Showing posts with label துரோணர். Show all posts
Showing posts with label துரோணர். Show all posts

Friday, March 9, 2018

என்னோடு மோதிப் பார்...


சிலம்பக்கூடம் சுற்றிலும் முத்துச்சரங்கள் தொங்கவிடப்பட்டிருந்தது. வைடூர்யங்களினாலும் ரத்னங்களினாலும் பொற்தோரணங்களினாலும் பிரகாசித்தது. திருதராஷ்டிரன் பெரிய ரதமேறி புறப்பட்டான். அந்தப்புர ஸ்திரீகளும் அலங்காரமான ரதங்களில் பின் தொடர்ந்தார்கள். சபையோரும் பிராமணரும் கூட வந்தார்கள். கிருபர் ஸோமதத்தன் பூரிஸ்ரவஸ் மற்ற கௌரவர்கள் அனைவரையும் அழைத்துக்கொண்டு திருதராஷ்டிரன் நகரத்துக்கு வெளியே இருந்த சிலம்பக்கூட மைதானத்துக்கு வந்தான்.

அங்கே விஸ்ராந்தியாக உட்கார்வதற்கு மஞ்சமிட்டிருந்தார்கள். காந்தாரி குந்தி ஆகியோர் அதிலேறி அமர்ந்தார்கள். பொதுஜனங்கள் பார்ப்பதற்கு படிகள் போன்று அந்த காட்சிசாலையைச் சுற்றி கட்டியிருந்தார்கள். மொத்த நகரமுமே அந்த வித்தைகளைக் காண்பதற்கு கூடியிருந்தது. மக்கள் வெள்ளமும் அவர்கள் இட்ட இரைச்சலும் மாபெரும் சமுத்திரம் அலையடித்து ஓசை எழுப்பது போல இருந்தது.
ஆகாயத்தைக் கிழிப்பது போல துந்துபி வாத்தியங்கள் முழங்கின. திரண்டிருந்த ஜனங்கள் அந்த சப்தத்தைக் கேட்டு அமைதியானார்கள்.
வெண்மையான வஸ்திரத்தோடும் பளீரென்ற யக்ஞோபவீதத்துடனும் வெளுத்த தலைமயிரும் தாடியுமாக துரோணாசாரியார் அந்த அரங்கத்தினுள் பிரவேசித்தார். அவருடன் ஜ்யேஷ்டரான தர்மபுத்திரர் நிமிர்ந்த நெஞ்சுடன் உள்ளே நுழைந்தார். உயர்ந்த ஆசனத்தில் வியாஸர் அமர்ந்திருந்தார். துரோணர் வியாஸருக்கு வந்தனம் செய்து பூஜை செய்ய அனுமதி பெற்றார்.
வரிசையாய் நின்ற பிராமணர்கள் வேதம் சொல்ல மங்கள காரியங்கள் பல நடந்தது. திருதராஷ்டிரன் பொன்னும் முத்தும் பவளவமும் ரத்னங்களையும் வாரி வாரி கிருபருக்கும் துரோணருக்கும் தக்ஷிணையாக அளித்தான். ஸுகத்தையும் புண்ணியத்தையும் தரக்கூடியதுமான புண்ணியாஹவாசனத்தைச் செய்தார்கள்.
மங்கள காரியங்கள் முடிந்ததும் ஒருமுறை வாத்திய முழக்கம் செய்தார்கள். வேலைக்காரர்கள் பலர் பலவிதமான ஆயுதங்களைக் கொண்டு வந்து மைதானத்தின் மத்தியில் வைத்தார்கள். பின்னர் மஹாரதர்களும் புண்ணிய சிரேஷ்டர்களூமான ராஜகுமாரர்கள் வந்தார்கள். அவர்கள் விரல்களுக்கு உடும்புத் தோலினால் ஆன விரலுறைகள் அணிந்திருந்தார்கள்.
அவர்கள் அனைவரும் கிருபரும் துரோணருக்கும் மரியாதைகள் பல செய்தார்கள். அபிவாதனம் செய்தார்கள். இரு ஆசாரியர்களும் அவர்கள் அனைவருக்கும் ஆசீர்வாதம் செய்தார்கள். பிறகு புஷ்பங்களினால் அங்கு வைக்கப்பட்டிருந்த ஆயுதங்களுக்கும் அஸ்திரங்களுக்கும் அர்ச்சனை செய்து பூஜித்தார்கள்.
துரோணர் கண்ணசைவில் உத்தரவு தந்ததும் அனைவரும் தங்களது ஆயுதங்களைக் கையில் எடுத்துக்கொண்டார்கள். குழு பயிற்சி போல அனைவரும் முதலில் விற்களை எடுத்துக்கொண்டார்கள். நாணேற்றினார்கள். அம்புகளை வில்லில் தொடுத்து நாண் சப்தமெழுப்பியும் உள்ளங்கை சப்தமும் எழுப்பி பார்க்கக் குழுமியிருந்தவர்களை மூர்ச்சையுறச் செய்தார்கள்.
ஜ்யேஷ்டராகிய யுதிஷ்டிரர் முதல் மற்றவர்களும் அங்கே வியப்புறும்படி ஆயுதப் பயிற்சி செய்தார்கள். காட்சிசாலையின் நடுவிலிருந்து அவர்கள் விட்ட அம்புகளில் சில பார்வையாளர்கள் அணிந்திருந்த மாலைகளில் தைத்தது. இன்னும் சிலருக்கு அவர்கள் தலையில் சூடிக்கொண்டிருந்த புஷ்பங்களில் புகுந்தது.
பெயர் அடையாளமுள்ள பாணங்களால் சிலர் பெரிதும் சிறிதுமாக நிறுத்திவைக்கப்பட்டிருந்த குறிகளை அடித்தார்கள். பார்வையாளர்களில் சிலர் தங்கள் மேல் அம்பு பாய்ந்துவிடுமோ என்று தலையைக் குனிந்து கொண்டார்கள். தங்களைக் கடக்கும் அஸ்திரங்களைப் பிடித்துவிடுவது போல சிலர் தைரியத்துடன் எத்தனித்துத் தோற்றார்கள். விதம்விதமான வித்தைகளைக் கண்டு அந்த பார்வையாளர்கள் பிரமித்துப்போயிருந்தார்கள்.
லக்ஷக்கணக்கானோர் இந்தக் காட்சிகளைப் பார்த்து “ஆஹா.. நல்லது.. நல்லது..” என்று பரவசத்தோடு கூவினார்கள். திடீரென்று அந்த மைதானத்துக்குள் யானைகளும் குதிரைகளும் கொண்டு வந்து நிறுத்தப்பட்டன. சிலர் குதிரைகளில் பாய்ந்தேறி புழுதிபறக்க அந்த மைதானத்தில் விரைந்துகொண்டே அங்கிருந்த குறிகளை அடித்தார்கள். ”டிங்..டிங்..டிங்..” என்று ஒரு கையில் கத்தியும் மறுகையில் கேடயுமாக கத்திச் சண்டைப் போட்டார்கள்.
கூட்டமே தலையைத் திரும்பிப் பார்க்கும்படி பீமஸேனனும் துரியோதனனும் கையில் கதாயுதத்தோடு அந்த காட்சிசாலைக்குள் நுழைந்தார்கள். இரண்டு மலைகளுக்கு கால்கள் முளைத்து நடந்துவருவது போல இருந்தது அந்தக் காட்சி.
கச்சை கட்டிக்கொண்டு இருவரும் ஆக்ரோஷமாகச் சண்டையிட்டார்கள். கதைகள் மோதிக்கொள்ளும் சப்தம் இரு பர்வதங்கள் மோதிக்கொண்டு பிளந்துகொள்வது போல இருந்தது. வலமும் இடதுமாக சுழன்று சுழன்று சண்டையிட்டார்கள்.
திருதராஷ்டிரனுக்கு விதுரர் விளக்கமளித்தார். கண்ணை மூடி அமர்ந்திருந்த காந்தாரிக்கு குந்தி உதவிசெய்தாள்.
துரியோதனனுக்கும் பீமஸேனுக்கும் நிறைய ரசிகர்கள் இருந்தார்கள். துரியோதனன் பீமனைத் தள்ளும் போது “துரியோதனா! வெல்க... வெல்க” என்று கோஷமிட்டும் பீமன் துரியோதனனை துவைக்கும் போது “பீமா! நீதான் வெல்வாய்.. வெல்க.. வெல்க...” என்றும் கட்சி கட்டிக்கொண்டு ஆதரித்தார்கள்.
துரோணருக்கு போட்டி வேறுபக்கம் செல்வது போலிருந்தது. பக்கத்தில் வாய் பிளந்து வேடிக்கைப் பார்த்துக்கொண்டிருந்த தன் மகன் அஸ்வத்தாமாவை அழைத்தார்.
