விட்டாள். குதிரைகள் சீறிப் பாய்ந்தன. அர்ஜுனன் சுழன்று சுழன்று அம்பெய்தான். ஒரு முறை வலது கையில். மறு முறை இடது கையில் இருந்தது வில். விசாலமான வானத்தையே மறைக்குமளவிற்கு சரமாரிப் பொழிந்தான். அங்கே அவன் விட்ட பாணங்களினால் இருட்டிப்போயிற்று. அந்த யுத்தத்திற்கு வந்தவர்களில் பலர் பீதியடைந்தார்கள்.
ஒரு சமயம் அவன் தொடர்ந்து விட்ட அம்புகளினால் எதிரில் போர் புரிய வந்தவர்களின் கவசங்களை உடைத்தான். மறுமுறை அனைவரின் கையிலிருந்த வில்லும் உடைந்தது. தேர்ச்சக்கரங்களை அம்பினால் அறுத்தான். சுபத்திரைக்கு ஆச்சரியம் அடங்கவில்லை. ஒரு மனிதனால் இப்படிச் சுழன்று சுழன்று ஆயிரமாயிரம் ஆட்களை பந்தாடமுடியுமா? இவன் நரனா? நாரயணனா?
அனைவரையும் வீழ்த்திவிட்டு அவளைப் பார்த்தான் பார்த்தன். சுபத்திரை கையிரண்டையும் எடுத்துக் கும்பிட்டாள். வெள்ளையாடை உடுத்தியிருந்த அர்ஜுனன் மதியகாலத்து சூர்யன் போல ஜொலித்தான். நினைத்தால் அந்தச் சேனையை அழித்திருக்கலாம். ஆனால் சுபத்திரை தேசத்தவர்களைக் கொல்வதற்கு அவனுக்கு மனம் வரவில்லை. நிராயுதபாணிகளாக்கி நிறுத்தினான்.
அப்போது பொன்மயமான ஒரு ரதம் அங்கு நடுவில் வந்து நின்றது. ஒருவன் குதித்து இறங்கினான். அவன் விப்ருதுஸ்ரவஸ். அர்ஜுனனை நோக்கி ஓடிவந்தான்.
“அர்ஜுனா!” என்று நா தழுதழுக்கக் ஆலிங்கனம் செய்துகொண்டான்.
“நீ இங்கு சன்னியாசியாக வெகுநாட்கள் வசிப்பதை ஸ்ரீகிருஷ்ணனால் அறிந்துகொண்டேன். சுபத்திரையின் மேலுள்ள அன்பினால் நீ அப்படிச் செய்தாய். தவறில்லை. நீ க்ஷேமமாகச் செல்.”
அந்த சைனியம் அப்போது பேசாமல் நின்றது. அர்ஜுனன் இப்போது ரதத்தை செலுத்தினான். குதிரைகள் கனைத்துக்கொண்டு முன்பைவிட வேகமாக ஓட்டம் பிடித்தன. அந்த சைனியத்திலிருந்த பலர் இப்போது “அர்ஜுனன் நமது தேசத்துப் பெண்ணைக் கவர்ந்து கொண்டு செல்கிறான்... வாருங்கள்... பிடியுங்கள்...” என்று கூவிக்கொண்டே துவாரகாவை நோக்கி ஓடினார்கள். விப்ருதுஸ்வரஸ் செய்வதறியாது திகைத்தான்.
துவாரகையினுள் ஓடிய மக்கள் ஸுதர்மை என்கிற சபைக்குள் சென்று அங்கிருக்கும் காவலாளியிடம் அர்ஜுனனின் செய்கையைச் சொன்னார்கள். யுத்தம் செய்ய வேண்டும் என்று எண்ணிக்கொண்ட அந்த காவலாளி யுத்த பேரிகையை முழங்கினான்.
பக்கத்தில் இருந்த உள் தீவிற்கு அந்த பேரிகையின் சப்தம் எட்டியது. வ்ருஷ்ணிகள் அனைவரும் உடனே அங்கிருந்து கிளம்பினார்கள். எல்லோரும் அந்த ஸுதர்மை என்ற சபையில் கூடினார்கள். அந்தக் காவலாளி ஜனங்களிடம் கேட்டுத் தெரிந்துகொண்ட அர்ஜுனன் சுபத்திராவைக் கவர்ந்துசென்ற கதையைச் சொன்னான். கிருஷ்ணரும் அந்தக் கூட்டத்தில் இருந்தார்.
மதுபானம் செய்ததினால் சிவந்திருந்த அந்த வ்ருஷ்ணிகளின் கண்கள் இப்போது இரத்தம் போல ஆனது. மது மயக்கத்திலிருந்த சிலர் “சீக்கிரம் ரதத்தைப் பூட்டுங்கள். ஈட்டிகள் வேல்கள் தனுசுகளை எடுத்துக்கொள்ளுங்கள். நாம் போய் சுபத்ராவை மீட்டு வருவோம். தயாராகுங்கள் உடனே!” என்று இரைந்தார்கள்.
அவர்களுக்கு நடுவில் பலராமர் வீற்றிருந்தார். அவரும் கள்ளுண்ட மயக்கத்தில் இருந்தார்.
“நிறுத்துங்கள்! நீங்களாக எந்த முடிவும் எடுக்க வேண்டாம். எல்லாம் அறிந்த கிருஷ்ணன் இங்கே அமர்ந்திருக்கிறான். அவனிடம் கேட்டு முடிவு செய்வோம்” என்றார் பலராமர்.
