Tuesday, September 26, 2017

கருட ஜனனம்

கத்ரு உச்சைஸ்ரவத்தின் நிறமென்ன என்று யோசித்துக்கொண்டே தனது வீட்டை அடைந்தாள். வினதை தனது ஜ்யேஷ்ட புத்திரனான அருணன் கொடுத்த சாபத்தை எண்ணிக்கொண்டே துக்கத்துடன் தனது வீட்டிற்குள் சென்றாள்.
கத்ரு வீட்டினுள் நுழைந்த உடனேயே தனது ஆயிரம் நாக புத்திரர்களை தன்னருகே அழைத்தாள். அனைத்தும் அவளைச் சூழ்ந்துகொண்டன.
“என்னுடைய செல்வங்களே! வினதையுடன் உச்சைஸ்ரவத்தின் வால் கறுப்பாகத்தான் இருக்கும் என்று பந்தயம் வைத்திருக்கிறேன். ஆனால் அது தூய வெள்ளை என்று தெரிகிறது. நீங்கள் அனைவரும் உச்சைஸ்ரவத்தின் வாலின் மயிர்களாக மாறி அதன் நிறத்தை கறுப்பாகச் செய்யுங்கள்.. இந்தப் பந்தயத்தில் நான் வெற்றி பெற வேண்டும்.. ” என்று கட்டளையிட்டாள்.
நாகர்கள் எவரும் அதற்கு ஒத்துக்கொள்வது போல தெரியவில்லை. ஒவ்வொருவரும் தலையைத் தலையை ஆட்டி வெறுமனே இருந்தார்கள். கத்ரு கடுகடுவென்றிருந்தாள். புத்திரர்களிடமிருந்து சம்மதமான பதில் ஏதும் வராததால் சிறிது நேரத்தில் பொறுமை இழந்து..
“பாண்டவ வம்சத்து ராஜன், ராஜரிஷி அந்தஸ்தில் இருக்கும் ஜனமேஜயன் ஸர்ப்ப யாகம் செய்வான். அதில் எழும் அக்னி உங்களையெல்லாம் தகித்து சாம்பலாக்குவான்.. நீங்கள் பொசுக்கப்படுவீர்கள்..” என்று மேல்மூச்சு கீழ்மூச்சு வாங்கக் கடும் சாபம் இட்டாள். நாகபுத்திரர்கள் நடுநடுங்கிப்போனார்கள்.
சத்யலோகத்தில் பிரம்மதேவருக்கு இந்த சாபம் காதில் விழுந்தது. தேவர்கள் கூடி நின்ற பொழுது அவர் பேசலானார்.
“இந்த ஸர்ப்பங்கள் மிகவும் கொடியவை. ஜனங்களின் நன்மைக்காக கத்ரு தனது புத்திரர்களுக்கே இந்த சாபத்தைக் கொடுத்துள்ளாள். அனைவரும் லோக க்ஷேமமும் முக்கியம் என்பதால் நீங்கள் இதற்காக வருந்த வேண்டாம்..” என்று தேவர்களை அனுப்பினார். பின்னர் நாகர்களின் தந்தையான கசியபரைக் கூப்பிட்டார்.
“வீரியமுள்ள விஷமிருக்கும் கொடிய நாகபுத்திரர்களை நீ பெற்றாய். அவற்றை அதன் மாதா சபித்திருக்கிறாள். ஆகையால் நீ கோபம் கொள்ளக்கூடாது. ஸர்ப்ப யாகத்தில் ஸர்ப்பங்கள் அழியப்போவது விதிவசம்.”
என்று சமாதானப்படுத்திய பிரம்மதேவர் அந்தக் கசியபருக்கு விஷநிவர்த்தி செய்யும் வித்தையைக் கற்பித்தார்.
கத்ருவின் வீட்டில் பேரமைதி. சபிக்கப்பட்ட நாகங்கள் தமக்குள் சீறிக்கொண்டன. கார்கோடகன் தைரியமாக எழுந்து வந்தான். கத்ருவை நமஸ்கரித்தான்.