“அஸ்வத்தாமா.. இவர்கள் இருவரும் சண்டையிடுவதைப் பார்த்தால் கோஷ்டி பிரிந்து ஆதரிக்கும் இவர்களிடையேயும் கைகலப்பு வரும் போலிருக்கிறது. ஆகையால் நீ சென்று இருவரையும் விலக்கிவிடு”
அஸ்வத்தாமா கதாயுத்தம் செய்துகொண்டிருந்த இருவர்களையும் ஒதுக்கிவிட்டான்.
“பீமா.. குருவின் ஆக்ஞை.. நிறுத்து...” சுழற்றிய கதையை கீழேவிட்டான் பீமன்.
“துரியோதனா.. குருவின் கட்டளை.. ஆயுதத்தை கீழே போடு” என்றதும் துரியோதனனும் கதையை போட்டான்.
“உங்களூடையை வேகத்தையும் வித்தையையும் காட்டியது போதும். நீங்கள் வெளியேறுங்கள்”
அஸ்வத்தாமா இதுபோல சொன்னதும் இருவரும் முறைத்துக்கொண்டே கலைந்து சென்றார்கள்.
துரோணர் சபைநடுவே வந்து நின்றார்.
”இவன் இந்திரனுக்கு ஒப்பானவன். ஆயுதங்களில் நிபுணன். என் புத்திரனை விட எனக்கு நல்ல நண்பன் .அர்ஜுனனைப் பாருங்கள்”
இப்படி குருவால் அறிமுகப்படுத்தப்பட்ட அர்ஜுனன் கைவிரல்களில் உறை அணிந்திருந்தான். கையில் இந்திரதனுஸ் வைத்திருந்தான். சந்தியாகாலத்து சிவப்பு மேகம் போல நின்றிருந்தான். கூட்டம் அவனைக் கண்டு பெருங்குரலெடுத்துப் பாராட்டி ஆர்ப்பரித்தது.
“அழகுள்ளவனே”
“தர்மிஷ்டனே”
“கௌரவர்களைக் காப்பாற்றுபவனே! “
“எல்லா அஸ்திரங்களும் தெரிந்தவனே”
“நல்லொழுக்கத்தில் சிறந்தவனே”
“ஞானத்திற்கு நிதியானவனே”
இப்படி பல்வாறக கோஷங்கள் எழுப்பிக்கொண்டு காத்திருந்தார்கள்.
திருதராஷ்டிரனுக்கு ஒன்றுமே விளங்கவில்லை. யாரேணும் பயிற்சியில் புதிதாக சேர்ந்துகொண்டார்களா? அசாதாரண பயிற்சி கொண்டாடினார்கள். இப்போதைக்கு திருதராஷ்டிரனுக்குத் துணை விதுரர் மட்டும்தான்.
“என்ன சப்தம் விதுரா/’?
”மஹாராஜரே! குந்தி மற்றும் பாண்டு புத்திரனான பல்குனன் கவசத்துடன் களமிறங்கியிருக்கிறான். அவனை வரவேற்கும் பொருட்டுதான் எல்லோரும் அவன் புகழ் பாடுகிறார்கள். மஹாரதனாம். வில் வித்தையில் கெட்டிக்காரனாம்”
ஆக்னேயாஸ்திரத்தை விட்டான். ஒரு மூலையில் தீப்பிடித்துக்கொண்டது. அதை அணைப்பதற்காக வாருணாஸ்திரத்தை ஏவினான். மேகாஸ்திரம் எய்தான். ஆகாயத்தில் மேகம் உண்டானது. வாயுவாஸ்திரத்தை விட்டவுடன் அந்த அரங்கத்தையே தூக்கிக் கொண்டுபோகும்படி காற்று வீசியது. திடீரென்று இரு மலைகள் அந்த மைதானத்தில் நடுவில் தோன்றியது. பர்வாதஸ்திரத்தை ஏவியிருந்தான் அர்ஜுனன்.
எல்லோரும் அதிசயத்துப் பார்த்துக்கொண்டிருக்க அந்தர்த்தானமென்னும் அஸ்திரத்தை ஏவி அவனே மறைந்துகொண்டான். ஆசாரியருக்கு அன்பனாக அந்த அர்ஜுனனுக்கு இன்னும் சில குறிகள் கொடுத்தார்கள். ஒரு இரும்புப் பன்றியை லக்ஷியமாக சுழலவிட்டார்கள். அந்த இரும்புப் பன்றியின் வாயில் ஐந்து பாணங்களை ஒரே பாணம் போல எய்தான். மாட்டுக் கொம்பு ஒன்றை மேலிருந்து கீழாக கயிற்றில் தொங்கவிட்டார்கள். இருபத்தோரு பாணங்களை அதன் மேல் தொடர்ந்து தைத்தான்.
பிரமிக்கத்தக்க அர்ஜுனனின் ஆற்றலைக்கண்டு அந்த கூட்டம் ஆஹாகாரம் செய்தது. எல்லா வித்தைகளும் காட்டப்பட்டு சபை ஓய்ந்திருந்தது. அப்போது யாரோ அந்த சிலம்பக்கூடத்தின் வாசலில் நின்று சப்தமாக தோள் தட்டுவது கேட்டது. அந்த தோள் தட்டுவது பூமி வெடிக்கப்படுவது போலிருந்தது. எல்லோரும் அந்த அரங்கத்தின் வாயிலைப் பார்த்த்படி எழுந்திருந்தார்கள். துரோணரை சூழ்ந்து நின்றிருந்த பாண்டவர்கள் ஐவரும் வாசலை உற்று நோக்கினார்கள். அஸ்வத்தாமாவுடன் துரியோதனனும் அவனது நூறு சகோதரர்களும் எழுந்து நின்று பார்த்தார்கள். கையில் கதையுடன் கம்பீரமாக துரியோதனன் எழுந்து நின்றது அஸுரர்களை சம்ஹாரம் செய்து தேவக்கூட்டம் சூழ்ந்திருந்த இந்திரன் போல நின்றான் துரியோதனன்.
மனிதர்கள் வழிவிட்டு நதிக்கு விலகுவது போல இருகரைகளாக ஒதுங்கினார்கள். குந்திக்கு கன்னிப் பருவத்தில் பிறந்தவனாகிய கர்ணன் உள்ளே நுழைந்தான். மலர்ந்த கண்கள். இடுப்பில் கத்தி. வில்லை ஏந்திய பர்வதமொன்று காலல் நடப்பது போன்று அங்கே பிரவேசித்தான்.
அங்கே அமர்ந்திருக்கும் அனைவரும் இளக்காரமாகப் பார்த்தான். கிருபருக்கும் துரோணருக்கும் வந்தனம் செய்தான். அர்ஜுனன் நின்றிருந்த பக்கம் திரும்பி
:”அர்ஜுனா! நான் உன்னைவிட அதிகம் வித்தை காட்டுவேன். மிகவும் கர்வப்படாதே” என்றான் அலட்சியமாக. அமர்ந்திருந்த அனைத்து ஜனங்களும் இந்தப் பேச்சைக் கேட்டதும் எழுந்து நின்றார்கள். அர்ஜுனனின் பராக்கிரமத்தால் அசந்து போய் சோர்வடைந்திருந்த துரியோதனன் உற்சாகமாக எழுந்திருந்தான். அர்ஜுனனுக்கு வெட்கமும் கோபமும் ஏறியது.
அங்கே ஒரு மாபெரும் யுத்த காட்சிக்கு அரங்கம் தயாராகிக்கொண்டிருந்தது:

வைத்த குறி தப்பாதவன்



அஸ்திர சஸ்திர பயிற்சிகளைக் கற்றுக்கொண்டிருந்த சிஷ்யர்களை காட்டினுள் அழைத்துச்சென்றார் துரோணாசாரியார்.

ஒரு பெரும் விருக்ஷத்திற்கு அருகே வந்தார்கள். துரோணர் கை நீட்டிய கிளையொன்றின் நுனியில் ஒரு காகம் ஆடாமல் அசையாமல் அமர்ந்திருந்தது.
“வீரர்களே! அது கள்ளிக்காக்கை.பறக்காது. சிற்பிகள் செய்த பதுமை. நீங்கள் அனைவரும் உங்கள் வில்லம்புகளை எடுத்து விரைந்து வாருங்கள். நான் ஒவ்வொருவராகக் கூப்பிடுவேன். அந்தக் காக்கையின் சிரஸைத் தள்ள வேண்டும். அதுதான் பரீக்ஷை”
அனைவரும் தங்களது வில்லையும் அம்புகளையும் எடுத்துக்கொண்டு தயாராய் வந்து நின்றார்கள். அவர்கள் கண்களில் ஒரு குறுகுறுப்பு. மேனியில் சுறுசுறுப்பு. யார் அந்தக் காக்கையின் தலையைத் தள்ளுவார்கள் என்று எதிர்பார்ப்பு.
“யுதிஷ்டிரா! இங்கே வா”
வில்லும் அம்புமாக அவர் முன்னே வந்து நின்று தலையைக் குனிந்து வணக்கம் சொன்னார் யுதிஷ்டிரர்.
