Showing posts with label துருபதன். Show all posts
Showing posts with label துருபதன். Show all posts

Monday, March 12, 2018

பீஷ்மாதிகளின் அறவுரையும் பாண்டவர்களின் அஸ்தினாபுர பிரவேசமும்


பீஷ்மர் ராஜசிம்மமாக கம்பீரத்துடன் அமர்ந்திருந்தார். திருதராஷ்டிரனின் அழைப்பினால் துரோணர் மற்றும் விதுரர் அங்கே வந்திருந்தார்கள். கர்ணனும் துரியோதனனும் அருகருகே அமர்ந்து காதோடு காதாக ஏதோ பேசிக்கொண்டிருந்தார்கள். கண் தெரியாத திருதராஷ்டிரன் பீஷ்மரிடம் முதலில் கேட்டான்.

“பிதாமகரே! கர்ணன் பாஞ்சாலத்திற்கு படையெடுத்து பாண்டவர்களை அழித்துவிட வேண்டும் என்கிறான். துரியோதனனும் அதை செய்யவே துடிக்கிறான். சகுனிக்கும் இஷ்டம்தான். உம்முடைய ஆலோசனையை வழங்க வேண்டுகிறேன்”
இப்படிக் கேட்ட திருதராஷ்டிரனை கூர்ந்து சில கணங்கள் பார்த்தார் பீஷ்மர். கர்ணனும் துரியோதனனும் பீஷ்மரைப் பார்த்தார்கள். சகுனி கண்களால் விஷத்தை உமிழ்ந்து அவை நடவடிக்கைகளை நோக்கினான்.
”பாண்டு புத்திரர்களோடு துரியோதனன் விரோதம் வளர்ப்பதில் எனக்கு இஷ்டமில்லை.”
கர்ணனும் துரியோதனனும் ஒருவரையொருவர் பார்த்துக்கொண்டு சகுனியைப் பார்த்தார்கள். பீஷ்மர் தொடர்ந்தார்.
“எனக்கு திருதராஷ்டிரன் எப்படியோ அப்படியே பாண்டு. குந்தி புத்திரர்களுக்கும் காந்தாரி புத்திரர்களுக்கும் எனக்குப் பேதமில்லை. அவர்களுக்கு ராஜ்ஜியத்தில் பாதியை தருவதுதான் நியாயம். அவர்களோடு கலகம் புரிவது அநியாயம். அவர்களோடு சமாதானம் செய்துகொண்டு ராஜ்ஜியத்தைப் பகிர வேண்டும். துரியோதனா! உன்னைப் போலவே இது அவர்களுக்கும் பாட்டன், தகப்பன் வழியாக வந்த ராஜ்ஜியம்தான். நீ ராஜ்ஜியத்தை முறைதவறி அடைந்திருக்கிறாய்”
பீஷ்மரின் கடைசி வரியில் உருவி விட்டதுபோல நிமிர்ந்து உட்கார்ந்தான் திருதராஷ்டிரன். விதுரரும் துரோணரும் பீஷ்மரின் பிரகாசமான வார்த்தைகளில் கட்டுண்டு கிடந்தார்கள். சகுனியும் கர்ணனும் துரியோதனனும் இருக்கையில் நெளிந்தார்கள்.
”புருஷ ஸ்ரேஷ்டனே! ஜனங்களின் விருப்பம் இதுதான். இது போல நடக்காவிட்டால் உனக்கு அபகீர்த்தி உண்டாகும். புகழ்தான் சிறந்த வன்மை. புகழ் அழிந்தவன் அனைத்தையும் இழந்தவனே! நல்லவேளையாக குந்தியும் அவளது புத்திரர்களும் உயிர் பிழைத்தார்கள். பாபியான புரோசனன் போய்ச் சேர்ந்தான். இவையெல்லாம் உன் நன்மைக்காகவே நடந்திருக்கிறது என்று எடுத்துக்கொள்வோம். உன் சதித்திட்டத்தில் பாண்டவர்கள் தப்பிப் பிழைத்திருப்பது உன்னுடைய தவறுதலுக்குப் பரிகாரமாகிவிட்டது. இறுதியாகச் சொல்கிறேன். நீ தர்மத்தையும் என் விருப்பத்தையும் உன் க்ஷேமத்தையும் கடைபிடிப்பதாக இருந்தால் அவர்களுக்குப் பாதி ராஜ்ஜியம் கொடுத்துவிடு”
பீஷ்மர் நிறைவு செய்துவிட்டார். மீசையை ஒரு முறை தடவிக் கொடுத்து தாடியைக் கோதிக்கொண்டார்.
