Sunday, March 11, 2018

வசிஷ்டரின் தற்கொலை முயற்சி



காமதேனுவின் “ம்மா...” என்ற உரத்தக் குரலுக்கு அந்த வனமே நடுங்கியது. விஸ்வாமித்திரரின் சேனை பயந்தது. அவர்களை துரத்த ஆரம்பித்தது. வனமெங்கிலும் கூச்சல் எதிரொலித்தது. சாட்டையாலும் தடிகளாலும் அதை அடித்தார்கள். கோபம் உச்சத்தில் ஏற அதன் வால் தீப்பிடித்தது போல பற்றிக்கொண்டு பெரும் நெருப்பு மழையை அங்கே பொழிந்தது. நந்தினியை அடிக்கப் பக்கத்தில் வந்தவர்கள் பற்றிக்கொண்டு எரிந்தார்கள். அந்த வனமே தகித்தது. அநேக மரங்கள் தீப்பிடித்து திகுதிகுவென்று எரிய ஆரம்பித்தன.
அதன் மேனியின் பல்வேறு இடங்களிலிருந்து பல்வேறு வீரர்கள் போன்றவர்கள் தோன்றி களத்தில் ஆயுதஙக்ளோடு குதித்தார்கள். அங்கிருந்த விஸ்வாமித்திரரின் சேனை கதிகலங்கியது. நந்தினியிடமிருந்து உருவாக்கப்பட்ட அந்த வீர சேனை விஸ்வாமித்திரரின் சேனையை சிதறடித்தது. காமதேனுவால் விஸ்வாமித்திரரின் சேனை ஜெயிக்கப்பட்டது. அவர் முகத்தில் கோபச்சுடர் தெறித்தது.
நந்தினி விஸ்வாமித்ர சேனைகளில் ஒருவரையும் கொல்லவில்லை. அவர்கள் அனைவரையும் மூன்று யோஜனை தூரம் விரட்டிவிட்டது. தனியாளாய் கோபக்கனல் தெரிக்க வில்லோடு நின்றார் நெடிய விஸ்வாமித்திரர். எண்ணெற்ற பாணங்களை ரிஷி ஸ்ரேஷ்டரான வசிஷ்டர் மீது பொழிய ஆரம்பித்தார். அந்த அஸ்திரங்கள் பிரளய காலத்தில் பொங்கி வரும் சூரிய ரஸ்மிகளைப் போல நாலா பக்கமும் ஜ்வாலைகளை வாரி இறைத்துக்கொண்டு வந்தது.
அம்பு மாரி தன்னை நோக்கி வந்ததை வசிஷ்டர் தனது தண்டத்தால் அலட்சியமாக தட்டிவிட்டார். விஷமமாகச் சிரித்தார். விஸ்வாமித்திரருக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. க்ஷத்ரிய குலத்துக்கே அவமானமாக நினைத்து உள்ளுக்குள் புழுங்கினார்.
“காதி புத்திரனே! இன்னும் ஏதேனும் பாணம் மீதம் இருக்கிறதா? நான் அப்படியே நிற்கிறேன். ஏவு பார்க்கலாம்” என்று சவால் விட்டார்.
தலை குனிந்து நின்றார் விஸ்வாமித்திரர். ஆயிரமாயிரம் சேனைகள் இருந்தும் அஸ்திரங்கள் பிரயோகிக்கத் தெரிந்தும் பிரம்மதேஜஸ்வியாக இருக்கும் வசிஷ்டரிடம் தோற்றுவிட்டோம் என்று புரிந்துகொண்டார்.
“க்ஷத்ரியனுடைய பராக்கிரமம் பிரம்மதேஜஸின் முன் நில்லாது. செல்லாது.” என்று ஒப்புக்கொண்டார். பிரம்மதேஜஸின் பலாபலன்களையும் க்ஷத்ரியனின் பராக்கிரமத்தையும் தராசுத்தட்டில் வைத்தால் பிரம்மதேஜஸின் எடை அதிகம் காட்டும். ஆகையால் தவவலிமையே சிறந்தது என்ற முடிவுக்கு வந்தவராக ராஜ்ஜியத்தைத் துறந்தார். தவமியற்ற வனம் ஏகினார்.
