Showing posts with label கருடன். Show all posts
Showing posts with label கருடன். Show all posts

Saturday, December 16, 2017

அமிர்த ஸூபர்ணர்

இந்திரன் அலட்சியம் செய்ததால் கோபமுற்ற வாலகில்யர்கள் உடனே “இந்த இந்திரனைப் போல நூறு மடங்கு பலம் வாய்ந்த ஒரு இந்திரன் தேவர்களுக்கு காவலாக இருக்கவேண்டும். அவன் விரும்பும் சக்தி அவனுக்குக் கிடைக்கும்.. எங்கு வேண்டுமானாலும் அவன் நினைத்தபடி சஞ்சரிப்பான்...இந்த இந்திரன் அவனைக் கண்டு பயந்து நடுங்க வேண்டும்...” என்று புதிய இந்திரனைப் படைக்க யாகம் வளர்க்கத்  தயாராகினர். 

மிகவும் குட்டையான சரீரம் படைத்தவர்களாக இருந்தாலும் பர்வதமளவிற்கு தபோ வலிமையில் சிறந்தவர்களான வாலகில்யர்களின் இந்த பிரதிக்ஞை இந்திரனை சஞ்சலமடைய வைத்தது. பயந்தான். உடனே நேரே கஸ்பரிடம் சென்று தஞ்சமடைந்தான். 

”இந்திரா... ஏன் அச்சப்படுகிறாய்? நீ என்ன குற்றம் செய்தாய்?” என்று கஸ்யபர் வினவினார்.

“முனி சிரேஷ்டரே.. மலையளவு சமித்துக்களை உமக்காக நான் சுமந்து வந்துகொண்டிருந்தேன். அப்போது மாட்டின் குளம்படியின் தண்ணீர் தேங்கியிருந்தது. அதில் கட்டைவிரல் நடுரேகையளவு குறுகிய தேகமுடைய சிலர் தவித்துக்கொண்டிருந்தார்கள். அவர்கள் கையில் பலாசக்கழிகளை சுமந்திருந்தார்கள். எனக்கு சிரிப்பாக வந்தது. அவர்களை ஏளனம் செய்து அலட்சியம் செய்துவிட்டேன். உடனே ஏதோ யாகம் செய்ய ஆரம்பித்தார்கள். நான் உங்களிடம் ஓடி வந்தேன்” என்றான் மூச்சு வாங்க...

கஸ்யபர் வாலகில்யர்களிடம் சென்றார்.

“ரிஷிகளே! இப்போது எதன் பொருட்டு இந்த ஹோமத்தை ஆரம்பித்தீர்கள்? இதனால் என்ன பலன்?” என்று கேட்டார்.

“இவனிடமிருக்கும் ஐஸ்வர்ய கர்வத்தினால் எங்களை ஏளனம் செய்தான். ஆகையால் இன்னொரு இந்திரனைப் படைக்கும் பொருட்டு நாங்கள் இந்தக் கிரியையை ஆரம்பித்திருக்கிறோம்” என்றார்கள்.

“பிரம்மாவின் கட்டளையின்படி இவன் மூலோகத்திற்கும் இந்திரனாக ஆள்கிறான். உங்களது செயலினால் பிரம்மாவை அவமதிப்பது போலாகும். ஆகையால் இந்திரனைப் போலவே... ஏன்... அவனைக் காட்டிலும் பலம் வாயந்தவனாகவும்.. அசாத்திய தைர்யம் உள்ளவனாகவும்.. ஒருவனை பக்ஷிகளுக்கு இந்திரனாக உருவாக்குங்கள். சாதுக்களே இந்த விஷயத்தில் உங்களின் அனுக்ரஹம் தேவை..” என்று கஸ்யபர் கேட்டுக்கொண்டார்.

“நீரே ஸ்ருஷ்டி கர்த்தா.. உமக்கு ஒரு சந்தானம் வேண்டுமென்றும் புதிய இந்திரனுக்காகவும்தான் நாங்கள் இந்த கிரியை தொடங்கினோம். இதை பூர்த்தி செய்து அந்த பலனை உங்களுக்குக் கொடுத்துவிடுகிறோம்.. உமக்குப் பிரியப்பட்டதை செய்துகொள்ளுங்கள்” என்று ஹோமத்தை தொடர்ந்தார்கள்.