“திருதராஷ்டிர மஹாராஜனே! ராஜ்ய ஆலோசனைக்காக ஆப்தர்களாக எங்களை அழைத்திருக்கிறீர்கள். மஹாத்மாவான பீஷ்மரின் அபிப்ராயம்தான் என்னுடைய அபிப்பிராயமும். பாண்டவர்களுக்கு ராஜ்யபாகம் அளிக்கவேண்டும். அதுதான் தர்மம். உடனே நீ ஒரு தூதனை பாஞ்சால தேசம் அனுப்பு. அவனிடம் மிகுதியான பொருட்களைக் கொடுத்தனுப்பவேண்டும். அவன் துருபதனிடம் சென்று நீங்கள் அழைத்துவரச் சொன்னதாக பாண்டவர்களை இங்கே இங்கே அனுப்பவேண்டும். குந்திக்கும் திரௌபதிக்கும் அணிகலன்களைக் கொடுத்தனுப்பவேண்டும். அவர்களிடத்தும் உன் பிள்ளைகள் இடத்தும் இப்படிதான் நீ நடந்துகொள்ள வெண்டும். பீஷ்மர் கருத்தே என் கருத்தும்.”
துரோணரும் பீஷ்மரின் கருத்தையே சொன்னவுடன் கர்ணன் வெகுண்டெழுந்தான். அவையில் பெரியோர்கள் இருந்ததையும் மதிக்காமல் வெறுப்பைக் கக்க ஆரம்பித்தான்.
“ராஜாவே! உன்னுடைய பொருளையும் பெருமையையும் பெற்றுக்கொண்டு எல்லாக் காரியங்களிலும் உமக்கு அந்தரங்கமாக இருப்பவர்கள் கூட உம்முடைய நன்மையைக் கருதாமல் இருக்கிறார்களே! இதென்ன விந்தை!!”
பெருங்குரலுடன் அவை எதிரொலிக்கப் பேசினான் கர்ணன்.
“மனதில் கெடுதியை நிறைத்துக்கொண்டு வெளியில் ஆப்தர்கள் போல நடிக்கிறார்கள். காரியங்களில் கஷ்டம் வரும்போது நன்மை தீமைக்கு அணுக்கமானவர்கள் உபயோகமில்லை என்பதை நிரூபிக்கிறார்கள். எவனுக்குமே இன்பமும் துன்பமும் விதிப்படியே நடக்கும். புத்திசாலியோ நிர்மூடனோ பெரியவனோ சிறியவனோ சகாயமுள்ளவனோ இல்லாதவனோ எல்லாமே விதிப்படிதான் நடக்கிறது”
துரோணருக்கு கோபம் வந்தது. சபையின் மாண்பு கெடக்கூடாது என்பதற்காக அமைதியாக அமர்ந்திருந்தார். பீஷ்மருக்கு கர்ணனின் இப்பேச்சு வெறுப்பேற்றியது. துரியோதனனும் சகுனியும் தங்கள் பக்கம் கர்ணன் பேசுவதற்காக மகிழ்ச்சியடைந்தார்கள்.
“ராஜகிருகம் என்ற தேசத்துக் கதை உங்களுக்குத் தெரிந்திருக்கலாம். அம்புவீசன் என்பவன் அரசாட்சி செய்துகொண்டிருந்தான். அவன் எல்லாக் காரியங்களையும் மந்திரியிடம் ஒப்படைத்துவிட்டு வெறுமனே இருந்தான். மஹாகர்ணி என்ற அந்த மந்திரி தனக்கு பலம் கிடைத்துவிட்டதாக அந்த ராஜாவை அவமதித்தான். அந்த மூடன் ராஜபோகத்திற்கு உரிய ஸ்திரீகளையும், ரத்னங்களையும் தனங்களையும் ஐஸ்வர்யங்களையும் அதிகாரத்தையும் முழுமையாக எடுத்துக்கொண்டான். அது போதாதென்று அந்த ராஜ்ஜியத்தையே அபகரிக்க எண்ணம் கொண்டான். ஆனால் அவனால் எவ்வளவு முயற்சி செய்தும் அந்த ராஜ்ஜியத்தை அடையமுடியவில்லை.ஏன் தெரியுமா? அந்த ராஜாவுக்கு ராஜ்யாதிகாரம் விதிக்கப்பட்டிருக்கிறது. அதை யாராலும் தட்டிப் பறிக்க முடியாது. இவ்வாறே மந்திரிகளுடைய யோக்கிதைகளையும் அயோக்கியத்தனத்தையும் நீங்கள் அறிந்துகொள்ள வேண்டும்”
துரோணரின் இரத்தம் கொதித்தது. மந்திரிகளின் யோக்கியதை என்பது பற்றி கர்ணன் சொன்ன கதை நேரடியாக அவரையும், விதுரரையும், பீஷ்மரையும் குறிப்பதாகப்பட்டது. கோபாவேசமாக தனது ஆசனத்தில் இருந்து எழுந்தார்.
