Monday, August 28, 2017

தேவர்கள் மற்றும் பிதிர்களின் வாய்

ப்ருகுவின் சாபத்தினால் வெறுப்புற்ற தேவ அக்னி கோபாக்னியானான். அடித்த காற்றில் எலும்புகள் முறிவது போல சடசடத்தான். காடு தகித்தது. ஸ்வர்க்கத்தில் தேவர்கள் அவசரமாகக் கூடிவிட்டார்கள். பிதிர்லோகம் கவலையுற்றது. ஏதோ ஆபத்தான காரியம் நிகழ்வதற்கான சாத்தியக்கூறுகள் தெரிந்தது.

“முனிவரே! சாட்சியாக நிற்கும் ஒருவன் தான் கண்டதை தெரிந்திருந்தும் தவறாகச் சொன்னால் என்னவாகும் என்று தெரியுமா?” என்று கர்ஜித்தான்.

ப்ருகு சலனமில்லாமல் நின்றார்.

“அப்படிச் சொன்னால் தனது குலத்தின் பின்னால் வரும் ஏழு சந்ததிகளை நிர்கதியாக்கி மார்க்கமில்லாமல் கெடுத்தவனாவான். அதுமட்டுமல்லாமல் முன்னால் சென்ற ஏழு சந்ததி பித்ருக்களையும் கூட கெடுத்தவனாகிவிடுவான். உண்மை தெரிந்தவன் பேசாமலிருந்தாலும் பாபம்தான். தெரியும்தானே! ”

ப்ருகுவிற்கு அவரது சாபத்தின் விஸ்தீரணம் புரிவதுபோல இருந்தது. அக்னி ஜிகுஜிகுவென்று தொடர்ந்தான்... ஜ்வாலையாக நாக்குகள் நீண்டன.

“என்னாலும் உம்மை இப்போதே சபிக்க முடியும். ஆனால் என்னை ஹோமங்களில் வளர்க்கும் பிராம்மணர்களை பூஜிக்கவேண்டும் என்பதால் சமாதானமடைகிறேன். உமக்குத் தெரிந்தாலும் என்னைப் பற்றி சிலவற்றை சொல்கிறேன் கேளும். அக்னிஹோத்திரங்களிலும் மற்றும் பல விதமான யாகங்களிலிருந்தும் தேவர்களுக்கும் பிதிர்களுக்கும் ஹவிஸைக் கொண்டு செல்கிறேன். அதுதான் வேதத்தின் விதி. என்னால் அவர்கள் பரம திருப்தியடைகிறார்கள்.

தேவ மற்றும் பிதிர்க் கூட்டங்களும் நெய், பால் மற்றும் ஸோமரஸம் போன்ற ஜலங்களினால் சந்தோஷமடைகிறார்கள். அவைகளை யாகங்கள் ஹோமங்கள் மூலமாக அவர்களிடம் கடத்துபவன் நான். தர்ஸ (அமாவாசை) பௌர்ணமாஸ யாகங்கள் பிதிர்களூக்கும் தேவர்களுக்கும் சேர்த்தே செய்யப்படுகிறது. தேவர்களும் பிதிர்க்களும் ஒருவரே! புண்ணிய காலங்கள் ஒன்றாகவும் வேறாகவும் யாகங்களிலும் ஹோமங்களிலும் இருக்கிறார்கள். தேவர்களுக்கும் பிதிர்களுக்கும் நான் தான் வாயென்று சொல்கிறார்கள். அமாவாசையில் பிதிர்களுக்கும் பௌர்ணமாஸியில் தேவர்களுக்கும் என்னிடத்தில்தான் ஹோமஞ் செய்கிறார்கள்.

அந்த ஹோமஞ் செய்த ஹவிஸை அவர்கள் புசிப்பதற்கு நான் வாயாகிறேன். இப்படி இவர்களுக்கு வாயாக இருக்கும் நான் எப்படி எல்லாவற்றையும் சாப்பிடுவேன்?”

அக்னியின் இந்த வாதத்தால் ப்ருகுவிற்கு தர்மசங்கடமானது. ஆனால் கொடுத்த சாபத்தை திரும்பப் பெற இயலாதவராக கை பிசைந்து நின்றார்.

கண்ணிமைக்கும் நேரத்தில் அக்னி ஒளிந்துகொண்டான். அன்றிலிருந்து ஓங்காரம், வஷட்காரம், ஸ்வதா மற்றும் ஸ்வாஹா ஒலிக்கவில்லை. பிராம்மணர்கள் வேதம் ஓதுவதற்கும், யாகம் செய்வதற்கும், ஸ்ரார்த்தம் செய்வதற்கும், ஹோமம் செய்வதற்கும் அகப்படவில்லை. முக்கியமான சடங்குகள் எதுவும் நடைபெறவில்லை. சம்பிரதாயங்கள் வழக்கொழிந்து போகும் இழிநிலை ஏற்பட்டது. சர்வலோகமும் ஸ்தம்பித்துப் போகும் என்று ரிஷிகள் அச்சப்பட்டார்கள்.

ரிஷிகள் தேவர்களை அணுகினார்கள். உடனே இதை பிரம்மதேவரிடம் எடுத்துச் சொல்லி அக்னியை கண்டுபிடித்து மீண்டும் கர்மங்களை செய்வேண்டும் என்று ஸ்திரமாகச் சொன்னார்கள். ரிஷிகளும் தேவர்களுமாக சத்தியலோகத்தை அடைந்து பிரம்மதேவரிடம் ப்ருகு அக்னிக்கொடுத்த சாபத்தைச் சொல்லி ஸ்ரார்த்தாதிகர்மங்களும் அக்னிஹோத்திரங்களும் ஹோமங்களும் நின்று போனதை முறையிட்டார்கள்.

“ரிஷிகளே! தேவர்களே!! நீங்கள் கவலையை விடுங்கள். அக்னியை அழைத்து நான் சமாதானம் பேசுகிறேன். நல்லது நடக்கும்” என்று உறுதி கூறினார்.

அக்னியை மனதில் நினைத்தார். அடுத்த கணம் எதிரில் வந்து தலைகுனிந்து நின்றான்.

