Thursday, September 7, 2017

காதலிக்கு பாதி ஆயுளை அளித்த காதலன்

விஸ்வாவஸு ஒரு கந்தர்வன். அரம்பையர்களில் ஒருத்தியான தேவலோக அழகி மேனகையின் மீது காதலுற்றான். காட்டில் இருந்த ஸ்தூலகேசர் என்ற மகரிஷியின் ஆஸ்ரமத்தின் அருகில் இருவரும் அடிக்கடி சந்தித்துக்கொண்டார்கள். காதல் பரிசாக விஸ்வாவஸூ மேனகைக்கு ஒரு வாரிசைக் கொடுத்தான். அவள் வாரிசை வயிற்றில் சுமந்த போது விஸ்வாவஸூ திடீரென்று காணாமல் போனான்.
மேனகை மனம் ஒடிந்தாள். தினமும் ஸ்தூலகேசரின் ஆஸ்ரமம் அருகில் வந்து நிற்பாள். விஸ்வாவஸு வரவில்லை என்று தெரிந்ததும் முகம் வாடி திரும்பிச் செல்வாள். ஒரு நாள் ஸ்தூலகேசரின் ஆஸ்ரமத்தின் அருகில் செல்லும் நதியின் கரையில் தன் கர்ப்பத்தை ஈன்றாள். அடுத்த கணமே அந்த சிசுவை அங்கேயே ஒரு மரத்தடியில் கிடத்திவிட்டு அழுதுகொண்டே பிரிந்து சென்றாள்.
ஸ்தூலகேசர் தபோவலிமை மிக்கவர். எல்லாப் பிராணிகளிடத்தும் அன்பு செலுத்தும் ஜீவகாருண்யர். நதிக்கு ஸ்நானம் செய்யப் போனவர் அக்கரையில் அனாதையாகக் கிடக்கும் அந்த பெண் குழந்தையை எடுத்து வளர்க்க ஆரம்பித்தார். அழகில் மிக்காரும் ஒப்பாரும் இல்லாதவளாக இருந்தாள். ஜாதகம் கணித்து பிரமத்வரை என்று பெயர் சூட்டி தனது ஆஸ்ரமத்திலேயே வளர்த்துவந்தார்.
பிரமதா என்றால் பெண்கள், வரா என்றால் சிறந்தவள். ஆகையால் பெண்களில் சிறந்தவள்.
தர்மம் அனுஷ்டிப்பத்தில் சிறந்தவரான ருரு ஸ்தூலகேசரின் ஆஸ்ரமம் பக்கத்திலிருந்த நதிக்கரைக்கு ஸ்நானம் செய்ய வரும்போது அங்கே வந்துகொண்டிருந்த பிரமத்வரையைக் கண்டு அப்போதே காமவசப்பட்டார். கல்யாணம் செய்து கொள்ள ஆசைப்பட்டார். உடனே தனது தந்தையார் பிரமதியிடம் விருப்பத்தைத் தெரிவித்தார்.
பிரமதி ஸ்தூலகேசரின் ஆஸ்ரமம் ஏறி ருருவிற்காக பெண் கேட்டார். ஸ்தூலகேசர் மிகுந்த விருப்பத்துடன் ஒப்புக்கொண்டார். “எதிர்வரும் ஹஸ்த நக்ஷத்திரத்தில் இருவருக்கும் திருமணம் செய்து வைக்கலாம்” என்று ஸ்தூலகேசரும் பிரமதியும் நிச்சயம் செய்துகொண்டார்கள்.
கல்யாணக் காலம் நெருங்கிக்கொண்டிருந்தது. ருருவின் ஆசையும் கொஞ்சம் கொஞ்சமாக வளர்ந்து வானத்தை முட்டியது. பிரமத்வரை தினமும் தனது தோழிகளுடன் நதிக்கரையிலும் ஆஸ்ரமத்தின் அருகிலிருக்கும் நந்தவனத்திலும் விளையாடி மகிழ்வாள். அப்படி ஒரு நாள் சகிகளோடு ஓடிப்பிடித்து குதூகலமாக இருக்கும்போது வழியில் கிடந்த ஒரு பெரிய ஸர்ப்பத்தை தெரியாமல் மிதித்துவிட்டாள். காலனால் ஏவப்பட்டு காத்திருந்த ஸர்ப்பம் அவளைத் தீண்டியது.
அடுத்த கணம் “ஹா...” என்று கதறி கீழே விழுந்தாள் “ஐயோ!!” என்று அலறிக்கொண்டே அவளோடு விளையாடிக்கொண்டிருந்த தோழிகள் அனைவரும் ஸ்தூலகேசரின் ஆஸ்ரமம் நோக்கி ஓடினார்கள்.
யாகம் ஒன்று வளர்ப்பதற்காக மற்ற ரிஷிகளும் முனிசிரேஷ்டர்களுடனும் ஆலோசனை நடத்திக்கொண்டிருந்த ஸ்தூலகேசர் பிரமத்வரையின் தோழிகள் ஓடிவருவதைப் பார்த்தார்.
“என்னாயிற்று? ஏன் எல்லோரும் ஓடி வருகிறீர்கள்? பிரமத்வரை எங்கே?” என்று பதறினார்.
“ஐயனே! சீக்கிரம் அங்கே ஓடி வாருங்கள். பிரமத்வரையை ஒரு பெரும் ஸர்ப்பம் தீண்டியது. அவள் உயிருக்குப் போராடிக்கொண்டிருக்கிறாள்”
