Sunday, March 11, 2018

நாளாயனியின் கதை


"துருபதா! தன் மகள் ஐவருக்கு மனைவியா என்கிற அவஸ்தை உனக்கு வேண்டாம்”
தாடி அசைய இதைச் சொன்ன வியாஸரை கூர்ந்து நோக்கினான் த்ருஷ்டத்யும்னன். தந்தை என்ன சொல்வார் என்று துருபதனையும் பார்த்தான். சலனமில்லாமல் அமர்ந்திருந்தான் துருபதன். க்ருஷ்ணையின் வாழ்க்கை பந்தயத்தால் தோற்கடிக்கப்பட்டுவிட்டதோ என்று உள்ளுக்குள் அவனுக்கு அச்சம் பிறந்தது. இது என்ன தர்மம்? என்று குழம்பிப்போனான்.
“ஒன்று சொல்லட்டுமா?”
என்ன என்பது போல வியாஸரைப் பார்த்தான் துருபதன்.
“யாஜ உபயாஜர்களை வைத்து நீ யாகம் செய்தபோது யாகசாலைக்குள் நுழையாத உன் மனைவி ‘என் பெண் ஐவருக்கு பாரியையாக இருக்க வேண்டும்’ என்று மனதில் வேண்டிக்கொண்டாள். தர்மம் தவறாத அந்த ரிஷிகள் உன் புத்ரிக்கு ஐவர் பதியாக ஆகும்படி செய்தார்கள். வருந்தாதே! உன் குலம் மகிழ் வேண்டும். இப்படி இவள் ஐவருக்குப் பத்னியாவதற்கு இன்னொரு காரணம் இருக்கிறது. உன் துயரத்தை மூட்டைக்கட்டி வை. சொல்கிறேன் கேள்”
நிமிர்ந்து உட்கார்ந்தான் துருபதன். தந்தைக்கு அருகில் அமர்ந்தான் த்ருஷ்டத்யும்னன். பாண்டவர்கள் வியாஸரைப் பார்த்தபடி கவனம் குவித்தார்கள்.
“இவள் பூர்வ ஜென்மத்தில் நாளாயனி. அழகு கொஞ்சும் எழில் வடிவானவளாக இருந்தாள். கிழவரும் குஷ்டரோகியுமான மௌத்கல்யர் இவளது கணவர். அவருக்கு சிறப்பாக பணிவிடைகள் செய்துவந்தாள். எலும்பும் தோலுமாக இருந்தாலும் கடும் முன்கோபி. நேற்றிருந்தது போல இன்று இருக்க மாட்டார். நாளை முழுவதும் புது மனிதன். அவரோடு குடும்பம் நடத்துவது இயலாத காரியம்.
நெருங்கவே முடியாதது போல வாயில் துர்கந்தமடிக்கும். சதையெல்லாம் மடிந்து தொங்கும். தலையெங்கும் வெண்காடாய் நரைமயிர். குஷ்டரோகியானதால் அருவருக்கத்தக ரூபத்தோடு இருந்தார். நகங்களும் தோல்களும் உதிர்ந்துவிடும். அவர் உண்ட மிச்சத்தை உண்டு ஜீவனம் செய்துகொண்டிருந்தாள் நாளாயனி. அவளது சகிப்புத்தன்மைக்கும் புருஷன் மேல் கொண்ட பக்திக்கும் ஒரு உதாரணம் சொல்லட்டுமா?”
நிறுத்தினார் வியாஸர். என்ன சொல்வாரோ என்று குந்தி அவரையே உற்று நோக்கினாள். அவர்கள் அந்தரங்கமாக அமர்ந்திருந்த சபை அமைதியானது. நிசப்தம். ஆளுயர அலங்கார விளக்குகளின் தீபச்சுடரொளியை விஞ்சியது வியாஸரின் கண்ணொளி.
“ஒரு நாள் மௌத்கல்யர் போஜனம் செய்துகொண்டிருந்தார். அருகில் அமர்ந்து பரிமாறிக்கொண்டிருந்தாள் நாளாயனி. குஷ்டரோகியான அவரது கட்டைவிரல் அவர் சாப்பிட்டுக்கொண்டிருந்த இலையில் உதிர்ந்துவிட்டது. போதும் என்று அவர் எழுந்துவிட்டார். அந்த உதிர்ந்த கட்டைவிரலை இலையிலிருந்து எடுத்துப் போட்டுவிட்டு அருவருப்பின்றி அந்த எச்சில் அன்னத்தை புசித்தாள் அந்த கற்புக்கரசி.
