Saturday, December 16, 2017

வஸுக்களுக்கு வசிஷ்டர் இட்ட சாபம்

”கங்காதேவி உனது புத்திரனை நான் பர்த்தாவாக அடையப் போகிறேன்” என்று மறைந்து போன பெண்ணையே நினைத்துக்கொண்டு அரண்மனை சென்றான் பிரதீபன். ஏற்கனவே வயதாகியிருந்த பிரதீபனும் அவனது மனைவியும் புத்திரனை விரும்பி தவம் இருந்தார்கள்.

பிரதீபனின் பாரியை கர்ப்பமுற்றாள். பத்தாவது மாதத்தில் குழந்தை பிறந்தது. மஹாபிஷக் அவர்களுக்கு புத்திரனாகப் பிறந்தான். பிரதீபனுக்கு முதுமையில் அந்தக் குழந்தை பிறந்ததால் சந்தனு என்று அழைக்கப்பட்டான். (சம்=சாந்தமானபோது; தனு=உண்டாக்கப்பட்டவன்). தனுர்வேதத்திலும் வேதங்களிலும் உயர்ந்த ஞானத்தை அடைந்தான். யௌவனம் எட்டினான்.

வெற்று மார்போடு கங்கைக்கரையில் நின்றுகொண்டிருந்தான் பிரதீபன். சந்தனு ஒரு தேரில் வந்து இறங்கினான். பக்கத்தில் கங்கை பிரவாகமாக ஓடிக்கொண்டிருந்தது.

“சந்தனு...” என்று அழைத்தான் பிரதீபன். ஆகிருதியானவன் அருகில் வந்து கைகட்டி நின்றான்.

“ஒரு நாள் நான் இதே கங்கைக்கரையில் நான் ஓய்வாக அமர்ந்திருந்தபோது ஒரு தேவலோகத்துப் பெண் வந்தாள். அவள் உனது ஸ்ரேயஸ்ஸுக்காகவும் புத்திரனை பெற வேண்டியும் உன்னிடம் வந்தால் நீ யார்? யாருடைய பெண்? என்றெல்லாம் கேட்காதே. அவள் எந்தக் காரியம் செய்தாலும் அவளை நீ கேள்வி கேட்காதே. இதை என் கட்டளையாக ஏற்றுக்கொள். அவளை திருமணம் புரிந்துகொள்”

இருவரும் அரண்மனை திரும்பினார்கள். பிரதீபன் சந்தனுவிற்கு பட்டாபிஷேகம் செய்து வைத்தான். அடுத்த முகூர்த்தத்தில் அவனும் பாரியாளும் வானபிரஸ்தம் கிளம்பினார்கள். சந்தனு சிறப்பாக ஆட்சி செலுத்திக்கொண்டிருந்தான். பிரஜைகள் கவலையின்று வாழ்க்கை நடத்தினார்கள். எல்லோருக்கும் பாதுகாப்பாக இருந்தான்.

ஒரு சமயம் தனிமையில் கங்கைக்கரையோரம் நடந்துகொண்டிருந்தான். அப்போது அவனெதிரே உத்தம ஸ்திரீ ஒருத்தி வந்தாள். மெல்லிய ஆடை அணிந்திருந்தாள். முத்துக் கோர்த்தாற்போல பற்கள். சிவந்த அதரங்கள். மின்னலிடை. அன்னநடை. கடைக்கண் பார்வை கட்டி இழுத்தது. அவனை அடித்துப்போட்ட அழகு. அவள் மீது வைத்த கண்ணை எடுக்காமல் பார்த்தான் சந்தனு. நேரம் ஆகிக்கொண்டே இருந்தது

அப்ஸரஸ் போலிருந்த கங்கையும் இவனை விழுங்கிவிடுவது போல பார்த்துக்கொண்டேயிருந்தாள். எவ்வளவு நேரம் அப்படி ஒருவரை ஒருவர் குடித்துவிடுவது போல பார்த்தார்கள் என்று கணக்கில் இல்லை. கடைசியில் சந்தனு மௌனத்தைக் கலைத்து

”அழகான இடையுள்ளவே! நீ அப்ஸரஸா? அஸுரப்பெண்ணா? கந்தர்வப்பெண்ணோ? மானிடப் பெண்ணா? நாக கன்னிகையா? நீ யாராக இருந்தாலும் பரவாயில்லை. எனக்கு மனைவியாகிவிடு. என் தனம் உயிர் இரண்டும் உனக்கு சமர்ப்பணம்”

கங்காதேவி மகிழ்ந்தாள். அவளது உதடு சுழிப்பிலும் பற்கள் தெரிய சிரித்ததிலும் மயங்கினான் சந்தனு.