“கிருஷ்ணா! ஏன் தலை குனிந்து அமர்ந்திருக்கிறாய்? உன்னால் நாங்கள் அர்ஜுனனுக்கு மரியாதை செய்தோம். ஆனால் அவன் அதற்கு தகுதியானவன் அல்லன். அன்னம் உண்ட இடத்திலேயே அந்த பாத்திரத்தை உடைத்தவன் போல இருக்கிறது இந்த அர்ஜுனன் செய்த காரியம். நம்மையெல்லாம் அவமதித்து சுபத்திரையைக் கவர்ந்துவிட்டான். ஒருவன் காலால் மிதிப்பதை பாம்பு பொறுத்துக்கொள்ளாது. அதுபோல அவன் என் தலை மீது கால் வைத்துவிட்டான்”

[சுபத்ராஹரணபர்வம் முடிந்தது]
ஏற்றி இறக்கி சத்தமாகவும் கோபமாகவும் பேசினார் பலராமர். அவருக்கு அனைத்து வ்ருஷ்ணிகளும் ஆதரவாக ஒத்துப் பேசினார்கள். அவர்கள் பேசி முடிக்கும் வரை பொறுமையாகக் காத்திருந்த கிருஷ்ணர் பின்னர் பேச ஆரம்பித்தார்.
“நான் சொல்வதைக் கேளாமல் நீங்கள் சென்றால் அவ்வளவுதான். அர்ஜுனன் இந்தக் குலத்திற்கு அவமானம் செய்யவில்லை. கன்னியை தானமாகப் பெறுவதற்கு அந்த வீரனுக்கு விருப்பமில்லை. கன்னியைப் பிச்சையெடுக்க எந்த வீரன் விரும்புவான்? தன்னுடைய பலத்தினால் ஒரு பெண்ணை சுயமாக வரிப்பது க்ஷத்ரியர்களின் குணவிசேஷம். பராக்கிரமத்தால் பலாத்காரமாக கொண்டு சென்றிருக்கிறான். சுபத்திரை அதிர்ஷ்டசாலி.”
பேச்சை நிறுத்தினார் கிருஷ்ணர். ஒட்டு மொத்த யாதவசேனையும் அவரின் பேச்சைக் கேட்டுக்கொண்டிருந்தது. தொடர்ந்தார்....
“சிவபிரானைத் தவிர அர்ஜுனனை யாராலும் வெல்ல முடியாது. இந்திரனும் இந்திராதி தேவர்களும் கூட அவனை ஜெயிக்கமுடியாது. மேலும் அவன் செல்லும் ரதமும் அதிலிருக்கும் ஆயுதங்கள் என்னுடையவை. அப்படியிருக்கும் போது அவனுக்குத் தோல்வி ஏது? அவனுடன் சமாதானம் செய்து கொள்வோம். மேலும் ஒரு முக்கியமான விஷயம் இருக்கிறது”
அந்த சபை முழுவதும் அமைதியாயிருக்க லேசான ஒரு காற்றடித்து அங்கு ஏற்றி வைக்கப்பட்டிருந்த விளக்குகளின் திரிகளை நாட்டியமாடச் செய்தது.
“அவன் என் அத்தை மகன். எதிரியல்ல.” என்று பொட்டில் அடித்தது போல முடித்தார்.
அவனிடம் சமாதானம் செய்துகொள்ளலாம் என்று பேரிகைகளுடன் அர்ஜுனனைத் துரத்தினார்கள். யாதவர்கள் மீண்டும் பேரிகையோடு பின்னால் வருவதைக் கண்டு எரிச்சலடைந்த அர்ஜுனன் சுபத்திரையிடம்
“அசுத்தர்களும் அதர்மகளுமாகிய இந்தக் குடியர்களை இப்போது மேலோகம் அனுப்பிவிடுகிறேன்” என்று தனுசைக் கையில் எடுத்தான். அம்பை எடுத்துத் தொடுப்பதற்குள் கால்களில் ஈரம் ஏற்பட்டதைப் பார்த்து கீழே குனிந்தான். சுபத்திரை அவன் கால்களைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டு கண்ணீர் உகுத்துக்கொண்டிருந்தாள்.
“சுபத்ரா! ஏனிப்படி அழுகிறாய்?”
“ஸ்வாமி. அவர்களை கொன்றுவிடாதீர்கள். உம்முடைய பராக்கிரமம் எனக்குத் தெரியும். கண நேரத்தில் நீங்கள் பொசுக்கிவிடுவீர்கள். ஆனால் யாதவ குலத்தை அழிப்பதற்காக நான் வ்ருஷ்ணிகளுக்குக் கலியாக பிறந்தேன்” என்று பழிப்பார்கள்.
“சரி! நீயே ரதத்தைச் செலுத்து. அவர்கள் நம்மைப் பிடிக்காத வேகத்தில் ஓட்டு” என்றான் அர்ஜுனன்.
சுபத்ரா ரதத்தை வேகமாகச் செலுத்தினாள். யாதவர்கள் பின்னால் மன்னிப்புக் கேட்டு துரத்தி வந்தார்கள்.அவர்களால் அர்ஜுனனின் ரதத்தினைப் பிடிக்கவே முடியவில்லை. சூரியன் இறங்கி நிலா தோன்றி பின்னர் சூரியன் தோன்றும் நேரமாகியும் சுபத்ரா ரதமோட்டிக்கொண்டிருந்தாள். வனங்களும் கிராமங்களும் நகரங்களும் வந்துபோயின.
இந்திரபிரஸ்தத்தின் எல்லைக்கு வந்துவிட்டான். உள்ளே செல்ல பயந்தான். இன்னொரு பெண்ணுடன் அரண்மனைகுள் நுழைந்தாள் திரௌபதி என்ன சொல்வாளோ என்று நினைத்துக்கொண்டு ஒரு திட்டம் வகுத்தான்.