இதற்கு மேல் அவளை சோதித்துப் பார்க்க விரும்பாத மௌத்கல்யர் அவளிடம் ‘உனக்கு என்ன வரம் வேண்டும். கேள்’ என்றார். குனிந்த தலை நிமிராமல் அவர் பக்கத்தில் அழகுச்சிலையாக அவள் அமர்ந்திருந்தாள்.
‘பெண்ணே! நான் கிழவனல்ல. கோபிஷ்டனல்ல. கொடியவனல்ல. பொறாமைக்காரனல்ல. வாயில் துர்நாற்றமில்லாதவன். உன்னை நான் எவ்வாறு இன்புறமுறச் செய்யவேண்டும். சொல். அப்படியே செய்கிறேன்”
மௌத்கல்யர் இவ்வளவு பேசிய பிறகு வாய் திறந்தாள் நாளாயனி.
“உலகங்களிலெல்லாம் புகழ் பெற்ற பகவானாகிய நீர் உமது சரீரத்தை ஐந்து பாகங்களாக்கியும் மற்றுமொரு ரூபத்தையும் எடுத்துக்கொண்டு என்னிடம் ரமிக்க வேண்டும்”
மௌத்கல்யர் உடனே “அப்படியே ஆகட்டும்” என்று வரமருளி ஐந்து விதமான சரீரங்களை எடுத்துக்கொண்டு அவளுடன் ரமித்துக்கொண்டிருந்தார். பின்னர் ஸ்வர்க்கம் ஏகினார். அங்கே தேவலோகத்தில் அமிர்தபானம் செய்துகொண்டு தேவலோக ரிஷிகளுடன் சஞ்சரித்துக்கொண்டிருந்தார்.
இந்திரனுடைய கிருஹத்தில் மஹேந்திரசேனை என்ற அந்த நாளாயனியினால் பூஜிக்கப்பெற்று ரமித்துக்கிடந்தார். அங்கிருந்து சூர்யனுடைய திவ்ய ரதத்தில் ஏறி மஹாமேருவை அடைந்து அங்கே வசிக்க எண்ணினார். அப்போது அவர் ஆகாய கங்கையில் ஸ்நானம் செய்து சந்திரனுடைய கிரணங்கள் படும்படியாக காற்றைப் போல நாளாயினியுடன் வாசம் செய்தார். பின்னர் அவர் மலை உருவம் எடுத்தார். அப்போது அந்த நாளாயினியை மலைநடுவில் மஹாநதியாக்கினார். அவர் மலர்கள் நிரம்பிய மரமாக ஆனபோது நாளாயினை அந்த மரத்தைச் சுற்றிய கொடியானாள். அவர் எந்த உருவம் எடுத்தாலும் அவளும் அதற்கு ஒத்த உருவத்தை எடுத்தாள்.
இருவருடைய அன்பும் பன்மடங்கு விருத்தியாயிற்று. அவள் தமது தாயாராகிய தமயந்தியைக் காட்டிலும் மேன்மையடைந்தாள். அந்த நாளாயனிதான் எதோ ஒரு விதிவசத்தால் கிருஷ்ணையாக உனது யாகத்தீயில் பிறந்திருக்கிறாள். அந்த மௌத்கல்ய முனிவரிடத்தில் பற்று வைத்த அவளது மனம் லேசில் மாறுவதில்லை”
நீண்ட நேரம் இந்தக் கதை கேட்டபடி அனைவரும் அமர்ந்திருந்தனர். சாளரங்கள் வழியாக வெளியே மழை பொழிவது கேட்டது. வியாஸர் கதையை நிறுத்தியதும் தூறலின் சப்தமும் நீரின் சலசலப்பும் தெளிவாகக் கேட்டது.
துருபதன் அந்த அறையை விட்டு இயற்கையின் அழைப்புக்காக வெளியே சென்றுவிட்டு சிறிது நேரத்தில் திரும்பினான்.
“பிராமணோத்தமரே! நாளாயனி என் யாகத்தில் வந்து ஏன் கிருஷ்ணையாகப் பிறக்க வேண்டும்?”