பலன் வழங்கப்பட்டது கஸ்யபரின் பத்தினியும் தக்ஷனின் புத்ரியுமான வினதை அங்கே வந்தாள். கஸ்யபர் அங்கு நடந்தவைகளைச் சொல்லி “வினதை! உனக்கு இரண்டு புத்திரர்கள் பிறப்பார்கள். ஒருவன் பக்ஷிகளுக்கு இந்திரனாக மிகவும் பலசாலியாக இருப்பான். நீ ஜாக்கிரதையாக உன் கர்ப்பத்தைப் பார்த்துக்கொள்..” என்று கூறினார்.

இந்திரன் மனதொடிந்து பக்கத்தில் நின்றிருந்தான்.

“இந்திரா! கவலை வேண்டாம். வினதைக்குப் பிறப்பவர்கள் உனக்கு சஹோதரர்கள் போல இருப்பார்கள். இருவரையும் ஸ்நேகம் செய்துகொள். உன் துயரங்கள் விலகும். நீதான் இந்திரனாக இருப்பாய். இனிமேல் நீ யாரையும் அவமதிக்காதே! சொற்களால் ஏளனம் செய்யாதே!!”

[ஏற்கனவே நாம் முந்தைய அத்யாயங்களில் பார்த்தது போல வினதை அவசரமாக ஒரு முட்டையை உடைத்து அங்கங்குறைவாக அருணனைப் பெற்றாள். பின்னர் ஐநூறு வருடங்கள் காத்திருந்து கருடனைப் பெற்றாள். அருணன் ஸுர்யனுக்கு சாரதியானான். இப்போது கருடன் பக்ஷிகளுக்கு இந்திரனான் என்ற கதையைப் படிக்கிறோம். 

தேவர்களுடன் யுத்தம் புரிவதற்காக கருடன் ஸ்வர்க்கத்தில் வட்டமடித்துக்கொண்டிருந்தபோது நாம் இந்த கிளைக்கதைக்குள் நுழைந்தோம்.. மீண்டும் கருடர் தேவர்களுடன் யுத்தம் செய்தது தொடர்கிறது.]

**

கருடரைப் பார்த்து தேவர்கள் மிரண்டனர். ஆயுதங்களை அவர்களுக்குள்ளேயே போட்டுக்கொண்டார்கள். மிகச்சிறந்த வீரனான பௌமனன் என்ற தேவன் கருடருடன் வீரதீரமாகச் சண்டையிட்டான். கடைசியில் தன்னுடைய மூக்கினால் அவனைக் குத்திக் கிழித்தார். சிறகுகளால் மண்ணை வாரி ஸ்வர்க்கம் முழுவதும் தெறித்தார். அதில் ஸ்வர்க்கலோகமே இருளில் மூழ்கியது. இந்திரன் திகைத்தான். வாயுவை அழைத்து “மாருதனே! இந்த மண்மாரியை சீக்கிரம் விலக்கு.. இது உன் வேலை..” என்று கட்டளையிட்டான்.

இருள் விலகியது. மிகப்பிரம்மாண்டமாக கருடர் வட்டமிடுவது தெரிந்தது. இம்முறை தேவர்கள் கருடரை அடித்தார்கள். அடிபட்ட கருடர் தேவர்களின் காது செவிடாகும்படி கர்ஜ்ஜித்தார். சுழன்று சுழன்று தேவர்களின் பக்கம் சென்று தனது மாரினாலும் சிறகுகளினாலும் தாக்கினார். வைனதேயரின் இந்தத் தாக்குதலால் தேவர்கள் சிதறி ஓடினார்கள். அதில் ஸாத்தியர்களும் கந்தர்வர்களும் கிழக்கிலும், வஸுக்களும் ருத்ரர்களும் தெற்கிலும், ஆதித்யர்கள் மேற்கிலும், அஸ்வினீதேவர்கள் வடக்கிலும் கருடரை திரும்பித் திரும்பிப் பார்த்தபடி தெறித்து ஓடினார்கள். 

பிரளயகால சிவன் போல கருடர் சத்ருக்களை சம்ஹாரம் செய்வதற்காக தனது நகங்களினாலும் மூக்கின் நுனிகளாலும் தேவர்களைப் பிளந்தார். அங்கே ரத்தம் ஆறாக ஓடியது. எல்லோரையும் தாண்டி பறந்தார். அங்கே நாற்புறமும் அக்னி பெரும் ஜுவாலைகளுடன் எரிந்துகொண்டிருந்தான். அவனைத் தாண்டி அவன் தீக்கைகளுக்கு நடுவில் அமிர்தம் இருந்தது. 