“அக்னியே! சர்வலோகத்திற்கும் நீயே ஆதியும் அந்தமுமாக இருக்கிறாய். சாமக்கிரியைகளை நடத்தும் பொருட்டு திரிலோகங்களையும் தாங்குகிறாய். அனைத்து பிராணிகளுக்கும் நீதான் ஆதார ஸ்ருதி. நீதான் உலகத்தை பரிசுத்தம் செய்கிறாய். ஸூர்யபகவானின் கிரணங்கள் படும் பொருட்கள் எல்லாம் எப்படி சுத்தமாகிறதோ அதேபோல உன் ஜ்வாலைகள் தகிக்கும் பொருட்கள் சுத்தமாகின்றன. நீ ஸ்வயம் பிரகாசமாக இருக்கிறாய். ப்ருகு ரிஷியின் அந்த சாபத்தை சத்தியமாக்கிவிடு” என்றார்.

அக்னி தலை நிமிர்ந்தான். விஷயம் புரியாதது போல பிரம்மதேவரை நோக்கினான். சுற்றி நின்ற ரிஷிக் கூட்டமும் தேவர் கூட்டமும் ஒருவரையொருவர் பார்த்துக்கொண்டது. பிரம்மதேவர் சிரித்துக்கொண்டே தொடர்ந்தார்...

“உன் வாயில் ஹோமஞ் செய்யப்பட்ட தேவர்களின் பாகத்தையும் உன் பாகத்தையும் அதோடு சேர்த்து வாங்கிக்கொள்” என்று அக்னியை தட்டிக்கொடுத்தார்.

அக்னி பரமசந்தோஷமடைந்தான்.

“அப்படியே செய்கிறேன் ப்ரபோ!” என்று பிரம்மதேவரை வணங்கிவிட்டு அங்கிருந்து கிளம்பினான்.

பின்னர் எல்லா உலகங்களிலும் சடங்குகள் சம்பிரதாயங்களும் தங்கு தடையின்றி நடந்தது. ஸ்வர்க்கத்தில் தேவாதி தேவர்களும் பூலோகத்தில் ரிஷிகளும் சாமான்யர்களும் சந்தோஷமடைந்தனர். அக்னியும் துயரம் நீங்கி நிம்மதியானான்.

*

சௌனகாதி முனிவர்கள் அக்னியின் சிறப்பை மேலும் அறிந்துகொண்டார்கள். “ப்ருகுவின் புத்திரர் ச்வயனர் ஸுகன்னியிடத்தில் பிரமதி என்னும் மஹாத்மாவைப் பெற்றாள். அந்தப் பிரமதி கிருதாசியிடம் ருருவை ஈன்றாள். அந்த ருருவின் பெருமை மிகுந்த கதையை கேட்பதற்கு நீங்கள் தயாரா?” என்று ஸூத பௌராணிகர் கேட்டார்.

ருருவின் கதை கேட்க ரிஷிகள் ஆர்வமுடன் நிமிர்ந்தார்கள்.....

இதிகாசம் தொடரும்...

Saturday, August 26, 2017

ப்ருகு அக்னிக்கு கொடுத்த சாபம்

நைமிசாரண்ய ரிஷிக்கூட்டம் ஸத்ரயாகத்தில் லயித்திருக்கிறது. ரோமஹர்ஷணரின் புத்திரர் உக்ரஸ்ரவஸ் வைசம்பாயணரின் ஜெயாவை உபன்யாசம் செய்துகொண்டிருக்கிறார். சௌனகர் அக்னிஹோத்ரசாலையில் இருந்து அவர்கள் அமர்ந்திருக்கும் இடத்திற்கு வந்தார்.

“ஜனமேஜயருடைய ஸர்ப்ப யாகத்திற்கான ஒரு காரணத்தைச் சொன்னேன். உதங்கர் அவரைத் தூண்டியது போல மற்றொரு காரணமும் இருக்கிறது. அதைக் கேட்க உங்களுக்கு அவகாசமும் ஆவலும் இருக்கிறதா?”

”இன்னும் நிறைய நாட்கள் இந்த யாகம் செய்யவேண்டும். ஆகையால் நேரம் நிறைய இருக்கிறது. நீங்கள் எல்லாக் கதைகளையும் விஸ்தாரமாகச் சொல்ல வேண்டும்” என்று ரிஷிகள் வேண்டினார்கள்.

“புராணங்களில் நடந்த சிறந்த கதைகளையும் அறிவிற் சிறந்தவர்களைப் பற்றிய பல கிளைக்கதைகளையும் உம்முடைய தந்தையார் ரோமஹர்ஷணர் மயிற்கூச்சமேற்படும்படி சொல்லக் கேட்டிருக்கிறோம். அதில் ப்ருகு வம்சத்தைப் பற்றி முதலில் சொல்ல வேண்டும்” என்றார் ரிஷிகளில் முதலில் அமர்ந்திருந்த சௌனகர்.

------

வருணன் ஒரு யாகம் வளர்த்தான். அந்தக் குண்டத்து அக்னியிலிருந்து பிரம்மாவினால் உதித்தவர் ப்ருகு மகரிஷி. ப்ருகுவின் புத்திரர் ச்யவனர். தர்மவானான பிரமதி ச்யவனரின் புதல்வர். பிரமதிக்கு கிருதாசியென்னும் அப்ஸரஸுக்கும் ருரு பிறந்தார். ருருவுக்கும் பிரமத்வரைக்கும் சுனகர் உண்டானார்.

புலோமை ப்ருகுவின் புகழ்பெற்ற மனைவி. அந்த தர்மபத்னி கர்ப்பம் தரித்தாள். கரு வளர்ந்து முழு கர்ப்பஸ்த்ரீயாக புலோமை தள்ளாமையுடன் நடமாடிக்கொண்டிருந்தாள். ஆஸ்ரம வாசலில் பூ தொடுத்துக்கொண்டு பதுமை போல பல மணி நேரம் அமர்ந்திருப்பாள் புலோமை. ப்ருகுவிற்கு அனைத்து சிஷ்ருஷைகளையும் தளர்ந்திருந்தாலும் செய்துகொண்டிருந்தாள்.

இருபுறமும் அடி பெருத்த நெடுமரங்களடர்ந்த காடு அது. ஆஸ்ரமத்தின் அருகில் பசுமாடு கன்றுக்குட்டியோடு கட்டியிருந்தது. அதனருகில் இருந்த மரத்தின் பின்னாலிலிருந்து ஒரு உருவம் புலோமையை எட்டிப் பார்த்துக்கொண்டிருந்தது. அவளது சொக்க வைக்கும் அழகை அனுதினமும் அணுவணுவாக ரசித்துக்கொண்டிருந்தது. புலோமை ஆற்றுக்குச் சென்று நீர் சேர்த்து வரும் போதும் வஸ்திரங்களைத் தோய்த்து ஆஸ்ரமத்தின் கொல்லைக் கொடியில் காயப் போடும் போதும் அந்த உருவம் மரங்களின் பின்னால் நின்று விழுங்கிவிடுவது போல பார்க்கும். புலோமைக்கும் யாரோ பார்ப்பது போன்ற குறுகுறுப்பு இருந்தது.