தனது தபோவலிமையால் பிரம்மதேஜஸ் பெற்றார். ஜ்வலிக்கின்ற தேஜஸ் நிரம்பிய பிராமணத்தன்மையை அடைந்தார். இந்திரனும் ஸோமரஸம் பானம் செய்யுமளவிற்கு உயர்ந்தார்.
இதுவே ராஜரிஷி பிரம்மரிஷியான கதைக்கான பூர்வாங்க சரித்திரம்.
**
“அங்காரபர்ணா! இதற்குப்பிறகு வசிஷ்டருக்கும் விஸ்வாமித்திரருக்கும் பகை தொடர்ந்ததா? விஸ்வாமித்திரர் ஏதாவது பழி வாங்கினாரா? எனக்கு பூர்ணமாகச் சொல்” என்று கேட்டான் அர்ஜுனன். ஸ்வயம்வரத்துக்குச் செல்வோமா மாட்டோமா என்று நால்வரும் குந்தியும் நினைக்க ஆரம்பித்துவிட்டார்கள். அந்தக் கந்தர்வனும் மிகவும் சுவாரஸ்யமாக அடுத்த கதைகளை அடுக்கத் துவங்கினான்.
“பார்த்தனே! இப்போது நான் சொல்லப்போவது வசிஷ்டரின் சரித்திரம். கேள்”
இக்ஷ்வாகு வம்சத்து அரசன் கல்மாஷபாதன். ஒப்பற்ற பராக்கிரமம் படைத்தவன். வீரன். வில்லாளி. ஒரு சமயம் வனம் புகுந்து மான் பன்றி என்று அடித்தது போதாதென்று ஏகத்துக்கும் காண்டாமிருகங்களையும் வேட்டையாடினான். விஸ்வாமித்திரர் அவனுக்கு யாகம் செய்விக்கிறேன் என்று ஏற்கனவே தனது விருப்பத்தைத் தெரிவித்திருந்தார்.
மிகவும் அதிகமாக வேட்டையாடியதால் களைப்புற்ற கல்மாஷபாதன் ஒரு ஒற்றையடிப்பாதையில் நடந்து வந்துகொண்டிருந்தான். எதிரில் வசிஷ்டரின் நூறு புத்திரர்களுள் மூத்தவரான சக்தி நடந்து வந்துகொண்டிருந்தார். கல்மாஷபாதன் அவரைப் பார்த்து “ம்... இந்த வழியை விட்டு விலகும். ம்..ம்.. நகருங்கள்.” என்று அதட்டினான்.
“மஹாராஜா! இது என் வழி. கிழவன், பயந்தவன், அரசன், ஸ்நாதகன், பெண், ரோகிஷ்டன், கலியாணப் பிள்ளை, வண்டிக்காரன் இவர்களுக்கு வழிவிடவேண்டும். இதில் சிலர் அரசனுக்கு விடவேண்டும். இன்னும் சிலருக்கு அரசன் வழிவிடவேண்டும். அரசன் பிராமணனுக்கு வழிவிட வேண்டும் என்று எல்லா தர்மங்களிலும் இருக்கிறது. ஆகவே நீர் வழியை விடும்” என்று உறுதியான குரலில் சொன்னார்.
வழிவிடும் சர்ச்சை தொடர்ந்து இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.
“நீ விடு.. நீ விடு..” என்று ஒருவருக்கொருவர் சொல்லிக்கொண்டு அங்கேயே நின்றுகொண்டிருந்தார்கள். பின்னர் சினம் கொண்ட கல்மாஷபாதன் சக்திரிஷியைக் கசையால் அடித்தான். வசிஷ்ட புத்திரருக்கும் கோபம் வந்தது.