”சுபத்ரா! கிருஷ்ணை நாமிருவரும் இப்படியே உள்ளே சென்றால் கடும் சொற்களைச் சொல்வாள். ஆகையால் நான் இங்கேயே இருக்கிறேன்.நீ இடைச்சிகளுடன் சேர்ந்து கொண்டு அவர்கள் போல உள்ளே செல். எனது அன்னையிடத்திலும் திரௌபதியிடத்திலும் ஆசீர்வாதம் பெற்றுக்கொள். பின்னர் நான் உள்ளே வருகிறேன்”
“நீர் என்ன செய்யச் சொன்னாலும் செய்வேன்” தீர்மானமாகச் சொன்னாள் சுபத்திரை.
அங்கிருந்து கொண்டே இடையர்களை வரவழைத்தான். தலையில் முண்டாசுடன் ஒரு பெருங்கூட்டம் வந்தது.
“சிறு வயதுள்ள இடையர் குலப் பெண்கள் அனைவரும் திரௌபதியைப் பார்க்கச் செல்லும் சுபத்ராவுடன் வரவேண்டும். சீக்கிரம் ஏற்பாடு செய்யுங்கள்” என்று துரிதப்படுத்தினான்.
சிவப்பு வண்ணத்தில் பட்டுடுத்திக்கொண்டாள் சுபத்ரா. இடைச்சிகளின் கூட்டத்தோடு கூட்டமாகச் சேர்ந்து கொண்டு அரண்மனையை நோக்கிச் சென்றாள். கோபாலர்களின் கோபஸ்திரீகள் போல உள்ளே சென்றாள்.
நேரே சென்று அத்தையாகிய குந்தியை நமஸ்கரித்தாள். குந்திக்கு சுபத்திரையை நன்றாகத் தெரியும். அவளை உச்சிமோந்து ஆசீர்வதித்தாள். பின்னர் திரௌபதியிடம் சென்று காலில் விழுந்து வந்தனம் செய்து எழுந்திருந்தாள். பின்னர் “நான் உனக்கடிமை” என்று சொன்னாள். திரௌபதி இந்த மரியாதையில் விழுந்தாள். அவளை ஆலிங்கனம் செய்துகொண்டாள்.
“நீ சிறந்த கணவனைப் பெறுவாய். அவனுக்கு எதிரிகளே இருக்கமாட்டார்கள். கணவனின் அன்புக்கு உரியவளாவாய். சிறந்த புத்திரனைப் பெறுவாய்” என்று ஆசீர்வாதங்களை அடுக்கினாள். மனம் குளிர்ந்தாள் சுபத்திரை. பின்னர் குந்தி சுபத்திரையை அழைத்து அருகில் உட்காரவைத்துக்கொண்டு வஸுதேவரின் புகழ்பாடினாள்.
இதற்கிடையில் பின்னாலேயே யாதவர்கள் காண்டவ பிரஸ்தம் வந்தடைந்தார்கள். வண்டி வண்டியாக சீர்வரிசைகள் ஏற்றியிருந்தன. கலகலவென்று சத்தமாக இருந்தது. அந்த சீர் சாமான்கள் சுற்றியிருக்க அர்ஜுனன் நடுவில் வந்தான். ஊர் ஜனங்கள் மீண்டும் அர்ஜுனனைப் பார்த்த சந்தோஷத்தில் குதூகலம் அடைந்தார்கள்.
அரண்மனையினுள் பிரவேசித்தான் அர்ஜுனன். யுதிஷ்டிரரையும் பீமனையும் காலில் விழுந்து வந்தனம் செய்தான். பக்கத்தில் நின்ற குந்திக்கு பிரத்யேகமாய் நமஸ்கரித்தான். நகுலனையும் சகதேவனையும் ஆரத்தழுவிக்கொண்டான். திரௌபதி சுபத்திரையுடன் பக்கத்தில் நின்றிருந்தாள். அவளுக்குக் கோபமில்லை என்றதும் அவனது சந்தோஷம் இரட்டிப்ப்பானது. பின்னர் தனது சகோதரர்கள் அனைவருக்கும் வனவாஸ யாத்திரையைப் பற்றிக் கதை சொன்னான் அர்ஜுனன். கிருஷ்ணையும் சுபத்ராவும் குந்தியும் ஒரு பஞ்சணையில் அமர்ந்து இந்தக் கதையெல்லாம் கேட்டுக்கொண்டிருந்தார்கள். அவர்களின் சிரிப்பொலி அரண்மனை முழுவதும் எதிரொலித்தது.

சுபத்ரா கல்யாணம்



பலராமரும் மற்றும் சில வ்ருஷ்ணிகுலத்தவர்களும் சன்னியாசியைக் கண்டு வணக்கத்தோடு அவர் கண் திறக்கும் தருணத்திற்காகக் காத்திருந்தனர். சிறிது நேரம் அமைதியாய்க் கழிந்த பின்னர் கண்களில் கருணை சுர்க்க கண் திற்ந்தான் அர்ஜுனன்.

“நீங்கள் அனைவரும் இங்கே அமருங்கள்.” என்று தான் அமர்ந்திருந்த கற்பாறைக்கு அருகில் கையைக் காட்டினான். அவனைச் சுற்றி அனைவரும் உட்கார்ந்தார்கள்.
பலராமர் எழுந்து கை கூப்பினார்.
“தபோதனரே! உம்மைப் பார்த்தால் பல க்ஷேத்திரங்களையும் தீர்த்தங்களையும் வனங்களையும் பார்த்தவர் போலத் தெரிகிறது. எங்களுக்கும் நீங்கள் கண்டவைகளை தெரியப்படுத்துமாறு வேண்டுகிறேன்” என்று பவ்யமாகக் கேட்டார்.