”துருபதா! முன் ஜென்மத்தில் இந்திரசேனை என்னும் நாளாயனி மௌத்கள்யரின் பாரியை. ஒரு கவலையில் இல்லாமல் சுகமாக இருந்தாள். அவருடன் அநேக வருஷகாலங்கள் கூடிக் கழித்தது ஒரு நொடி போல ஓடிவிட்டது. திடீரென்று ஒரு நாள் மௌக்லக்யர் காம ஸுகங்களை விட்டொழித்து வரைக்கியம் அடைந்துவிட்டார். கண்களை மூடி தியானத்தில் அமர்ந்துவிட்டார். நாளாயினி யார் என்பதையே மறக்குமளவிற்கு தியானம். காஷ்ட மௌனம்.
அவரது காலடியில் விழுந்தாள் நாளாயினி.
“தபோதனரே! இதுவரையில் விரும்பினவற்றையெல்லாம் அனுபவித்தேன். இருந்தாலும் போகங்களில் திருப்தி ஏற்படவில்லை” என்றாள்.
“நீ என் தவத்திற்கு இடையூறாக இருக்கிறாய். நீ மனுஷ்ய லோகத்தில் துருபதனுக்கு பாஞ்சால ராஜ புத்ரியாக ஜனிப்பாய். அந்த ஜன்மத்தில் புகழபெற்ற ஐந்து கணவர்கள் வாய்ப்பார்கள். அவர்களுடன் நெடுங்காலம் இன்பம் அடைவாய்” என்றார் மௌத்கல்யர்.
நாளாயனி இப்படி சபிக்கப்பட்டதால் மிகவும் துயரமடைந்து வனாந்திரங்களில் சுற்றித் திரிந்தாள். காமஸுகங்களை அவளை அலைக்கழித்தது. இந்திரியங்களை அடக்கி தேவதேவரான மஹேஸ்வரரை நோக்கி தவமியற்றினாள். உணவை மறந்து காற்றைப் புசித்தாள். பசுபதி அவள்முன் தோன்றினார். அப்போது அவள் “பதியைக் கொடும்.. பதியைக் கொடும்.... பதியைக் கொடும்.. பதியைக் கொடும்.. பதியைக் கொடும்” என்று ஐந்து முறை கேட்டாள்.
“புண்ணியவதியே உனக்கு அடுத்த ஜென்மம் வரப்போகிறது. அப்போது அழகும் திடமும் உள்ள ஐந்து கணவர்களை நீ அடைவாய்” என்று வரமருளினார். பதைபதைத்த நாளாயினி “ஸ்வாமி! எதற்கு ஐந்து கணவர்கள்?” என்று கேட்டாள். நீ பதியைக் கொடும் என்று ஐந்து முறை கேட்டாய். அதனால் உனக்கு ஐந்து கணவர்கள். அவர்கள் அனைவரும் உனக்கு இன்ப சுகத்தைத் தருபவர்களாக இருப்பார்கள்” என்றார் சங்கரர்.
“ஐயனே! ஒருத்தி ஒரு பர்த்தாவுக்கே துணையாக இருந்து தர்மானுஷ்டானம் செய்ய வேண்டும். இதுதான் முதலிலேயே ரிஷிகளால் விதிக்கப்பட்ட ஸ்த்ரீதர்மம். பெண்களுக்கு ஒரு கணவன் இருப்பதுதான் முறை. சந்ததி இல்லாத காலங்களில் கணவனீன் கட்டளையின் பேரில் பெண்ணுக்கு இரண்டாவது புருஷன் சொல்லப்பட்டிருக்கிறான். மூன்றாவது கணவனை அவள் வரிக்கக்கூடாது. ஆனாலும் அதற்கும் பிராயச்சித்தம் சொல்லப்பட்டிருக்கிறது. நான்காமவனைச் சேர்ந்தால் ஸ்த்ரீ பதிதையாகிறாள். ஐந்தாவது ஆடவனைச் சேர்ந்தால் அவள் விபசாரியாவாள். இதுவே தர்ம மார்க்கம். ஆகையால் உலகத்தில் அனுஷ்டிக்கப்படாத அந்த அதர்மத்திலிருந்து நான் எப்படி விடுபடுவேன்?”
மஹேஸ்வரர் சிரித்தார்.
“முன்பு பெண்கள் கட்டில்லாமல் இருந்தார்கள். நீ பதியைக் கொடும் என்று ஐந்துமுறை கேட்டதால் உனக்கு ஐவரைக் கொடுத்தேன். இது அதர்மம் ஆகாது.