கருடன் அங்கிருந்து விலகினார். தேவர்கள் கருடர் பயந்து ஓடிவிட்டதாக எண்ணினார்கள். சிறிது நேரத்தில் கருடரின் இறகுகள் படபடக்கும் பெரும் ஓசை கேட்டது. அங்கே கருடர் முன்பிருந்ததை விடவும் பிரம்மாண்ட உருவம் எடுத்து எண்ணாயிரம் வாய்களோடு பறந்து வந்துகொண்டிருந்தார். அந்த வாய்களிலெல்லாம் அநேக நதிகளைக் குடித்து தண்ணீரைத் தேக்கியிருந்தார். அக்னியில் அதைப் பீய்ச்சியடித்தார். அக்னி அணைந்தது. 

அமிர்த பாத்திரத்திற்கு நாற்புறமும் ஒரு பெரிய இரும்புச் சக்கரம் சுழன்றுகொண்டிருந்தது. அந்தச் சக்கரத்திற்கு முனைகள் கூர்மையான கத்தி போன்றிருந்தது. அதனருகில் போனால் அது இரண்டாகப் பிளந்துவிடும் அபாயம் நிறைந்ததாக இருந்தது. கருடர் கண நேரத்தில் தனது உருவை மிகவும் சிறியதாக்கிக்கொண்டார். அந்த இரும்புச் சக்கரத்தோடே சுற்றிவந்தார். சரியான இடைவெளி வந்த சமயத்தில் அந்த ஆரக்கால்களின் சந்தில் உள்ளே புகுந்துவிட்டார்.

அதைத் தாண்டிய பிறகு அந்தச் சக்கரங்களின் கீழே மிக பயங்கரமான கண்களிலேயே விஷம் தங்கியிருக்கும் பலமான இரண்டு சர்ப்பங்களைக் கண்டார். அவை பார்த்தாலே நீறாக்கிவிடும் சக்திவாய்ந்தவை. அவைகளின் சிவந்த கண்கள் இமைகொட்டாமலிருந்தன. சிறிது நேரம் யோசித்தார். பின்னர் அங்கிருந்த மணலை அதன் கண்களில் தூவி அவைகளை கௌவிப்பிடித்து கீழே ஓங்கி அடித்து உடல் சிதறும்படி செய்தார். அமிர்த பாத்திரத்தை எடுத்துக்கொண்டு இரும்பு எந்திரத்தை நொறுக்கிப்பொடிப் பொடியாகச் செய்துவிட்டு அங்கிருந்து பறந்தார்.

வைனதேயர் ஆகாயத்தில் பறக்கும் போது விஷ்ணுவைச் சந்தித்தார். அமிர்தத்தைப் பருகாமல் அதை பத்திரமாக தனது தாய் வினதையின் அடிமைத்தனம் நீக்கும் பொருட்டு எடுத்துப் போகும் கருடரைப் பார்த்து மிகவும் சந்தோஷப்பட்டார் விஷ்ணு. 

“உமக்கு நான் இரண்டு வரங்கள் தருகிறேன். கேள்” 

“நான் உமக்கு மேலே இருக்க வேண்டும்” என்ற முதல் வரத்தில் விஷ்ணு ஆச்சரியப்பட்டார்.

“மேலும் எனக்கு அமிர்தம் பருகாமலேயே நரை மூப்பு மரணம் ஏற்படாமல் இருக்க வேண்டும்” என்று இரண்டாவது வரமும் கேட்டார் கருடன்.

“அப்படியே ஆகட்டும்” என்று அருளினார் விஷ்ணு.

”உமக்கும் நான் வரங்கள் தருகிறேன். கேளும்” என்று கேட்டார் கருடர்.

அண்டசராசரங்களையும் ஆளும் விஷ்ணு சிரித்துக்கொண்டே “நீர் எனக்கு வாஹனமாக வேண்டும்” என்றார். கருடர் அடிபணிந்து நின்றார்.

“எனக்கு மேலே நீர் இருக்கவேண்டும் என்று விரும்பியதால் எனது கொடியில் நீ நிரந்தரமாக இருப்பாய்...” என்று வரமருளினார் விஷ்ணு. 
  
நமஸ்காரம் செய்துவிட்டு அமிர்த பாத்திரத்தோடு வாயுவைவிட வேகமாக பறந்தார். கடுங்கோபத்துடன் இந்திரன் எதிரே வந்தான். கருடரை அடிக்கும் பொருட்டு தனது வஜ்ராயுதத்தை அவர் மீது ஏவினான். பக்ஷிஸ்ரேஷ்டர் அந்த வஜ்ராயுதத்தினால் அடிவாங்கிச் சிரித்தார். 