“துஷ்டா! கர்ணா!!” இடியிடிப்பது போல குரல் எழுப்பினார். சபை நிசப்தமானது.
”பாண்டவர்களுக்காக நாங்கள் பேசினோம் என்பதால் எங்கள் மேல் குற்றம் சுமத்தப் பார்க்கிறாயா? குல நன்மைக்காக நாங்கள் பேசுகிறோம். எது நன்மை தீமையென்று திருதராஷ்டிரன் முடிவு செய்யட்டும். நாங்கள் சொல்லும் சிறந்த நன்மைக்கு மாறாக செயல்பட்டால் கௌரவர்கள் வெகுசீக்கிரத்தில் அழிந்து போவார்கள்”
பொத்தென்று அமர்ந்துவிட்டார்.
இப்போது விதுரரின் முறை. மென்மையான குரலில் நிதானமாகப் பேச ஆரம்பித்தார் விதுரர்.
“பீஷ்மரும் துரோணரும் உமக்கு நன்மை தரும் சொல்லைச் சொன்னார்கள். அதில் உமக்கு விருப்பம் இல்லையென்றாலும் அதுதான் சத்தியம். பீஷ்மதுரோணர்களான இந்த இரண்டு புருஷ சிம்மங்களைக் காட்டிலும் அறிவில் சிறந்தவர்கள் உன்னிடத்தில் யார் உளர்? உமக்கு எந்த சமயத்திலும் தீங்கு சொல்லாதவர்கள். இருவரும் தோல்வியடையாத பராக்கிரமம் உள்ளவர்கள். உனது நன்மைக்காக சொல்கிறார்கள். துரியோதனன் முதலியோர் எப்படி உன் புத்திரர்களோ அதுபோலவே பாண்டவர்களும்.”
துரியோதனன் எரிச்சலடைந்தான். கர்ணன் வெறுப்புற்று சபைக்கு வெளியே பார்க்க ஆரம்பித்தான். சகுனிக்கு ஏமாற்றம்.
“பீஷ்மதுரோணர்கள் சொன்னது போல பாண்டவர்களை வெற்றி கொள்வது எளிதல்ல. தனஞ்சயன் ஸவ்யஸாசி*. அவனை வெல்வதற்கு இந்திரனாலும் முடியாது. பீமஸேனன் பதினாயிரம் யானை பலம் கொண்டவன். ஜெயிக்கும் கரங்களை உடையவன். தேவர்களே இறங்கி வந்தாலும் அவனை தோற்கடிக்கமுடியாது. அவர்கள் பக்ஷத்தில் இருப்பவர்களைப் பார்த்தால் எத்தனை சைனியம் வந்தாலும் வெற்றிகாண முடியாது.”
திருதராஷ்டிரன் விதுரருக்குக் காதுகளைக் கொடுத்துவிட்டு ஆடாமல் அசையாமல் கேட்டுக்கொண்டிருந்தான்.
“புரோசனனால் உனது கீர்த்திக்கு களங்கம் ஏற்பட்டது. பாண்டவர்களுக்கு பாதி ராஜ்ஜியம் தருவதால் அதை நீ துடைத்தெறிந்துவிடலாம். யாதவர்கள், துருபதன், அவனது புத்திரர்கள், சேதி தேசத்தரன் சிசுபாலன் என்று பாண்டுவின் புத்திரர்களுக்கு பெரும் ஆதரவு இருக்கிறது. கடைசியாக ஒன்று சொல்லட்டுமா?”
அவை முழுவதும் விதுரரைக் கவனித்தது. திருதராஷ்டிரன் விதுரர் குரல் நின்ற திக்கைப் பார்த்தான். பீஷ்மரும் துரோணரும் கவனம் குவித்தார்கள். துரியோதனன் தரப்பு எல்ல சொல்லப்போகிறார் என்ற எதிர்பார்ப்பில் விதுரர் மேல் கண்களை நிலை குத்தியது.
“கிருஷ்ணன் எங்கேயோ அங்கேயே ஜயம். கிருஷ்ணன் பாண்டவர்கள் பக்கம்”
பீஷ்மரும் துரோணரும் அதை ஆமோதிப்பது போல சிரித்தார்கள். திருதராஷ்டிரன் செய்வதறியாது அப்படியே அமர்ந்திருந்தான்.
“துரியோதனனும் ஸுபலபுத்திரனான சகுனியும் கெட்ட எண்ணத்துடன் இருக்கிறார்கள். புத்தி கெட்டவர்கள். சிறார்கள். அவர்கள் சொல்வதைக் கேட்காதே. துரியோதனன் ஒருவனால் இந்தக் குலமே அழியப்போகிறது என்பதை நான் உனக்கு முன்னமே கூறியிருக்கிறேன்.”
