Saturday, September 9, 2017

பிராம்மண தர்மம் சொன்ன டுண்டுபத்தின் கதை

"ரிஷிசிரேஷ்டரே! உமக்கு நான் தீங்கெதுவும் செய்யவில்லை. இருந்தாலும் ஏன் என்னைக் கொல்லத் துடிக்கிறீர்?” என்று அந்த டுண்டுபம் கேட்டது.

”என்னுடைய பிரியமான மனைவியை ஒரு ஸர்ப்பம் தீண்டி விட்டது. அன்று முதல் எந்த ஸர்ப்பத்தைக் கண்டாலும் கொல்லவேண்டும் என்று பிரதிக்ஞை செய்திருக்கிறேன். நீ என்னை பேசி மயக்காதே!” என்று மீண்டும் கையிலிருந்த கழியை அடிப்பதற்காக ஓங்கினார்.

“தர்மோத்தமரே! தீண்டும் பாம்புகள் வேறு என்னைப் போன்று தண்ணீரில் வசிக்கும் பாம்புகள் வேறு ஜாதி. நீர்ப்பாம்புகள் யாரையும் தீண்டாது. ஆனால் ஸர்ப்பங்கள் உயிரைப் போக்கும் வல்லமை கொண்டது. அதனால் தர்மம் தெரிந்த நீர் என்னைக் கொல்லக் கூடாது. அது அதர்மம்” என்று நிமிர்ந்து விவாதம் செய்தது.

ருருவிற்கு ஆச்சரியம். நமக்கு இணையாக தர்ம அதர்ம வாக்குவாதம் செய்யும் இது நிச்சயம் ஒரு பாம்பாக இருக்க முடியாது என்று எண்ணினார்.

“பாம்பே! நீ யார்? இதற்கு முன்னால் நீ என்னவாக இருந்தாய்?” என்று கேட்டார்.

“இந்தப் பிறவிக்கு முன்னால் நான் ஸகஸ்ரபாத் என்ற ரிஷி. ஒரு பிராம்மணனின் சாபத்தால் நான் ஸர்ப்பமாக பிறவி எடுத்தேன்”

“யாரந்த பிராமணன்? அவன் ஏன் உனக்கு சாபம் இட்டான்?” என்று ருரு வினவினார்.

ஒரு மரநிழலில் ஒதுங்கிய அந்த டுண்டுபம் என்ற பாம்பு தன்னுடைய சரிதத்தைச் சொல்ல ஆரம்பித்தது.

“ககமர் என்ற ஒரு பிராம்மணர் என்னுடைய முற்பிறவியின் நண்பர். அவரும் நானும் பால்ய ஸ்நேகிதர்கள். ஒருநாள் இருவரும் விளையாடிக்கொண்டிருக்கையில் புல்லினால் ஸர்ப்பம் மாதிரி ஒன்றைச் செய்தேன். அவர் அக்னிஹோத்திரத்தைப் பற்றி நினைத்துக்கொண்டு நின்றிருந்தார். நான் புல்லினால் செய்த ஸர்ப்பத்தால் அவரை பயமுறுத்தினேன்.”

திடுக்கிட்டுப் போய் “என்னை பயமுறுத்துவதற்காக செய்த ஸர்ப்பம் போல நீயும் ஆகக் கடவது” என்று கோபம் கொண்டு என்னைச் சபித்துவிட்டார். நான் நடுங்கிவிட்டேன். அவரைக் கைக்கூப்பித் தொழுது என்னை மன்னிக்கப் பிரார்த்திதேன். ஆனால் அவரது சாபத்தை அவரால் திரும்பப் பெற முடியாது என்று சொன்னார். பிறகு பிரமதிக்கு ருருவெனும் ஒரு புத்திரன் பிறப்பான். நீ எப்போது அவனைக் காண்கிறாயோ அப்போதே உனக்கு சாப விமோசனம். நீ உன்னுடைய ஸ்வயரூபம் பெறுவாய் என்று சொன்னார்.

ருரு அசையாமல் அவர் சொன்னக் கதையைக் கேட்டுக்கொண்டிருக்கும்போதே அந்த நீர்ப்பாம்பு கொஞ்சம் கொஞ்சமாக கால் முட்டி தொடை இடுப்பு மார்பு என்று உருமாறி ஒரு தேஜஸ்வி அங்கே தோன்றினான்.

"தவத்தில் சிறந்தவரே! உமக்குத் தெரியாததல்ல! இருந்தாலும் நான் இப்போது பிராம்மண தர்மம் சொல்வேன். கேளும்."