“ராஜகுமாரா! அந்த மரத்தின் நுனியில் இருக்கும் கள்ளிக்காக்கை உன் கண்களுக்குத் தென்படுகிறதா?”
”ஆமாம்”
“அந்த மரம் தெரிகிறதா?”
“தெரிகிறது ஸ்வாமி”
“உன் சகோதரர்களெல்லாம் தெரிகிறார்களா?”
“நன்றாகத் தெரிகிறார்கள்”
“இந்த மரத்தையும் என்னையும் உன் சகோதரர்களையும் பார்க்கிறாயா?”
“தாராளமாக. இந்த மரத்தையும் உங்களையும் என் சகோதரர்களையும் கள்ளிக்காக்கையையும் சேர்த்தே பார்க்கிறேன்”
துரோணர் முகத்தில் அதிருப்தி. சுற்றி நின்றிருந்த எல்லா சகோதரர்களும் சந்தேகமாகவே யுதிஷ்டிரர் சொன்னதில் என்ன தவறு என்று பார்த்துக்கொண்டிருந்தார்கள்.
“உன்னால் அந்த லக்ஷியத்தை அடிக்க முடியாது. வில்லையும் அம்பையும் கீழே வைத்துவிட்ட்ப் போய்விடு” என்றார் துரோணர் சிடுசிடுவென்று.
அடுத்தது யாரைக் கூப்பிடுவாரோ என்று எதிர்பார்ப்புடன் காத்திருந்தார்கள். அஸ்வத்தாமா, துரியோதனன், பீமன் என்று எல்லோரையும் வரிசையாகக் கூப்பிட்டு யுதிஷ்டிரரிடம் கேட்ட அதே கேள்வியைக் கேட்டார். எல்லோரும் அவர் சொன்ன அதே பதிலைச் சொன்னார்கள்.
இன்னும் ஒருவனை பரீக்ஷை செய்யவில்லை. மிகவும் சிரத்தையாக வில்லோடும் அம்போடும் தயாராக நின்றிருந்தான் அவன். துரோணர் சிரித்துக்கொண்டே
“அர்ஜுனா! இங்கே வா” என்றார்.
தலைவணங்கி வந்தனம் செய்தான்.
“அங்கே அந்தக் கள்ளிக்காக்கை அந்த மரம் நான் உன் சகோதரர்கள் அனைவரும் தெரிகிறோமா?” என்று கேட்டார்.
“கள்ளிக்காக்கை மட்டுமே தெரிகிறது ஸ்வாமி”
“”ஓ அந்தக் காக்கையை மட்டும் பார்க்கிறாயா?”
“இல்லை”
துரியோதனனுக்கும் அருகில் நின்றோர்க்கும் மிகவும் சந்தோஷம். நம்மைப் போலவே திட்டி அவனையும் அனுப்பிவிடுவார் என்று மகிழ்ச்சியோடு பார்த்துக்கொண்டிருந்தார்கள்.
“இல்லையா?” என்றார் துரோணர்.
“காக்கை கூட இப்போது கண்ணுக்குத் தெரியவில்லை. அதன் கழுத்து மட்டும்தான் தெரிகிறது” என்றான் அர்ஜுனன்.
அசந்துபோனார் துரோணர்.
“அடி” என்று பட்டென்று சொனார்.
சந்திரபாணத்தை தொடுத்தான். சரக்கென்று அந்தக் கள்ளிக்காக்கையின் சிரஸை மட்டும் அடித்துக் கீழே தள்ளியது. அப்படியே அள்ளி அணைத்துக்கொண்டு புளகாங்கிதமடைந்தார் துரோணர். மனதிற்குள் அர்ஜுனன் துருபதனை வில்லால் வீழ்த்துவது போல கனாக் கண்டார்.
குருகுலவாசம் தொடர்ந்தது. நாளுக்கு நாள் பரீக்ஷைகள் அதிகம் வைத்தார் துரோணர். அர்ஜுனனின் ஆற்றல் மேன்மேலும் மேம்பட்டது.
ஒரு நாள் கங்கைக்கு ஸ்நானம் செய்யச் சென்றார் துரோணர். சுழித்து நுரைபொங்க ஓடிக்கொண்டிருந்தது கங்கை. மூக்கைப் பிடித்துக்கொண்டு கங்கைக்குள் தலையை முங்கினார் துரோணர். எழுந்திருக்கும் போது தனது கால் எதிலோ மாட்டிக்கொண்டது போல உணர்ந்தார். உதறினார். கால் வரவில்லை. ஏதோ கடிப்பது போல உணர்ந்ததும் கீழே குனிந்து பார்த்தார். பெரிய முதலை. “ஐயோ! சிஷ்யர்களே.. என்னைக் காப்பாற்றுங்கள்... சீக்கிரம்.. இந்த முதலையைக் கொல்லுங்கள்..” என்று அலற ஆரம்பித்தார்.
ஒன்றும் புரியாமல் எல்லாச் சிஷ்யர்களும் அங்குமிங்கும் ஓடினார்கள். சிலர் பயத்தினால் நெருங்கவே பயந்துகொண்டு கரையில் நின்று கையைப் பிசைந்துகொண்டு நின்றிருந்தார்கள்.
அர்ஜுனன் வில்லை வளைத்து சர்...சர்...சர்...சர்...சர்... என்று ஐந்து அம்புகள் விட்டான். ஐந்தும் முதலையை அறுத்து துண்டு துண்டாக்கியது. துரோணர் விடுவிக்கப்பட்டு கங்கையின் கரை ஏறினார். சுற்றிலும் வேடிக்கைப் பார்த்துக்கொண்டிருந்த பாண்டவர்கள் அனைவரும் அர்ஜுனனை தோள் மேல் தூக்கிக் கொண்டாடினார்கள். துரோணர் அர்ஜுனனுக்கு ஆசீர்வாதம் செய்தார்.
துரியோதனன் பொறாமையில் வெந்தான். துச்சாஸனன் அண்ணன் பின்னால் ஆதரவாக நின்றான். அஸ்வத்தாமா ஓரமாக நின்றிருந்தான். அவர்கள் அனைவரையும் அருகில் அழைத்தார் துரோணர்.
“இங்கே கிடக்கும் மண்ணை அள்ளி ஒரு பதுமை செய்யுங்கள். அது குழந்தை போல இருக்கட்டும்” என்று ஆக்ஞாபித்தார்.
கொஞ்ச நேரத்தில் ஒரு குழந்தை பதுமை தயாராகியது. எல்லா சிஷ்யர்களையும் அழைத்து வரிசையாக கங்கையைப் பார்க்கும்படி அதன் கரையில் நிறுத்தினார்.
“சிஷ்யர்களே! இப்போது இந்த வேலையாள் நீந்திச் சென்று இந்தப் பதுமையை கங்கையில் போடுவான். உங்கள் ஒவ்வொருவரையும் கண்ணைக் கட்டி ஒருமுறை சுற்றிவிட்டு அந்த நீரில் மூழ்கிய பதுமையை அடிக்கச் சொல்லுவேன். குறிதவறாமல் அடிப்பவர்களுக்கு ஒரு பரிசு காத்திருக்கிறது”
சிஷ்யர்கள் அனைவரும் கைகளைத் தட்டிக்கொண்டு தயாரானார்கள். பரிசு என்னவாகயிருக்கும் என்று மனதில் நினைத்துக்கொண்டு வில்லும் அம்பும் எடுத்துக்கொண்டு வந்தார்கள்.
துரியோதனன் கையில் வில்லெடுத்தான். பீமனை கண்ணைக் கட்டச் சொன்னார். பின்னர் அவனையே ஒரு முறை துரியோதனனை சுற்றிவிடச் சொன்னார் துரோணர். ஒரு முறை சுற்றிவிட்டால் ஐந்து முறை சுற்றினான் துரியோதனன். எங்கே இருக்கிறோம் என்று தெரியாமல் எதிர் திசையில் அம்புவிட்டான் துரியோதனன். அனைவரும் கொல்லென்று சிரித்தார்கள்.
ஒவ்வொருவராக அதுபோல கண்ணைக்கட்டிச் சுற்றிவிட்டார்கள். ஒருவரின் பாணம் கூட கங்கை இருக்கும் திசையில் செல்லவில்லை. அந்தப் பக்கம் தவிர்த்து ஏனைய அனைத்து திக்கிலும் பாணங்கள் சிதறின. இதற்கும் கடைசியாக அர்ஜுனனை அழைத்தார்.
கண்ணைக் கட்டினார்கள். சுற்றிவிட்டார்கள். முதுகுக்குப் பின்னால் அம்புகள் தூளியில் சொருகியிருந்தான். பல முறை சுழன்றாலும் மிகச்சரியாக கங்கையை நோக்கி நின்றான். கூட்டமாக நின்றிருந்த சிஷ்யர்களுக்கு இதுவே பெரிய ஆச்சரியமாக இருந்தது.