விதுரர் அமர்ந்துவிட்டார்.
தொண்டையைச் செருமிக்கொண்டு திருதராஷ்டிரன் பேச ஆரம்பித்தான்.
”விதுரா! நீயும் பிதாமகரும் துரோணாசாரியாரும் எனக்கு நன்மையையே சொல்கிறீர்கள். துரியோதனன் எப்படியோ அப்படியே எனக்கு பாண்டவர்களும். அவர்களும் எனது புத்திரர்கள்தான். நீ பாஞ்சாலம் செல் விதுரா. நீ சென்று குந்தியையும் திரௌபதியையும் பாண்டவர்களையும் அழைத்து வா. இரத்தினங்களையும் தனங்களையும் கொண்டு செல். அவர்களுக்குக் கொடுத்து அழைத்துவா. நம்மிடத்தில் ராஜதர்மம் நன்றாகத் தெரிந்தவன் நீ. ”
சில ரதங்களில் ரத்னங்களும் தனங்களும் ஏற்றிக்கொண்டு சில வீரர்கள் புடைசூழ வேகமாகச் செல்லக்கூடிய ஒரு ரதத்தில் ஏறினார் விதுரர். இரவுபகல் தொடர்ந்து பயணித்து பாஞ்சாலம் வந்தடைந்தார். துருபதனுக்கு விதுரர் வந்த செய்தி தெரிவிக்கப்பட்டது.
“யாதவ அரசர் கிருஷ்ணர் வந்திருக்கிறார். துருபதராஜாவின் அரண்மனையில் தங்களுக்காக பாண்டவர்களுடன் காத்திருக்கிறார்”
விருந்தினர் மாளிகையில் தங்கியிருந்த விதுரருக்குத் தெரிவிக்கப்பட்டது. ரதம் ரதமாக கொண்டு வந்திருந்த ரத்தினங்களும் பவளங்களும் பொற்காசுகளோடும் துருபதன் அரண்மனைக்குச் சென்றார். ஆசனத்திலிருந்து எழுந்து வந்து எதிர்கொண்டு அழைத்துப் போனான் துருபதன். ஒருவருக்கொருவர் மரியாதை செய்துகொண்டார்கள். யோகக்ஷேமம் விசாரித்துக்கொண்டார்கள். கொண்டு வந்த செல்வங்களைக் கொடுத்தார்.
“அரசனே! உனது சம்பந்தத்தினால் திருதராஷ்டிர மஹாராஜா மிகுந்த சந்தோஷத்தில் இருக்கிறான். சந்தனுபுத்திரரான பீஷ்மர் குசலம் விசாரிக்கச்சொன்னார். பரத்வாஜ புத்திரர் துரோணாசாரியார் உன்னைத் தழுவிக்கொண்டு குசலப்ரசனம் செய்கிறார். கௌரவர்களும் திருதராஷ்டிரனனும் பாண்டவர்களைக் காணத் துடிக்கிறார்கள். குந்தியையும் கிருஷ்ணையையும் கௌரவ ராஜஸ்திரீகள் பார்ப்பதற்கு ஆவலாக இருக்கிறார்கள். தேசம் விட்டு வந்த பாண்டவர்களுக்கும் மீண்டும் அந்த மண்ணையும் மக்களையும் பார்ப்பதற்கு ஆர்வமாக இருப்பார்கள். அவர்களுக்கு விடை கொடு. "
"ஞானவானான விதுரரே! இந்த சம்பந்தம் செய்ததில் எனக்கும் அதீத சந்தோஷம். இந்த மஹானுபாவர்களான பாண்டவர்கள் தேசம் போவது உசிதம்தான். ஆனால் நான் என் வாக்கினால் அதைச் சொல்லலாகாது. வீரர் யுதிஷ்டிரரும் அர்ஜுனரும் பீமரும் நகுலசகதேவர்களும் இதோ இங்கே வீற்றிருக்கும் பலராமகிருஷ்ணரும் என்ன நினைக்கிறார்களோ அதன்படி செய்யட்டும்.”
துருபதன் அடக்கமாகச் சொன்னான்.
“ராஜாவே! நீர் அன்புடன் எதைச் சொன்னாலும் செய்வோம்” என்றார் துருபதனை நோக்கி யுதிஷ்டிரர்.
“துருபதராஜாவின் எண்ணமென்ன?” என்று கேட்டான் கிருஷ்ணன்.
கிருஷ்ணர் கேட்டதும் துருபதன் சரேலென்று எழுந்துவிட்டான்.