ஒரு நாள் காலை ப்ருகு மகரிஷி பக்கத்து நதியில் நீராடி நித்ய கர்மானுஷ்டங்கள் செய்யச் சென்றார். சில நாட்களாக மறைந்து பார்த்து நோட்டம் விட்டுக்கொண்டிருந்தது புலோமா எனும் ராக்ஷசன். அவன் புலோமையைப் பார்த்து காமம் கொண்டிருந்தான். ப்ருகு சென்ற பிறகு ஆஸ்ரமத்தில் தனியாக இருந்த புலோமையிடம் சென்றான்.

“இந்த அதிதிக்கு ஏதும் கிடைக்குமா?” என்று ஆஸ்ரம வாசலில் வந்து யாசிப்பது போல நின்றான்.

“வரவேண்டும்.. வரவேண்டும்..” என்று க்ரஹத்திற்குள் வரவேற்று ஆசனம் கொடுத்து அமரவைத்தாள் புலோமை.

“சற்று ஓய்வெடுங்கள். உங்களுக்கு என்னால் முடிந்த உணவு தருகிறேன்” என்று சடுதியில் உள்ளே சென்றாள்.

இந்த புலோமா என்ற ராக்ஷசன் ஏற்கனவே புலோமையை மனைவியாக வரித்த தருணம் ஒன்று இருக்கிறது. அப்போது இந்த புலோமைக்கு பால்யம். வ்ரீட் வ்ரீட் என்று ஒருநாள் அழுதுகொண்டிருந்தாள். அப்போது அவளது தந்தையார் “யே.. அழாதே.. ரொம்ப அழுதியோ.. ராக்ஷசண்ட்டே புடுச்சிக்கொடுத்துடுவேன்.. ஏ ராக்ஷசா.. சீக்கிர் வந்து இவளைப் பிடிச்சுக்கோடா” என்று அவளை மிரட்டினார். அந்த ராக்ஷசன் பக்கத்தில் மறைந்து இருந்து இதை வேடிக்கைப் பார்த்துக்கொண்டிருந்தான். புலோமையின் தகப்பனார் இதைச் சொன்னவுடன் அவளை பிடித்துக்கொள்வது போல கற்பனையில் தன் பாரியாளாக வரித்துவிட்டான்.

இந்த நிகழ்ச்சியை அசை போட்டபடி அமர்ந்திருந்தான் புலோமா. ஒரு மண் தட்டில் காட்டிலிருந்து பறித்த பழங்களையும் காய்கறிகளையும் நறுக்கிப் போட்டுக் கொண்டு வந்து வைத்தாள் புலோமை. அந்த ராக்ஷசனுடைய கண்கள் புலோமையை கண்டபடி மேய்ந்தது. அவளை உடனே அடையவேண்டும் என்று அவனுக்குத் தாபமாக இருந்தது. ஆனால் ப்ருகு மகரிஷியின் பத்னி என்பதால் தயக்கமடைந்தான்.

அவன் எதிரே அமர்ந்திருந்த புலோமை அவனுடைய நடத்தையில் சந்தேகம் கொண்டாள்.

“நீங்கள் இதை அருந்திக்கொண்டிருங்கள். இதோ வந்துவிடுகிறேன்” என்று கொல்லைப்புறம் சென்றாள். நித்ய அக்னிஹோத்ரியான ப்ருகுவின் ஆஸ்ரமத்தில் எப்போதும் அக்னி எரிந்துகொண்டிருக்கும். புலோமா அங்கு கனன்று கொண்டிருந்த அக்னியிடம் பேச ஆரம்பித்தான்.

“அக்னியே! இவளை நானே முதலில் பார்யாளாக வரித்தேன். இவளது தந்தை ப்ருகுவிற்கு இவளை மணமுடித்துவிட்டான். என்னுடைய உயிராக நான் மதிக்கும் இவளை நான் கொண்டு செல்லப்போகிறேன். சிறுவயதில் என்னைத் தான் பிடித்துக்கொள்ளச் சொன்னார் புலோமையின் தகப்பனார். ஆகையால் தேவர்களின் முகமாக இருக்கும் நீ சத்தியம் சொல்ல வேண்டும். அவளை என்னுடைய பத்னியென்றே நீயும் ஒப்புக்கொள்ள வேண்டும்” என்று வற்புறுத்தினான்.

பொய் சொன்னால் நரகமும் சத்யம் சொன்னால் பிருகு சாபமிடுவார் என்றும் பயந்தான் அக்னி. நடுங்கும் குரலுடன் பேச ஆரம்பித்தான்.

“புலோமா! நீ சாஸ்திரப்படி இவளை மணக்கவில்லை. அவரது தந்தையார் புலோமையை மிரட்டுவதற்காக சொன்னபோது உன் மனதில் மட்டுமே வரித்திருந்தாய். அதுவும் சத்தியம்தான். ஆனால் ப்ருகு சம்பிரதாயமாக என்னை சாட்சியாக வைத்து வலம் வந்து அவளை மணந்துகொண்டார். ஆகையால் அசுரனே அவள் உன்னுடைய மனைவி அல்ல. பொய் என்றுமே நிலைத்து நின்றதில்லை”

அக்னியின் இந்த அறிவுரையை புலோமா ஏற்க தயாராக இல்லை. ஏற்கனவே காமத்தீ சுடர்விட்டு எரிந்துகொண்டிருந்ததால் அவளை அப்போதே கவர்ந்து சென்றுவிட வேண்டும் என்று துரிதகதியில் இருந்தான். மனோவேகம் வாயுவேகம் செல்லும் ஒரு பிரம்மாண்ட பன்றியின் ரூபத்தை எடுத்துக்கொண்டான். வந்திருக்கும் அதிதி என்ன செய்கிறார் என்று பார்ப்பதற்கு உள்ளே நுழைந்த புலோமையை வராக அவதார மூர்த்தி பூமியை மூக்கினால் தூக்கிக்கொண்டது போல முன்னால் ஏற்றிக்கொண்டு பறந்தான்.