“இந்திரனே! இந்த வஜ்ராயுதம் யாருடைய மேனியின் எலும்பிலிருந்து பிறந்ததோ அவர்க்கும் உனக்கும் இந்த ஆயுதத்துக்கும் மரியாதை செய்து என்னுடைய ஒரு சிற்கை உதிர்க்கிறேன்” 

அவர் உதிர்த்த மிகச் சிறந்த அழகான அந்த சிறகையும் அதன் அற்புத ரூபத்தையும் கண்ட தேவர்கள் “இவர் ஸூபர்ணர்”* என்று போற்றி அழைத்தார்கள். இந்தப் பெரிய ஆச்சரியத்தைக் கண்ட இந்திரன் அவரை வணங்கி 
“பக்ஷிராஜரே!  உம்முடைய முழு வலிமையைப் பார்க்க விரும்புகிறேன். உம்முடன் அழியாத ஸ்நேகம் செய்துகொள்ள வேண்டுகிறேன்” என்றான்.

கருடர் தனது வலிமையைச் சொல்ல ஆரம்பித்தார்....

வியாஸபாரதம் தொடரும்....

*ஸூபர்ணர் = அழகான சிறகுள்ளவர்.

#ஸ்ரீவியாஸ_பாரதம்
#மஹாபாரதம்
#ஆதிபர்வம்
#ஆஸ்தீகபர்வம்
#பகுதி_19

வேடச்சேரி

அன்னை வினதையின் கஷ்டத்தைப் போக்குதற்கு தயாரான கருடர் அமிர்தம் கொண்டு வர கிளம்பினார். சிறகுகளை விரித்து அடக்கி....

“தாயே! நான் வெகுதூரம் பயணம் செய்து அமிர்தம் கொண்டுவர வேண்டும். நான் எதை புசித்தால் எனக்கு போதிய பலம் கிடைக்கும் என்று அறிவுரை கூறுங்கள்”

“மகனே கருடா! சமுத்திரத்திற்கு நடுவில் ஒரு தீவில் வேடச்சேரி இருக்கிறது. அங்கிருக்கும் வேடர்கள் துஷ்டர்கள். அவர்களைப் புசித்துவிட்டு அமிர்தம் கொண்டுவா. ஆனால் நமக்கு குருவைப்போலவும் தந்தையைப் போலவும் இருக்கும் பிராம்மணர்களை மற்றும் புசித்துவிடாதே! அது பாவம்” என்று எச்சரித்தாள்.

கருடர் விழித்தார்.

“அம்மா! பிராமணன் எப்படியிருப்பான்? அவனைப் எப்படி நான் அடையாளம் காண்பது?”

“நீ எவனை விழுங்கும்போது தொண்டையில் தூண்டில்முள் போல இருக்கிறதோ அவன் பிராமணன். கனன்று கொண்டிருக்கும் தனல் போலச் சுடும். உன் வயிற்றில் போனபோதும் கூட ஜீரணமாகாமல் இருப்பவன் பிராமணோத்தமன். உனக்கு கோபம் வந்தபோதும் கூட பிராமணனை நீ வதைப்பலாகாது”

வினதையின் அறிவுரைகளை மனதில் ஏற்றிக்கொண்டார். ஜிவ்வென்று மேலே எழும்பினார். அவர் விண்ணுக்கு உயர்ந்த நேரத்தில் அவருக்கடியில் இருந்த கடல் வற்றியது. அலைகள் ராட்ஷச உயரத்திற்கு எழுந்தன. பறந்தார். எங்கேயோ வேடச்சேரி தெரிந்தது. தூரத்தில் இருந்த மரங்கள் பெருங்காற்றடித்ததால் கீழே விழுந்துவிடுவது போல ஆடியது. பிரளயகாலம் போல இருந்தது. வேடர்கள் நடுங்கினார்கள்.

கருடன் இந்தப் புவிமண்டலத்தையே விழுங்குவது போல வாயைத் திறந்தார். சூறைக்காற்றினால் பிடிங்கிக்கொள்வது போல ஆடும் மரங்கள் உள்ள வனத்திலிருக்கும் பக்ஷிகள் மண்ணோடு சேர்ந்து திக்கு தெரியாமல் ஆகாயத்திற்குள் புகுவது போல ஆயிரக்கணக்கில் வேடுவர்கள் கருடரின் வாய்க்குள் ஓடினார்கள். அவர்களை சம்ஹரிக்க வாயை மூடினார் பக்ஷிராஜர்.

திடீரென்று அவருடைய நெஞ்சருகே சுட்டது. தாயார் சொன்னது நியாபகம் வந்தது. ”ஆஹா... தெரியாமல் பிராமணனையும் விழுங்கிவிட்டோமோ” என்று அஞ்சினார்.