“தாயே! நான் உச்சைஸ்ரவத்தின் வால்மயிராகி கறுப்பாக்குகிறேன். நீ கவலைப்படாதே” என்று மாதாவைத் தேற்றினான். கத்ரு “சரி” என்று அகமகிழ்ந்தாள்.
அடுத்தநாள் காலையில் வினதையும் கத்ருவும் உச்சைஸ்ரவத்தைக் காண கடல் மலைகளைத் தாண்டிப் புறப்பட்டார்கள்.
[சமுத்திரத்தைப் பற்றிய ஒரு பெரிய வர்ணனை இங்கே வருகிறது. கொசுறாக பின்னால் சேர்க்கிறேன்]
இதற்கிடையில், கத்ருவின் புத்திரர்களாகிய நாகங்கள்...
“அன்னையின் வார்த்தையை நாம் மீற வேண்டாம். கார்கோடன் சொன்னது போல நாம் அனைவரும் அந்த உச்சைஸ்ரவஸின் வால் மயிர்களாகி கறுப்பாக்குவோம்...அவளை சந்தோஷப்படுத்தி சாப விமோசனம் பெற முயற்சி செய்வோம்..” என்று புறப்பட்டன.
கத்ருவும் வினதையும் பளீர் வெண்மையில் நின்றுகொண்டிருந்த உச்சைஸ்ரவத்தை நெருங்கினர். ஏற்கனவே நாகங்கள் அதன் வாலை கறுப்பாக்கியிருந்ததால் கத்ரு சொன்னது உண்மையாயிற்று. இந்தப் பந்தயத்தில் தோற்ற வினதை கத்ருவுக்கு அடிமையானாள்.
அருணனின் சாபம் நிறைவேறியது. ஐநூறு வருடகாலங்கள் கத்ருவுக்கு அடிமையாக வினதை படாதபாடுபட்டாள்.
பல வருஷங்களாக இன்னொரு அறையில் இருந்த வினதையின் மீதமிருந்த ஒரு முட்டை விரிசல் விட ஆரம்பித்தது.
சிறிது நேரத்தில் பெரும் சப்தத்துடன் அது வெடித்து அதிலிருந்து பிரளயகால அக்னிக்கு ஒப்பான பிரம்மாண்ட சரீரத்துடன் அடியடியாக விருத்தியடைந்துகொண்டே பக்ஷிராஜாவாகிய கருடன் ஜனித்தார். பிறந்தவுடன் கருடன் எழுப்பிய மிகப்பயங்கரமான சப்தம் தேவலோகத்தை இடித்தது. இந்திராதி தேவர்கள் மிரண்டு போனார்கள். விர்ர்ர்ரென்று விர்ர்ரென்று அவர் விண்ணில் இங்குமங்கும் சிறகடித்துப் பறந்தார். அதிலெழுந்த புயல் வேகக் காற்றில் அகில உலகமும் பறந்துவிடுமோ என்று அனைவரும் அஞ்சினர். கருடனின் அந்தத் தோற்றம் அதிபயங்கரமாக இருந்தது. அக்னி போல அவரது மேனி ஜ்வாலையுடன் தகதகத்து அவர் மேலே... மேலே... மேலே....மேலே... சென்றுகொண்டிருந்தார்.
தேவர்கள் அனைவரும் ஓடிச்சென்று அக்னியைச் சரணடைந்தார்கள்.
“அக்னியே... உன்னுடைய இந்த ரூபத்தைச் சுருக்கிக்கொள்.. வெப்பம் எங்களை தகிக்கிறதே...” என்றார்கள்.
“இல்லை... அது என்னுடைய சொரூபமில்லை. இவன் கருடன். என்னைப் போன்ற தேஜஸ்வி. இவனது அன்னை வினதைக்கு ஆனந்தம் தரப்போகிறவன். கஸ்யபரின் புத்திரன். நாகர்களுக்கு நாசத்தை விளைவிப்பான். மஹா பலசாலி. அசுரர்களுக்கும் ராக்ஷசர்களுக்கும் சத்ரு இவன். நீங்கள் பயப்படாமல் என்னுடன் அவனிடத்தில் வாருங்கள்...” என்று அக்னி அனைத்து தேவர்களையும் கூட்டிக்கொண்டு போனான். அவர்களின் பின்னால் ரிஷிக்கூட்டமும் சென்றது.