தூளியிலிருந்து அவன் அம்பெடுக்கும் வேகமும் அதைப் பூட்டி எய்யும் திறமையும் அங்கு பார்ப்பவர்க்கெல்லாம் மயிற்கூச்செரியும்படி இருந்தது. சரக்...சரக்..சரக்.. என்று ஒவ்வொறாக பதினைந்து பாணங்கள் போட்டான். நீருக்குள் மூழ்கியிருந்த அந்த சிசுப் பொம்மை அடிபட்டு தண்ணீருக்கு மேலே மிதந்து வந்தது. சிஷ்யர்கள் அனைவரும் கரவொலி எழுப்பினார்கள்.
துரோணர் பாய்ந்து ஓடிவந்து கட்டிக்கொண்டார். அவன் கண்களின் கட்டுக்களை தானே அவிழ்த்தார்.
“நான் முன்பே சொன்னபடி உனக்கு ஒரு உயர்ந்த பரிசைத் தருகிறேன். இந்தா இந்த பாணத்தைப் பெற்றுக்கொள்” என்று ஒரு நீண்ட அஸ்திரத்தை அவனுக்கு அளித்தார்.
“அர்ஜுனா! இதன் பெயர் பிரம்மசிரஸ். இது மிகவும் சக்திவாய்ந்தது. பூமியையே எரிக்கும் ஆற்றல் பெற்றது. அற்ப மானிடப்பதர்களுக்கு இந்த அஸ்திரத்தை உபயோகிக்காதே! அசுரனோ தேவனோ உன்னிடம் சண்டைக்கு வருவானேயில் அப்போது இதை விடு. எவனாகயிருந்தாலும் பஸ்பமாகிவிடுவான்”
சூரியன் கீழே இறங்கிக்கொண்டிருந்தான். அந்திச்சூரியனின் அற்புத கிரணங்கள் கங்கையில் விழுந்து மின்னிக்கொண்டிருந்தன. அம்பையும் வில்லையும் கீழே போட்டான் அர்ஜுனன். நெடுஞ்சாண்கிடையாக அவர் காலடியில் விழுந்தான். எழுந்து நின்று மரியாதையாகப் பெற்றுக்கொண்டான்.
**
ஒரு நாள் காலை. சபையில் திருதராஷ்டிரனும் பீஷ்மர், வியாஸர், கிருபர், விதுரர் என்று அனைவரும் அமர்ந்து ராஜ்ய விவகாரங்கள் விவாதித்துக்கொண்டிருந்தார்கள். துரோணர் உள்ளே நுழைந்தார்.
“ராஜனே! உனது குமாரர்களுக்கு வித்தை சித்தித்திருக்கிறது. உனக்கு அவகாசமிருந்தால் அவர்கள் கற்ற கல்வியை உனக்கு நான் காட்டுகிறேன்”
துரோணர் இப்படிச் சொன்னதும் திருதராஷ்டிரன் மிக்க மகிழ்ச்சியடைந்தான்.
”பிராமணசிரேஷ்டரே! நீர் பெரிய காரியம் செய்திருக்கிறீர். உமக்கு என்ன தேவையோ அதைக் கேளுங்கள். உடனே செய்துதருகிறேன். எனக்கு கண் இல்லாவிட்டாலும் என் புத்திரர்களின் பராக்கிரத்தைக் கண்டு ஆனந்தக் கூச்சலிடுபவர்கள் மத்தியில் எனக்கும் பார்வை தெரிந்தது போலாகும். விதுரா! ஆசாரியர் என்ன கேட்கிறாரோ அதைச் செய்துகொடு.”
விதுரர் துரோணருக்கு அனுமதியளித்தார். ராஜாங்க ஊழியர்களோடு நகரத்தின் எல்லைக்கு வந்தார். அங்கே மேடு பள்ளமில்லாமல் மரங்கள் இல்லாமல் புதர்கள் இல்லாமல் வடக்கே தாழ்ந்து இருக்கும்படியாக ஒரு நிலத்தை அளக்கச் சொன்னார். முகூர்த்தம் பார்க்கச் சொன்னார். அரசாங்கப் புரோகிதர் அதைப் பார்த்துச் சொன்ன அந்த நாளில் அங்கே ஒரு பலி இடச்சொன்னார்.
சிலம்பக்கூடம் என்று சொல்லப்படும் மைதானம் தயாரானது. சில்பிகளைக் கொண்டு அந்த காட்சிசாலையை உருவாக்கினார்.
எல்லா ஆயுதங்களோடும் கூடிய காவலர்கள் பணியில் அமர்த்தப்பட்டார்கள். ராஜ்ய ஸ்திரீகள் பயணிக்க புது பல்லக்குகள் கட்டினார்கள். ஊரெங்கும் ராஜகுமாரர்கள் சாதனைகள் செய்யப்போகும் நாள் நக்ஷத்திரம் பறையடிக்கப்பட்டது. அஸ்தினாபுரமே அந்த நாளுக்காக எதிர்பார்த்துக் காத்திருந்தது.
நாமும் நாளை வரை காத்திருப்போம்.

ஏகலவ்யனின் குருபக்தி


துரோணர் அரண்மனையிலிருந்து கிருபரின் இல்லம் திரும்பினார். சிறிது நேரத்தில் அந்த வீதி முழுவதும் ராஜாங்க ரதங்களாக நின்றது. பீஷ்மர் பாண்டவர்களையும் துரியோதனாதிகளையும் அழைத்துக்கொண்டு உள்ளே வந்தார்.

“இவர்கள் உமது சிஷ்யர்கள். அனுக்ரஹம் செய்யுங்கள்” என்று துரோணரைப் பார்த்துக் கைக்கூப்பினார். துரோணருக்கு கிருபர் முன்னால் இப்படி பீஷ்மர் சொன்னது சங்கடமாக இருந்தது.
“பீஷ்மரே! யுத்தங்களில் வென்றவரே! இதோ என் பக்கத்தில் கிருபாசாரியாரும் இருக்கிறார். இந்த செயலால் அவருக்கு மனவருத்தம் எனில் உம்மிடம் நான் கொஞ்சம் தனம் யாசித்துப் பெற்றுக்கொண்டு என்னுடைய ஆஸ்ரமத்திற்கு திரும்பிவிடுகிறேன்”
கிருபாசாரியைப் பார்த்தார் பீஷ்மர். துரோணரையும் பார்த்தார்.
“கிருபர் எப்பொழுதும் எங்கள் மதிப்பிற்கும் மரியாதைக்கும் உரியவர். அவரை நாங்கள் பூஜிக்கிறோம். போஷித்துக்கொள்கிறோம். ஆனால் நீர் அவர்களுக்கு குருவாக இருந்து அஸ்திர வித்தைகளைக் கற்றுக்கொடுங்கள்” என்று வேண்டிக்கொண்டார் பீஷ்மர்.
துரோணர் சம்மதித்த பிறகு அவருக்கு தனியாக ஒரு பெரிய இல்லம் தரப்பட்டது. ராஜகுமாரர்கள் அனைவரும் குருகுலவாசம் செய்வதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டது.
சிஷ்யர்களாக சேர்ந்த அனைவரும் அவரது காலில் விழுந்து ஆசீர்வாதம் பெற்றுக்கொண்டார்கள். ராஜ லக்ஷணத்துடன் கூடிய அவ்வளவு பேரையும் ஆசீர்வதித்த துரோணர்
“குழந்தைகளே! எனது நெஞ்சை நிரடிக்கொண்டிருக்கும் சம்பவத்தால் நான் அல்லும்பகலும் துயரத்தில் இருக்கிறேன். எனது மனது அந்த பாரத்தை தாங்க வலுவில்லாமல் தள்ளாடுகிறது. நீங்கள் அனைவரும் அஸ்திரங்களில் தேர்ந்தபிறகு அதனை நிறைவேற வேண்டும்”
ஒருவருக்கும் ஒன்றும் புரியாமல் முழித்தார்கள். கௌரவர்கள் பதிலேதும் பேசாமல் மௌனமாக நின்றிருந்தார்கள். அர்ச்சுனன் ஒருவன் மட்டும் துடிப்பாக முன்னே வந்து “நான் நிறைவேற்றித் தருகிறேன்” என்றாள் கைகளைத் தூக்கி. துரோணர் அர்ச்சுனனை அப்படியே கட்டிப் பிடித்து பலமுறைகள் உச்சி மோந்தார். அவனைக் கட்டித் தழுவிக்கொண்டு ஆனந்தக்கண்ணீர் சொரிந்தார்.
பக்கத்தில் அஸ்வத்தாமா இவற்றையெல்லாம் பார்த்துக்கொண்டு நின்றிருந்தான்.
“அஸ்வத்தாமா இங்கே வா! இவன் தான் இனிமேல் உன்னுடைய நெருங்கிய நண்பன். அர்ச்சுனன” என்று இருவரது கையையும் பற்றி இழுத்து கோர்த்துவிட்டார். இருவரும் கட்டி அணைத்துக்கொண்டார்கள்.