அப்போது அந்த அதிசயம் நிகழ்ந்தது. கர்ப்பத்திலிருந்த சிசு அதன் தாயாரின் கர்ப்பத்திலிருந்து நழுவி கீழே விழுந்தது. சூரியனைப் போன்ற பிரகாசமாய் இருந்தது. ஆனால் அந்த முகத்தில் ரௌத்ரகளை. கோபத்தில் இருந்த அந்த சிசுவைக் கண்ட புலோமா பஸ்பமாகிக் கீழே சரிந்தான். கர்ப்பத்திலிருந்து நழுவியதால் ச்யவனர் (ச்யவனம் =நழுவுதல்) என்று பெயர் பெற்றார்.

குழந்தையை எடுத்து மடியில் வைத்துக்கொண்டு கதறினாள் புலோமை. தனது மருமகள் துக்கப்படுவதைக் கண்டார் பிரம்மா. கீழிறங்கி வந்து அவளைத் தேற்றினார். அவள் கண்ணீர் பெருகியதில் ஒரு நதி உண்டாயிற்று. ச்யவனாஸ்ரமத்துக்கு அருகில் ஓடிய அந்த நதிக்கு வதூஸரை என்று பிரம்மதேவன் பெயரிட்டார்.

ப்ருகு ஆஸ்ரமத்துக்கு வந்துவிட்டார். அசந்தர்ப்பமாக இருக்கிறது என்பதை ஊகித்துக்கொண்டார். புலோமை மடியில் குழந்தையுடன் கண்ணீரும் கம்பலையுமாக அமர்ந்திருந்தாள்.

“நீ யாரென்று அந்த ராக்ஷசனுக்கு எப்படித் தெரியும்? யார் அவனுக்குச் சொன்னது? யார் சொனானோ அவனைச் சபித்துவிடுகிரேன்” என்று இடி இடிக்கும் குரலில் கேட்டார் ப்ருகு.

அருகில் அக்னி காற்றில் மெதுவாக ஆடிக்கொண்டிருந்தான்.

“இந்த அக்னிதான்..அவன் பன்றி உருக்கொண்டு என்னைத் தூக்கிக்கொண்டு செல்லும் போது உமது புத்திரனாகிய ச்யவனரால் தப்பித்தேன். நம் மகன் ச்யவனர் பிறந்தவுடனேயே கோபத்தில் தகித்தான். அதைத் தாங்கமுடியாத அந்த ராக்ஷசன் சாம்பலாகி கீழே விழுந்தான். ” என்று சொல்லிவிட்டு வாயை மூடி துக்கம் மேலிட குலுங்கிக் குலுங்கி அழ ஆரம்பித்தாள் புலோமை.

இதைக் கேட்டதும் ப்ருகுவின் கோபம் கொழுந்துவிட்டு எரிய ஆரம்பித்திருந்தது.

“நீ எல்லாவற்றையும் எரிக்கக் கடவாய்! “ என்று அக்னிக்கு சாபமிட்டார் ப்ருகு.

அடங்குவதா.. ஆடுவதா....என்று அக்னி திருதிருவென விழித்தான்.....

இதிகாசம் தொடரும்...

#மகாபாரதம்
#ஆதிபர்வம்
#பௌலோம_பர்வம்


#பகுதி_8

Tuesday, August 22, 2017

தக்ஷகனின் தீயகுணமும் உதங்கரின் கோபமும்

உதங்கருக்கு கோபமான கோபம் பொத்துக்கொண்டு வந்தது. அவனை எரித்து விடுவது போல பார்த்தார்.

இலையில் இட்ட அன்னம் சூடேயில்லாமல் ஆறிப்போயிருந்தது. சாதத்தில் கை வைத்ததும் பெரிய மயிர் ஒன்று இலையிலிருந்து வாய்க்கு இழுத்துக்கொண்டே வந்தது. பௌஷ்ய ராஜா இதைப் பார்த்துக்கொண்டு வெறுமனே அமர்ந்திருந்தான். 

“ஏ பௌஷ்யனே! எனக்கு சுத்தமில்லாத அன்னத்தை அளித்துவிட்டாய். ஆகையால் உனக்கு கண்ணிரண்டும் அவிந்து போகட்டும். நீ குருடனாகக் கடவது” என்று சாபமிட்டார்.

பௌஷ்யனும் பதிலுக்கு எரிமலையாக வெடித்தான்.

“உதங்கரே! சிரத்தையுடன் சுத்தமான அன்னத்தை உமக்குப் பரிமாறினால் அதைப் பார்க்காமலேயே என்னை சபித்துவிட்டீர். ஆகையால் நீர் சந்ததியேயில்லாமல் போவீர்.” என்று பதில் சாபமிட்டான். 

“நீ தவறிழைத்துவிட்டாய் பௌஷ்யா! இந்த அன்னத்தை உன் இரண்டு கண்களால் உற்றுப் பார்” என்று எழுந்துவிட்டார்.

பௌஷ்யனுக்கு பகீர் என்றது. உதங்கர் குற்றம் சொன்னது போல ஆறி அவலாய்ப் போயிருந்த சாதத்தில் நீண்ட மயிர் ஒன்றும் கிடந்தது.

“உதங்கரே! என்னை மன்னியுங்கள். இது கூந்தல் அவிழ்ந்த ஸ்த்ரீயினால் சமைக்கப்பட்டது. ஆனால் இதை யாரும் உமக்கு வேண்டுமென்றே செய்யவில்லை. தெரியாமல் செய்த குற்றம். ஆகவே மன்னித்தருள வேண்டும்” என்று கெஞ்சினான்.

“ஊஹும். கொடுத்த சாபத்தை திரும்பப் பெற முடியாது. நீ கட்டாயம் சில காலம் கண் பார்வை இழந்து மீண்டும் ஒளி பெறுவாய். நீ கொடுத்த சாபம் என்னைப் பிடிக்காமல் இருக்கவேண்டும்” என்றார் உதங்கர்.

“உதங்கரே! பிராம்மணனுக்கு ஹ்ருதயம் வெண்ணை போல இருக்கவேண்டும். வாக்கு கத்தி போல இருக்கவேண்டும். ஆனால் க்ஷத்ரியனுக்கு ஹ்ருதயம் கூரான கத்தியாக இருக்கிறது. வாக்கில் வெண்ணை தடவியிருக்கிறது. கூரான கத்தி போல இருக்கும் ஹ்ருதயத்தால் சபித்ததனால் சாபத்தை திரும்பப் பெறக்கூடாது. நீர் போகலாம்” என்று முறைத்தான். கோபத்தில் முகம் சிவந்திருந்தான். க்ரீடத்தைக் கழற்றி பக்கத்தில் வைத்து ஜடையை முடிந்து கொண்டான். 