அந்த ரிஷிக்கூட்டத்தில் ருருவும் இருந்தார். எல்லோருக்கும் முன்னே அவர் ஓடினார். பாம்பு கடித்ததில் துடித்துக்கொண்டிருந்த பிரமத்வரையைக் கண்டு ருருவின் உள்ளம் துடித்தது. ஆவி பிரியும் நேரத்தில் பிரமத்வரையைக் காண சகிக்காமல் ருரு அங்கிருந்து வெளியேறி வனத்திற்குள் சென்றுவிட்டார். நடுக்காட்டில் தனியே ஒரு கற்பாறையில் அமர்ந்து கதறினார்.
“குருமார்கள் என்னுடைய சிஷ்ருஷையினால் திருப்தியடைந்திருப்பார்களேயானால் இவள் இப்போது எழுந்திருக்கட்டும். பிறந்தது முதல் நான் மனதை ஜெயித்து தீவிரமான தவம் செய்தவனானால் இந்த பிரத்வரை இப்போதே எழுந்திருக்கட்டும். எங்கும் நிறைந்த சர்வ வ்யாபியும், லோக நாயகரும் அஸுரக் குலத்தை அழிக்கத் தோன்றியவராகவுமான ஸ்ரீ கிருஷ்ண பகவானிடத்தில் என்னுடைய பக்தி ஸ்திரமானதாக இருந்தால் இவள் இப்போதே ஜீவித்து எழவேண்டும்”
காட்டைத் துளைத்து நாற்புறமும் எதிரொலித்தது அவரது பெருங்குரல்.
விண்ணிலிருந்து இதைக் கண்ட தேவர்கள் மனம் உடைந்தனர். அவர்கள் தேவதூதன் ஒருவனை ருருவிடம் பேச பூவுலகிற்கு அனுப்பினார்கள்.
”ருருவே! உமது இந்தக் கலக்கத்திற்கு ஒரு விமோசனம் இருக்கிறது. தேவர்கள் என்னிடம் அதை சொல்லி அனுப்பியிருக்கிறார்கள்”
தன்னெதிரே திவ்யசொரூபனாகத் திடீரென்று தோன்றி உபாயம் சொல்லும் தேவதூதனைக் கண்டு சந்தோஷம் அடைந்த ருரு
“அதென்ன உபாயம். பிரமத்வரையை அடைய நான் என்ன செய்யவேண்டும்?” என்று தவித்தார்.
“பிருகுவம்சத்தின் சிரேஷ்ட புத்திரரான ருருவே! உமது ஆயுளில் ஒரு பாதியை நீர் கொடுத்தால் பிரமத்வரை உயிர்பெற்று எழுவாள்”
ருருவின் காதுகளில் அமிர்தம் பாய்ந்தது போல இருந்தது. உடனே “இதோ.. இங்கு கிடக்கும் எனது ப்ராண நாயகியான பிரமத்வரைக்கு என்னுடைய ஆயுளில் பாதி தந்தேன். அவள் எழுந்துவரட்டும்” என்று சபதம் கூறினார்.
கந்தர்வராஜனும் பிரமத்வரையின் தந்தையுமான விஸ்வாவஸுவும் அந்த தேவதூதனும் பாசக்கயிற்றுடன் காத்திருந்த யமதர்மராஜாவிடம் சென்று “தர்மராஜனே! ரிஷி ருருவானவர் தனது ஆயுளில் பாதியை தத்தம் செய்துவிட்டார். பிரமத்வரையை உயிர்பிழைக்க வைய்யும்” என்று வேண்டினார்கள்.
தர்மராஜன் பிரமத்வரையை ஜீவிக்க வைத்தான். அவள் மூர்ச்சையிலிருந்து எழுந்ததுபோல கண் விழித்தாள். சுற்றி நின்ற ஸ்தூலகேசரும் ருருவும் மற்றும் அனைத்து ரிஷிகளும் அவளது ஸ்நேகிதகளும் புன்னகை பூத்தனர்.
பின்னர் முன்னமே குறிப்பிட்ட தேதியில் ருருவுக்கும் பிரமத்வரைக்கும் திருமணம் நடந்தது. அவர்களது வாழ்வு குதூகலகமாகச் சென்றுகொண்டிருந்தது. இந்த சம்பவத்திற்கு பின்னர் ருரு “எந்த ஸர்ப்பத்தைக் கண்டாலும் நான் அதைக் கொல்வேன்” என்று சங்கல்பம் எடுத்துக்கொண்டார். அவரது வழியில் எங்கு ஸர்ப்பத்தைக் கண்டாலும் பக்கதில் கிடக்கும் கல்லையோ கழியையோக் கொண்டு அதை தீர்த்துவிட்டுதான் நகர்வார்.
ஒரு சமயம் யக்ஞாதிகர்மங்களுக்காக நெடுங்காடு தாண்டி பயணப்பட்டுக்கொண்டிருந்தார். அங்கு டுண்டுபம் (விஷமில்லாத தண்ணீர் பாம்புகளுக்கு பெயர்) என்கிற முதிய பாம்பு படுத்திருந்தது. பக்கத்தில் கிடந்த ஒரு மரக்கிளையை எடுத்து அதை அடித்துக்கொல்ல கையை ஓங்கினார்.
அப்போது அந்த பாம்பு பேசியது.....
இதிகாசம் தொடரும்....

No comments:

Post a Comment