அர்ச்சுனன் துரோணரின் காலில் விழுந்து பிடித்துக்கொண்டு “குருவே! இன்று முதல் நான் உங்களுக்கு கட்டுப்பட்டு நடப்பேன். நான் உமது சிஷ்யன். உமது அருளினால் ஜீவிக்கிறேன்” என்றான்.
**
குருகுலவாசம் ஆரம்பித்தது. துரோணாசாரியார் பலவிதமான அஸ்திரசஸ்திர வித்தைகளை அனைவருக்கும் பேதமில்லாமல் கற்பித்தார். காலையிலிருந்து அந்தி சாயும் நேரம் வரை குதிரையேற்றம், யானையேற்றம், ஈட்டி எறிதல், கத்திச் சண்டை, தனுர்வேதம் என்று எல்லா வகுப்புகளும் நடக்கும். இதில் அவர்களது தேகத்தை வைரம் பாய்ந்த கட்டையாக மாற்றுவதற்குத் தேவையான பயிற்சிகளும் அடக்கம்.
கற்றுக்கொள்ளும் அனைவரிடமிருந்தும் அர்ச்சுனன் மட்டும் பிரத்யேகமான தீரனாக இருந்தான். வில்லிலும் சொல்லிலும் தேர்ந்தவனாக இருந்தான். துரோணர் உபதேசிக்கும் போது சட்டென்று எதையும் பிடித்துக்கொள்வதில் கெட்டிக்காரனாக இருந்தான் இந்திர புத்திரனான அர்ச்சுனன். பலவிதமான பரீட்சைகள் வைத்தார் துரோணாசாரியார்.
ஒருநாள் வாய் குறுகலான ஒரு குடத்தைக் கொடுத்து அதில் தண்ணீர் நிரப்பிக்கொண்டு வரும்படி சொன்னார். பக்கத்தில் குளம் இருந்தது. குடத்தின் வாய் அடைக்கப்பட்டு அதில் சொட்டுச் சொட்டாக நீரின் போக்குவரத்து இருக்கும்படி வடிவமைக்கப்பட்டிருந்தது.
துரோணர் சொன்னதும் அனைவரும் குளத்துக்கு ஓடினார்கள். குடத்தை தண்ணீரில் முங்கிப் பிடித்தபடி நின்றிருந்தார்கள். வெகுநேரமாக அப்படியே நின்றிருந்தார்கள். ஆனால் அர்ச்சுனன் மட்டும் சில கணங்களில் அந்தக் குடத்தை நிரப்பிக்கொண்டு துரோணரிடம் சென்றுவிட்டான்.
அர்ச்சுனன் சென்றதைப் பார்த்ததும் அனைவரும் துரோணரிடம் ஓடினார்கள். அவனது குடத்தில் மட்டும் பெரிய வாய் இருப்பதாக நினைத்துக்கொண்டு அந்தக் குடத்தைச் சுற்றிச் சுற்றி பார்த்தார்கள். அவர்களுக்குக் கொடுக்கப்பட்ட அதே போன்ற குடம்தான்.
ஒன்றும் புரியாமல் அனைவருக்கும் தலையைச் சுற்றியது. எல்லோர் முன்னிலையிலும் அர்ச்சுனனை துரோணர் விசாரித்தார்.
“அர்ச்சுனா! இவ்வளவு குறுகிய வாய் ஓட்டையுள்ள இந்தக் குடத்தில் எப்படி நீ சீக்கிரமாக நீர் பிடித்தாய்?”
“குருவே! நேற்றுதான் நீங்கள் வாருணாஸ்திரத்தினால் தண்ணீர் கொண்டுவருவது பற்றி பயிற்றுவித்தீர்கள். நான் அந்த வாருணாஸ்திரத்தால் இந்தக் குடத்தை நிரப்பிவிட்டேன்” என்றான்.
துரோணர் சிஷ்யனின் புத்திக்கூர்மையை பாராட்டினார். கற்றுக்கொள்ளும் அனைவரையும் அர்ச்சுனனைப் போல புத்திசாலியாக இருக்கவேண்டும் என்று அறிவுறுத்தினார். துரியோதனனுக்கு எரிந்தது.
எப்போதும் அஸ்திரங்களைப் பற்றியும் பாணங்களைப் பற்றியுமே நினைவாக அர்ச்சுனன் திரிந்துகொண்டிருந்தான். இதைக் கண்ட துரோணர் இன்னொரு பரீட்சை செய்ய எண்ணினார்.
குருகுலத்தின் சமையற்காரனைக் கூப்பிட்டார்.
“நீ எப்போதும் அர்ச்சுனனுக்கு இருட்டான இடத்தில் அன்னம் போடாதே! இப்படி நான் உன்னிடம் சொன்னேன் என்று அர்ச்சுனனுக்குத் தெரியவேண்டாம். சரியா?” என்று அவனிடம் சொல்லி அனுப்பினார்.
இப்படி நாட்கள் சென்றுகொண்டிருக்கும் போது ஒரு நாள் அர்ச்சுனன் இரவு உணவு சாப்பிட்டுக்கொண்டிருக்கையில் காற்று பலமாக வீசி விளக்கை அணைத்துவிட்டது. விளக்கு அணைந்தாலும் கையிலிருந்து எடுத்த சாப்பாடு அழகாக வாய்க்குள் சென்றது. இப்போது அர்ச்சுனன் யோசித்தான். இரவு விளக்கு இல்லாவிட்டாலும் கைக்கு வாய் இருக்கும் இடம் தெரிகிறது. இது எப்படி சாத்தியமாயிற்று. தினமும் சோறு தின்பதால். அப்படியானால் ஒரு செயலை அனுதினமும் செய்யும்போது அது பழக்கமாகிவிடுகிறது. பின்னர் பகல் இரவு வெளிச்சம் இருட்டு என்று எதுவும் தெரிவதில்லை. தானாக அந்தச் செயல் நடந்துவிடுகிறது.
மறுநாள் அர்ச்சுனன் ஒரு முடிவுக்கு வந்தவனாய் இரவு படுக்கையிலிருந்து எழுந்து தனியாக வில் வித்தை பயிற்சிசெய்யுமிடத்திற்குச் சென்றான். நாணேற்றி சரேல் சரேல் என்று வரிசையாக பாணங்களைக் குறி பார்த்து எய்தான். அவனது வில்லின் நாண் விரல்களில் உராயும் போது ஏற்படும் சத்தத்தால் துரோணர் வெளியே ஓடி வந்து பார்த்தார். அர்த்தராத்திரியில் அர்ச்சுனன் மட்டும் கையில் வில்லம்போடு பயிற்சி எடுத்துக்கொண்டிருந்தான்.
இரவிலும் அவன் குறிதவறாமல் இலக்கை அடித்தது கண்டு வியப்புற்றார் துரோணர். “இந்த உலகத்திலேயே உன்னைப் போன்ற வில்லாளி வேறுயாருமில்லை என்று எல்லோரும் அதிசயிக்கும்படி உனக்கு எல்லா அஸ்திரசஸ்திர வித்தைகளையும் கற்றுக்கொடுக்கிறேன்” என்று பிரக்ஞை செய்தார்.
அர்ச்சுனனுக்கும் இன்னும் பிற ராஜகுமார்களுக்கும் மீண்டும் குதிரையேற்றம், யானைச் சண்டை, கதாயுத்தம் சிலம்பம் என்று எல்லாம் கற்றுக்கொடுத்தார்.இதைக் கேள்விப்பட்ட அயல் தேசத்து ராஜாக்கள் அனைவரும் தத்தம் பிள்ளைகளைத் துரோணாஸ்ரமத்தில் சேர்த்தார்கள். நூற்றுக்கணக்கில் இளைஞர்கள் சேர்ந்து பயிற்சி பெற்றார்கள்.
தலையில் இறகுகள் சொருகிய கிரீடத்துடன் கானக ஆடைகள் தரித்து வேடுவ இளைஞன் ஒருவன் ஒருநாள் துரோணரின் குருகுலத்திற்கு வந்தான். அன்று பயிற்சிக்கு விடுமுறை அளித்து சிஷ்யர்களை வெளியில் அனுப்பியிருந்தார் துரோணர்.
“நமஸ்கரிக்கிறேன் குருவே” என்று அவரை விழுந்து நமஸ்கரித்தான்.
“யாரப்பா நீ? எழுந்திரு” என்றார் துரோணர்.
”நான் ஏகலவ்யன். என் தந்தை ஹிரண்யதனுஸ் வேடுவர் குல தலைவன்”
கௌரவர்கள் பாண்டவர்கள் என்று ராஜபுத்திரர்கள் நிறைந்த அந்தக் குருகுலத்தில் ஒரு வேடுவனா? என்று ஒரு கணம் யோசித்தார் துரோணர்.
“நிஷாதபுத்திரனே! உனக்கு பாணப்பிரயோகங்கள் சித்திக்கட்டும். இங்கே உன்னை சேர்த்துக்கொள்ளமுடியாத கட்டாயத்தில் இருக்கிறேன். நீ திரும்ப உன் வீட்டிற்கு செல்” என்றார்.
