Tuesday, September 26, 2017

நதிகளின் கணவன்

கத்ருவும் வினதையும் சமுத்திரத்தைத் தாண்டி பயணிக்கும் போது வரும் வர்ணனை மஹாபாரதத்தின் கதை ஆழத்தைக் காட்டியது. மேலும் கருட ஜனனத்தின் போது அவர் பயங்கரமான ரூபத்தோடும் அக்னி ஜ்வாலைகளோடும் பறக்கக் கண்டு பயந்த தேவாதிதேவர்கள் பெரியதிருவடியாக கருடாழ்வாரைத் துதித்தனர். கருடன் கத்ருவையும் அவளது பிள்ளைகளான ஆயிரம் நாகர்களையும் தனது தாய் வினதையும் தூக்கிக்கொண்டு ஒரு தீவிற்குச் செல்லும் போது சூரியணின் கிரணங்கள் தாக்கி நாகர்கள் மயங்கிச் சாய்ந்தார்கள்.அப்போது கத்ரு இந்திரனைத் துதித்தாள். இம்மூன்றையும் கொசுறாக இங்கே தருகிறேன்.
சமுத்திர வர்ணனை
--------------------------------
சமுத்திரம் நதிகளுக்கு கணவன். பர்த்தா. ஜலத்தின் ஆதாரம். ஆழமும் கலங்கிக் கலங்கி பேரிரைச்சலுடனும் இருக்கும். பயங்கரமான, விகார, குரூர சுபாவமுள்ள ஜல ஜந்துக்களும் திமிங்கிலம் ஆமை, மீன்கள் மற்றும் முதலை முதலானவைகளுடன் நிறைய பல ரூப ஜந்துக்கள் நிறைந்த இடம். எப்பவும் வற்றாதது. சுலபத்தில் அணுகமுடியாதது. எல்லா வகையான இரத்தினங்களும் உண்டாகுமிடம். வருணனுக்கு இருப்பிடம். ஸர்ப்பங்களுக்கு வாசஸ்தலம், மிகவும் ரமணீயமான இடம்.
அளவிட முடியாத, சிந்திக்க முடியாத இடம். தேவர்களுடைய அமிர்தபானத்துக்கு முக்கியமான இடம். ஆழமான சுழல்கள் தோன்றுமிடம். காற்றினால் ஜலம் ஊஞ்சல் போல ஆடும். வடவாக்கினியின் இருப்பிடம். அலைகள் நாற்புறமும் கைகளைப் போன்று அசைந்து கூத்தாடும். சந்திரனுடைய உதயாஸ்தமன காலங்களில் அலைகள் மாறும். பாஞ்சஜன்யம் என்ற சங்கின் உற்பத்தியிடம், உயர்ந்த வஸ்துகள் இருப்பிடம். பாதாளத்தின் இருப்பிடம்.
நாராயணன் வராக அவதாரமெடுத்து பூமியைத் தூக்கும் போது கலக்கப்பட்ட ஜலமுள்ள இடம். அத்திரி மகரிஷி நூறு வருஷ காலங்கள் தவமியற்றிய இடம். தேஜஸ் பொங்கும் பத்மநாபர் லோக ஸ்ருஷ்டிக்கு முன்னர் செய்த யோக நித்திரைக்கு சயனம். இந்திரனுடைய வஜ்ராயுதத்துக்கு பயந்த மைநாக பர்வதத்திற்கு அபயமளித்த இடம். வடவையின் முகத்தில் ஜொலிக்கும் அக்னிக்கு ஜலமாகிய ஹவிஸைக் கொடுக்குமிடம். ஆயிரக்கணக்கான மஹா நதிகள் பொறாமையுடன் ஓடிவந்து சங்கமமாகும் இடம். பாபங்களைப் போக்குமிடம்.
**
கருட ஸ்துதி
--------------------
