Monday, March 12, 2018

அர்ஜுனனைக் கடத்திய நாககன்னிகை



தர்மம் தவறாத அர்ஜுனன் தர்மர் வேண்டாம் என்றாலும் வனவாசம் செல்கிறான். வேதமோதும் பிராமணர்கள் அவன் பின்னே சென்றார்கள். புராணங்கள் சொல்லும் சூதர்கள் அவன் இடப்புறம் நடந்தார்கள். மேலும் நிறைய பேர் அர்ஜுனனைப் பின் தொடர்ந்தார்கள்.

வனவாசம் என்றதும் அர்ஜுனன் மனதில் தோன்றிய இடம் கங்கோத்பத்தி. அங்கு சென்று வசிக்கவேண்டும் என்று நேரே அந்த இடத்தை அடைந்தான். அவனுடன் சென்ற பிராமணர்கள் அங்கே அக்னி ஹோத்திரங்கள் செய்தார்கள். அக்னி மூட்டப்பட்டு வனமும் கங்கா ஜலமும் ஜ்வலித்தது. நித்யமும் புஷ்பார்ச்சனைகள் நடைபெற்றன. பிராமணர்களின் வேதகோஷம் அந்தக் காட்டை புனிதமடையச்செய்தது. புலிகள் மான்களை துரத்தவில்லை. யானைகளுக்கு மதம் பிடிக்கவில்லை. சிங்கங்கள் குகையில் அமைதியாக உறங்கின. எங்கும் சாந்தி நிலவியது. அந்த ரம்மியமான சூழலில் ஸ்நானம் செய்து பவித்திரமாக இருந்தான் அர்ஜுனன்.
தினமும் காலையும் மாலையும் அந்த கங்கையில் ஸ்நானம் செய்வான். கரையில் அக்னி ஹோத்திரங்களும் அர்ச்சனைகளும் ஹோமங்களும் நடந்தவண்ணம் இருக்கும். கரையேறி பிராமணர்களுடன் அமர்ந்து வேதம் சொல்வான். தினமும் இது தொடர்ந்தது. மிகவும் ரம்மியமான சூழ்நிலையில் கடும் பிரம்மச்சரியத்தைக் கடைபிடித்தான் அர்ஜுனன்.
ஒரு நாள் கங்கையில் மூழ்கியவனை உலூபியென்னும் நாக கன்னிகை ஜலத்திற்குள்ளிருந்து அவனது காலைப் பற்றி பிடித்து இழுத்துப்போனாள். கீழே...கீழே..கீழே.... என்று வெகுதூரம் பயணப்பட்டு அவர்கள் நாகலோகம் சென்றடைந்தார்கள்.
நாகலோகம் மிகவும் செழிப்பாக இருந்தது. அங்கு கௌரவ்யன் என்னும் நாகராஜன் மாளிகையில் அக்னியைக் கண்டான். அந்த அக்னியில் அக்னிஹோத்ரம் செய்தான். ஹோமம் செய்ததினால் அக்னிபகவான் திருப்தியடைந்தான். நாகராஜனின் பெண் உலூபி அப்போது இந்தப்பக்கம் அந்தப்பக்கம் சென்று பின்னர் அர்ஜுனன் எதிரில் வந்து நாணத்துடன் தலை குனிந்து நின்றாள்.

“யே பெண்ணே! யார் நீ? என்ன பெரிய சாகசம் செய்துவிட்டாய்? இது எந்த இடம்?”
அர்ஜுனன் தொடர் கேள்விகளால் அவளுக்கு மேலும் வெட்கம் பிறந்தது. அவனிடம்
“என் பெயர் உலூபி. நாகராஜனாகிய கௌரவ்யனின் பெண். புருஷஸ்ரேஷ்டனே ஸ்நானத்திற்காக இந்த மகாநதியில் இறங்கிய உன்னைக் கண்டவுடன் மன்மதனால் அடிக்கப்பட்டேன். நான் இன்னும் விவாகம் ஆகாதவள். உன்னை நீ ஆத்ம தானமாகக் கொடு. எனக்கு ஆனந்தத்தை உண்டாக்கு”
அர்ஜுனனுக்கு தயக்கமாக இருந்தது. உலூபி அழகாகத்தான் இருந்தாள். ஆனால் பிரம்மச்சரியம் இருக்கவேண்டும் என்பது நிபந்தனை.
“பெண்ணே! எனக்கு பன்னிரெண்டு மாதங்கள் வரையில் தர்மராஜாவினால் பிரம்மசரியம் விதிக்கப்பட்டிருக்கிறது. நான் ஒருபோதும் பொய் சொன்னதில்லை. என்னுடைய தர்மம் கெடாமலிருக்க நீதான் உதவ வேண்டும்”
”பாண்டவனே! உங்களுடைய தர்ம ஒப்பந்தம் எனக்கும் தெரியும். தர்மரின் அரண்மனைக்குள் நீ நுழைந்து ஆயுதமெடுத்ததால் பன்னிரண்டு மாதங்கள் வனவாசம் வந்திருக்கிறாய். ஆனால், என் விஷயத்தில் உன் தர்மம் கெடாது” என்றாள்.
அது எப்படி என்பது போல பார்த்தான் வாயைத் திறக்காமல் அர்ஜுனன்.