“பிராமண ஸ்ரேஷ்டனே! வாயைத் திறக்கிறேன். வெளியே ஓடிவிடு” என்று எச்சரித்தார்.

“என்னுடைய பாரியாளாகிய இந்த வேடச்சியையும் விடுதலை பெற அனுக்ரஹம் செய்யவேண்டும்” என்று கைக் கூப்பினான்.

“ம்... அவளையும் அழைத்துக்கொண்டு சீக்கிரமாக வெளியே செல்... நான் உன்னை ஜீரணம் செய்துவிடுவேன் போலிருக்கிறது”

வேடச்சியோடு அந்த பிராமணன் கருடருக்கு ஆசீர்வாதம் செய்து வெளியேறினான்.

விர்ர்ர்ர்ர்ரென்று விண்ணில் சுழன்றார் கருடன். அந்த வேகத்தில் கீழே ஆழ்கடல் ஆர்ப்பரித்தது. அவருக்கு கீழே கிடந்த கடல் வற்றியது. மீண்டும் மரங்களெல்லாம் தலைவிரித்தாடியது. அவரது பசி அடங்கவில்லை.

அப்போது அவரது தந்தையான கசியபரைக் கண்டார். கீழே இறங்கி வணங்கி நின்றார்.

“மகனே! உன் தாயார் தமையன்கள் உனக்கும் போஜனம் கிடைக்கிறதா? முக்கியமாக உனக்கு அதிகமான போஜனம் கிடைக்கிறதா? இப்போது எங்கே வேகமாகப் போகிறாய்?” என்று கேட்டார்.

“எல்லோருக்கும் போஜனம் கிடைக்கிறது. ஆனால் எனக்கு மிகுதியான போஜனம் கிடைப்பதில்லை. எனது தாயார் வினதையை அடிமைத்தனத்தில் இருந்து விடுவிப்பதற்காக ஸர்ப்பங்கள் என்னிடத்தில் அமிர்தம் கொண்டுவரச் சொல்லியிருக்கிறார்கள். அதற்காகத்தான் நான் வேகமாக சென்றுகொண்டிருக்கிறேன். ஆனால் அமிர்தம் கொண்டுவருவதற்கான சக்தியை என்னால் பெறமுடியவில்லை. எனக்கு கூடுதல் ஆகாரம் எங்கே கிடைக்கும் என்று சொல்லி என்னை ஆசீர்வதிக்க வேண்டுகிறேன்” என்று கைகட்டி தலைகுனிந்து பவ்யமாகக் கேட்டான்.

“கருடா! இங்கேயிருக்கும் இந்த ஏரி மிகவும் புண்ணியம் வாய்ந்தது. இதில் ஒரு யானை தன் முற்பிறப்பில் தன்னுடைய அண்ணனான ஆமையை எப்போதும் தலையைக் குனிந்துகொண்டு இழுக்கிறது. அவைகள் உணவுக்கு மிகுதியான உணவாகக் கூடும்”

“தந்தையே! யாரவர்கள்?”

“முற்பிறவியில் அவர்கள் இருவருக்கும் சொத்தினால் பிரச்சனை ஏற்ப்பட்டது. விரோதம் வளர்ந்தது. இத்தனைக்கும் அந்த சொத்துகள் அவர்களது மாதாபிதாக்கள் சம்பாதித்தது. உனக்கு அந்தக் கதையைக் கூறுகிறேன் கேள். உனக்கு க்ஷேமம் உண்டாகும்”

கருடர் சற்று அமைதியடைந்தார். இறகுகளைக் கவிழ்த்து கையிரண்டையும் கட்டிக்கொண்டார். அந்த ஏரிக்கரையில் கஸ்யபர் கதை சொல்லத் தொடங்கினார்.

“விபாவஸு என்ற அதிகக் கோபமுள்ள ரிஷியிருந்தார். அவருடைய தம்பி ஸுப்ரதீகர். தபஸ்வி. அந்த ஸுப்ரதீகர் தனக்கும் தமையனுக்கும் சொத்து பாகம் செய்யப்படாமல் இருப்பதில் இஷ்டமில்லை. அண்ணனை எப்போது பார்த்தாலும் விபாகம் செய்வதைப் பற்றியே பேசுவார். அதற்கு விபாவஸு, தம்பி விபாகம் செய்தால் அநேகம் பிழைகள் வரும். பாகம் பிரித்துக்கொண்டவுடன் அதை விருத்தி செய்யவும் பாதுகாக்கவும் முற்படுவோம். அப்போது ஒருவரையொருவர் ஆதரிக்கமாட்டோம். அதை துரோகிகள் பயன்படுத்திக்கொண்டு நம் இருவரையும் பிரித்துவிடுவார்கள். பெரியோர் சொல்லுக்குக் கட்டுப்பட்டவர்களும் சந்தேகமில்லாதவர்களும் எப்போதும் விபாகத்தை விரும்புவதில்லை” என்று நயமாக எடுத்துரைத்தார்.