“ராஜாவே! நீயோ மற்றவர்களோ எந்த வழியிலும் என்னைப் பற்றித் தெரிந்துகொள்ள ஆர்வம் காட்டக்கூடாது. நல்லதோ கெட்டதோ... நான் என்ன செய்தாலும் அதை கேள்வி கேட்கக்கூடாது. தடுக்கக்கூடாது. இப்படியிருந்தால் நன் உன்னுடம் இருப்பேன். இதை மீறும் பொழுது உன்னை விட்டுச் சென்றுவிடுவேன். இதற்கு சம்மதமா?” என்று கேட்டாள்.

இரு கண்களையும் காமத்தைக் குழைத்துச் சேர்த்த காதல் மறைத்தது. எல்லாவற்றுக்கும் சரி என்பதைப் போல தலையாட்டினான்.

“உன் பிதாவினால் நான் அங்கீகரிக்கப்பட்டிருக்கிறேன். என்னுடைய நிபந்தனைகளை ஏற்றுக்கொண்டாய். உன்னை நான் பர்த்தாவாக அடைகிறேன்” என்று சந்தனுவுடன் கரம் கோர்த்தாள். பக்கத்திலிருந்த கங்கை ஒரு முறை பொங்கி அடங்கியது போலிருந்தது.

கைபிடித்த கங்காதேவியை தேரில் ஏற்றிக்கொண்டு நகரத்திற்கு விரைந்தான் சந்தனு. மனிதரூபம் எடுத்துள்ள கங்காதேவியுடன் களித்திருந்தான். எப்போதும் அவளது காலடியிலேயே தவம் இருந்தான். அவளும் புணர்ச்சியினாலும் முகமலர்ச்சியினாலும் தினமும் விளையாடி சந்தோஷிக்கச் செய்தாள். அவளது குணங்களினால் ஈர்க்கப்பட்டு சந்தனு போகத்திலேயே திளைத்திருந்தான்.

ருதுஸ்நானம் கழிந்து சந்தனுவுடன் கலந்து கர்ப்பமுற்றாள். நகரமே பட்டமஹிஷியின் பிள்ளைப் பேறு பற்றிப் பேசியது. பிறக்கும் நாளன்று விழா எடுத்துக் கொண்டாட தயாரானது. அழகான ஆண் குழந்தை பிறந்தது. சேடிப்பெண்கள் ஓடிப்போய் சந்தனுவிடம் விஷயம் சொல்லி அந்தப்புரத்துக்குள் அழைத்து வருவதற்குள் குழந்தையின் குரல்வளையைப் பிடித்து அப்படியே தூக்கிச்சென்று கங்கையில் வைத்து அழுத்திக் கொன்று விட்டாள்,.

இதைக் கேள்விப்பட்ட சந்தனு செய்வதறியாது திகைத்தான். இவள் பேயா? பெண்ணா? என்று சந்தேகித்தாலும் அவளிடம் ஏன்? யார்? என்று கேட்டால் தன்னை விட்டுப் போய்விடுவாளோ என்று அஞ்சி வாய்பொத்தி பேசாதிருந்தான். காமம் கண்ணை மறைத்தது.

ஒவ்வொரு முறையும் குழந்தை பிறந்தது என்பார்கள், சந்தனு ஓடிப்போய் பார்ப்பதற்குள் கங்கையில் குழந்தையை விட்டுவிட்டு வந்திருப்பாள். சந்தனுவைப் பார்த்தால் ஓடி வந்து கட்டிக்கொள்வாள். ஆனால் சந்தனுவால் ஏனிப்படி செய்தாய்? என்று கேட்க அச்சமாக இருந்தது.

இது போல ஏழு முறை நடந்தது.

எட்டாவது பிள்ளை பிறந்தது. இவள் அதைக் கொல்ல குரல்வளை நோக்கிக் கையைக் கொண்டு போன போது சந்தனு உள்ளே வந்தான்.

“கொல்லாதே! நீ யார்? பெற்ற பிள்ளைகளையே கொல்கிறாயே பாதகி... உன்னை பாபம் வந்து சேரட்டும்” என்று சத்தம் போட்டான்.