“புருஷோத்தமராகிய கிருஷ்ணர் பாண்டவர்களுக்கு நன்மையைச் சிந்திப்பதுபோல யுதிஷ்டிரர் கூட சிந்திப்பதில்லை. உம்முடைய முடிவு இறுதியானது ப்ரபோ” என்று கைகூப்பினான் துருபதன்.
இவ்வளவு நேரமாக குந்தி விதுரரையே உற்றுப் பார்த்துக்கொண்டிருந்தாள். அவர் பார்வையில் நன்றி தோய்ந்திருந்தது. விதுரரின் அறிவுரை இல்லாவிட்டால் அரக்குமாளிகையில் தீக்கிரையாகியிருப்போம் என்ற உணர்வில் அவள் கண்களில் நீர் தாரைதாரையாய் வழிந்தது. இவ்வளவு நேரத்துக்குப் பின்னர்தான் விதுரர் குந்தியிருக்கும் பக்கம் வந்தார். தரை தலையில் பட விழுந்து வணங்கினார். மைத்துனர் இப்படிச் செய்ததும் குந்தி இன்னும் உணர்ச்சிப் பெருக்கில் தேம்பினார். அவை நாகரீகம் கருதி கண்களைத் துடைத்துக்கொண்டு பேச ஆரம்பித்தாள்.
“விசித்ரவீரிய புத்திரரே! நீர்தான் உம் குழந்தைகளை பிழைப்பித்தீர். அரக்குமாளிகையில் போயிருக்கவேண்டியவர்கள் உமது கருணையினால் இங்கு இருக்கிறார்கள். ஆமை எந்த விதத்தில் தான் இருந்தாலும் குஞ்சுகளைப் பற்றியே நினைவில் இருக்குமாம். அதுபோல உம்முடைய நினைவினால் இவர்கள் க்ஷேமமாக இருக்கிறார்கள். குயில் குஞ்சுகளைக் காக்கை வளர்ப்பது மாதிரி நீர் என் புத்திரர்களைக் காப்பாற்றுகிறீர்கள். இதற்குமேல் எனக்கு என்ன சொல்வது என்று தெரியவில்லை. அநேக தர்மம் தெரிந்த நீரே இதற்கு வழி சொல்வீர்” என்று கைகூப்பினாள். சபை உணர்ச்சிப்பெருக்கில் நிறைந்தது. குந்தியின் சொற்களில் பாண்டவர்களின் கண்களிலும் கங்கை. விதுரரும் அந்த அன்பில் விக்கித்துப்போனார்.
“குந்தி! இவ்வுலகில் உன் புத்திரர்கள் மஹா பலசாலிகள். அவர்கள் ராஜ்ஜியம் அடைவார்கள். நீ துயரப்படாதே!”
துருபதன் அனுமதி கொடுத்தான். புக்ககம் செல்லும் தன் பெண்ணிற்கு கணக்கிலடங்கா சீர்கள் கொடுத்தான்.
பொன் மயமான கச்சைகள் கழுத்துப்பட்டைகள் பொன்னாபரணங்கள் எல்லா ஆயுதங்களும் கூடிய ஆயிரம் யானைகள் திடகாத்திரமான பாகர்களுடன் முன்னே சென்றது. பொன்னாலும் ரத்தினத்தாலும் சித்திரமாகச் செய்த நாலு குதிரைகள் பூட்டப்பட்ட பிரகாசமுள்ள ஆயிரம் தேர்கள் வீதியை அடைத்து நகர்ந்தன. உயர்ந்த சாமரங்களை உடைய ஐம்பதினாயிரம் உயர்ந்த ஜாதிக்குதிரைகள் இருபுறமும் அணி வகுத்தன. சிறந்த அணிகலன்களோடு பதினாயிரம் தாதிமார்களும் சிறந்த வீரர்களான பதினாயிரம் வீரர்களையும் ஐவருக்கும் சீதனமாகக் கொடுத்தான்.
பொனாலான படுக்கைகள், ஆஸனங்கள் பாத்திரங்கள் என்று வண்டிவண்டியாக தனியாகச் சென்றது. கோடி கோடியான பசுக்கள் “ம்மா...” என்று கன்றுகுட்டிகளுடன் இரண்டு ஊர்கள் அளவிற்கு ஐவருக்கு சீர் பொருளாக நிறுத்தப்பட்டிருந்தது. நூறு பல்லக்குகளும் அதை எடுப்பதற்கு ஐநூறு மனிதர்களையும் தயாராக நிறுத்தியிருந்தான்.
ஆயிரக்கணக்கான வாத்தியகோஷங்கள் முழங்கின. திருஷ்டத்யும்னன் தன்னுடன் பிறந்தவளை அழைத்துக்கொண்டு வந்தான். தயாராக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சீர்வரிசைகள் சுற்றும் முற்றும் நகர அவனும் திரௌபதியுடனும் பாண்டவர்களுடனும் குந்தியுடனும் ஹஸ்தினாபுரம் வந்தடைந்தான்.