“அப்படியென்றால் நான் அவர்களுடன் தனித்தனியே ரமிக்கவே விரும்புகிறேன். அவர்கள் ஒவ்வொருவருடனும் சேர்க்கை நேரும்போதெல்லாம் நான் இளமைப்பருவமே அடையவேண்டும். போகசுகம் மட்டும் எனக்குத் தீரவேயில்லை”
புண்ணியவதியே! காமஸுகமும் தவப்பயனும் சேர்ந்து வராது. ஆனால் நீ மட்டும் இவையிரண்டையும் சேர்ந்து பெரும் பயனை அடைவாய். இப்போது ஒன்று செய். இங்கிருந்து நீ செல். கங்கா ஜலத்தில் நீ இருக்கும்;போது எவனைப் பார்க்கிறாயோ அவனை என்னிடத்திற்கு அழைத்துவா” என்றார் ஈஸ்வரன்.
மூன்று முறை அவரை பிரதக்ஷிணம் செய்தாள் நாளாயனி. காற்றோடு கலந்து மறைந்தார் சங்கரர். கங்கையை நோக்கிச் செல்லலானாள் நாளாயனி.
**
நைமிசாரண்யத்தில் தேவர்கள் ஒரு சத்ரயாகம் செய்தார்கள். அதில் யமன் சாமித்ரம் என்னும் பசுவைக் (யாகத்தில் பலியாகக் கொடுப்பது எதுவும் பசு எனப்படும். சாமித்ரம் என்பது என்ன என்று தேடிக்கொண்டிருக்கிறேன். பசுமாடு அல்ல) கொல்லும் வேலையைச் செய்தான். யமன் அந்த யாகத்தில் முனைப்போடு ஈடுபட்டதால் மனிதர்களைக் கொல்லும் வேலையை விட்டுவிட்டான். அதனால் ஜனங்கள் அதிகமாக விருத்தியானார்கள். யாரும் மரணமடையவில்லை. தேவாதிதேவர்கள் குழுவாகக் கிளம்பி பிரம்மதேவரிடம் முறையிடுவதற்கு சென்றார்கள்.
“தேவாதிதேவா! பிரஜா விருத்தி அதிகமாகயிருக்கிறது. எங்களுக்குப் பயம் வந்துவிட்டது. நீங்கள்தான் சுகம் தரவேண்டும்” என்று கைகூப்பித் தொழுதார்கள்.
“மனிதர்களின் இடம் வேறு. உங்கள் தேவலோகத்தில் அவர்களைப் பற்றிய பயம் எதற்கு?
“இறப்பவர்கள் இறக்காதவர்களாகி எங்களைப் போன்று ஆகிவிட்டார்கள். அவர்களுக்கும் எங்களுக்கும் ஒன்றும் வித்யாசமில்லை.”
பிரம்மதேவர் “யமன் சத்ரயாகத்தில் இருக்கிறான். அவனாலேதான் இவர்கள் இறப்பதில்லை. யாகம் முடிந்ததும் திரும்பவும் தொழிலை ஆரம்பித்துவிடுவான்.” என்று சொன்னார்.
பிரம்மதேவரின் சொல்லைக்கேட்டு யமன் சத்ரயாகம் செய்யும் இடத்திற்கு சென்றார்கள். அவர்கள் எல்லோரும் சேர்ந்து உட்கார்ந்திருக்கும்போது பக்கத்தில் ஓடிய கங்கையில் ஒரு அதிசய பொற்றாமரைப் பூவைக் கண்டார்கள். தேவர்களில் சூரனான இந்திரன் கிளம்பி அந்த பூ மிதந்து வந்த திசையை நோக்கிப் போனான்.
கங்கை பிரவாகமாக பொங்கிக்கொண்டிருந்த இடத்தில் ஒரு பெண்ணைக் கண்டான். அந்தப் பெண் தனது இடை வரை கங்கையில் இறங்கி நின்று கொண்டு அழுதுகொண்டிருந்தாள். அவளது கண்ணீர்த் துளி கங்கையில் விழுந்தவுடன் பொற்றாமரையாக மாறியது. இந்திரன் ஆச்சரியமடைந்தான். அவளை நெருங்கினான்.
“பெண்ணே! நீ யார்? எதற்காக அழுகிறாய்?” என்று கேட்டான்.
“அரசனே! நான் முன்னே செல்கிறேன். நீ என் பின்னே வா. நான் எதற்காக அழுகிறேன் என்று உனக்குப் புரியும்” என்றாள் அந்தப் பெண்.