“நாம் செய்துகொண்டிருந்த ஒப்பந்தத்தை மீறிவிட்டாய். நாம் இனி சேர்ந்து வாழ முடியாது. நான் கிளம்புகிறேன்”

“சற்று நேரம் நில்! இவ்வளவு நாட்களாக உன்னிடம் கேட்கவேண்டும் என்று துடித்துக்கொண்டிருந்தேன். இப்போதாவது பதில் சொல்லிவிட்டுப் போ. நீ யார்?”

“ராஜாவே! நான் ஜன்ஹு மஹரிஷியின் புத்ரி. கங்கை.”

“எதற்காக குழந்தைகளைக் கொன்றாய்? அந்த பாபக் காரியத்தை ஏன் செய்தாய்?” கேட்டபோது சந்தனுவின் மீசை துடித்தது. நா தழுதழுத்தது.

“அவர்கள் அனைவரும் தேவர்கள். மிகுந்த புண்ணியமும் சக்தியும் கொண்ட அஷ்ட வஸுக்கள். வசிஷ்டருடைய சாபத்தால் மனுஷ்யர்களாகப் பிறந்தார்கள். சாப நிவர்த்திக்காக அவர்கள் என்னிடம் கர்ப்பவாஸம் செய்தார்கள். அவர்களைப் பெற்றதினால் நீயும் அழியா லோகங்களை ஜெயித்தாய். இந்த புத்திரனை கங்காதத்தன் என்று வளர்ப்பாயாக!”

“எட்டு வசுக்களில் எழுவர் சாபம் நீங்கிச் சென்றுவிட்டார்கள். எட்டாவதாகப் பிறந்த இவன் மட்டும் ஏன் மேலுலகம் செல்லவில்லை?”: என்று கேட்டான் சந்தனு.

அரண்மனையின் மேல் மாடத்திற்கு வந்தாள் கங்கை. மன்னன் அவளைப் பின் தொடர்ந்தான். தூரத்தில் கங்காநதி கரைபுரண்டு ஓடிக்கொண்டிருந்தது. அதைப் பார்த்துக்கொண்டே அஷ்டவஸுக்கள் சாபம் பெற்றக் கதையைச் சொல்லத் துவங்கினாள் கங்காதேவி.

“வருணனின் புத்திரர் வசிஷ்டர். அவர் ஆபவர் என்றும் பிரசித்திப் பெற்றார். மேரு பர்வதத்தின் சரிவில் அவரது ஆஸ்ரமம் இருந்தது. வருண புத்திரர் வசிஷ்டர் அந்தச் சரிவில் காய்கனிகள் காய்த்துக் குலுங்கும் நந்தவனத்தில் தவமியற்றிக்கொண்டிருந்தார். தக்ஷ புத்ரி ஸுரபி கஸ்யபரின் மனைவி. அவள் நினைத்தையெல்லாம் கறக்கின்ற சிறந்த பசுவை பெற்றாள். அந்தப் பசுவை தனது ஹோமத்திற்கு தேவைப்படும் பாலைக் கறந்துகொள்வதற்காக வசிஷ்டர் வைத்துக்கொண்டார்.

அந்த தபோவனத்தில் அந்த தேனு சஞ்சரித்துக்கொண்டிருந்தது. அப்போது தேவர்களாகிய வஸுக்கள் அந்தப் பக்கமாக வந்தார்கள். தனது பத்னிகளுடன் அந்த வனத்தில் விளையாடிக்கொண்டிருந்தார்கள். ப்ரபாஸன் என்ற வஸுவின் பத்னி மடி பெருத்து புஷ்டியாக எல்லா வகையிலும் சிறப்பாக இருந்த அந்த தேனுவை அவனிடம் காட்டினாள்.

“எவ்வளவு அழகாக இருக்கிறது!! பார்த்தாலே மனம் கொள்ளை போகிறது” என்றாள்.

“இந்த தேனு வசிஷ்ட மஹரிஷியுடையது. இதன் சுவையான பாலைக் குடித்தால் பதினாயிர வருஷகாலம் யௌவனம் அழியாமல் வாழலாம்”

இதைக் கேட்ட ப்ரபாஸனின் பத்னிக்குக் கண்கள் ஒளிர்ந்தன. முகம் சந்தோஷத்தில் மலர்ந்தது. அவள் ப்ரபாஸனைக் கட்டிக்கொண்டு ஒரு விண்ணப்பம் செய்தாள்.

“இந்த கோவை அதன் கன்றோடு தூக்கிச் செல்ல வேண்டும்” என்றாள்.

“ஏன்?” என்று பதற்றத்துடன் கேட்டான் ப்ரபாஸன்.