**
அஸ்தினாபுர எல்லைக்கு கௌரவர்கள் அநேகம் பேர் வந்திருந்தார்கள். விகர்ணன் சித்ரசேனன் இருவரும் வரவேற்புகளைக் கவனித்துக்கொண்டார்கள். துரோணரும் கிருபரும் வந்திருந்து ஆசி வழங்கி நகருக்குள் பிரவேசிக்கச் சொன்னார்கள். அவர்களைக் கண்டதும் உற்சாகமடைந்த பாண்டவர்கள் மெல்ல மெல்ல அஸ்தினாபுரத்திற்குள் பிரவேசித்தார்கள். பாண்டவர்களின் வருகையைக் கேள்வியுற்ற ஜனங்கள் நகரத்தை அலங்கரித்தார்கள். தெருவெங்கும் தோரணங்கள். வாழைமரங்கள் நட்டார்கள். வீதிகளில் தண்ணீர் தெளித்துக் கோலமிட்டார்கள். சங்கம் பேரி போன்ற பற்பல வாத்தியங்கள் இசைக்கப்பட்டன.
யுதிஷ்டிரைக் கண்ட மக்கள் “பாண்டு மஹராஜாவே திரும்ப வனத்திலிருந்து வந்ததுபோலிருக்கிறது” என்று சந்தோஷப்பட்டார்கள். வயது முதிர்ந்த பிராமணன் ஒருவன் “நாம் செய்த தானமும் ஹோமமும் தவமும் பயன் அளிக்குமாயின் இந்தப் பாண்டவர்கள் இன்னும் நூறாண்டு காலம் வாழ்ந்து இங்கு ஆட்சி புரியவேண்டும்” என்றான். அவனைச் சுற்றி அமர்ந்திருந்த அனைவரும் அதை ஆமோதிப்பது போல ஜெயகோஷமிட்டார்கள்.
பாண்டவர்கள் அரண்மனையை அடைந்தார்கள். திருதராஷ்டிரனுக்கும் பீஷ்மருக்கும் பாதவந்தனம் செய்தார்கள். திருதராஷ்டிரன் அவர்களுடைய கிருஹத்திற்கு பிரவேசம் செய்ய கேட்டுக்கொண்டான்.
*இருகைகளினாலும் பாணம் விடுபவன்.

Sunday, March 11, 2018

துரியோதனனின் துர்புத்தி



அஸ்தினாபுரத்தின் அரசவையில் கர்ணன், சகுனி, துரியோதனாதிகள் ஆகியோரும் இன்னும் சில ராஜாங்க சேவையில் உள்ளவர்களும் அமர்ந்திருந்தார்கள். ஸ்வயம்வரத்தில் தோற்றது ஆறாத ரணமாக அவர்கள் நெஞ்சை அறுத்துக்கொண்டிருந்தது. ஒற்றர் தலைவன் உள்ளே வந்தான். தலை குனிந்து வந்தனம் செய்தான்.
”ப்ரபோ! பாஞ்சால தேசத்தில் திரௌபதி பாண்டவர்களை தன் கணவர்களாக அடைந்தாள். வில்லால் லக்ஷியத்தை அறுத்தவன் அர்ஜுனன். மரத்தைப் பிடிங்கி அரசர்களைத் தாக்கி மத்ர ராஜாவாகிய சல்லியனைத் தூக்கிப் போட்டு மிதித்தவன் பீமன். துரியோதன மஹாராஜாவின் வில்லை அறுத்து அவரை துரத்தி அடித்தவன் தர்மராஜன். துரியோதனருடைய தம்பிகளுடன் யுத்தம் புரிந்தவர்கள் நகுல சகதேவர்கள்.”
பாண்டவர்கள்தான் பிராம்மண வேஷம் தரித்து அடக்கமாக அந்த ஸ்வயம்வர மண்டபத்தில் அமர்ந்திருந்து எல்லா வேலைகளையும் முடித்தனர் என்பதைக் கேள்விப்பட்டவுடன் சகுனி, துச்சாஸனன், துரியோதனன், கர்ணன் ஆகியோர் உள்ளம் குமுறினார்கள். தர்மம், நல்லொழுக்கம் மற்றும் தாயாரின் விருப்பப்படி நடந்துகொள்ளுதல் போன்ற குணங்கள் நிரம்பிய பாண்டவர்களை ஊராரும் மற்ற அரசர்களும் பாராட்டியதுடன் துரியோதனாதிகளையும் திருதராஷ்டிரனையும் இத்தனையையும் வேடிக்கைப் பார்த்துக்கொண்டிருந்த பீஷ்மரையும் இகழ்ந்தார்கள்.
