Monday, September 11, 2017

ஜரத்காருவுக்கும் ஜரத்காருவுக்கும் நடந்த திருமணம்

அந்த முடிவு காணா பள்ளத்தில் வௌவால்கள் போல தலைகீழாக தொங்கிக்கொண்டிருந்த பிதிர்கள் ஜரத்காருவைப் பார்த்து...

“பூலோகத்தில் சந்ததியில்லாதவர்களுக்கு ஸ்வர்க்கத்தில் இடமில்லை....” என்று ஒருமித்து தர்மம் சொன்னார்கள். 

ஜரத்காருவுக்கு இதைப்பற்றியெல்லாம் கவலையில்லை. மௌனமாக இருந்தார்.

“எங்களுக்கு ஜரத்காரு என்பவன் சந்ததியாக இருக்கிறான். ஆனால் அவனுக்கு சந்ததியில்லை. விவாஹம் செய்துகொள்ளாமல் தீராத தவமியற்றுகிறான். அது சரி. நீ யார் பிராம்மணனே?”

“நான்தான் ஜரத்காரு. பிதிர்களே நான் என்ன செய்யவேண்டும் என்று சொல்லுங்கள்...” என்று கேள்விக்குத் தலை வணங்கி கை கூப்பினார். 

“தர்மவானே!  நீ இப்போது விவாஹம் செய்துகொண்டு சந்ததி விருத்தி செய்ய வேண்டும். அதுதான் நீ தவத்தினால் சம்பாதிக்கும் புண்ணியத்தை விட பலமடங்கு மேலானதாகும்”

“பிதிர்களே! நான் ஒருபோதும் ஜீவனத்துக்காக பொருளையும் மனைவியையும் தேடமாட்டேன். ஆனால் உங்களுடைய நன்மைக்காக விவாஹம் செய்துகொள்கிறேன். அதற்கு சில நிபந்தனைகள் உள்ளன....” என்று பேசி முடிக்காமல் இழுத்தார்.

பள்ளத்தில் தொங்கிக்கொண்டிருந்த பிதிர்கள் எல்லோரும் ஜரத்காருவை தலைகீழாக திரும்பிப் பார்த்தார்கள். ஆயிரம் கண்கள் அவரைக் குத்தி நின்றன.

“நான் திருமணம் செய்துகொள்ளப்போகும் கன்னிக்கு எனது பெயரே இருக்க வேண்டும். இது முதல் நிபந்தனை. இரண்டாவதாக அந்தக் கன்னிகையின் பந்துக்கள் அவர்களாகவே முன்வந்து எனக்கு பெண் தரவேண்டும். மூன்றாவதாக நான் அவளை பிக்ஷையாக ஏற்றுக்கொள்வேன். பின்னர் பாணிக்கிரஹனம் செய்துகொள்வேன்”

தங்களை கரையேற்றுவதற்கு ஜரத்காரு தயாராகிவிட்டார் என்று பிதிர்கள் மகிழ்ந்தார்கள். அவர் மேலும் தொடர்ந்தார்...

“இது நடக்க நான் தொடர்ந்து முயற்சி செய்வேன். ஆனால் இந்த மார்க்கத்திலிருந்து வேறு மார்க்கம் செல்ல மாட்டேன். இந்த சந்ததி உங்களைக் கரையேற்றும். கவலை வேண்டாம்.” என்று சொல்லிவிட்டு காட்டைப் பார்க்க நடந்து போனார்.

வெகுநாட்கள் பூலோகமெங்கும் சுற்றினார். அவருக்கு கன்னிகை கிட்டவில்லை. திரும்பவும் ஒரு அடர்ந்த வனத்தினுள் நடந்து சென்றுகொண்டிருந்தார். பிதிர்கள் தலைகீழாக தொங்கிக்கொண்டு அவரிடம் யாசித்தது நினைவுக்கு வந்தது. இதுவரை தேடியும் யாரும் கிடைக்கவில்லையே என்று மனம் உடைந்தார். நடுக்காட்டில் நின்று கொண்டு...

“எனக்கொரு கன்னியை பிக்ஷையிடுங்கள்”

“எனக்கொரு கன்னியை பிக்ஷையிடுங்கள்”

“எனக்கொரு கன்னியை பிக்ஷையிடுங்கள்”

என்று மூன்று முறை மெதுவாகக் கேட்டார்.

ஒரு பிரம்மாண்ட விருக்ஷத்தின் மறைவிலிருந்து ஒரு பெரிய ஸர்ப்பம் நெளிநெளியென வெளியே எட்டிப் பார்த்தது. ஜரத்காரு ரிஷியின் முன்னால் வந்து நர ரூபம் எடுத்து நின்று கை கூப்பியது.