உதங்கர் சிரித்தார்.

“பௌஷ்யா! நீயே அன்னத்தைப் பார்த்து அது அசுத்தமாக இருப்பதை ஏற்றுக்கொண்டாய். ஆகையால் நீ அளித்த சாபம் என்னை ஒன்றும் செய்யாது. நான் போகிறேன்” என்று கிளம்பினார்.

இடுப்பு வஸ்திரத்தில் குண்டலங்களை முடிந்திருந்தார் உதங்கர். அவர் செல்லும் வழியெங்கும் ஆங்காங்கே ஒரு சன்னியாசி வஸ்திரமில்லாமல் நக்னமாக வருவது போலிருந்தது. வழியில் அற்பசங்கைக்காக ஓரிடத்தில் ஒதுங்கினார். அதற்கு எதிரில் பெரிய ஏரி ஒன்று இருந்தது. 

தன்னை சுத்தி பண்ணிக் கொள்வதற்காக ஏரியில் இறங்கும் முன் இடுப்பில் சுருட்டி வைத்திருந்த குண்டலங்களைக் கரையில் வைத்துவிட்டு தண்ணீரில் இறங்கினார். அவர் தண்ணீருக்குள் இறங்கும் சமயம் பார்த்து நக்னமாக சன்னியாசி வேடத்தில் திரிந்துகொண்டிருந்த ஆசாமி வந்து குண்டலங்களை எடுத்துக்கொண்டு ஓடினார். அதைப் பார்த்துவிட்ட உதங்கர் துரத்திக்கொண்டு பின்னால் ஓடினார்.

குண்டலங்களைக் கவர்ந்து கொண்டு ஓடுவது தக்ஷகனாக இருக்குமோ என்று எண்ணினார். இருந்தாலும் மனித உருவில் ஓடுவதால் வேறு யாராக இருக்கும் என்ற சிந்தனையில் பிடிக்க ஓடும் போது திடீரென்று அந்த சன்னியாசி பாம்பு உருவம் எடுத்து பக்கத்தில் இருந்த ஒரு வளைக்குள் நுழைந்துவிட்டார். இப்போது பௌஷ்யனின் ராஜபத்னி சொன்னது ஞாபகம் வந்தது. சன்னியாசி உருவில் குண்டலங்களைக் கவர்ந்து சென்றது தக்ஷகன் தான் என்று நிச்சயமாயிற்று.

பக்கத்தில் கிடந்த ஒரு பெரிய கழியை எடுத்து அந்த வளைக்குள் பலம் கொண்ட மட்டும் குத்தினார். பாதி வளைக்குள் சென்ற கம்பிற்கு அந்தப் பாம்பு அகப்படவில்லை. அப்போது இந்திரன் உதங்கரின் உதவிக்கு வந்தான். தனது வஜ்ஜிராயுதத்தை அவரது கழியில் இறக்கினான். உதங்கருக்கு இந்த விஷயம் தெரியாது. அடுத்தமுறை அவரது சக்தியனைத்தையும் பிரயோகித்து வளைக்குள் குத்தினார். அப்போது அந்த வளை பொத்துக்கொண்டு உதங்கரை தக்ஷகனின் நாகலோகத்துக்கு சென்றார். அங்கு நாகர்களை பல ஸ்லோகங்களால் துதித்தார். தக்ஷகனை குண்டலங்களுக்காக பிரார்த்தனை செய்தார். பலனில்லை.

வருத்தமுற்று அமர்ந்திருந்த போது இரண்டு ஸ்த்ரீகளைக் கண்டார். அவர்களிருவரும் ஒரு வஸ்திரத்தை நெய்துகொண்டிருந்தார்கள். அந்த வஸ்திரத்தின் நூல்கள் கறுப்பும் வெளுப்புமாக இருந்தது. அதை நெய்கின்ற சக்கரம் ஆறுகுமாரர்களால் சுற்றப்படுவது. அந்த சக்கிரத்திற்கு பன்னிரெண்டு ஆரக்கால்கள் இருந்தது. ஒரு திவ்ய புருஷனும் அவனுடைய குதிரையையும் கண்டார். அவர்களை நோக்கி ஸ்தோத்திரம் சொல்ல ஆரம்பித்தார் உதங்கர்.

அந்தக் குதிரை மீதிருந்த புருஷன் உதங்கரின் ஸ்லோகத்தில் இன்பமுற்று 

“இந்த ஸ்தோத்திரத்தினால் நான் மகிழ்ச்சியடைந்தேன். உனக்கு என்ன வரம் வேண்டும் கேள்” என்று சிரித்தான்.

“இந்த நாகர்களை அழித்துவிடவேண்டும். அல்லது இவர்கள் என் வசத்தில் இருக்க வேண்டும்” என்று கேட்டார் உதங்கர்.

அந்த புருஷன் குதிரையிலிருந்து குதித்து இறங்கினான். 

“நீ இந்தக் குதிரையின் அபானத்தில் ஊது. நினைத்தது நடக்கும்” என்றான்.

உதங்கர் அந்தக் குதிரையின் அபானத்தில் ஊதினார். அதன் ஒவ்வொரு ரோமக்கால்களிலிருந்தும் அக்னி ஜுவாலைகள் புகையோடு எரிந்தது. அந்த அக்னியின் வெப்பம் தாங்க முடியாமல் நாகர்கள் தவித்தார்கள். அவர்களது தலைவனான தக்ஷகன் தனது வீட்டிலிருந்து ஓடி வந்தான். 

“உதங்கரே! உங்களது குண்டலங்களைப் பெற்றுக்கொள்ளுங்கள்” என்று கொடுத்துவிட்டு ஓடினான்.

கையில் குண்டலங்களை வாங்கிக்கொண்ட உதங்கர் குருபத்னியிடம் இதை சேர்ப்பிக்கும் நேரம் தவறப்போகிறது என்பதை உணர்ந்தார்.

“இன்னும் ஒரு முகூர்த்தத்தில் இதை நான் என் குருபத்னியிடம் சேர்ப்பிக்காவிட்டால் என்னுடைய வித்தை பலிக்காமல் போய்விடும். குருதக்ஷிணை கொடுக்காத பாபியாகிவிடுவேன்” என்று புலம்பினார்.