திருதராஷ்டிர புத்திரர்களும் சகுனியும் கர்ணனும் இப்போது மந்திராலோசனையில் ஈடுபட்டார்கள்.
தந்திரத்திலும் துர்புத்தியிலும் முதலில் நிற்கும் சகுனி ஆரம்பித்தான்.
“சத்ருக்களை பலவகைகளில் நாம் அடக்கலாம். ஒரு வகை சத்ருக்களின் பலத்தைக் குறைக்கும் வேலைகளில் ஈடுபடவேண்டும். சில சத்ருக்களைப் பிடித்துக் கொண்டு வந்து சித்ரவதை செய்தால் வழிக்கு வந்துவிடுவார்கள். ஆனால், பாண்டவர்களை மட்டும் ஒழித்துக்கட்டிவிட வேண்டும். அதுதான் ஒரே சரியான உபாயம்”
துரியோதனன் மாமன் சகுனிய ஆதரிப்பது போல பார்த்தான். துரியோதனன் எவ்வழியோ அவனது தம்பிமார்கள் அவ்வழியே.
“துரியோதனா! நாம் பாண்டவர்களைப் பிடிப்பதற்கு இதுதான் சரியான சமயம். இதுதான் சிறந்த இடம் கூட. அந்தத் துருபதன் பராக்கிரமும் சைனியமும் குறைச்சலாக இருக்கிறவன். சேதி தேசத்தரசனான சிசுபாலன் துருபதனின் நண்பன். அந்த யாதவர்கள் பாண்டவர்கள் ஜீவித்து இருப்பதை அறியாதவர்கள். இப்போதே பாண்டவர்களை வதம் செய்துவிட வேண்டும். அரக்கு மாளிகையின் தீநாக்குகளில் இருந்து தப்பித்த அவர்களை இம்முறை விடக்கூடாது. உடனே பாஞ்சாலம் நோக்கிப் படையெடுப்போம். காலம் கனிந்திருக்கிறது. இது என்னுடைய அபிப்ராயம்”
அப்போது ஸோமதத்தனின் புத்திரன் ஸௌமதத்தி எழுந்து அவையோர் அதிசயிக்கும்படி சில சிலாக்கியமான வார்த்தைகள் பேசினான்.
“ராஜ்யாங்கங்கள் ஏழு. அரசன், அமைச்சன், மித்ரன், பொக்கிஷம், தேசம், துர்க்கம் (அரண்), படை. இவைகளை தன் பக்கத்திலும் எதிராள் பக்கத்திலும் இடத்தையும் காலத்தையும் பரிசோதித்து யுத்தத்தில் இறங்க வேண்டும். சத்ருவானவன் காமம் மற்றும் சூதாட்டம் போன்றவற்றில் ஈடுபடும்போது அவனை எதிர்க்க வேண்டும். ஆனால் பாண்டவர்கள் நற்செய்கைகளினால் ஜனங்களுக்குப் பிரியமானவர்களாக இருக்கிறார்கள். அர்ஜுனன் தனது வடிவத்தினாலேயே அனைவரின் கண்களையும் மனதையும் கவர்கிறான். யுதிஷ்டிரர் காலமறிந்து நடக்கிறார். பாண்டவர்களுக்காக கிருஷ்ணர் இருக்கிறார். இந்திராதி தேவர்களால் கூட அவர்களை ஜெயிக்கமுடியாது. ”
அவை முழுவதும் அவன் பேச்சைக் கேட்டுக்கொண்டிருந்தது. ஏற்கனவே ஸ்வயம்வரத்தில் தோற்ற துரியோதனனின் முகம் சிவந்து கொதிப்படைந்திருந்தான். கண்களில் நெருப்பு பறந்தது. ஸௌமதத்தி தொடர்ந்தான்.
“நான் சொல்வது உங்களில் எவருக்கும் பிடிக்காமலிருக்கலாம். இருந்தாலும் உங்கள் நன்மைக்காக மேலும் பேசுகிறேன். உயரமான கோபுரங்களினாலும் அகழிகளாலும் மதில்களாலும் இந்த நகரம் காப்பாற்றப்பட்டிருக்கிறது. யந்திரங்களும் ஆயுதங்களும் மருந்துகளும் நிரம்பிய கோட்டை அது. மதில்சிகரங்களில் சதக்னிகள் (பீரங்கிகள்) தயார் நிலையில் இருக்கின்றன. கற்கட்டும் மதிலும் பிரகாரங்களும் பின்னர் மதில்களும் அவர்களுக்கு தற்காப்பாக இருக்கின்றன. ஜனங்களுக்கு மஹாத்மாவான துருபதனிடத்தில் அன்பு நிரம்பி வழிகிறது. பாண்டவர்களுடன் ஸ்நேகிதம் ஏற்படுத்திக்கொள்வோம். அதுதான் நல்லது”
கர்ணன் எழுந்திருந்தான். வெறுப்பாகச் சிரித்தான்.