“பூலோகத்தில் ஜிதவதி என்று என் தோழி இருக்கிறாள். அழகுக்கு அழகானவள். அவளது யௌவனம் கரையாமல் இருக்க இந்த பசுவையும் கன்றையும் அவளுக்குப் பரிசளித்து மகிழ்வேன்” என்றாள்.

[பெண்டாட்டி சொன்னா தட்டக்கூடாது என்பதில் தேவலோகத்துக் கதையும் விலக்கல்ல.]

ப்ருது என்ற வஸுவும் அவன் சகோதரர்களும் ப்ரபாஸனுக்கு உதவி புரிய களம் இறங்கினார்கள்.

அந்த மேரு பர்வத சரிவில் மேய்ந்துகொண்டிருந்த நந்தினி என்ற தேனுவையும் அதன் கன்றையும் சேர்த்துக் கவர்ந்து கொண்டு வந்து தனது மனைவியிடம் கொடுத்து “உன் ஸ்நேகிதிக்குப் பரிசு” என்று சிரித்தான் ப்ரபாஸன்.

அந்த நந்தவனத்தின் மூலையில் தவம் செய்துகொண்டிருந்த வசிஷ்டர் தவம் முடிந்தவுடன் அங்கே மேய்ந்துகொண்டிருந்த நந்தினியைக் காணாது தவித்தார். பின்னர் தன்னுடைய ஞானதிருஷ்டியினால் அஷ்ட வஸுக்கள் அதைக் கவர்ந்து சென்றதைக் கண்டுபிடித்தார்.

“எனது பசுவைக் கவர்ந்து சென்ற அஷ்டவசுக்கள் அனைவரும் பூலோகத்தில் மானிடர்களாக பிறக்கக்கடவது” என்று சபித்தார்.

வசிஷ்டரால் சபிக்கப்பட்டதை அறிந்து அனைவரும் அடுத்த கணம் அவரது காலடியில் கிடந்தார்கள்.பின்னர் எழுந்து நின்று ப்ருது சொன்னான்

“முனிவரே! நாங்கள் இந்தக் களவுக்குத் துணை போனோம். ஆனால் இதைக் கவர்ந்தது ப்ரபாஸன் என்னும் இவன் தான்.. ஆகையால் எங்களை நீங்கள் உங்கள் சாபத்திலிருந்து விடுவிக்க வேண்டும்” என்றார்கள்.

“என்னுடைய வாக்கு பொய்க்காமல் போகாது. ஆனால் நீங்கள் ஏழு பேரும் மண்ணில் பிறந்ததும் உடனே மேலுலகம் வந்தடைவீர்கள். இந்தப் ப்ரபாஸன் மட்டும் நீண்ட காலங்கள் திருமணம் புரிந்துகொள்ளாமல், ஸ்திரீ போகங்களை விட்டு, தன் தந்தையின் விருப்பங்களை நிறைவேற்றி வைத்து வாழ்வான்” என்று சாபத்தை திருத்தியமைத்தார்.

அந்த வஸுக்கள் மேலுலகத்தில் என்னைப் பார்த்து என் வயிற்றில் பிறப்பதாகவும் அவர்கள் பிறக்கப் பிறக்க ஜலத்தில் வீசியெறிந்து காப்பாற்றும்படியும் வேண்டிக்கொண்டார்கள். அதன்படி நானும் செய்தேன். இவன் ஒருவன் மட்டும் இந்தப் பூமியில் வெகுகாலம் ஜீவித்திருப்பான். இப்போது இவனை நான் எடுத்துச்செல்கிறேன். இவன் பெரியவனானதும் உன்னிடம் வருவான்.நானும் நீ அழைத்தால் மீண்டும் உன் முன் தோன்றுவேன்”

கங்காதேவி கதையைச் சொல்லிவிட்டு அந்தக் குழந்தையும் தூக்கிக் கொண்டு கங்கையில் இறங்கினாள். அப்படியே நீரோடு கரைந்து கலந்து மறைந்துபோனாள்.

சந்தனு எல்லாவற்றையும் இழந்துவிட்டோம் என்ற ஸ்திதியில் உறைந்து போய் அங்கேயே நின்றிருந்தான். கங்கையின் வேகமான நீரோட்டத்தினால் அங்கே இரைச்சல் நிரம்பியது.


#ஸ்ரீவியாஸ_பாரதம்
#மஹாபாரதம்
#ஆதிபர்வம்
#சந்தனு
#கங்காதேவி
#ஸம்பவபர்வம்
#பகுதி_40

No comments:

Post a Comment