அர்ஜுனன் தனது இந்த வனவாசப் பர்வத்தில் கண்ட அனைத்தையும் ஒன்றுவிடாமல் அழகாக பிரவசனம் செய்தான். அனைவரும் அவனது கதையில் கட்டுண்டு கிடந்தார்கள்.
“இந்த யதி நம்முடைய தேசத்துக்கு அதிதியாக வந்திருக்கிறார். இவரை நாம் மரியாதை செய்து அனுப்ப வேண்டும். எங்கு தங்க வைக்கலா ம்?” என்று கேட்டான் சாத்யகி. பலராமருடன் அனைவரும் யோசனையில் இறங்கினார்கள். அப்போது கண்ணபிரான் அங்கு வந்தார்.
"கேசவா! வா..வா... சரியான சமயத்தில் வந்திருக்கிறாய்” என்று கிருஷ்ணரின் கையைப் பிடித்துக்கொண்டார் பலராமர்.
“என்னண்ணா?” என்றார் ஒன்றும் தெரியாததுபோல.
“இவர் பல க்ஷேத்திரங்களுக்கும் தீர்த்தங்களுக்கும் சென்று வந்திருக்கும் சன்னியாசி. நமது தேசத்துக்கு அதிதி. இப்போது இங்கே மழைக்காலம். இந்த மாரிக்கால நான்கு மாதமும் இங்கேயிருந்து தவமியற்றலாம் என்று எண்ணியிருக்கிறார். எங்கே தங்கவைக்கலாம் சொல்.. சொல்...”
“அண்ணா! நீங்கள் தான் பெரியவர். உங்களுக்குதானே எங்கே தங்கவைக்கலாம் என்று தெரியும். நான் யார் இதைச் சொல்வதற்கு?” என்று சொன்னவர் கடைக்கண்ணினால் கபடசன்னியாசி வேஷத்திலிருந்த அர்ஜுனனை ஒரு கணம் பார்த்துக்கொண்டார்.
பலராமருக்கு பரம திருப்தி. கண்ணனைக் கட்டிக்கொண்டார்.
“நாலுமாதமும் இந்த சன்னியாசி சுபத்திரையின் கன்னியாந்தபுரத்தில் போஜனம் செய்துகொண்டு தோட்டத்தில் இருக்கும் கொடிப்பந்தல்களில் வசிக்கலாம் என்று எனக்குத் தோன்றுகிறது. நீ அனுமதி கொடுத்தால் யாதவர்கள் அனைவரும் ஒப்புக்கொள்வார்கள். என்ன சொல்கிறாய்?”
“இளமையும் இன்சொல்லும் இவருக்கு இயற்கையாகவே இருக்கிறது. இவர் கன்னியாந்தபுரம் சமீபத்தில் வசிப்பது என்பதில் எனக்கு உடன்பாடு கிடையாது. இருந்தாலும் பெரியவர் நீர் சொல்கிறீர்கள் என்பதால் தர்மம் அறிந்தவர் என்பதால் அப்படியே செய்கிறேன்.”
”இவர் சத்தியமே பேசுகிறவர். ஜிதேந்திரியர். சன்னியாஸாஸ்ரமத்தை வகிப்பவர். இவரை கன்னியாந்தப்புரத்திற்கு அழைத்துக்கொண்டு செல். சுபத்திரையிடம் இவருக்குப் போஜனம் அளித்து பானம் பருகுவதற்குக் கொடுக்கச் சொல். ராஜோபசாரமாக இருக்கட்டும்”
“அப்படியே செய்கிறேன்” என்று சொன்ன ஸ்ரீகிருஷ்ணர் அங்கே அமர்ந்திருந்த அர்ஜுனனைக் கையைப் பிடித்து இழுத்துக்கொண்டு தன் ரதத்தில் ஏறி துவாரை நோக்கிச் செலுத்தினார்.
அரண்மனையில் ருக்மணியையும் சத்யபாமாவையும் அழைத்தார்.
“பாண்டு புத்திரனான அர்ஜுனன் இங்கே தீர்த்தயாத்திரைக்கு வந்திருக்கிறான்” என்றார்.
“அர்ஜுனனை நாம் எப்போது காண்போம் என்று நாங்களிருவரும் ஆசைப்பட்டோம்.”
கிருஷ்ணர் பக்கத்தில் இருந்த அந்த சன்னியாசி அதைக் கேட்டு மிகவும் சந்தோஷப்பட்டார். நிஜரூபம் தெரியாமல் வந்திருக்கும் அர்ஜுனனை அனைவரும் பூஜிக்கிறார்கள் என்று தெரிந்து கிருஷ்ணரும் மகிழ்ந்தார். விளையாட்டாக தனது அன்புக்குரியவனான அர்ஜுனனை அவரும் பூஜித்தார். அரைக்கண்ணால் அதைக் கண்டு நானத்துடன் ரசித்தான் அர்ஜுனன்.
தனது சகோதரியான சுபத்திரை ஒரு ஓரமாக நின்றிருந்தாள்.
“சுபத்திரா! இங்கே வாம்மா.... இந்த ரிஷியைப் பார். இவர் நம் தேசத்துக்கு அதிதியாக வந்திருக்கிறார். உன்னுடைய கன்னியாந்தபுரத்தில் வசிக்கப்போகிறார். இந்த யதியை நீ தினமும் பூஜித்துவா. இதை நான் மட்டும் சொல்லவில்லை. அண்ணா பலராமரும் இதைத்தான் விருப்பப்படுகிறார்.”