கானகத்திற்கு திரும்பிய ஏகலவ்யன் துரோணரைப் போன்ற தொரு மண் பதுமை செய்தான். அதை நடுவில் நிறுத்தி வைத்து அஸ்திரங்களைப் பிரயோகிக்க பழகிக்கொண்டான். நகரத்தில் தனது சிஷ்யர்களுக்குத் துரோணர் கற்பிக்கும் அனைத்தும் இங்கே இவனும் சுயமாகக் கற்றுக்கொண்டான்.
நிறைய அஸ்திரங்களைப் பழகிக்கொண்ட சிஷ்யர்களை வனம் சென்று வேட்டையாடி வரும்படி துரோணர் அனுப்பினார். ரதங்களில் ஏறிக்கொண்டு பாண்டவர்களும் கௌரவர்களும் காட்டிற்குள் சென்றார்கள். அஸ்திரங்களை ஏற்றிக்கொண்டு ஒரு ரதமும் ஒரு வீரனும் பின்னர் ஒரு நாயும் சென்றது.
அடர்ந்த காட்டில் கறுத்துப் போய் உடம்பில் அழுக்கோடு மான் தோலை உடுத்திருந்த ஒரு வேடச்சிறுவனைப் பார்த்து அந்த நாய் குரைத்துக்கொண்டு நின்றது. சட்டென்று தனது வில்லை உறுவி ஏழு அஸ்திரங்களைப் பூட்டினான். விட்டதில் குரைத்த நாயின் வாயை மூடமுடியாமல் பூட்டு போல தைத்து நின்றது. கௌரவர்களும் பாண்டவர்களும் அதிசயித்து நின்றார்கள்.
“நீ யார்?” என்று அர்ச்சுனன் கேட்டான்.
“என் பெயர் ஏகலவ்யன். ஹிரண்யதனுஸ் என்னும் வேட்டுவ ராஜாவின் புத்திரன் நான்” என்றான்
“நீ இந்த வில் பயிற்சி யாரிடம் பெறுகிறாய்? என்று அடுத்த கேள்வி கேட்டான் அர்ச்சுனன். அந்த வேடுவனின் பதிலுக்காக அவனை ஊடுருவிப் பார்த்துக்கொண்டிருந்தான்.
“துரோணாசாரியார்”
அர்ச்சுனனுக்கு :”நீதான் என் பிரதான சிஷ்யன். உனக்கு சொல்லிக்கொடுக்காதது நான் யாருக்குமே சொல்லிக்கொடுக்கவில்லை: என்று துரோணர் நேற்றுச் சொன்னது ஞாபகம் வந்தது.
எல்லோரும் நகரத்துக்கு விரைந்தார்கள். காட்டில் கண்ட வேடச் சிறுவனைப் பற்றி புகழ்ந்து தள்ளினார்கள். அர்ச்சுனன் மட்டும் துரோணரின் அருகில் சென்று “என்னை விட சிறந்த சிஷ்யன் கிடையாது என்றும் எனக்குதான் அனைத்து அஸ்திர வித்தைகளும் கற்றுக்கொடுத்தேன் என்றும் சொன்னீர்கள். ஆனால் அங்கே ஒருவன் என்னை விட சிறந்த வில்லாளியாக நிற்கிறான்” என்று குறையாகச் சொன்னான்.
அர்ச்சுனனை அழைத்துக்கொண்டு தேரேறி கானகம் சென்றார் துரோணர். அங்கே மரங்களடர்ந்த பகுதியில் சரசரவென்று மின்னலென பாணங்களை விட்டு பயிற்சி எடுத்துக்கொண்டிருந்தான் ஒரு வேடச் சிறுவன்.
துரோணரைப் பார்த்ததும் ஓடி வந்து அவர் காலில் விழுந்து “குருவே! ஆசீர்வதிக்கவேண்டும்” என்றார். அவன் எழுந்ததும் அவனை அடையாளம் கண்டுபிடித்துவிட்டார் துரோணர். அன்று தன்னை தனியே சந்தித்தவன் இன்று எப்படி எல்லா அஸ்திர முறைகளையும் கற்றுக்கொண்டான் என்று ஆச்சரியப்பட்டார். இப்போது என்ன விசாரித்தாலும் அர்ச்சுனன் நம்மை நம்பமாட்டான் என்று நினைத்தார்.
“நிஷாதபுத்திரனே! நீ என் சிஷ்யன் என்று சொல்லியிருக்கிறாய். அதற்கு நீ குரு தக்ஷிணை தர வேண்டும். தெரியுமா?” என்றார் அதிகாரமாக.
“நீங்கள் என்ன கேட்டாலும் தருகிறேன். குருவிற்கு மிஞ்சியது எனக்கு வேறென்ன?”
“உனது வலக்கை கட்டைவிரலை எனக்குத் தக்ஷிணையாகக் கொடு” என்று கொடுஞ்சொல் கூறினார்.
கணமும் தாமதிக்காமல் தன்னுடைய் இடைவாளை உருவி சரக்கென்று வலக்கை கட்டைவிரலை இடக்கையால் அறுத்து அவர் காலடியில் சமர்ப்பணம் செய்தான்.
அர்ச்சுனன் சந்தோஷமடைந்தான். துரோணரும் தனது சொல்லைக் காப்பாற்றினார்.
நாடு திரும்பியதும் கடும் பயிற்சியில் ஈடுபட்டார்கள். துரியோதனனும் பீமனும் கதைப் பயிற்சியில் ஈடுபட்டார்கள். அசுவத்தாமா மந்திரங்கள் பிரயோகிக்கும் அஸ்திரசஸ்திரங்களைப் பயின்றான். யுதிஷ்டிரர் தேர்ச்சண்டையில் நிபுணரானார். நகுலசகதேவ இரட்டையர்கள் சிலம்பம் சுழற்றுவதில் வல்லமை பெற்றனர். அர்ச்சுனன் எல்லாவற்றிலும் தேர்ச்சிபெற்று நிகரற்ற வீரனாகத் திகழ்ந்தான். அஸ்திரோபதேசம் ;அனைவருக்கும் ஒன்றாக இருந்தும் வீரனாகிய அர்ச்சுனன் மட்டும் எல்லோரையும் விட கற்றறிருந்திருந்தான்.
ஒருநாள் அவர்களுடைய திறமையைச் சோதித்துப் பார்ப்பதற்கு ஒரு முக்கிய பரீக்ஷை வைப்பதற்காக காட்டில் சிறிது தூரம் அழைத்துச்சென்றார். அங்கே...

யாருக்கு யார் ஸ்நேகம்?


பரசுராமர் தானம் புரியும் இடத்திற்குச் சென்றார் துரோணர். பரசுராமரின் தனுர்வேதம் கீர்த்தி பெற்றது. அவரது திவ்யாஸ்திரங்களை ஒருவர் கற்றுக்கொண்டால் நிகரற்ற வில்லாளி ஆகிவிடலாம். ராஜநீதியிலும் சாஸ்திரங்களிலும் அவரை மிஞ்ச ஒருவர் கிடையாது. ஆகையால் இவையனைத்தையும் அவரிடம் கற்றுக்கொண்டு விடலாம் என்ற ஆசையுடன் துரோணர் விரைந்தார்.

பரசுராமர் மஹேந்திர பர்வதத்தில் இருந்தார். க்ஷத்ரிய குலத்தை வேரறுப்பேன் என்று விரதம் பூண்டவரின் கம்பீரமான தோற்றத்தைக் கண்ட துரோணர் அப்படியே காலில் விழுந்து நமஸ்காரம் செய்தார்.
“பிராமணோத்தமரே! பரத்வாஜரின் புத்திரன் நான். அயோநிஜன். துரோணன் என் பெயர். நான் உம்மிடம் சில பொருள் வேண்டி வந்திருக்கிறேன். ஆசீர்வதிக்க நமஸ்கரித்தேன்”
“என்னிடம் என்ன விரும்புகிறாய்? சொல்” கணீரென்று கேட்டார் பரசுராமர்.
“நான் பெரும் தனம் விரும்புகிறேன்”
அமைதியாகச் சிரித்தார் பரசுராமர்.
“இங்குள்ள பொன்னும் பொருளும் பிராமணர்களுக்கு ஏற்கனவே தானமாகக் கொடுக்கப்பட்டன. அதுபோலவே இந்தக் கடல் சூழ் பூமிதேவியை காசியபருக்கு அளித்துவிட்டேன். இப்போது எனது சரீரமும் அஸ்திர சஸ்திரங்களும் இருக்கின்றன. இவற்றில் எதை வேண்டுமானாலும் கேள் துரோணா! தருகிறேன்” என்றார்.
மீண்டும் ஒரு முறை நமஸ்கரித்து எழுந்து துரோணர் கேட்டார்.