அவள் முன்னே செல்ல இந்திரன் பின் தொடர்ந்தான். அவர்கள் பெரிய மலையை அடைந்தார்கள். அங்கே சித்தாசனம் போட்டு வீற்றிருந்த ஒரு சிறுவன், சிறுமி ஒருத்தியுடன் சொக்கட்டான் ஆடிக்கொண்டிருந்தான். இந்திரனான தன்னைக் கண்டு கொள்ளாமல் சொக்கட்டான் ஆடும் சிறுவன் மேல் இந்திரனுக்கு கோபம் பொத்துக்கொண்டு வந்தது.
“ஏய்! யார் நீ? இந்த உலகம் என் வசத்தில் உள்ளது. நான் இவ்வுலகிற்கு ஈஸ்வரன்.” என்று அந்தச் சிறுவனை விரட்டினான். அந்தச் சிறுவனாக அமர்ந்து ஆடிக்கொண்டிருந்த சங்கரர் நகைத்தார். அவனை ஏறிட்டுப் பார்த்தார். அவ்வளவுதான். அவன் அசைவில்லாமல் சிலைபோல நின்றுவிட்டான். அவனை அங்கேயே அந்தக் கோலத்தில் நிற்கவைத்து இன்னும் சிறிது நேரம் சொக்கட்டான் ஆடினார். பக்கத்தில் அழுதுகொண்டு நின்றாள் அந்த நாளாயினி.
“நீ அவனைத் தொட்டு இங்கே கொண்டு வா” என்றார் சங்கரர்.
நாளாயினி கற்சிலையாக சமைந்து நின்ற இந்திரனைத் தொட்டாள். பொலபொலவென்று கற்கள் உதிர்ந்து அவன் சங்கரர் எதிரில் தரையில் சாஷ்டாங்கமாக விழுந்தான்.
“இந்திரா! இனிமேல் இப்படி இறுமாப்பாக எதையும் செய்யாதே! இந்த பர்வதத்தில் ஒரு குகை உள்ளது. அதனுள் நுழை. உன்னைப் போன்றவர்கள் சூரியனைப் போல பிரகாசித்துக்கொண்டு இருக்கிறார்கள்.”
அந்தப் பர்வதத்தின் குகை இருக்குமிடத்திற்கு ஓடினான் இந்திரன். வெளியே ஒளி வீசிக்கொண்டிருந்த அந்த குகையினுள் நுழைந்ததும் அவனைப்போல ஒளியுள்ள நால்வரைக் கண்டான். ஸ்தம்பித்துப்போய் நின்றான். நாமும் இவர்களைப் போல இந்தக் குகையினுள் கைதிபோல ஆகிவிடுவோமோ என்று எண்ணினான்.
ஈஸ்வரர் பின்னால் வந்து நின்றுகொண்டு “இந்திரா! சிறுபிள்ளைத்தனமாக என்னை அவமதித்தாய். இங்கு இருப்பவர்களும் உன்னைப் போலவே நடந்துகொண்டவர்கள்தான். போ.. இந்த குகையில் நுழை...” என்று கட்டளையாகச் சொன்னார். அரச இலை புயல் காற்றில் அடித்துக்கொண்டு நடுநடுங்குவதைப் போல இந்திரன் நடுங்கினான்.
ஈஸ்வரரை நோக்கிக் கை கூப்பினான். மண்டியிட்டான்.
“நீரே உலகங்களுக்கெல்லாம் ஈஸ்வரன். முதன்மையானவர்” என்று தொழுதான்.
மஹேஸ்வரர் நகைத்தார்.
“இந்த உலகத்தில் உங்களுக்கு அனுக்ரஹம் கிடையாது. இங்கிருக்கும் இவர்களும் உன்னைப் போலவே நடந்தவர்கள். நீயும் இந்த குகையினுள் செல். நீங்கள் அனைவரும் மானிட ஜென்மம் அடைந்து இவளை பாரியையாக அடையுங்கள். மனிதஜென்மத்தில் பகைவர்களை மடியச்செய்து பூபாரம் காப்பீர். யுத்தங்கள் பல செய்து புண்ணியகாரியங்களில் ஈடுபட்டு பின்னர் சிறந்த இந்த இந்திரலோகத்திற்கு திரும்புவீர்கள்”
புதியதாய் அந்த குகைக்குள் நுழைந்த இந்திரனை அங்கேயே இருந்த இதர நான்கு இந்திரர்கள் அவனை அனுகூலமாகப் பார்த்தார்கள்.
அவர்கள் அப்போது....

No comments:

Post a Comment