நீ ரிஷி; நீ பக்ஷிராஜன்; நீ ப்ரபு, நீ மஹாமகிமையுள்ளவன்; நீ சத்ரு சம்ஹாரன்; நீ பிரஜைகளைக் காப்பவன், நீ சூரியன்; நீ இந்திரன்; நீ ஹயக்ரீவனெனும் விஷ்ணுவின் அவதாரம்; நீ சிவன்; நீ பிரம்மா; நீ உலகத்துக்கெல்லாம் ஈஸ்வரன்; நீயே பிராம்மணன்; நீ அக்னி; நீ வாயு; நீயே தாதாவும் (ஞானசக்தி) விதாதாவும் (மாயாசக்தி) இருக்கும் தேவன்; நீதான் விஷ்ணு, நீ அமிர்தம்; நீ பேரொளி, நீ மஹான்; நீ எல்லோர்க்கும் ப்ரியமான வஸ்து; நீ பலமென்னும் அலைநிறைந்த கடல்; எல்லாம் நிறைந்தவன்; இங்கு வருபவைகளும் சென்றவைகளும் உன்னிடமிருந்தே உண்டாயின; இந்த ஜங்கமஸ்தாவரங்களை சூரியனைப் போன்ற உனது கிரணங்களால் பிரகாசிக்கச் செய்கிறாய்; சூரியனுடைய ஒளியையே மறைந்துவிடுகிறாய்; அக்னியைப் போன்ற பிரகாசமுள்ளவன் நீ; சூரியன் கோபத்தில் எப்படி பிரஜைகளை எரிப்பானோ அப்படி எரிக்கிறாய்; மேகத்தில் இல்லாமல் பிரகாசிக்கின்ற மின்னலைப் போன்றவன் நீ; வரப்பிரசாதி; நீ யாராலும் ஜெயிக்கமுடியாத பராக்கிரமசாலி;
நீ தயாபரனான மஹாத்மா கசியபரிஷியின் புத்திரன். கோபிக்காதே. தேஜஸை அடக்கிக்கொள். எங்களைக் காப்பாற்று. இடிமுழக்கமிடும் உன்னுடைய சப்தம் எட்டுத் திக்கையும் எங்களையும் நடுநடுங்கச் செய்கிறது. கோபித்த யமன் போல இருக்கும் உன் தேஜஸைக் கண்டு எங்கள் மனம் தடுமாறி அலைகிறது.
பகவானே! எங்களுக்குச் சுகம் அருளி அனுகூலமாக இருக்கவேணும்.
**
இந்திரனுக்கு நமஸ்காரம்
-----------------------------------------
தேவாதிதேவர்களுக்கு ஈசனே; பலாஸுரை சம்ஹாரம் செய்தவனே; நமுசி மர்த்தனனே; ஆயிரம் கண்களையுடையவனே; இந்திராணியின் பர்த்தாவே உனக்கு நமஸ்காரம். நீதான் அளவற்ற ஜலத்தை வர்ஷிக்கிற சக்தி படைத்தவன்; நீதான் மேகம்; நீயே வாயு; நீ அக்னி; நீ மின்னல்; ஆகாசத்தில் மேகக் கூட்டங்களைப் பரவச் செய்பவன்; அதனால் மஹாமேகம் என்ற பெயர் படைத்தவன்; ஒப்பில்லாத வஜ்ராயுதம் நீயே; நீதான் லோகங்களுக்கு சிருஷ்டிகர்த்தாவாகவும் சம்ஹார கர்த்தாவாகவும் இருக்கிறாய்; முகூர்த்தமும் நீயே; திதியும் நீயே; லவம் எனப்படும் க்ஷணத்திற்கும் சிறிய காலமும் நீயே; சுக்லபக்ஷமும் நீயே; கிருஷ்ண பக்ஷமும் நீயே; நீ ராஜா; நீ தேவஸ்ரேஷ்டன்; நீயே விஷ்ணு; நீ ஈஸ்வரன்; சூரியன் உலவும் இருளற்ற ஆகாசம் நீயே; நீ சர்வபிராணிகளிடத்தும் தேஜஸ் எனப்படும் சக்தியாக இருக்கிறாய்; மஹா சமுத்திரங்களும் நீயே; துதிக்கப்படும் யக்ஞங்களில் ஸோமரஸத்தையும் ஹவிஸுகளையும் நீ பானம் பண்ணுகிறாய்;நீ உயர்ந்த கீர்த்தியுள்ளவனாக எப்போதும் பூஜிக்கப்படுகிறாய்.
**
அடுத்த பகுதியில்... தன் தாய் வினதையை அடிமையிலிருந்து மீட்பதற்கு கத்ருவின் பிள்ளைகள் அமிர்தம் கேட்டக.. அதற்காக கருடன் பறந்தது......
இதிகாசம் தொடரும்...

No comments:

Post a Comment