“பார்க்கவரே! அஸ்திரங்கள் எல்லாம் வேண்டும். பிரயோகம் (விடுவது), ஸம்ஹாரம் (திருப்பி எடுத்துக்கொள்வது), ரகஸ்யம் (அதன் ஸ்வரூப ஞானம்) ஆகியவைகளைப் பூரணமாக வேண்டுகிறேன்”
“தந்தேன்” என்றார் பரசுராமர். அனைத்து அஸ்திர சஸ்திரங்களும் அதன் வித்தைகளும் துரோணரிடம் வந்து சேர்ந்தது. தனுர்வேதமும் புரச்சரண விரதத்தோடு (அஸ்திர சஸ்திரங்களுக்கு முன்னதாக அனுஷ்டிக்க வேண்டியது) உபதேசம் செய்தார். துரோணர் உள்ளம் மகிழ்ச்சியில் ஆனந்தக் கூத்தாடியது. தன்னுடைய அணுக்கமான ஸ்நேகிதனாகிய துருபதனிடம் இதைப் பகிர்ந்துகொள்வதற்காக ஓடினார்.
**
துருபதன் அரண்மனை. சபையில் தங்க சிம்மாசனத்தில் வீற்றிருக்கிறான். மகிழ்ச்சி பொங்க உள்ளே ஓடிவந்தார் துரோணர்.
“ஸ்நேகிதனே!” என்று கையிரண்டையும் விரித்துக் கட்டிக்கொள்வதற்காக அரியணையிருக்கும் படியேற எத்தனித்தார்.
“நில்!” என்று இரைந்தான் துருபதன்.
ஸ்தம்பித்து நின்றார் துரோணர்.
“நீ யார்?” என்று கேட்டான்.
“நான் உனது நண்பன். மறந்துவிட்டாயா?”
“இவ்வுலகத்தில் ஸ்நேகம் அழியாமல் நிற்பதில்லை. தரித்திரன் தனவானுக்கும், மூர்க்கன் வித்வானுக்கும், பேடியானவன் சூரனுக்கும் என்னாளும் ஸ்நேகிதனாவதில்லை. இது உமக்குத் தெரியாதா? நீர் மூடனா?”
துரோணர் அவமானத்தால் துடித்தார். சபை துருபதனின் ஏச்சுபேச்சுகளை பார்த்துக்கொண்டிருந்தது. அவரால் பேசமுடியவில்லை. தலையைத் தொங்கப்போட்டுக்கொண்டு நின்றார். துருபதன் மேலும் பேச ஆரம்பித்தான்.
“எந்த இருவருக்கும் ஐஸ்வர்யம் சமமாக இருக்குமோ, எந்த இருவருக்கும் கல்வி கேள்விகள் சமமாக இருக்குமோ.. அவ்விருவருக்கும்தான் ஸ்நேகமும் விவாகமும் நடக்கும்”
துருபதனுக்கு கோபத்தில் இரைத்தது. துரோணர் இன்னமும் தலையை தூக்கவில்லை. சபையோருக்கு துருபதனின் இந்தச் செயல் பிடிக்கவில்லை. முகம் சுண்ட அனைவரும் அமர்ந்திருந்தார்கள்.
“வலுவுள்ளவன் திராணியற்றவுடன் சேரமாட்டான். வேதம் ஓதாதவன் வேதம் ஓதினவுடன் பழகமுடியாது. ரதமுள்ளவன் ரதமில்லாதவனுக்கு ஸ்நேகனாகான். ராஜ்ஜியமில்லாதவன் எப்படி ஒரு ராஜாவுக்கு ஸ்நேகிதன் ஆக முடியும்?”
இந்தக் கடைசி கேள்வி சுருக்கென்று துரோணரின் நெஞ்சில் தைத்தது. தன்னுடன் இளமையில் சேர்ந்து குருகுலம் பயின்ற துருபதனின் அகம்பாவப் பேச்சில் மனமுடைந்தார். இனி தன்னுடைய அந்தஸ்து உயர்ந்தவுடன் மட்டுமே இவனை வந்து பார்க்க வேண்டும் என்று அவையிலிருந்து திரும்பி வெளியே நடக்க ஆரம்பித்தார்.
நேரே அஸ்தினாபுரம் வந்தார். கிருபரின் க்ருஹத்தில் மறைவாக வசிக்கத் தொடங்கினார். யாருக்கும் தெரியாமலே சிலகாலம் அங்கே இருந்தார்.
ஒரு நாள் வெளியே வந்த துரோணர் ஒரு தோட்டத்தில் ராஜகுமாரர்கள் போலிருந்த சிலர் பந்து விளையாண்டுகொண்டிருப்பதைப் பார்த்தார். அருகில் போய் அமர்ந்துகொண்டார். வேறெதுவும் பேசவில்லை. தர்மரும் அவரது தம்பிகளும் கூடவே துரியோதனனும் இன்னும் சில அவனது சகோதரர்களும் ஓடியாடி விளையாடிக்கொண்டிருந்தார்கள்.
அப்போது அந்த பந்து கிணற்றில் விழுந்தது. பின்னாலேயே ஓடிய தர்மபுத்திரர் அதை எடுக்க முனைந்த போது அவரது மோதிரம் கழன்று பந்துடன் சேர்ந்து அந்தக் கிணற்றில் விழுந்துவிட்டது. தண்ணீர் அடியாழத்தில் இருந்தது பந்து மிதப்பது தெரிகிறது. எப்படி எடுப்பது? புரியாமல் கிணற்றைச் சுற்றி அனைவரும் அவர்களது தலைகள் அடியாழத்தில் கிடக்கும் நீரில் தெரிய நின்றுகொண்டார்கள்.
“பந்து வேண்டுமே! “ என்றான் துரியோதனன்.
“என்னுடைய மோதிரமும் வேண்டும்” என்றார் தர்மபுத்திரர்.
கிணறு மிக ஆழமாக இருந்தது. பந்தையும் மோதிரத்தையும் ஒருசேர எப்படி எடுப்பது என்று யோசனை செய்தார்கள். ஒன்றும் மார்க்கமில்லை. பக்கத்தில் கறுத்தும், நரைத்தும் வறுமையில் நரம்பு தெரிய அமர்ந்திருக்கும் ஒரு பிராமணரைக் கண்டார்கள்.
“பெரியவரே! எங்கள் பந்து அந்தக் கிணற்றில் விழுந்துவிட்டது. தர்மனின் மோதிரமும்... உம்மால் அதை வெளிக்கொணர முடியுமா?”
சிறுவர்கள் இப்படிக் கேட்டதும் துரோணர் உத்ஸாகமடைந்தார்.
“பரதகுலத்தில் பிறந்தவர்கள் பந்தை எடுக்கத் தெரியாமல் இருக்கிறீர்களே”” நரைத்த மீசை தாடியின் உள்ளிருந்து பற்கள் தெரிய சிரித்தார்.
“உம்மால் எடுக்க முடியுமா?” ஆச்சரியத்துடன் கேட்டார்கள்.
“இந்தப் பந்து மோதிரம் இரண்டையும் சீழ்கீர்க்குக்களினால் எடுத்துவிடுவேன். எனக்கு போஜனம் தருவீர்களா?”
வித்தை தெரிந்த துரோணர் போஜனம் கேட்டது அந்த ராஜ சிறுவர்களுக்கு என்னவோ போல் இருந்தது.
“கிருபருடைய அனுமதியின் பேரில் நீர் திவ்ய போஜனத்தை அடையலாம்” என்றார் கண்களில் இரக்கம் வழிய யுதிஷ்டிரர்.
கையில் எங்கிருந்தோ சில ஈர்க்குகளை பொறுக்கி எடுத்துவந்தார் துரோணர். கிணற்றுக்குள்ளிருந்த கண்களை எடுக்காமல் அனைவரும் சூழ்ந்து நின்றுகொண்டிருந்தனர்.
“நகருங்கள்” என்றார்.
இரண்டு மூன்று பேர் நகர்ந்து நின்று கொள்ள கிணற்றின் கட்டையில் ஏறி நின்றுகொண்டார். கையிலிருந்து ஈர்க்குகளை வாயருகில் கொண்டு சென்று கண்களை மூடி உதடுகளை அசைத்து சப்தம் வெளியேவராமல் ஜெபித்தார்.
“ராஜகுமாரர்களே! இந்த பிடி ஈர்க்குகளை அஸ்திர மந்திரத்தினால் மந்திரித்திருக்கிறேன். இவற்றின் சக்தியைப் பாருங்கள்”
ஒரு ஈர்க்கை உள்ளே செலுத்தி அதை பந்தின் மீது குத்தச் செய்தார். பின்னர் ஒரு ஈர்க்கை அந்தக் குத்தியின் ஈர்க்கினோடு சேர்த்தார். இப்படி வரிசையாக ஒவ்வொரு ஈர்க்குகளாக கோர்த்தார். கடைசியில் அப்படியே தூக்கியபோது பந்து வெளியே வந்துவிட்டது.
குழந்தைகள் கூட்டம் ”ஹோய்...” என்று ஆர்ப்பரித்தது. தர்மருக்கு இன்னும் மோதிரம் வரவில்லை.
“என்னுடைய மோதிரம்...” என்று துரோணரின் உத்தரீயத்தை இழுத்தார்.