தனது வேல் போன்ற விழிகளால் சுபத்ரா அந்த ரிஷியை பாதாதிகேசம் பார்த்தாள். சன்னியாசி வேஷத்தில் கபடமாக வந்திருக்கும் அர்ஜுனனுக்கு அவளது பார்வையால் குறுகுறுவென்றிருந்தது. மன்மதன் மலரம்பு இல்லாமல் மலர் ஈட்டியை அவன்மேல் எறிந்தான்.
“அவர் என்ன சொல்கிறாரோ அவையனைத்தும் தயங்காமல் செய்துகொடு... சரியா?” என்றார் ஸ்ரீகிருஷ்ணர். காதில் அணிந்திருந்த வைரக்குண்டலங்கள் அசைந்தாட தலையசைத்தாள் சுபத்திரா.
”முன்பெல்லாம் கூட யாதவர்களைத் தேடிவந்த யதிகள் கன்னியாந்தப்புரங்களில்தான் வாசம் செய்தார்கள். கன்னிகைகள் சோம்பலாக இல்லாமல் அவர்களுக்கு பணிவிடைகள் செய்தார்கள். நீயும் அதையெல்லாம் அனுசரி” என்று கிருஷ்ணன் கூடுதலாக சில விஷயங்களை வேண்டுமென்றே சொன்னான்.
சுபத்திரைக்கு மனதில் வேறு எண்ணங்கள் முளைத்தன. தோள்களில் பந்து போன்ற திமில் இருந்தது. புஜபலங்கள் நிறைந்த க்ஷத்ரியன் போலத்தான் அந்த ரிஷி அவளுக்குத் தெரிந்தார். யோசனையுடன் கிருஷ்ணரைப் பார்த்துச் சொன்னாள் “நீர் சொன்னபடியே செய்கிறேன். இந்த பிராமண ஸ்ரேஷ்டரை எனது பணிவிடைகளினால் சந்தோஷப்படுத்துகிறேன்”
கன்னியாந்தப்புரத்திலேயே கொஞ்ச காலம் வசித்தான் அர்ஜுனன். அவன் முன்னால் அங்குமிங்கும் சென்று வந்த சுபத்திரையை ஓரக்கண்ணால் கண்டு ரசித்தான். மனம் முழுவதும் அவள் மீது காதலில் அலைந்தது. அவள் அழகுக்கு முன்னால் திரௌபதி கூட நிற்க முடியாது என்று நினைத்துக்கொண்டான். காமன் அங்குசம் போட்டு அவனது தீர்த்தயாத்திரையை இந்த இடத்தில் நிறுத்திவிட்டான்.
ஸ்வாஹா தேவியைக் கண்ட அக்னிதேவன் போல அவள் மேல் அதீத ஆசையை வளர்த்துக்கொண்டான். ஏற்கனவே கதன் என்னும் யாதவன் அர்ஜுனனின் பராக்கிரமங்களைப் பற்றி சுபத்திரையிடம் சொல்லியிருந்தான். ஒரு முறை மின்னல் வெட்டி இடிச்சத்தம் கேட்டபோது அர்ஜுனனை அதற்கு உபமானமாகச் சொல்லி கிருஷ்ணரும் அவன் வரலாற்றை அவளுக்குச் சொல்லியிருந்தார்.
சுபத்திரை அர்ஜுனன் மீதான பிரியத்தை அப்போதிலிருந்தே வளர்த்துக்கொண்டாள். வீதியில் இரு யாதவர்கள் சண்டையிட்டுக் கொள்ளும் போது கூட “யே! அர்ஜுனன் கூட என் முன்னே நிற்க முடியாது. நீ பெரிய ஆளோ?” என்று வசனம் பேசிக்கொள்வார்கள். ஒரு முறை தோழி ஒருத்தியின் வீட்டில் நடந்த சுபநிகழ்ச்சியில் ஒரு சிறு குழந்தையை “நீ அர்ஜுனனைப் போல யாரும் வெல்லமுடியாத வில்லாளி ஆவாய்” என்று ஆசீர்வதிக்கக் கண்டு அவன் மீது அப்போதே மையலுற்றாள்.
அவனுடைய அழகைப் பற்றியும் பலர் பாராட்டும் அவனது திறமைகளைக் கேட்டும் காதலில் தவித்தாள். யாதவர்களில் எவனெல்லாம் குருஜாங்கல தேசம் சென்று திரும்புகிறார்களோ அவர்களையெல்லாம் அழைத்து “அர்ஜுனனைப் பார்த்தாயா? அவன் எப்படியிருப்பான்?” என்று கதை கேட்பாள். இப்படி அர்ஜுனனைப் பற்றி பலமுறை பலபேரிடம் விசாரித்ததில் அவனது பிம்பத்தை தனது இருதயத்தில் பத்திரமாக வைத்துப் பூட்டியிருந்தாள் சுபத்திரை.
பொய்த் தவத்தில் மூழ்கி அரைக்கண்கள் திறந்து சுபத்திரை நடந்து போவதைப் பார்த்து ரசிக்கும் அந்த ரிஷி வேஷத்தில் இருந்தவனை இன்னும் கொஞ்சம் உற்றுப் பார்த்தாள். அடிக்கடி நாண் எடுத்து பூட்டியதால் அவனது புஜங்களில் புண்ணாகி அது ஆறிப்போன வடு இருந்தது. நீண்ட சர்ப்பங்களைப் போல புஜங்கள் இருந்தன. அவளுக்கு இவன் அர்ஜுனன் தானோ என்ற சந்தேகம் வலுத்தது.
“முனிவரே!”