“நீர் இந்தக் குதிரையில் ஏறும். இது உம்மை உடனே கொண்டு போய் குருவிடம் சேர்த்துவிடும்” என்றான் அந்த திவ்ய புருஷன்.

உதங்கர் குதிரையில் ஏறி உட்கார்ந்தவுடன் உடனேயே அவரது ஆஸ்ரமத்தில் சென்று இறங்கினார். வாசலிலேயே குருபத்னி அமர்ந்திருந்தார். அவரது காலடியில் இரண்டு குண்டலங்களையும் சமர்ப்பித்து ஆசீர்வாதம் வாங்கிக்கொண்டார்.

“உதங்கா! இன்னும் சிறிது தாமதமாக வந்திருந்தாலும் உன்னை நான் சபித்திருப்பேன். நீ சகலவித்தைகளிலும் சிறந்து விளங்குவாய். நான் உன்னை மனப்பூர்வமாக ஆசீர்வதிக்கிறேன்” என்றார்.

பின்னர் உதங்கர் தனது உபாத்யாயராகிய பைதரைச் சந்தித்து நாகலோகத்தில் தான் கண்டவைகளை விளக்கினார்.

“குருவே! பாதாளலோகத்தில் இரண்டு ஸ்த்ரீகள் தறிகளில் வஸ்திரம் நெய்துகொண்டிருந்தார்கள். அந்த வஸ்திரத்தில் கறுப்பும் வெளுப்புமான நூல்கள் இருந்தன. மேலும் பன்னிரண்டு ஆரக்கால்களுள்ள ஒரு சக்கரத்தை ஆறு குமாரர்கள் சுற்றிக்கொண்டிருந்தார்கள் அவர்கள் யார்? அந்தச் சக்கரம் என்ன? தேவர்கள் போன்ற ஒருவனைப் பார்த்தேன். அவன் யார்? ஒரு பெரிய குதிரையையும் பார்த்தேன். அது யாது? மேலும் போகும் வழியில் ஒரு பெரிய ரிஷபத்தையும் அதன் மேல் ஏறும் ஒருவனையும் பார்த்தேன். அந்த ரிஷபம் யாது? அந்த புருஷன் யார்? அவன் அந்த ரிஷபத்தின் கோமயத்தைக் குடிக்கச்சொன்னான். நீங்களும் அதைக் குடித்தீர்கள் என்று சொன்னதால் நானும் குடித்தேன். அவன் யார்?” என்று வரிசையாகக் கேள்விக் கணைகளைத் தொடுத்தார்.

அந்த இரண்டு ஸ்தீரீகளும் தாதாவும் விதாதா என்ற தேவதைகள். தாதா என்றால் உண்டாக்குவது. விதாதா என்றால் பல மாறுதல்களைக் கொடுப்பது. கறுப்பும் வெளுப்புமான நூல்கள் இரவும் பகலும் ஆகும். ஆறு ருதுக்கள்தான் ஆறுகுமாரர்கள். பன்னிரெண்டு ஆரங்கள் பன்னிரெண்டு மாதங்கள். சக்கரமே வருஷம். அந்த புருஷன் பர்ஜன்யனாகிய மேகதேவதை. அந்தக் குதிரைதான் அக்னி. நீ வழியில் சென்ற போது பார்த்த விருஷம் தேவலோகத்து யானை ஐராவதம். அதில் சவாரி செய்தவன் இந்திரன். அவன் உனக்குக் கொடுத்த கோமயம் அமிர்தம். அதைக் குடித்ததால்தான் நீ நாகலோகத்தில் உயிரோடு இருந்தாய். இந்திரன் எனது நண்பன். அதனால் உனக்கு உதவி செய்தான்” என்றார்.

உதங்கருக்கு மட்டற்ற மகிழ்ச்சி. உடனே பைதர் “உனக்கு அனுமதி கொடுக்கிறேன். நீ பலவிதமான மேன்மைகளை அடையப்போகிறாய். மனமார்ந்த ஆசிகள்” என்றார்.

உதங்கரிஷிக்கு கோபம் கனலாய் கனன்று கொண்டிருந்தது. ஆஸ்ரமத்திலிருந்து நேராக ஹஸ்தினாபுரத்துக்கு வந்தார்.  ஜனமேஜயனின் அரண்மனைக்குச் சென்றார். 

“மன்னனுக்கு மங்களம் உண்டாகட்டும்” என்று வாழ்த்தினார். பின்னர் 

“அரசனே! உன் பிதாவாகிய பரீக்ஷித்தைக் கொன்ற தக்ஷகன் என்ற பாம்பை நாம் ஸர்ப்பயாகம் செய்து கொல்லவேண்டும். தவறே செய்யாத உன் தந்தையைக் கொன்றான் இந்த தக்ஷகன். அவரைக் காப்பாற்றுவதற்காக வந்த காஸ்யபரையும் தடுத்தான். ஆகையால் நாமொரு ஸர்ப்பயாகம் செய்ய வேண்டும்.” என்று தூபம் போட்டார் உதங்கரிஷி. 

தனது தந்தை பரீக்ஷித்து தக்ஷகனால் கடித்துக் கொல்லப்பட்டதைக் கேட்ட போது கோபம் தலைக்கேறியது. மன்னன் கண்களில் பழிவாங்கும் உணர்ச்சி ஏறி கொலைவெறி தெரிந்தது.

#ஆதிபர்வம்
#பௌஷ்யபர்வம் (முடிந்தது)
#மஹாபாரதம்
#பகுதி 7

Monday, August 21, 2017

உதங்கரின் குரு தட்சிணை

அயோத தௌம்யரிடம் ஆசிகள் பெற்று குருகுலக் கல்வி பயின்று முடித்த பைதர் (வேதா என்றும் அழைக்கப்படுகிறார்) கிரஹஸ்தாஸ்ரமம் என்னும் உன்னதமான இல்லற வாழ்வில் இணைந்தார்.

அவரிடம் மூன்று சிஷ்யர்கள் பிரதானமாகக் குருகுல வித்யா பயின்றார்கள். தனது ஆசானான தௌம்யரிடம் பல்வேறு விதமான சிஷ்ருஷைகளையும் கடினமான வேலைகளையும் செய்து களைப்புற்ற பைதர் தன்னுடைய சிஷ்யர்களின் மீது அனாவசியக் காரியச்சுமை எதுவும் ஏற்றவில்லை. அவர்களை அன்புடன் நடத்தி வித்தைகளை அப்யசிப்பதில் தீவிரம் காட்டினார்.