கருடன் கதையில் மூழ்கியிருந்தார்.

ஸுப்ரதீகருக்கு இந்த ஜாலப் பேச்சில் கோபம் வந்தது. விபாவஸுக்கு இணங்கவில்லை. அப்போது விபாவஸு “ஸுப்ரதீகனே! சொத்தில் மதிமயங்கிதால் நீ யானையாகக் கடவாய்” என்று சாபமிட்டார். உடனே அவனும் விபாவஸுக்கு “நீ ஆமையாகப் போய் இந்த ஜலத்துக்குள்ளேயே சஞ்சரிப்பாய்...” என்று பிரதிசாபம் இட்டான். இவ்வாறாக இருவரும் யானையாகவும் ஆமையாகவும் மாறினார்கள்.

“அவர்கள் எவ்வளவு பெரிதாக இருப்பார்கள். எனக்கு இஷ்டமாக உணவாவார்களா?”

“யானை ஆறு யோஜனை உயரமும் பன்னிரெண்டு யோஜனை அகலமும் உள்ளது. ஆமை மூன்று யோஜனை உயரமும் பத்து யோஜனை சுற்றளவும் உள்ளது. எவ்வளவு பெரியது பார்! உன்னுடைய பசிக்கும் அமிர்தம் கொண்டுவருவதற்கு பலமும் இவையிரண்டு தரும். புசித்துவிடு. உன் அகோரப்பசி அடங்கும்” என்றார்.

”என்னை ஆசீர்வதியுங்கள் பிதாவே!” என்று யானையையும் ஆமையையும் புசிக்கப் பறக்கத் தயாரானார்.

“நீ தேவர்களுடன் யுத்தம் செய்யும்போது ரிக்யஜுர்ஸாமதர்வண வேதங்களும் ஞானசாஸ்திரங்களும் பாபத்தைப் போக்குகின்ற ஹோமத்திரவியங்களும் உன்னுடைய பலத்தை விருத்திசெய்யட்டும்” என்று கஸ்யப முனிவர் ஆசீர்வாதம் செய்துவிட்டுப் புறப்பட்டார்.

ஆகாசத்தில் அந்த ஏரிக்கு மேலே ஒரு வட்டமிட்டார் கருடன். பின்னர் அங்கு தெரிந்த அந்த பிரம்மாண்டமான யானையை ஒரு நகத்திலும் ஆமையை இன்னொரு நகத்திலும் இடுக்கிக்கொண்டு பறக்கத்தொடங்கினார். மேலே மேலே மேலே சென்று தேவலோகத்தை அடைந்தார். அங்கு கற்பக விருக்ஷத்தைப் பார்த்தார். அம்மரத்தில் பொன்னாலும் வெள்ளியினாலும் பழங்கள் காய்த்துத் தொங்கின. கிளைகள் வைரவைடூர்யங்களினால் ஜொலித்தது.

சுற்றிலும் இது போன்ற ஜொலிக்கும் கற்பகமர வனத்திடையே ஆயிரம் யோஜனை உயரமுள்ள தேவலோக ஆலமரக்கிளைக்கு வந்தார். அப்போது அந்த ஆலமரம் அவரிடம் பேசியது.

“நூறு யோஜனை தூரமுள்ள இந்தக் கிளையில் உட்கார்ந்து கொண்டு நீ இந்த யானையையும் ஆமையையும் சாப்பிடு”

கருடருக்கு ஆச்சரியம். மரம் பேசுகிறதே!

யானையோடும் ஆமையோடும் வெகுவேகமாக வானத்திலிருந்து கீழே இறங்கினார். அம்மரத்தின் கிளையில் வந்தமர்ந்த போது அது சடசடவென்று முறியத் தொடங்கியது. உடனே முறிந்த கிளையைக் கால்களால் அனாயசமாகப் பிடித்தார். அப்போது அந்த மரத்தில் எதோ தொங்குவது போலத் தெரிந்தது. எக்கிப் பார்த்தார்.