“எந்தப் பிராணியையும் ஹிம்சித்தல் கூடாது. அதனால் பிராம்மணன் பிராணி வதை செய்யக்கூடாது. இவ்வுலகத்தில் பிராம்மணன் சாந்தன் என்பது பிரசித்தியாக இருக்கிறது. வேதாதந்தங்கள் கற்றவர்கள் ஜீவராசிகளுக்கு அபயம் அளிப்பவர்கள். பிராமணனுடைய முக்கியமான தர்மங்கள் எவையெவை என்று தெரியுமா?”

இந்தக் கேள்விக்குப் பிறகு கொஞ்சம் இடைவெளி கொடுத்தான் ஸஹஸ்ரபாத் என்ற அந்த ரிஹி. ருரு வாயைத் திறக்கவேயில்லை. பொறுமையுடன் கையைக் கட்டிக்கொண்டு அமைதிகாத்தார். அவன் தொடர்ந்தான்...

“கொல்லாமை, பொய்யாமை, பொறுமை, வேதங்களை மறவாமை இந்த நான்கும் பிராம்மணரின் முக்கியமான தர்மங்கள். தண்டிப்பது, கடுமை காட்டுவது போன்றவைகள் க்ஷத்ரிய தர்மம். ஆகவே உயிர்வதை செய்யாதீர்! ஜனமேஜெயருடைய ஸர்ப்ப யாகத்தில் ஆஸ்தீகர் என்ற வேதவித்து புகுந்து பயமடைந்த ஸர்ப்பங்களைக் காப்பாற்றிய கதையைச் சொல்கிறேன் கேளும்” என்றார் அந்த ஸஹஸ்ரபாத்தான டுண்டுபம்.

“பிராம்மண ஸ்ரேஷ்டரே! ஜனமேஜயர் தனது ஸர்ப்ப யாகத்தில் எதற்காக பாம்புகளைக் கொன்றார்? அந்த ஆஸ்தீகரால் ஏன் பாம்புகள் விடுவிக்கப்பட்டன?”

தொணியில் ஆச்சரியம் மேலிடக் கேட்டார் ருரு.

ஆனால் பாம்பிலிருந்து உருமாறிய அந்த பிராம்மணன் ”உடனே செல்லவேண்டிய வேலை இருக்கிறது” என்று அங்கிருந்து உடனே நழுவினான்.

ருரு தனது தந்தை பிரமதியிடம் ஆர்வம் பொங்கக் கேட்டார். அவரும் ஆஸ்தீகரின் முழுக்கதையைச் சொல்லத் தொடங்கினார்.

(இதோடு பௌலோம பர்வம் முடிந்தது)

ஆஸ்தீகரின் பிதாவின் பெயர் ஜரத்காரு. அவர் பிரம்மாவைப் போல பெருமை வாய்ந்தவர். அவர் பிரம்மாசாரியாகவே வெகுகாலம் இருந்தார். உணவை விட்டார். காற்றைப் புசித்தார். கிராமத்துக்கு ஒரு இராத்திரி தங்குவார். மறுநாள் வேறு ஊரில் இருப்பார். தர்மம் தெரிந்தவர். தவ வலிமை மிக்கவர். ஒரு சமயம் இருள் கவிந்த நேரத்தில் ஆளரவமற்ற இடத்தில் பெரும் பள்ளங்களுக்குப் பக்கத்தில் ஒதுங்கினார். அப்போது அந்தப் பள்ளத்தில் குறுக்கே கண்ணுக்குத் தெரியாத ஒரு கயிறு கட்டியது போல காலை அதில் தொங்கவிட்டுக்கொண்டு தலைகீழ் வரிசையாக சில பிதிர்க்களைப் பார்த்தார்.

“நீங்கள் யார்?” என்று சப்தமாகக் கேட்டார்.

“கிராமத்துக்கு ஒரு ராத்திரியாக தங்கும் யாயாவரர் என்ற பட்டப்பெயர் கொண்ட உக்கிரமான தவம் செய்யும் ரிஷிகள். எங்களுக்கு சந்ததி குறைந்து போனது என்பதால் பூமிக்குக் கீழே போய்க்கொண்டிருக்கிறோம். ”

ஜரத்காரு எதுவும் பேசாமல் அவர்களைப் பார்த்துக்கொண்டே இருந்தார்.

பிதிர்க்கள் மேலும் பேசத்தொடங்கினார்கள்.....

இதிகாசம் தொடரும்


No comments:

Post a Comment