“நான் உன்னால் காமம் பீடிக்கப்பட்டு கஷ்டப்படுகிறேன். கஷ்டப்படுபவரைக் காப்பாற்றுவதான் கடமை. இதுதான் தர்மம். உன்னைச் சரணடைந்திருக்கிறேன். விருப்பத்துடன் உன்னை வேண்டுகிறேன். ஆகையால் என் விருப்பத்தை நிறைவேற்று” என்று கெஞ்சினாள் உலூபி.
நாககன்னிகையான உலூபியினால் இவ்வாறு சொல்லப்பட்ட அர்ஜுனன் தர்மார்த்தமாக அவளுடன் அந்த இரவு முழுவதும் சேர்ந்தான். அவர்களுக்கு பராக்கிரமசாலியாக இரவான் என்னும் அழகிய புத்திரன் பிறந்தான்.
சூர்யோதயம் ஆயிற்று. அந்த கௌரவ்யன் கிருஹத்திலிருந்து எழுந்து அவளுடன் சேர்ந்து கங்கோத்பத்திக்கு சென்றான். அர்ஜுனனை அங்கே கொண்டு வந்த விட்ட பிறகு உலூபி அவனுக்கு சில வரங்கள் தந்தாள்.
“எந்த ஜலத்திலும் யாராலும் உன்னை ஜெயிக்கமுடியாது. ஜலசரங்கள் எல்லாம் உனக்கு வசப்படும்”
கரையில் இருந்து அவன் பார்த்துக்கொண்டிருக்கும் போதே ஜலத்தில் மூழ்கினாள். ஒன்றிரண்டு நீர்க்குமிழிகள் கங்கையில் எட்டிப் பார்த்தது. போய்விட்டாள்.
ஓரு பகல் ஓரிரவு அங்கே இல்லாத அர்ஜுனனிடம் பிராமணர்கள் நாகலோகத்துக் கதைகளைக் கேட்டறிந்தார்கள். உலூபியைப் பற்றிய அர்ஜுனனின் விவரணையில் கட்டுண்டார்கள்.
பிராம்மணர்களுடன் அங்கிருந்து கிளம்பி இமயமலைச் சாரலுக்கு சென்றார்கள். முதலில் அகஸ்தியவடம் அடைந்தார்கள். பின்னர் விசிஷ்ட பர்வதம் ஏரி பிருகுதுங்கம் என்ற இடத்தில் அர்ஜுனன் ஸ்நானம் செய்தான். அங்கே கோதானங்கள் செய்தான். பின்னர் ஹிரண்யபிந்து மஹரிஷியின் தீர்த்தத்தில் ஸ்நானம் செய்தான். கிழக்கு திக்கை நோக்கிச் சென்றான்.
அலகநந்தா நதி, அபர நந்தா நதி, கௌசிகி நதி, கயாக்ஷேத்திரம், மஹாநதி, கங்கையின் தீர்த்தங்கள் என்று எல்லாவற்றையும் தரிசித்து ஆத்மசுத்தி செய்துகொண்டு பிராமணர்களுக்கு தானங்கள் பல செய்தான். அங்க வங்க கலிங்க தேசத்திலிருக்கும் புண்ணிய க்ஷேத்திரங்களுக்குச் சென்றான். அவனுடன் சென்ற பிராமணர்கள் கலிங்க தேசத்திலேயே அவனிடம் விடைபெற்றுச் சென்றுவிட்டார்கள்.
அங்கிருந்த சில துணைவர்களுடன் கடற்கரைக்குச் சென்றான். பின்னர் அங்கிருந்து கடற்கரை ஓரமாகவே நிறைய ஆலயங்களைத் தரிசித்துக்கொண்டே மஹேந்திரபர்வதம் வந்தான். பின்னர் கோதாவரியில் ஸ்நானம் செய்து தென் திசை நோக்கிப் புறப்பட்டான். காவிரி நதிதீரம் அடைந்தான். அங்கு ஸ்நானம் செய்து தேவரிஷி பிதிர் தர்ப்பணம் செய்தான். சமுத்திரக்கரை ஓரமாகவே சென்று மணலூர் என்னும் இடத்தை அடைந்தான்.