துரோணர் உடனே தர்மபுத்திரர் கையிலிருந்து வில்லையும் ஒரு அம்பையும் வாங்கிக்கொண்டார். நாணேற்றி கண்களை மூடி ஏதோ மந்திரம் சொனார். பிறகு கிணற்றுக்குள் அதை எய்தார். அந்த அம்பு அப்படியே மோதிரத்தை எடுத்துக்கொண்டு வெளியே வந்து விழுந்தது.
சுற்றி நின்ற ராஜகுமாரர்கள் அனைவரும் ஆச்சரியத்தில் வாயடைத்துப் போயினர். தர்மருக்கு இவர் தீர்க்கபுருஷர் என்று விளங்கியிருக்கவேண்டும். உடனே அவருக்கு நமஸ்காரம் செய்தார். அனைவரும் பொத் பொத்தென்று தரையில் விழுந்து துரோணரை நமஸ்கரித்தார்கள்.
“நீங்கள் யார்? உங்களுக்கு நாங்கள் செய்யவேண்டிய கடமை என்ன? சொன்னால் தனயர்களாவோம்” என்றார் தர்மர்.
“என்னுடைய தோற்றத்தையும் இப்போது நான் செய்துகாட்டிய இந்த அஸ்திர வித்தைகளையும் பீஷ்மரிடம் சென்று சொல்லுங்கள். அவர் என்னை அறிந்துகொள்வார்” என்று நகர்ந்துவிட்டார்.
குடுகுடுவென்று அந்த ராஜகுமாரர்கள் அரண்மனைக்குள் ஓடி பீஷ்மரின் முன் மூச்சிரைக்க நின்றார்கள்.
“ஏனப்பா இப்படி ஓடிவருகிறீர்கள்? என்னாயிற்று”
தர்மர் மூச்சுவிடாமல் தோட்டத்தில் நடந்தவைகளைப் பற்றி பீஷ்மருக்குச் சொன்னார். இதைக் கேட்டுமுடித்தவுடன் பீஷ்மரின் கண்களில் ஒளி தோன்றியது. வந்தது யார் என்று புரிந்துகொண்டார்.
“அவர் இப்போது எங்கேயிருக்கிறார்?” என்று கேட்டார்.
அந்த குழந்தைகளுடன் வேகவேகமாக தோட்டத்திற்கு வந்து துரோணரைப் பார்த்து வந்தனம் செய்தார்.
“வரவேண்டும்..வரவேண்டும்.. துரோணரே.. இவர்களுக்கான அஸ்திரவித்தைகளை கிருபரை விட இன்னும் ஒரு படி மேலாக கற்பிக்க வேண்டும். உங்களை விட அதற்கு தகுதியான ஆச்சாரியார் இப்புவியில் எவருமில்லை.”
துரோணருக்கு ஆசனம் கொடுத்து மரியாதைகள் செய்தார் பீஷ்மர். பின்னர் அவர் அஸ்தினாபுரம் வருவதற்கான காரணத்தைக் கேட்டார்.
“பீஷ்ம பிதாமகரே! தனுர்வேதத்தை நான் அக்னிரேஷ்ய முனிவரின் குருகுலவாசத்தில் பயின்றேன். என்னுடன் பாஞ்சால தேசத்து மஹாபலசாலியான துருபதனும் கற்றுக்கொண்டான். நாங்கள் இருவரும் ஒன்றாக குருவிற்கு சிஷ்ருஷையில் ஈடுபட்டோம். அருகருகே படுத்து பக்கத்தில் உட்கார்ந்து சாப்பிட்டு அத்யயனம் செய்து தனுர்வித்தை கற்றுக்கொண்டு மிகவும் நெருக்கமான நண்பர்களாக இருந்தோம். அப்போது அந்த துருபதன் என்னிடம் அவனுக்கு ராஜ்ஜிய பட்டாபிஷேகம் ஆனதும் எனக்கும் அதில் பாதி ராஜ்ஜியத்தைத் தருகிறேன் என்று வாக்களித்தான்.”
பீஷ்மர் சுவாரஸ்யமாக துரோணரின் கதையைக் கேட்டுக்கொண்டிருந்தார்.
“குருகுல வாசம் முடிந்து நான் சரத்வாணின் புத்திரியான கிருபியைத் திருமணம் செய்துகொண்டேன். அவளுக்கும் எனக்கும் சூரியனுக்கு ஒப்பான அஸ்வத்தாமன் புத்திரனாகப் பிறந்தான். நான் தனுர்வேதம் பயின்றும் இன்ன பிற வேதாத்தியயனங்கள் செய்தும் வருமானத்திற்கு வழி இல்லாமல் இருந்தேன். பக்கத்தில் இருக்கும் தனவான்களின் பிள்ளைகள் பசும் பால் குடிக்கும் போது அஸ்வத்தாமன் தனக்கும் பால் வேண்டும் என்பான். என்ன கொடுத்தேன் தெரியுமா?”
சிறிது நிறுத்தினார் துரோணர். முகத்தில் சோகம் அப்பியிருந்தது. பீஷ்மரும் கண்களில் சோகத்தைத் தாங்கியிருந்தார்.
“அரிசி மாவைக் கரைத்த ஜலத்தை பால் என்று அவனுக்குக் கொடுப்பேன். அவன் அதை விரும்பிக் குடிப்பான். ஸ்நேகிதர்களிடம் நானும் பால் குடித்தேன் என்று பெருமையாகக் கூறிக்கொள்வான்.” என்றார் துக்கம் தொண்டையை அடைக்க.
பீஷ்மருக்கே கண்களில் நீர் கட்டிவிட்டது. முகத்தை வேறு பக்கம் திருப்பிக்கொண்டார். துரோணர் தொடர்ந்தார்.
“இனிமேலும் வாழ வழியில்லை என்று என் பத்னியுடன் புத்ரனுடனும் பாஞ்சால தேசம் சென்று துருபதனைச் சந்தித்தேன். ஆனால் அவன் பழைய ஸ்நேகிதத்தை மறந்து என்னை அவமானப்படுத்தினான். சமூக ஏற்றத்தாழ்வுகளில் இருக்கும் இருவர் ஸ்நேகிதம் வைத்துக்கொள்ளவே முடியாது என்று பேசினான். ஒரு ராஜாவுக்கு தரித்திரனுக்கும் நட்பு மலராது என்று அகம்பாவத்தோடு பேசினான்.”
அவனுக்கு பழைய குருகுலவாசத்துக் காலங்களை நினைவுபடுத்தினேன். அவன் வேண்டுமென்றே அதையெல்லாம் மறந்ததுபோல நடித்தான்.
“ஓய் பிராமணரே! வேண்டுமானால் உமக்கு இன்று ஒரு ராத்திரி மட்டும் போஜனம் அளிக்கிறேன். சாப்பிட்டுவிட்டு காலையில் போம்” என்றான். என் உள்ளம் எரிந்து சாம்பலாகப் போயிற்று. இன்று உங்களைக் கண்டவுடன் தான் அது மொட்டுவிட்டு மலர ஆரம்பிக்கிறது. உமக்கு என்ன வேண்டும்?”
பீஷ்மர் அந்த பெரிய சிம்மாசனத்திலிருந்து எழுந்திருந்தார். அந்த உயரமான மனிதர் எழுந்தவுடன் அவையில் அமர்ந்திருந்தோர் அனைவரும் நிமிர்ந்து பார்த்தார்கள். அவர் கம்பீரமான குரலில் பின்வருமாறு அறிவித்தார்.
“துரோணரே! எமது கௌரவ குலத்திற்கு அஸ்திர வித்தையைத் தாருங்கள். நாங்கள் அளிக்கும் க்ருஹத்தில் இருந்து சகல சௌக்கியங்களையும் அனுபவியுங்கள். கௌரவர்களுக்கு இருக்கும் தனம் ராஜ்ஜியம் தேசங்கள் எல்லாவற்றிர்க்கும் நீரே முதன்மையான ராஜா! நாங்கள் எல்லோரும் உங்களுக்கு ஏவல் செய்பவர்கள்தான். பிரம்மரிஷியே நீர் வந்ததில் எனக்கு மிகவும் சந்தோஷம்”
துரோணர் உச்சி குளிர்ந்தார். ஒரு நாட்டைக் கட்டிக்காப்பதற்கு தேவையான அஸ்திர திறமைகளை கற்றுக்கொடுக்க வந்த ஆச்சாரியாரின் முக்கியத்தை உணர்த்தும்விதமாக இருந்தது பீஷ்மரின் அந்த அறிவிப்பு. தான் கற்றுக்கொண்ட தனுர்வேதத்தையும் இன்னபிற போர் தந்திரங்களையும் முழுமனதோடு ஒட்டுமொத்தமாக பாண்டவர்களுக்கும் துரியோதனாதிகளுக்கும் கற்றுக்கொடுக்க துரோணர் மனதுக்குள் சங்கல்பம் எடுத்துக்கொண்டார்.