ரிஷிகள் போல இருக்கிறதே! யாராகியிருக்கும்? என்ற சிந்தனை தொடங்கியது. உற்றுப் பார்த்தார்.... அது ஒருவரல்ல... ஒரு குழுவினர்... அவர்களுக்குப் பெயர்... வாலகில்ய ரிஷிகள். கருடன் என்ன செய்வது என்று தெரியாமல் அதிர்ந்துபோனான்.

இதிகாசம் தொடரும்....

#ஸ்ரீவியாஸ_பாரதம்
#மஹாபாரதம்
#ஆதிபர்வம்
#ஆஸ்தீகபர்வம்
#பகுதி_17

Tuesday, September 26, 2017

நதிகளின் கணவன்

கத்ருவும் வினதையும் சமுத்திரத்தைத் தாண்டி பயணிக்கும் போது வரும் வர்ணனை மஹாபாரதத்தின் கதை ஆழத்தைக் காட்டியது. மேலும் கருட ஜனனத்தின் போது அவர் பயங்கரமான ரூபத்தோடும் அக்னி ஜ்வாலைகளோடும் பறக்கக் கண்டு பயந்த தேவாதிதேவர்கள் பெரியதிருவடியாக கருடாழ்வாரைத் துதித்தனர். கருடன் கத்ருவையும் அவளது பிள்ளைகளான ஆயிரம் நாகர்களையும் தனது தாய் வினதையும் தூக்கிக்கொண்டு ஒரு தீவிற்குச் செல்லும் போது சூரியணின் கிரணங்கள் தாக்கி நாகர்கள் மயங்கிச் சாய்ந்தார்கள்.அப்போது கத்ரு இந்திரனைத் துதித்தாள். இம்மூன்றையும் கொசுறாக இங்கே தருகிறேன்.
சமுத்திர வர்ணனை
--------------------------------
சமுத்திரம் நதிகளுக்கு கணவன். பர்த்தா. ஜலத்தின் ஆதாரம். ஆழமும் கலங்கிக் கலங்கி பேரிரைச்சலுடனும் இருக்கும். பயங்கரமான, விகார, குரூர சுபாவமுள்ள ஜல ஜந்துக்களும் திமிங்கிலம் ஆமை, மீன்கள் மற்றும் முதலை முதலானவைகளுடன் நிறைய பல ரூப ஜந்துக்கள் நிறைந்த இடம். எப்பவும் வற்றாதது. சுலபத்தில் அணுகமுடியாதது. எல்லா வகையான இரத்தினங்களும் உண்டாகுமிடம். வருணனுக்கு இருப்பிடம். ஸர்ப்பங்களுக்கு வாசஸ்தலம், மிகவும் ரமணீயமான இடம்.
அளவிட முடியாத, சிந்திக்க முடியாத இடம். தேவர்களுடைய அமிர்தபானத்துக்கு முக்கியமான இடம். ஆழமான சுழல்கள் தோன்றுமிடம். காற்றினால் ஜலம் ஊஞ்சல் போல ஆடும். வடவாக்கினியின் இருப்பிடம். அலைகள் நாற்புறமும் கைகளைப் போன்று அசைந்து கூத்தாடும். சந்திரனுடைய உதயாஸ்தமன காலங்களில் அலைகள் மாறும். பாஞ்சஜன்யம் என்ற சங்கின் உற்பத்தியிடம், உயர்ந்த வஸ்துகள் இருப்பிடம். பாதாளத்தின் இருப்பிடம்.
நாராயணன் வராக அவதாரமெடுத்து பூமியைத் தூக்கும் போது கலக்கப்பட்ட ஜலமுள்ள இடம். அத்திரி மகரிஷி நூறு வருஷ காலங்கள் தவமியற்றிய இடம். தேஜஸ் பொங்கும் பத்மநாபர் லோக ஸ்ருஷ்டிக்கு முன்னர் செய்த யோக நித்திரைக்கு சயனம். இந்திரனுடைய வஜ்ராயுதத்துக்கு பயந்த மைநாக பர்வதத்திற்கு அபயமளித்த இடம். வடவையின் முகத்தில் ஜொலிக்கும் அக்னிக்கு ஜலமாகிய ஹவிஸைக் கொடுக்குமிடம். ஆயிரக்கணக்கான மஹா நதிகள் பொறாமையுடன் ஓடிவந்து சங்கமமாகும் இடம். பாபங்களைப் போக்குமிடம்.
**
கருட ஸ்துதி
--------------------