கண்களில் கருணாசாகரத்தை வரவழைத்துக்கொண்டு சுபத்திரையை ஆசி வழங்குவது போல கையைத் தூக்கி “என்ன வேண்டுமம்மா?” என்று கேட்டான் அர்ஜுனன்.
“நீர் வெகுதூரம் நடையாய் நடந்து பல தேசங்கள், தடாகங்கள் , காடுகள், நதிகள் என்று பார்த்திருப்பீர்கள். அதைப் பற்றியெல்லாம் எனக்குச் சொல்வீர்களா?” என்றாள் கண்கள் படபடக்க. அதில் அர்ஜுனனின் இதயம் தடதடக்க பல வேடிக்கையான வார்த்தைகளால் கதை சொன்னான். அவன் அநேக கதைகள் சொன்னதும் சுபத்திரை அது அர்ஜுனன் தான் என்பதை நிச்சயம் செய்துகொண்டாள்.
“முனிவரே! நீர் காண்டவபிரஸ்தம் சென்றதுண்டா? என் அத்தையாகிய குந்தியைப் பார்த்திருக்கிறீர்களா?” என்றாள் ஆர்வத்துடன். கண்கள் அவன் கண்களை விழுங்கியபடி இருந்தது.

“உம். பார்த்திருக்கிறேன்” ஒரு வார்த்தையில் நிறுத்திவிட்டான் அர்ஜுனன்.
“அங்கே யுதிஷ்டிரர் தனது சகோதரர்களுடன் சந்தோஷமாக இருக்கிறாரா?”
“இருக்கிறார்.” அவ்ளோதான். அதற்குமேல் பேசவில்லை.
“பீமன் தனது கடமைகளைச் செய்து வருகிறாரா?”
“வருகிறார்”. இவள் என்னைப் பற்றிக் கேட்பதற்குப் பதிலாக வீட்டில் இருக்கும் அனைவரையும் விஜாரிக்கிறார்கள் என்று தெரிந்து கொண்டு அவளிடம் விளையாடினான் அர்ஜுனன். கேட்ட கேள்விக்கு ஒரு வார்த்தையில் பதில் சொல்லி நிறுத்தி அவளைச் சீண்டினான். அவனது வழிக்கு வந்தாள் சுபத்திரை.
“நீங்கள் பார்த்தனைப் பார்த்திருக்கிறீர்களா? அவனைக் கண்டாவது அல்லது கேட்டாவது இருக்கிறீர்களா? அவன் வில்லுக்கு யாரும் சமானம் இல்லையாமே?”
அவளின் இந்தக் கேள்விக்கு விழுந்து விழுந்து சிரித்தான் அர்ஜுனன்.
“முனிவரே! ஏன் இப்படி சிரிக்கிறீர்கள்?” என்றாள் பொய்க்கோபத்துடன் சுபத்திரை.
“குந்திதேவி புத்திரர்களோடும் மருமகளோடும் சந்தோஷமாக இருக்கிறாள். அர்ஜுனன் சன்னியாசி ரூபத்தில் துவாரகையில் இருக்கிறான்” என்றான் கண்களைச் சிமிட்டியபடியே. நாணத்தில் தலை குனிந்தாள் சுபத்திரை. கால்களால் நிலத்தைக் கீறி கோலம் போட்டாள்.
“அர்ஜுனன் நாந்தான். என்னைப் பார்த்தும் கண்டுபிடிக்காமல் இருக்கிறாயே! உன் மீது எனக்கு அளவில்லாப் பிரியம் இருக்கிறது. ஒரு நல்ல நாளில் உன்னை நான் விவாஹம் செய்துகொள்வேன்”
எழுந்து அவளது மூச்சுக்காற்று படும் இடம் வரை வந்து நடந்து சென்றான்.
சுபத்திரைக்கு வெட்கம் வந்தது. காதல் ஊற்று பெருக்கெடுத்தது. மஞ்சத்தில் குப்புறப் படுத்துக்கொண்டு அர்ஜுனனைப் பற்றிய சிந்தனையோடே அன்னபானம் இன்றி இருந்தாள். அதன்பிறகு சன்னியாசிக்கு என்று அவள் செய்துகொண்டிருந்த பணிவிடைகளைச் செய்யவில்லை. அவனைப் பார்த்தாலே நாணம் பிறந்து கைகளால் முகத்தை மூடிக்கொண்டாள்.
கிருஷ்ண பகவான் இதை ஞானதிருஷ்டியினால் அறிந்து கொண்டு ருக்மிணிதேவியை அர்ஜுனனுக்கு போஜனம் கொடுக்க ஏற்பாடு செய்தார். அர்ஜுனனும் சித்தபிரமை பிடித்தவன் போல இருந்தான். சுபத்திரை காதல் ஏக்கத்தில் இளைத்துப்போனாள்.
சுபத்திரையின் நடவடிக்கையில் பெரிய மாற்றம் ஏற்பட்டத்தைக் கவனித்த தேவகிக்கு அவள் மேல் சந்தேகம் எழுந்தது. ருக்மிணியைப் பிடித்து “சுபத்திரைக்கு என்ன ஆயிற்று?” என்று கேட்டாள்.
ருக்மிணி என்ன சொல்வது என்பது போல நெளிந்தாள்.
"அம்மா! சன்னியாசக் கோலத்தில் வந்தவன் அர்ஜுனன். அவனைக் கண்டு இவள் மையல் கொண்டாள். நீரும் சோறும் இல்லாமல் அவனையே நினைப்படி மஞ்சத்தில் இருக்கிறாள்.”
நேரே சுபத்திரை கிடக்குமிடம் சென்ற தேவகி “சுபத்ரா! நீ கவலையை விடு. நான் வசுதேவரிடமோ அல்லது கிருஷ்ணனிடமோ இதை தெரிவித்து உன் துன்பம் தீர்க்கிறேன்” என்று அவளைப் பார்த்து ஆதரவாகச் சிரித்தாள்.