சித்ரவாஹனன் என்ற ராஜா அவ்விடத்தை ஆண்டுகொண்டிருந்தான். அவனுடைய பெண் சித்ராங்கதை மயக்கும் அழகோடு திகழ்ந்தாள். அவளைக் கண்டு காதலுற்ற அர்ஜுனன் நேரே அரண்மனைக்குச் சென்று சித்ரவாகனனிடம் “அரசே! நான் க்ஷத்ரியன். எனக்கு உங்கள் பெண்ணைத் தருவீர்களா?” என்று கேட்டான்.
சித்ரவாகனனுக்கு ஒரே ஆச்சரியம். அரண்மனை வந்து சபை நடுவில் நின்று பெண் கேட்கும் இவனுக்கு எவ்வளவு துணிச்சல் என்று வியந்தான்.
“நீ யார்? யாருடைய புதல்வன்? உன் பெயர் என்ன?” என்று கேட்டான்.
“நான் பாண்டவன். குந்தி புத்திரன். அர்ஜுனன்”
அர்ஜுனனைப் பார்த்து விழி விரிந்தான். சட்டென்று குதூகலமடைந்தான்.
“எங்களுடைய முன்னோர்கள் பற்றிய கதை ஒன்று சொல்கிறேன். அதன் முடிவில் உன்னிடம் ஒரு வேண்டுகோள் வைப்பேன். நீ தட்டாது சம்மதிக்கவேண்டும்”
“ம்..சொல்லுங்கள்”
“பிரபஞ்சன் என்றொரு ராஜா எங்களின் வம்சத்தில் சில தலைமுறைகளுக்கு முன்னர் ராஜ்ஜியம் ஆண்டுகொண்டிருந்தான். அவனுக்கு சந்ததியே இல்லை. சிவபெருமானைத் துதித்து கடும் தவம் புரிந்தான். பினாகபாணியும் தேவர்க்கு தேவரும் உமாபதியுமான சங்கரர் “இக்குலத்தில் இனி ஒவ்வொரு குழந்தை பிறக்கும். ஆனால் ஒன்றுதான் பிறக்கும்” என்ற வரத்தை அருளினார். அதுமுதல் இந்தக் குலத்தில் ஒரு சந்ததிதான் உண்டாகிறது. முன்னார்கள் எல்லோருக்கும் ஒரு புத்திரன் பிறந்தான். அது இப்போது என்னோடு முடிவடைந்துவிட்டது. எனக்கு ஒரே ஒரு பெண் பிறந்துவிட்டாள்”
இந்த இடத்தில் கதையை நிறுத்தினான் சித்ரவாகனன்.
”அதனால்...” என்று நகர்த்தினான் அர்ஜுனன்.
“என் குலத்தை இவள்தான் விருத்தி செய்யவேண்டும். *புத்ரிகா தர்மம் என்னும் சாஸ்திரத்தினால் இவளைப் புத்திரன் என்றே நினைத்துக்கொண்டிருக்கிறேன். உனக்கு இவளிடம் பிறக்கும் புத்திரன் எனக்கு கன்யாசுல்கமாக இருக்கட்டும். அவன் இங்கிருந்து என் சந்ததியை விருத்தி செய்வான். இந்த உடன்பாட்டின்படி நீ இவளை விவாஹம் செய்துகொள்ளலாம்”
“சரி” என்று தலையாட்டினான் அர்ஜுனன். சித்ராங்கதையின் அழகு அவனை வாட்டியது.
அவளை அவன் விவாஹம் செய்துகொள்ளும் போது ஏற்கனவே பதிமூன்று மாதங்கள் ஆகியிருந்தது. மேலும் மூன்றுமாத காலம் அங்கிருந்தான்.
தென் சமுத்திரக்கரையில் இருக்கும் புண்ணிய தீர்த்தங்களுக்குச் சென்றான். அங்கு ஐந்து தீர்த்தங்களை ரிஷிகள் விலக்கிவைத்திருந்தனர். ரிஷிக்கூட்டம் அந்த தீர்த்தங்களுக்கு அருகில் செல்லவே பீதியடைந்தார்கள்.
“ரிஷிபுங்கவர்களே! ஏன் அந்த ஐந்து தீர்த்தங்களை மட்டும் நெருங்காமல் இருக்கிறீர்கள்?”
“இந்த தீர்த்தஙக்ளில் ஐந்து முதலைகள் இருக்கின்றன. கால் வைத்தாலே ரிஷிகளை இழுத்துக்கொண்டு சென்றுவிடுகின்றன. ஆகையால் நாங்கள் இதில் ஸ்நானம் செய்வதில்லை”