நீ ரிஷி; நீ பக்ஷிராஜன்; நீ ப்ரபு, நீ மஹாமகிமையுள்ளவன்; நீ சத்ரு சம்ஹாரன்; நீ பிரஜைகளைக் காப்பவன், நீ சூரியன்; நீ இந்திரன்; நீ ஹயக்ரீவனெனும் விஷ்ணுவின் அவதாரம்; நீ சிவன்; நீ பிரம்மா; நீ உலகத்துக்கெல்லாம் ஈஸ்வரன்; நீயே பிராம்மணன்; நீ அக்னி; நீ வாயு; நீயே தாதாவும் (ஞானசக்தி) விதாதாவும் (மாயாசக்தி) இருக்கும் தேவன்; நீதான் விஷ்ணு, நீ அமிர்தம்; நீ பேரொளி, நீ மஹான்; நீ எல்லோர்க்கும் ப்ரியமான வஸ்து; நீ பலமென்னும் அலைநிறைந்த கடல்; எல்லாம் நிறைந்தவன்; இங்கு வருபவைகளும் சென்றவைகளும் உன்னிடமிருந்தே உண்டாயின; இந்த ஜங்கமஸ்தாவரங்களை சூரியனைப் போன்ற உனது கிரணங்களால் பிரகாசிக்கச் செய்கிறாய்; சூரியனுடைய ஒளியையே மறைந்துவிடுகிறாய்; அக்னியைப் போன்ற பிரகாசமுள்ளவன் நீ; சூரியன் கோபத்தில் எப்படி பிரஜைகளை எரிப்பானோ அப்படி எரிக்கிறாய்; மேகத்தில் இல்லாமல் பிரகாசிக்கின்ற மின்னலைப் போன்றவன் நீ; வரப்பிரசாதி; நீ யாராலும் ஜெயிக்கமுடியாத பராக்கிரமசாலி;
நீ தயாபரனான மஹாத்மா கசியபரிஷியின் புத்திரன். கோபிக்காதே. தேஜஸை அடக்கிக்கொள். எங்களைக் காப்பாற்று. இடிமுழக்கமிடும் உன்னுடைய சப்தம் எட்டுத் திக்கையும் எங்களையும் நடுநடுங்கச் செய்கிறது. கோபித்த யமன் போல இருக்கும் உன் தேஜஸைக் கண்டு எங்கள் மனம் தடுமாறி அலைகிறது.
பகவானே! எங்களுக்குச் சுகம் அருளி அனுகூலமாக இருக்கவேணும்.
**
இந்திரனுக்கு நமஸ்காரம்
-----------------------------------------
தேவாதிதேவர்களுக்கு ஈசனே; பலாஸுரை சம்ஹாரம் செய்தவனே; நமுசி மர்த்தனனே; ஆயிரம் கண்களையுடையவனே; இந்திராணியின் பர்த்தாவே உனக்கு நமஸ்காரம். நீதான் அளவற்ற ஜலத்தை வர்ஷிக்கிற சக்தி படைத்தவன்; நீதான் மேகம்; நீயே வாயு; நீ அக்னி; நீ மின்னல்; ஆகாசத்தில் மேகக் கூட்டங்களைப் பரவச் செய்பவன்; அதனால் மஹாமேகம் என்ற பெயர் படைத்தவன்; ஒப்பில்லாத வஜ்ராயுதம் நீயே; நீதான் லோகங்களுக்கு சிருஷ்டிகர்த்தாவாகவும் சம்ஹார கர்த்தாவாகவும் இருக்கிறாய்; முகூர்த்தமும் நீயே; திதியும் நீயே; லவம் எனப்படும் க்ஷணத்திற்கும் சிறிய காலமும் நீயே; சுக்லபக்ஷமும் நீயே; கிருஷ்ண பக்ஷமும் நீயே; நீ ராஜா; நீ தேவஸ்ரேஷ்டன்; நீயே விஷ்ணு; நீ ஈஸ்வரன்; சூரியன் உலவும் இருளற்ற ஆகாசம் நீயே; நீ சர்வபிராணிகளிடத்தும் தேஜஸ் எனப்படும் சக்தியாக இருக்கிறாய்; மஹா சமுத்திரங்களும் நீயே; துதிக்கப்படும் யக்ஞங்களில் ஸோமரஸத்தையும் ஹவிஸுகளையும் நீ பானம் பண்ணுகிறாய்;நீ உயர்ந்த கீர்த்தியுள்ளவனாக எப்போதும் பூஜிக்கப்படுகிறாய்.
**
அடுத்த பகுதியில்... தன் தாய் வினதையை அடிமையிலிருந்து மீட்பதற்கு கத்ருவின் பிள்ளைகள் அமிர்தம் கேட்டக.. அதற்காக கருடன் பறந்தது......
இதிகாசம் தொடரும்...