விடுவிடுவென்று அங்கிருந்து நடந்து போய் வசுதேவர் அமர்ந்திருந்த அறைக்குச் சென்றாள்.
“சுபத்திரை சுகமாக இல்லை. சன்னியாசியாக கபடவேடமிட்டு வந்திருப்பவன் பாண்டவனாகிய அர்ஜுனன்.அவனை திருமணம் புரிய சுபத்திரை சித்தமாயிருக்கிறாள். நீங்கள்தான் அக்ரூரன் கிருஷ்ணன் சாத்யகி ஆகியோரிடம் கலந்து பேசி இதற்கு ஒரு முடிவு எடுக்க வேண்டும்”
வசுதேவர் அவர்களை அழைத்தார். பின்னர் அன்றிலிருந்து பன்னிரெண்டாவது தினத்தில் விவாகம் நடத்தவேண்டும் என்று குறித்துக்கொண்டார்கள்.
சுபத்திரை விவாகத்தில் பலராமரின் கணக்கு வேறாக இருக்கும் என்று எண்ணினார் கிருஷ்ணர். ஆகையால் அவருக்குத் தெரியாமல் விவாகம் நடத்த ஒரு திட்டமிட்டார். துவாரைக்கு அருகில் இருக்கும் கடலில் உள்ள ஒரு தீவில் மஹாதேவ உற்சவம் இரவுபகலாக முப்பத்துநான்கு நாட்கள் நடக்கவிருப்பதாகவும் அதற்கு யாதவர்கள் அனைவரும் இன்றிலிருந்து நான்காவது நாள் தங்கள் பெண்டு பிள்ளைகளோடு கப்பல்களில் ஏறிச் செல்லவிருப்பதாகவும் பறையறிவிக்கச் சொன்னார் கிருஷ்ணர்.
எல்லா யாதவர்களும் கடற்கரையில் குவிந்தார்கள். கப்பல்கள் பல சமுத்திரத்தில் நங்கூரமிட்டு நிற்க அதை கரையில் உள்ளோர் அடைவதற்காக குட்டிப் படகுகள் கரையோரத்தில் கட்டிப்போடப்பட்டிருந்தன. குழந்தைகளும், குமரிகளும், இளைஞர்களும், முதியவர்களும் ஏராளமானோர் கப்பலுக்குச் சென்றுகொண்டிருந்தார்கள்.
தடதடக்கும் இதயத்தோடும் படபடக்கும் கண்களோடும் சுபத்திரை கண்ணனை நெருங்கி “அந்த சன்னியாசி பகவான் இன்னமும் பன்னிரெண்டு நாட்கள் இங்கே இருப்பாராம். அவரது பூஜைக்கு இடையூறில்லாமல் யார் அவருக்கு சிஷ்ருஷைகள் செய்வார்கள்?” என்று ஒன்றும் அறியாத பெண் போலக் கேட்டாள்.
கிருஷ்ணர் அர்த்தபுஷ்டியாக சிரித்தார்.
“யதுபுத்ரியே! உன்னை விட யாரால் அவரை சிறப்பாகப் பார்த்துக்கொள்ள முடியும்? நீயே இங்கிருந்து அவருடைய எல்லாக் காரியங்களையும் செய்” என்று அனுமதி அளித்துவிட்டு ஜாடையாக கண் சிமிட்டி எல்லோரையும் அழைத்துக்கொண்டு அந்தத் தீவிற்குச் சென்றுவிட்டார்.
இரண்டாவது சொர்க்கம் போலிருந்தது அந்தத் தீவு. யாதவர்கள் அனைவரும் அங்கே மகிழ்ந்திருந்தார்கள். ஆட்டமும் பாட்டுமாக அங்கே பொழுதைக் கழித்தனர். மஹாதேவ பூஜையும் நடைபெற்றது.
இங்கே துவாரகையில் அர்ஜுனனையும் சுபத்திரையும் மட்டும் தனியே மோகித்துக் கிடந்தனர். எல்லாம் பேசி கடைசியில் விவாகம் புரிந்துகொள்வது பற்றி ஒரு நாள் பேச்சு எழுந்தது.
“சுபத்ரா! தந்தை, சகோதரன், தாய், மாதுலன், தந்தையின் தந்தை, தந்தையின் சகோதரன் இவர்கள் கன்னிகையைத் தானம் செய்துகொடுக்கலாம். இவர்கள் அனைவருமே இப்போது மஹாதேவ உற்சவத்திற்காக உள்தீவுக்குச் சென்றிருக்கிறார்கள். என்னுடைய உறவினர்களும் வெகுதூரத்தில் இருக்கிறார்கள். ஆகையால் நாம் இருவரும் காந்தர்வ விவாஹம் புரிந்துகொள்வோம்”
நைச்சியமாகப் பேசினான் அர்ஜுனன். சுபத்ரா வாய்மூடி பேசாமல் இருந்தாள். எப்போது விவாகம் என்று உள்ளம் துள்ளிக்கொண்டிருந்தது. அர்ஜுனன் மேலும் பேசினான்.