“ஒரு ரிஷியை ராக்ஷசனைப் போல அடிக்கிறாயே! நீ ராக்ஷசனாகி நர மாம்ஸம் தின்பதில் ஆசை ஏற்பட்டு இந்தப் புவி எங்கும் திரிவாய்” என்று சபித்துவிட்டார்.
ஏற்கனவே அந்த கல்மாஷபாதனின் புரோகிதராக இருப்பதில் விஸ்வாமித்திரருக்கும் வசிஷ்டருக்கும் விரோதம் இருந்துவந்தது. சக்தி ரிஷி சபித்தபிறகுதான் கல்மாஷபாதனுக்கு அவர் வசிஷ்ட புத்திரர் என்பது தெரியவந்தது. அந்த சமயத்தில் அந்தப் பக்கமாக விஸ்வாமித்திரர் வந்துகொண்டிருந்தார். இவர்கள் இருவரும் நடுவழியில் நிற்பதைப் பார்த்து காற்றோடு காற்றாக மறைந்து அந்த வழியைத் தாண்டிச் சென்றுவிட்டார் .
கல்மாஷபாதன் சக்தி ரிஷி சாபம் கொடுத்தவுடன் செய்வதறியாது திகைத்து அவரது காலில் தஞ்சமடைந்தான். அவர்களைத் தாண்டி அந்தப் பக்கம் சென்று கொண்டிருந்த விஸ்வாமித்திரர் இதைப் பார்த்துவிட்டார். வசிஷ்ட புத்திரன் காலில் விழும் கல்மாஷபாதனைத் தண்டிப்பதற்காக அவன் மீது ஒரு ராக்ஷசனை ஏவினார். கிங்கரன் என்னும் ராக்ஷசன் கல்மாஷபாதன் மேல் ஆவேசமானான்.
தன்னை ஒரு ராக்ஷசன் பிடித்திருக்கிறான் என்று தெரிந்தும் அந்த அரசன் புத்தியினால் அடக்கப்பட்டு அமைதியாக தனது ராஜ க்ருஹத்துக்கு திரும்பினான் .தன்னுடைய அரண்மனை வாசலில் ஒரு பிராமணன் கையிரண்டையும் ஏந்திக் கொண்டு பிக்ஷைக்காக நின்றுகொண்டிருந்தான். ஏற்கனவே காலையில் வனத்துக்கு வேட்டையாட வந்த போதே தனக்கு மாமிஸம் வேண்டும் அன்று அந்த பிராமணன் பிச்சையெடுத்துக் கொண்டிருந்தான்.
“நீ இங்கேயே காத்திரு! நான் வேட்டைக்குப் போகிறேன். வந்து உனக்கு மாமிசம் தருகிறேன்” என்று வாக்குக் கொடுத்துவிட்டு வந்திருந்தான். அரசன் இரவில் திரும்பினான். அந்தப் பிராமணனைப் பார்த்துக்கொண்டே அரண்மனைக்குள் சென்றுவிட்டான். பின்னர் நேரே அந்தப்புரம் சென்றான். மகிழ்ச்சியாக இருந்தான். நள்ளிரவில் வாசலில் மாமிசம் பிச்சையெடுத்து நிற்கும் பிராமணன் நினைவு வந்தது. உடனே சமையற்காரனை அழைத்தான்.
”இங்கே ஒரு பிராமணன் அன்னம் வேண்டி நிற்கிறான். மாமிசத்துடன் கூடிய அன்னத்தை அவனுக்கு அளி” என்று உத்தரவிட்டான்.
அந்த நேரத்தில் மாமிசம் எப்படி கிடைக்கும்? வெளியே சென்று திரும்பிய அந்த சமையற்காரன் கல்மாஷபாதனிடம் மாமிசம் எதுவும் கிடைக்கவில்லை என்று தெரிவித்தான்.