“ரிஷியே! நான் வாஸுகி. நாகர் தலைவன். நீங்கள் கன்னி யாசகம் கேட்டது என் காதில் விழுந்தது. என்னுடைய சகோதரியை உங்களுக்கு மணம் முடித்துத் தருகிறேன். சரியென்று சொல்லி ஏற்றுக்கொள்ள வேண்டும்.” 

ஜரத்காரு ரிஷி ஒரு கணம் யோசித்தார். இவனுக்கு நமது நிபந்தனைகள் தெரியுமா என்று மனதுக்குள் கேள்வி கேட்டுக்கொண்டு

“ஓ வாஸுகியே! இவளின் பெயர் என்ன? உண்மையைச் சொல்.” என்று வாய்விட்டுக் கேட்டார்.

“இவளது பெயரும் ஜரத்காருதான். உமக்கு பிக்ஷையிட்டு நீர் விவாஹம் செய்துகொள்ள வேண்டும் என்பதற்காக இவளை பத்திரமாக பாதுகாத்து வளர்த்துவருகிறேன். நீர் இவளை ஏற்றுக்கொள்ளும்” என்றான் வாஸுகி.

ஜரத்காரு ரிஷி அவளை பிக்ஷையாக வாங்கிக்கொண்டு பாணிக்கிரஹணம் செய்துகொண்டார்.

[ஜரத்காருக்களுக்குப் பிறந்த ஆஸ்தீகர்தான் பின்னால் ஜனமேஜயன் செய்த ஸர்ப்ப யாகத்தின் போது தமது சகோதரர்களுக்கு சாப விமோசனம் செய்வித்தார். சந்ததியை விருத்தி செய்து பிதிர்களைக் கரையேற்றினார்.]

**

இந்த வாஸுகி தனது ஸர்ப்ப உடன்பிறப்புகளைக் காப்பதற்கு தனது சகோதரியான ஜரத்காருவை ஜரத்காரு ரிஷிக்கு விவாஹம் செய்ய முற்பட்ட கதைக்கு அடிநாதமாக ஒரு ஆதி கதை ஒன்று இருக்கிறது. அந்தக் கதையின் இறுதியில் மேற்கண்ட ஜரத்காருகளின் திருமணம் நடைபெறும். இதோ அந்தக் கிளைக் கதை...

**
தக்ஷ பிரஜாபதிக்கு சௌந்தர்யம் ததும்பும் இரண்டு பெண்கள். ஒருத்தி கத்ரு. இன்னொருத்தி வினதை. இவ்விருவரையும் கசியப முனிவருக்கு விவாஹம் செய்துகொடுத்தார் தக்ஷன். காலம் ஓடியது. முனிவரது வாழ்க்கையில் ஹோமாதியக்ஞங்களுக்கு மட்டும்தான் நேரமிருந்தது. மனைவிகளைப் பார்த்து பழகுவதற்கு அவகாசமில்லை. நிஷ்டை கலைந்த ஒருநாள் கசியபர் அவரது இரண்டு மனைவிகளையும் பர்ணசாலையின் வாசலுக்கு அழைத்து வந்து..

“கத்ரு... வினதை.. உங்கள் இருவருக்கும் நான் வரம் அருளலாம் என்றிருக்கிறேன்.. ம்.. கேளுங்கள்..” என்றார்.

இருவர் முகமும் வரம் என்றதும் தாமரையாய் மலர்ந்தது. முதலில் கத்ரு கேட்டாள்...

“ஸ்வாமி.. எனக்கு ஒரே ரூபமுள்ள ஆயிரம் நாகர்கள் பிள்ளைகளாக வேண்டும்”

“அப்படியே ஆகட்டும்”

அடுத்தது வினதை முன் வந்து கரம் கூப்பி...

“பிரபோ! எனக்கு கத்ருவின் பிள்ளைகளை விட அதிக பலத்தோடு இரண்டே இரண்டு புத்திரர்கள் வேண்டும். அவர்கள் உருவத்திலும் பராக்கிரமத்திலும் சிறந்தவர்களாக இருக்கவேண்டும்”

“ம்.. நடக்கும்” என்று இருவருக்கும் வரம் அருளினார் கசியபர்.

இருவரும் பூரண சந்தோஷமடைந்தனர். வரம் கிடைத்து பல நாட்களுக்குப் பிறகு கத்ரு ஆயிரம் முட்டைகளைப் பெற்றாள். வினதை இரண்டு முட்டைகளைப் பெற்றாள். இருவருடைய வேலைக்காரிகளும் சந்துஷ்டியுடன் அம்முட்டைகளைக்  அதற்கு வேண்டிய உஷ்ணம் காக்கும் பாத்திரங்களில் ஐநூறு வருஷகாலம் பத்திரமாக பாதுகாத்தனர்.

ஐநூறாவது வருஷத்தில்....

இதிகாசம் தொடரும்..

No comments:

Post a Comment