க்ஷத்ரிய அரசர்களான ஜனமேஜயனும் பௌஷ்யனும் தங்களது உபாத்தியாயராக பைதரை நியமித்துக்கொண்டார்கள்.

இந்த சமயத்தில் பைதர் யாகம் ஒன்று வளர்ப்பதற்காக ஆஸ்ரமத்திலிருந்து சில நாட்கள் வெளியூர்களுக்குப் பிரயாணிக்க வேண்டியிருந்தது. அவர் தன் பிரதான சிஷ்யராகிய உதங்கரை அழைத்து

"உதங்கா.. நான் வரும் வரை ஆஸ்ரமத்தை நன்கு கவனித்துக்கொள். வேண்டியவற்றை செய். எல்லோரையும் பத்திரமாகப் பார்த்துக்கொள்" என்று பர்ணசாலையை ஒப்படைத்துவிட்டு புறப்பட்டார்.

ஆசிரமத்தில் குருபத்னியும் அங்கு வேலை பார்க்கும் வேறு சில பெண்களும் இருந்தார்கள். ஒரு நாள் அந்த சேடிப் பெண்களில் சிலர் உதங்கரிடத்தில் "குருபத்னி ருதுஸ்நானங் கழித்து மிகுந்த தாபத்தோடு இருக்கிறாள். உங்கள் குரு எல்லா கார்யங்களையும் செய்யச் சொல்லியிருக்கிறார். இது கர்ப்பம் தரிக்கும் காலம். குருவின் ஸ்தானத்தில் இருந்து நீ எல்லாவற்றையும் செய்யவேண்டும் என்பது உன் குருவின் கட்டளை. ஆகையால் குருபத்னியின் தாபத்தையும் இப்போது தீர்ப்பாயாக" என்று உள்ளே அழைத்தார்கள்.

"எல்லோரையும் பத்திரமாக பார்த்துக்கொள்ளத்தான் குரு சொன்னாரே தவிற அதர்மமான காரியங்களைச் செய் என்று எனக்குக் கட்டளையிடவில்லை. ஆகையால் உங்கள் சொற்படி தவறான நடவடிக்கையில் ஈடுபடமாட்டேன்" என்று தீர்மானமாக மறுத்தார். ஆஸ்ரம வாசலில் பத்மாசனத்தில் அமர்ந்து தபஸில் ஈடுபட்டார்.

எவருக்கும் கட்டுப்படாத காலம் எனும் பெரும் சக்கரம் வேகமாக உருண்டோடியது. ஒருநாள் பைதர் ஆஸ்ரமம் திரும்பினார். ஆஸ்ரமவாசிகளிடம் நடந்தவைகளைக் கேள்விப்பட்டார். உதங்கரை அழைத்து "உதங்கா! நீ தூய்மையானவன் என்று நிரூபித்துவிட்டாய். எனக்கு மிக்க மகிழ்ச்சியாய் இருக்கிறது. நீ தர்மவான். குருபக்தியின் உறைவிடம் நீ. உனக்கு எல்லா வித்தைகளும் சுலபத்தில் கைகூடும். நீ சென்று பெரும் புகழை அடைவாய்" என்று ஆஸ்ரமத்திலிருந்து செல்ல உத்தரவு கொடுத்தார்.

"ஐயனே! தயை கூர்ந்து குரு தட்சிணை என்ன வேண்டும் என்று கட்டளையிடுங்கள். நான் வழங்க கடமைப்பட்டுள்ளேன்" என்று தலைவணங்கிக் கேட்டார் உதங்கர்.

"உதங்கா.. எனக்கு எதுவும் வேண்டாம். இன்னும் சில காலம் இங்கேயே இரு. பார்க்கலாம்.." என்றார் பைதர். ஆஸ்ரமத்தில் குருவிற்கான சிஷ்ருஷைகளைச் செய்துகொண்டு இருந்தார் உதங்கர்.

பைரதரின் வாக்கின்படி உதங்கர் மேலும் சில காலம் காத்திருந்தார். இரவும் பகலுமாக நாட்கள் மின்னலாய் ஓடின. பைதர் எதுவும் கேட்பதாகவில்லை. உதங்கர் மீண்டும் பைதரை சென்று வணங்கினார். ”குருதேவா! தங்களுக்கு தட்சிணை...” என்று தயக்கத்துடன் நினைவுபடுத்தினார்.

"உதங்கா.. உள்ளே சென்று குருபத்னியிடம் என்ன வேண்டும் என்று கேட்டு அதன்படி செய்வாயாக" என்றார்.

ஆஸ்ரமத்தினுள் சென்று குருபத்னியிடம் பைதர் சொன்னபடி "நான் குருதட்சிணை கொடுக்க விரும்புகிறேன். குரு உங்களிடம் கேட்டுவரச் சொன்னார். தங்களுக்கு என்ன வேண்டும்?"

"உதங்கரே! பௌஷ்ய ராஜாவின் பத்னியிடம் அற்புதமான குண்டலங்கள் இருக்கிறது. எனக்காக அவைகளை யாசித்து வா. இன்னும் நான்கு நாட்களில் ஒரு விசேஷம் வருகிறது. அந்தக் குண்டலங்களை அணிந்து கொண்டு நான் பிராமணர்களுக்கு அன்னம் பரிமாற ஆசைப்படுகிறேன். இதைச் செய்தால் உனக்கு நன்மை பிறக்கும்." என்று சொன்னாள்.

உதங்கர் புறப்பட்டார். காட்டு வழிப் பயணத்தில் ஒரு மிகப்பெரிய இடபத்தின் மேலே ஒருவன் ஏறுவதற்கு முயன்றுகொண்டிருந்தான். அப்போது உதங்கர் அந்தப் பக்கமாக வந்தபோது

"ஓ! உதங்கா.. இந்த இடபத்தின் கோமயத்தைக் குடி" என்று கட்டளையிட்டான்.

தன்னைப் பெயர் சொல்லி அழைக்கும் அவன் யாரென்று ஆச்சரியமாகப் பார்த்தார். அவன் மீண்டும்..

"உதங்கா! என்ன யோசிக்கிறாய்? தயங்காதே.. உன்னுடைய உபாத்தியாயரும் ஒரு முறை இது போல பருகியிருக்கிறார்" என்றான்.

பின்னர் உதங்கர் அந்தக் கோமயத்தைக் குடித்தார். முடித்தவுடன் அவசராவசரமாக ஆசமனம் செய்யாமல் கிளம்பிச் சென்றார். நெடுந்தொலைவு பயணித்தார்.