“மனித மாமிசமாவது அவனுக்குப் போஜனம் செய்துவை” என்று பலமுறை அழுத்திக் கூறி சமையற்காரனை மீண்டும் விரட்டினான் கல்மாஷபாதன்.
கொல்லத்தக்கவர்களைத் தேடிக் கண்டுபிடித்து கொல்பவர்களின் இடம் தேடிச் சென்ற சமையற்காரன் அங்கிருந்து நர மாமிசத்தைக் கொண்டு வந்து சமைத்துக் காத்திருக்கும் பிராமணனுக்கு இட்டார்கள். அவன் தனது யோக சிருஷ்டியினால் அந்த அன்னம் புசிக்கத்தக்கதன்று. அது நரமாமிசம். தெரிந்துகொண்டான்.
“அதமனான அரசன் நான் உண்ணத்தகாத உணவை எனக்களித்தான். ஆகையால் முன்பே சக்தி சாபமிட்டது படி மனிதர் மாமிசம் உண்பவனாகத் திரிவான்” என்று வசிஷ்ட புத்திரரின் சாபத்தை உறுதிசெய்தான்.
இரண்டாம் தரம் அந்த சாபத்தை வாங்கிய பின் அது உறுதியாகி கல்மாஷபாதன் உள்ளேயிருந்த ராக்ஷசன் பலம் பெற்றான். ராக்ஷசனாக வெகுகாலம் திரிந்தான். பலகாலத்திற்குப் பின்னர் அவன் சக்தி ரிஷியை ஓரிடத்தில் சந்தித்தான். அவரால்தான் ராக்ஷசனாகத் திரிகிறோம் என்று பெரும் கோபம் கொண்டு ஒரு புலியானது பசுவை அடித்துச் சாப்பிடுவது போல சக்தி ரிஷியை சாப்பிட்டு ஏப்பம் விட்டான்.
விஸ்வாமித்திரர் ராக்ஷசனான கல்மாஷபாதனை மீண்டும் மீண்டும் வசிஷ்ட புத்திரர்கள் மேலே ஏவி விட்டு அனைவரையும் கல்மாஷபாதனே தின்னும்படி செய்தார்; தனது புத்திரர்களை அழித்தவர் விஸ்வாமித்திரர்தான் என்று தெரிந்து கொண்டும் வசிஷ்டர் அவரை ஒன்றும் செய்யவில்லை. மாறாக மனம் ஒடிந்தார்.
நூறு புத்திரர்களையும் பறிகொடுத்த சோகம் தாங்காமல் இமயமலையின் உச்சியில் இருந்து குதித்தார். பஞ்சு போல பறந்துவந்து தரையை அடைந்தார். கீழே விழுந்ததும் எழுந்து தனது அங்க அவயங்களைப் பார்த்துக்கொண்டார். ஏதும் ஆகவில்லை. பின்னர் செம்மையாக எரிந்து கொண்டிருந்த அக்னியில் பாய்ந்தார். துளிக்கூட சுடாமல் வெளியே வந்தார். வருத்தம் மேலோங்கிட கழுத்தில் ஒரு கற்பாறையைக் கட்டிக்கொண்டு சமுத்திரத்தில் இறங்கினார். அழகாக அலைகளால் அடிக்கப்பட்டு உயிரோடு கரை ஒதுங்கிவிட்டார். தனது உயிர்கூட போகமாட்டேன் என்கிறதே என்ற வருத்தத்தோடு தனது ஆஸ்ரமம் திரும்பிவிட்டார்.