விண்ணில் விஸ்வரூபமெடுத்து நின்ற கருடனை ரிஷிகளும் தேவர்களும் துதித்தார்கள்.
[கருடனைப் பற்றிய துதி இங்கே வருகிறது. மேலே சொன்ன சமுத்திர வர்ணனையையும் கருட ஸ்துதியையும் சேர்த்து ஒரு கொசுறாக அடுத்த பாகத்தில் எழுதுகிறேன்]
அனைவரும் துதித்ததும் கருடன் தனது தேகத்தை சிறிதாக்கிக்கொண்டார். தேஜஸை குறைத்துக்கொண்டார்.
சூர்யனுக்கு சாரதியாக இருந்த தனது சகோதரன் அருணனையும் தன் முதுகில் ஏற்றிக்கொண்டு சமுத்திரத்தின் அக்கரையில் இருக்கும் தனது தாய் வினதையைக் காணச் சென்றார் கருடன்.
சூரியன் உலகத்தை தகிக்க தக்க சமயத்தை எதிர்நோக்கிக் காத்திருந்தான். அருணனை கருடன் ஏற்றிச் சென்றதும் “தேவ காரியத்திற்காக நானும் சந்திரனும் ராகு பாயசம் குடித்ததை கண்டுபிடித்துச் சொன்னோம். ஆனால் இந்த ராகு என்னையும் சந்திரனையும் பிடிக்கிறான். இதை தேவர்கள் கண்டு கொள்ளாமல் இருக்கிறார்கள். உதவி செய்தவர்களை மறந்துவிட்டார்கள். நாளைக் காலையில் இந்த மொத்த உலகத்தையும் எரித்து சாம்பலாக்கி விடுவேன்” என்று சொல்லிவிட்டு அஸ்தமனமானான்.
இம்முறை எல்லோரும் பிரம்மாவிடம் ஓடினார்கள்.
“சூரியன் மிகுந்த கோபத்தில் இருக்கிறான். தஹிப்பதற்காக அஸ்தமனமாகியிருக்கிறான். நீங்கள்தான் காப்பாற்ற வேண்டும் ப்ரபோ” என்று கைகூப்பினார்கள்.
“சூரியனின் தேஜஸைக் குறைத்து எல்லோரும் பயன் பெறும்படியாக செய்வதற்குதான் கஸ்யபரின் புதல்வன் அருணன் சிருஷ்டிக்கப்பட்டிருக்கிறான். அப்போது சகலருக்கும் நன்மையும் சந்தோஷமும் உண்டாகும். ஆகையால் நீங்கள் கவலையை விடுங்கள். நான் பார்த்துக்கொள்கிறேன்” என்றார்.
சூரியன் உதிக்க ஆரம்பித்தான். அருணன் ஓடிப்போய் அவன் முன்னால் சென்று நின்றுகொண்டு சூரியனால் உலகைத் தகிக்கமுடியாதது போல நின்றான். சூரியன் கோபத்தின் உச்சத்தில் இருந்தான். அருணனை தீர்த்துவிடலாம் என்று என்னும் வேளையில் அருணன் சமர்த்தாக அவனுக்கு சாரதியானான்.
கருடன் சமுத்திரத்தின் எதிர்திசைக்கு சென்றார். கத்ருவிடம் அடிமைப்பட்டுக்கிடக்கும் தனது தாய் வினதையைக் கண்டு உள்ளம் உருகினார். கருடனின் முன்னிலையில் கத்ரு “பிரியமான வினதையே... இந்த சமுத்திரத்தின் நடுவிலிருக்கும் பிரதேசத்தில் நாகர்களுக்கான இடமிருக்கிறது. அது ராமணியகம் என்ற தீவு. நீ அங்கு என்னைச் சுமந்து செல்வாயாக!” என்று அடிமை வினதையைக் கேட்டாள்.