”சாஸ்திரப்பிரகாரமாக தனது தந்தையினால் ஒருவனுக்குக் கொடுக்கப்பட்டவள் பத்னி. தன்னைக் காப்பாற்றுவதற்காக கன்னிகாதானத்தில் பெறப்பட்டவள் பார்யை. வரனுடைய தந்தையால் தர்மமாக பெறப்பட்டு வீட்டுக்கு அழைத்துவந்து வயது வந்தபின் அவரால் விவாஹம் செய்துவைக்கப்பட்டவள் தாரம் அல்லது பிதிர்கிருதை. தானே விரும்பிப் புத்ரோத்பத்திக்காக காந்தர்வ விவாகம் செய்துகொள்ளப்பட்டவள் பிரஜாவதி. தன்னுடைய கணவனை தானே வரித்துக்கொள்பவன் ஜாயை. இதில் பத்னி, தாரம், பார்யை, ஜாயை ஆகியோர்க்கு அக்னிசாக்ஷியாக விவாஹம் செய்ய வேண்டும். காந்தர்வ விவாஹத்திற்கு ஹோமம் கிடையாது.மந்திரஙக்ள் கிடையாது. நாம் காந்தர்வ விவாஹம் புரிந்துகொள்வோம்.”
ஒரு இரவு முழுவதும் இதுபோன்ற விவாஹ தர்மங்கள் பற்றிப் பேசிக்கொண்டேயிருந்தான் அர்ஜுனன். கண்கொட்டாமல் அவனைப் பார்த்தபடி அருகில் அமர்ந்திருந்தாள் சுபத்ரா. கன்னங்களை தனது மடக்கிய காலின் முட்டியின் மேல் ஒருக்களித்து வைத்து பேசும் அவனை ரசித்துக்கொண்டிருந்தாள்.
“உத்தராயணம் விவாகத்திற்கு சிறந்தது. வைகாசி மாதம் உசிதம். சுக்ல பக்ஷம், ஹஸ்த நக்ஷத்திரம் திருதியை திதி மகர லக்னம். இவையனைத்துமே விவாஹம் செய்வதற்கு மிகவும் சிறந்தது. மைத்ரம் என்னும் முஹூர்த்தம் நம்மிருவருக்கும் மிகவும் சிறப்பானது. இன்றிரவு இவையனைத்தும் ஒன்று சேர்ந்து வருகிறது. ஜகத்தின் கர்த்தாவாகிய நாராயணன் கூட அறியா வண்ணம் நாம் விவாகம் செய்துகொள்ளலாம்” என்று கையைப் பிடித்து இழுக்காத குறையாகக் கூப்பிட்டான் அர்ஜுனன்.
கிருஷ்ணனை சிந்தித்திக்கொண்டிருந்த சுபத்ரா கண்களை நீர் மறைக்க அமர்ந்திருந்தாள். அர்ஜுனன் தனது கொடிப்பந்தல் வீட்டிற்குள் சென்று இந்திரனை வேண்டினான். உடனே இந்திரன் தனது மனைவியான இந்திராணியுடனும் நாரதர் மற்றும் தேவக்கூட்டங்களுடன் குசஸ்தலி என்னும் அந்த இடத்திற்கு வந்தான். கந்தர்வர்களும் தேவலோகத்து நாட்டியப் பெண்களும் குவிந்தனர்.
சுபத்திரை கிருஷ்ணனை எண்ணித் தவித்தாள். இரவில் பலராமர் அந்தத் தீவில் தூங்கிக்கொண்டிருக்க அக்ரூரர் சாத்யகி என்னும் தன்னுடைய நெருங்கிய பந்துக்களுடன் துவாரகாபுரிக்குள் சரியான நேரத்தில் நுழைந்தார்.
இந்திரன் மற்றும் தேவாதிதேவர்கள் முன்னிற்க சாஸ்திரபிரகாரம் அர்ஜுனனுக்கு அங்கே விவாஹம் நடந்தது. காசியப மஹரிஷி ஹோமம் செய்தார். நாரதர் முதலானோர் நிறைய ஆசீர்வாதங்களை வழங்கினார்கள். தேவேந்திரன் அர்ஜுனனுக்கு ஸ்நானம் செய்வித்து கிரீடம் தோள் வளை என்று அனைத்து ஆபரணங்களையும் பூட்டினான். இந்திரனை தோற்கடிக்கும் தோற்றமுடையவனாக ஆனான் அர்ஜுனன்.
ஹோமம் வளர்த்து பாணிக்கிரஹணம் செய்துகொண்டான்.
“அர்ஜுனனும் சுபத்திரையும் ஒருவருக்கொருவராக பிறந்தவர்கள். உத்தம லக்ஷணங்களோடு இருக்கிறார்கள்” என்று கிருஷ்ணர் பாராட்டினார். கந்தர்வர்களும் அப்ஸரஸ்களும் ரிஷிகளும் தேவர்களும் என்று துவாராகபுரி விருந்தினர்களால் நிறைந்திருந்தது. அனைவரும் அந்த விவாகத்தில் கலந்துகொண்டு ஆசீர்வாதம் வழங்கினார்கள்.
“அர்ஜுனா! இருபத்தியிரண்டு நாட்கள் நீ இங்கே வசிக்கலாம். பின்னர் சைப்யம், ஸுக்ரீவம் ஆகிய இரண்டு உயர்ந்த ஜாதிக் குதிரைகள் பூட்டிய ரதத்தில் ஏறி காண்டவ பிரஸ்தம் செல்லலாம். அதுவரை யதி வேஷத்தில் அவளுடன் நீ இந்த கிருஹத்தில் இருக்கலாம்”
இப்படிச் சொல்லிவிட்டு ஸ்ரீகிருஷ்ணர் உள்தீவுக்குச் சென்றார். விவாகம் முடிந்த அர்ஜுனனும் சுபத்திரையும் களித்திருந்தார்கள்.
சுபத்திரையுடன் காண்டவபிரஸ்தம் செல்வது அவ்வளவு சுலபமானதல்ல என்று அப்போது அர்ஜுனனுக்குத் தெரியாது.