வீரனான அர்ஜுனன் அந்த முதலைகளை ஒருகை பார்த்துவிடுவது என்று ஸுபத்ரர் என்னும் மஹரிஷியின் பெயரால் ஸௌபத்ரம் என்னும் தீர்த்தத்தில் இறங்கிவிட்டான். கரையிலிருந்த ரிஷிகள் பதறினார்கள். அவன் ஸ்நானம் செய்துகொண்டிருக்கும்போது ஒரு முதலை அவனது காலைக் கவ்வியது. அதை அப்படியே கையால் தூக்கி உடம்போடு சேர்த்து அணைத்து கரையை நோக்கி முன்னேறினான். உடனே அந்த ஆச்சரியம் நிகழ்ந்தது.
அர்ஜுனன் கையில் அகப்பட்டிருந்த முதலை உடனே ஆபரணங்கள் அங்கமெங்கும் பூட்டி மனதைக் கவரும் அழகோடு ஒரு பெண்ணானது.
“அழகியே! நீ யார்? நீ ஏன் முதலையானாய்?” என்று கேட்டான்.
“நான் ஒரு அப்சரஸ். என் பெயர் வர்க்கை. நான் குபேரனுக்குப் பிரியமானவள். என்னுடைய தோழிகள் ஸௌரபேயி, ஸமீசி, புத்புதை மற்றும் லதை. நாங்கள் ஐவரும் குபேரனுடைய கிருகத்துக்குச் சென்றுகொண்டிருந்தோம். போகும் வழியில் ஒரு அடர்ந்த வனம். அங்கே ஒளிபொருந்திய பிராமணன் ஒருவன் தவம் செய்துகொண்டிருந்தான். அவனைச் சீண்டிப் பார்ப்பதற்காக நானும் எனது தோழிகளும் அவன் முன்னே ஆடியும் பாடியும் தவத்தைக் கலைக்கப் பார்த்தோம். அப்போது அதில் கோபமுற்ற அந்த பிராமணன் “நீங்கள் முதலைகளாக நூறு வருஷ காலம் ஜலத்தில் சஞ்சரிக்கக்கடவது” என்று சாபமிட்டான்.
நாங்கள் அனைவரும் துயரமுற்று வாடிய முகத்துடன் பேசாமல் நின்றிருந்தோம். பின்னர் சாபம் கொடுத்த பிராமணனிடத்தில் சென்று சாபவிமோசனம் தருவதற்காக மன்றாடினோம்.
“பிராணிகளை ஹிம்சிக்காதவனே பிராமணன். நாங்கள் அழகினாலும் யௌவனத்தினாலும் காமத்தினாலும் பீடிக்கப்பட்டு இந்த தவற்றைச் செய்தோம். பொருத்தருள வேண்டும்.”
“நூறு என்பது ஒரு எண்ணிக்கைதான். நீங்கள் ஜலத்தில் இருந்துகொண்டு மனிதர்களை பிடித்துக்கொண்டிருக்கும்போது ஒரு புருஷஸ்ரேஷ்டன் உங்களை ஜலத்திலிருந்து கரைக்குத் தூக்குவான். அப்போது நீங்கள் சாபவிமோசனம் பெருவீர்கள். நூறு வருஷகாலம் முடிந்தவுடன் தான் விமோசனம் என்பது இல்லை” என்று சகாயமளித்தான்.
நிம்மதிப் பெருமூச்சு விட்டார்கள். ஆனால் எந்த தீர்த்தத்தில் முதலையாகக் கிடப்பது?
“உங்களுக்கு சாபவிமோசனம் கிடைத்த பிறகு நீங்கள் முதலையாகக் கிடந்த தீர்த்தங்கள் நாரீ தீர்த்தங்கள் என்ற பெயர் பெறும்.”
அந்தப் பிராமணனை நமஸ்காரம் செய்துவிட்டு எந்த தீர்த்தத்தில் முதலையாகிக் கிடப்பது என்று விழித்துக்கொண்டே ஐவரும் அந்த வனத்தில் நடந்துகொண்டிருந்தோம்.
“வெகு சீக்கிரத்தில் நம்மை கரையேற்றும் மனிதன் எந்த தீர்த்தம் வருவான்? எங்கு அவனைக் காலைப் பிடித்தால் நம்மை இந்தப் பாபத்திலிருந்து விமோசனம் பெற வைப்பான்?” என்று பேசிக்கொண்டே ஒரு பெரும் மரத்தைத் தாண்டும் போது நேரே ஒரு ஒளி வெள்ளம் தோன்றியது. யாரோ மகரிஷி போன்று தெரிந்தது. யாரது? என்று யோசிக்கும் போதே அருகில் வந்துவிட்டார்.
அவரைக் கண்டு ஆனந்தம் அடைந்தோம்.
அவர் யார் தெரியுமா?
அர்ஜுனன் வர்க்கையின் பேச்சைக்கேட்டு அசையாமல் நின்றிருந்தான்.

No comments:

Post a Comment