வினதை கத்ருவை தூக்கிக்கொண்டாள். தாயின் அவஸ்தை தெரிந்து கருடன் கத்ருவின் புத்திரர்களான நாகர்களைத் தூக்கிக்கொண்டு தனது தாயையும் தூக்கிக்கொண்டு அந்தத் தீவிற்கு பறக்க ஆரம்பித்தார். விண்ணில் வெகுதூரம் மேலே எழும்பிச் சென்றதில் சூரியனின் கிரணங்கள் தகித்தது. அதில் நாகர்கள் மூர்ச்சையடைந்தார்கள். அவர்களின் தாயாகிய கத்ரு உடனே இந்திரனைத் துதித்தாள்.
[இந்திர துதி, கருடன் துதி மற்றும் சமுத்திரத்தின் வர்ணனை ஆகிய மூன்றும் தனி பாகமாக இதையடுத்து எழுதுகிறேன். ஆச்சரியமூட்டும் வர்ணனைகள் நிரம்பிய பகுதி அது]
கத்ருவின் துதியினால் இந்திரன் சந்தோஷமடைந்தான். பெரும்மழை பொழிந்தான். அதிகப்படியான ஜலம் உண்டானது. அது பாதாளம் வரை சென்றது. நாகர்கள் மகிழ்ச்சியடைந்தார்கள். மூர்ச்சை தெளிந்து கருடனுடன் ராமணீயகத் தீவை அடைந்தார்கள்.
அந்த தீவினிற்குள் இருந்த வனத்திற்கு வந்தபிறகு நாகர்கள் விளையாடினார்கள். அவர்களுக்கு பெரும் மகிழ்ச்சி ஏற்பட்டது. கருடன் ஒரு நெடிதுயர்ந்த விருக்ஷத்தின் மீதமர்ந்து பார்த்துகொண்டிருந்தார். அப்போது நாகர்களில் ஒன்று கருடன் இருக்கும் மரத்தின் அருகில் வந்து பேசியது.
“ஓ கருடனே! எங்களை இன்னும் அழகாக இருக்கும் தீவிற்கு அழைத்துச் செல்... அப்படி எங்களை அழைத்துச் செல்வதின் மூலம் நீயும் புதுப்புது பிரதேசங்களைப் பார்க்கிறாய் அல்லவா?” என்று பழித்தும் கிண்டலாகவும் சிரித்தது.
கருடனின் பக்கத்தில் வினதை அமர்ந்திருந்தாள்.
“தாயே.. நான் ஏன் இவர்கள் சொல்படி கேட்கிறேன். நீ ஏன் இவர்களுக்கு அடிமையானாய்?” என்று கேட்டார்.
:”உச்சைஸ்ரவத்தின் வால் கறுப்பில்லை என்று பந்தயம் கட்டி தோற்றேன். இவர்களுக்கு அடிமையானேன்” என்றாள் வினதை.
கருடனுக்கு மிகவும் வருத்தம் உண்டானது. பயங்கர சப்தமாக அந்த நாகர்களைப் பார்த்து “உங்களுக்கு என்ன வேண்டும்? எது கிடைத்தால் எங்களை இந்த அடிமைத்தனத்திலிருந்து விடுதலை செய்வீர்கள்?” என்று கேட்டார்.
“உனது பராக்கிரமத்தால் அமிர்தம் கொண்டு வா. உங்களை விடுதலை செய்கிறோம்” என்று நாகர்கள் அகங்காரம் கொண்டு சீறின.
கருடர் ஒரு முறை தனது தாய் வினதையைப் பார்த்தார். அவள் ஆசீர்வாதம் செய்வது போல பார்த்தாள். கருடன் பறப்பதற்கு தயாராக தனது இறக்கைகளை சடசடத்தார்.
இதிகாசம் தொடரும்....

No comments:

Post a Comment