புத்திரர்கள் இல்லாத ஆஸ்ரமத்தில் தான் மட்டும் வசிக்க இஷ்டமில்லாமல் மீண்டும் பிராணஹத்தி செய்து கொள்வதற்காக ஓடி வந்தார். அப்போது கார்காலத்தில் புதுஜலம் நிரம்பி கரையினுள்ளே புகுந்து மரத்தை இழுத்துக்கொண்டு வேகமாகச் செல்லும் நதியினைப் பார்த்தார். தனது சரீரத்தை கயிற்றினால் கட்டிக்கொண்டு அந்த நதியில் மூழ்கினார். கொஞ்ச தூரத்தில் அவருடைய கட்டுக்களை அவிழ்த்து கரையில் இழுத்துப் போட்டுவிட்டு சென்றுவிட்டது. அவரது கட்டுக்களை விடுவித்ததால் விபாசை என்று அந்த நதிக்குப் பெயர் வைத்தார் வசிஷ்டர்.
கொடிய முதலைகள் நிரம்பிய நதிக்குச் சென்று அங்கும் விழுந்தார். அந்த பிரம்மரிஷியை அக்னிக்கு ஒப்பாக நினைத்த அந்த நதியும் நூறு பிரிவுகளாகப் பிரிந்து ஓடியது. அதனால் அதற்கு சதத்ரு என்ற பெயர் பெற்றது. அதுவும் வரை தரையில் பிடித்துத் தள்ளிவிட்டு ஓடியது. பல மலைகள் பல தேசங்கள் சென்றார். மனதின் சஞ்சலம் அடங்கவில்லை. கடைசியாக தனது புத்திரன் சக்தியின் மனைவியும் தனது மருமகளுமான அதிருஸ்யந்தி தனியாக இருக்கிறாள் என்கிற நினைவு வந்து ஆஸ்ரமம் அடைந்தார்.
கனிகளுக்காகவும் தர்ப்பைப் புல் போன்றவைகளை சேகரிக்கவும் வசிஷ்டரும் அதிருஸ்யந்தியும் காட்டுக்குள் சென்றார்கள். அங்கே வேதம் ஓதும் குரல் ஒன்று கேட்டது. சுற்றும் முற்றும் யாருமில்லை. ஆனால் சீக்ஷை, வியாகரணம், சந்தஸ், நிருக்தம், ஜோதிஷம், கல்பம் இவற்றினால் அலங்கரிக்கப்பட்ட வேதம் ஓதுகிற குரலைக் கேட்டார். அதுவும் சமீபத்தில் கேட்டது.
“மகளே! யாரது நம் பின்னே வருகிறார்கள்?” என்று வனத்தில் ஒரு குட்டி நீரருவி கடக்கும் போது கேட்டார் வசிஷ்டர்.
“நான் ஒருத்திதான் வருகிறேன்”
“இல்லையம்மா. வேதம் ஓதும் குரல் கேட்கிறதே! அதுவும் சக்தி வேதாத்தியயனம் செய்வது போலவே கேட்கிறதே” என்று கேட்டார் வசிஷ்டர்.
“முனி ஸ்ரேஷ்டரே! ஆமாம்.உமது மகன் சக்தியின் கர்ப்பம் என் வயிற்றில் உண்டாகியிருக்கிறது. இந்த வயிற்றிலேயே இந்தக் கர்ப்பம் வேதாத்தியயனம் செய்ய ஆரம்பித்து பன்னிரண்டு வருஷங்கள் ஆகின்றன” என்றாள் அதிருஸ்யந்தி.
“ஆஹா! சந்தானம் இருக்கிறது” என்று மகிழ்ந்தார் வசிஷ்டர்.
நிர்ஜனமான அந்த அடர்ந்த காட்டில் வசிஷ்ட ரிஷியும் அவரது மருமகளும் மட்டும் வந்துகொண்டிருந்தார்கள். அப்போது அந்த கரும் பாறையில் யாரோ அமர்ந்திருப்பது தெரிந்தது. அவர்களது நடை கொஞ்சம் மெதுவானது. அது யார்? என்று இருவரும் கேள்வியில் ஒருவரையொருவர் பார்த்துக்கொண்டிருக்கும் போது அந்த உருவம் எழுந்திருந்து வசிஷ்டரை.......
அது யார்? என்று நாளை பார்க்கலாம்...

No comments:

Post a Comment