பௌஷ்யனின் ராஜ்ஜியத்தை அடைந்தார். அரசவையில் கம்பீரமாக வீற்றிருந்தவனை வாயாரப் புகழ்ந்து பல்வேறு ஜயவிஜயங்களை வாழ்த்தாகச் சொல்லி ஆசீர்வதித்தார்.

“நான் உன்னிடம் ஒன்று யாசிப்பதற்கு வந்திருக்கிறேன்”

“ஆஹா. ஆஹா. என்னுடைய பாக்கியமல்லவா! தங்களுக்கு என்ன வேண்டும் பகவானே! ஆணையிடுங்கள்..” என்று கேட்டான் பௌஷ்யன்.

“உன்னுடைய பட்டமகிஷியின் குண்டலங்கள் வேண்டும். இது எனது குருபத்னியின் ஆசை. அது என் குருவிற்கான குருதக்ஷிணையும் கூட”

“தாராளமாக வாங்கிக்கொள்ளலாம்.. நீங்களே அந்தப்புரத்திற்கு செல்லலாம்”

“பௌஷ்ய ராஜனே! ராஜபத்னிகள் இருக்கும் அந்தப்புரத்திற்கு நான் செல்வது தவறாகும். நீயே அதை வாங்கி என்னிடம் கொடு” என்றார் உதங்கர்.

“இல்லையில்லை... தாங்கள் ரிஷிபுங்கவர். புனிதமானவர். தவசிரேஷ்டர். நீங்களே சென்று பெற்றுக்கொள்ளலாம்” என்று அவரை அந்தப்புரத்திற்கு அனுப்பிவைத்தான் பௌஷ்யன்.

பல மாடங்களும் பளிங்குக்கல் தரையுமாக இருந்த பிரம்மாண்டமான அந்தப்புரத்தினுள் நுழைந்தார் உதங்கர். கலைநயமிக்க வேலைப்பாடுகள் அமைந்திருந்த பலவிதமான அறைகள். வாசனாதி திரவியங்களின் புகை ஒழுகும் அலங்காரமான ஜன்னல்கள். பொன்னிறத்தில் சலசலக்கும் திரைச்சேலைகள். ஜல்ஜல்லென்று கொலுசு ஒலிக்க சேடிப்பெண்கள் அங்குமிங்கும் திரிந்தார்கள். ஒரு அறை விடாமல் தேடினாலும் அங்கே ராணி இல்லை. பௌஷ்யன் ஏமாற்றிவிட்டதாக சினம் கொண்டார்.

ரௌத்ராகாரமாக மீண்டும் அரசவைக்கு வந்தார்.

“ஏ! பௌஷ்யனே! நீ என்னை ஏமாற்றிவிட்டாய்..”

“என்ன சொல்கிறீர்கள்? சற்று விளக்கமாக சொல்லவேண்டும்” என்று பணிந்து கேட்டான் பௌஷ்யன்.

“உன் ராஜபத்னி அங்கே இல்லை. இருப்பதாகச் சொல்லி என்னை அனுப்பிவைத்தாயே” என்றார் கோபத்துடன்.

“ஐயனே! அவள் கற்புக்கரசி. ஆசாரம் குறைவான ஆண்கள் கண்ணுக்குத் தெரியமாட்டாள்” என்றான்.

“ஆமாம். வரும் வழியில் நானொரு ஆகாரம் செய்தேன். பிறகு ஆசமனம் செய்யாமல் வந்துவிட்டேன்” என்று சொல்லிவிட்டு கிழக்கு முகமாக உட்கார்ந்து ஆசமனம் செய்தார்.

நுரையில்லாமலும் காய்ச்சப்படாமலும் இருக்கும் தண்ணீர் கேட்டு வாங்கிக்கொண்டார். தீர்த்தம் உள்ளே போவது மார்புவரைக்கும்தான் உணரும் படி நீர் உட்கொள்ளவேண்டும். சர்புர்ரென்று சப்தமெழுப்பாமல் மூன்று முறை ஆசமனம் செய்தார். இரண்டு முறை கண், காது மற்றும் மூக்கை ஜலத்தால் துடைத்துகொண்டார். பின்னர் அந்தப்புரத்தினுள் நுழைந்தார்.அந்தப்புரத்தின் கொல்லைப்புறத்தில் நீர்விழ்ச்சியொன்றின் அருகில் ராஜபத்னியைக் கண்டார். குருதக்ஷிணை பற்றியும் சொன்னார்.

[மேற்கண்ட பாராவில் ஆசமனம் கிரமமாக செய்வது பற்றிய குறிப்பு மஹாபாரதத்தில் வருகிறது. இது போன்ற சம்பவங்களால்தான் ஐந்தாவது வேதமாக பாரதம் மதிக்கப்படுகிறது]

“இந்தாருங்கள்..” என்று தனது குண்டலங்களை உடனே கழற்றிக் கொடுத்தாள் அரசி.



”அடியேன் உங்களுக்கு மிகவும் நன்றிக்கடன் பட்டுள்ளேன்” என்று உதங்கர் கிளம்பும் தருவாயில் அரசி பேசினாள்.

“உதங்கரே! இந்த குண்டலங்களை ஜாக்கிரதையாக எடுத்துச்செல்லுங்கள். இவற்றை ஏற்கனவே நாகராஜாவாகிய தக்ஷகன் கேட்டான். நான் தரவில்லை. அவன் கவர்ந்து செல்லும் வாய்ப்பு அதிகம்” என்று எச்சரித்தாள்.

“நீ கவலைப்படாதே. தக்ஷகனால் என்னை ஜெயிக்கமுடியாது” என்ற உதங்கர் அந்தக் குண்டலங்களை மடியில் கட்டிக்கொண்டு ராஜாவின் தர்பாருக்கு வந்தார்.

“உன் ராஜபத்னியின் செய்கையால் யாம் குதூகலமடைந்தோம். என் ஆசிகள். சென்று வருகிறேன்” என்று கிளம்பினார்.

“உதங்கரே! நீர் அவசியம் இந்த என் ராஜ க்ருஹத்தில் அன்னபானம் அருந்திவிட்டுதான் கிளம்பவேண்டும்” என்று கட்டாயப்படுத்தினான்.

அவனது தொடர்ந்த வற்புறுத்தலால் சரி என்று ஒப்புக்கொண்டார் உதங்கர். ஆனால் அவருக்கு அளித்த உணவில்...

இதிகாசம் தொடரும்...

#உதங்கர் பகுதி ஒன்று