“ஸௌமதத்தி! நீதி சாஸ்திரங்கள் பேசுகிறாய். இதை நான் ஒத்துக்கொள்கிறேன். சேனையுடன் நிற்பது அழகல்ல. ஓடிச்சென்று மதிலை இடியுங்கள். அகழியில் புற்களையும் கழிகளையும் போட்டு தூர்வாரி விடுங்கள்.”
ஒருபக்கம் வீரர்கள் நின்றுகொண்டிருந்தார்கள். அவர்களைப் பார்த்து ஊக்கமூட்டும் விதத்தில் கர்ணன் பேசினான்.
“எதிரிகளின் யானை குதிரை வீரர்கள் இவற்றை எவன் கொல்வானோ அவனுக்கு தனம் பரிசளிக்கப்படும்.”
அது என்ன பரிசு என்று வீரர்களின் கண்கள் கர்ணனையே குத்தியிருந்தன.
“ஒரு யானைக்கு பதினாயிரம் பொன். ஒரு குதிரைக்கும் காலாட்படை வீரனுக்கும் ஐயாயிரம் பொன். சிறுவர்கள் முதிந்தவர்கள் மேல் அம்பு போடாதீர்கள். நாம் பகைவரை வெல்வோம். காற்று நம் திசையிலேயே நடக்கிறது. பக்ஷிகள் நற்சகுனமாகவே பேசுகின்றன. வாருங்கள் தாக்குதல் செய்வோம்”
பெரும் சேனையாகப் புறப்பட்டு துருபதனின் கோட்டை வாசலை அடைந்தார்கள். ஜயத்ரதன், கர்ணன், துச்சாசனன், துரியோதனன் என்று மஹாரதர்கள் அந்த குறும்படையை தலைமை தாங்கினார்கள். துருபதனும் அவனது புத்திரர்களான த்ருஷ்டத்யும்னன் சிகண்டி சித்ரகேது ஸுகேது த்வஜகேது போன்றோர் கர்ஜனையுடன் களத்தில் குதித்தார்கள்.
துருபதன் வெண்மை விரும்பி. வெள்ளைத் தலைப்பாகை, வெள்ளைக் கொடி, வெள்ளைக் குதிரைகள், வெண் குடை என்று சூரியனுக்கு ஒப்பாக ஜொலித்தான். பாண்டவர்கள் வில்லோடும் அம்போடும் வெண்மையான ரதங்களில் ஏறி கௌரவர்களைத் தாக்கப் புகுந்தார்கள். அவர்களது வேகத்தைக் கண்டு அவர்களது சேனையில் உள்ளவர்களுக்கு உள்ளத்தில் உதறல் எடுத்தது. அர்ஜுனனின் பாணங்கள் அவர்களது சேனையை சிதறடித்தது.
பீமனின் சாரதியையும் தேர்க் குதிரைகளையும் கௌரவாதிகள் கொன்றார்கள். ரதத்திலிருந்து குதித்து இறங்கிய பீமஸேனன் கையில் கத்தியை எடுத்துக்கொண்டு எதிர்ப்படும் தலைகள் எல்லாவற்றையும் தரையில் சரித்தான். இரு சைனியங்களூம் சம பலத்தில் மோதிக்கொண்டது போல தோன்றியது. இழப்பு இரு இடத்திலும் இருந்தது.
அப்போது கர்ணன் வில்லெடுத்து அர்ஜுனன் பக்கம் வந்தான். ஒன்றிரண்டு பாணங்களினால் அர்ஜுனனை சீண்டினான். பதிலுக்கு கோபம் கொண்ட அர்ஜுனன் அவனைக் கொல்வதற்கு வஜ்ராயுதத்துக்கு ஒப்பாக மூன்று பாணங்களை எய்தான். அப்பாணங்களினால் அடிக்கப்பட்ட கர்ணன் தேரில் சாய்ந்துவிட்டான். உடனே அந்த சாரதி தேரை விரைவாக ஓட்டிக்கொண்டு சென்றுவிட்டான். கர்ணன் தோற்றதைக் கண்ட துரியோதனனுக்கு பீதி கிளம்பியது.
தூரத்தில் வீரர்களை துவம்சம் செய்துகொண்டிருந்த பீமஸேனன் துரியோதனனைப் பார்த்துவிட்டான். அவனுக்கு அரக்கு மாளிகை ஞாபகம் வந்து வெறி கிளம்பியது. அந்த போர் புரியும் இடத்தில் இருந்த ஐம்பதுதோள் உயரமுள்ளதாக நிற்கின்ற பெரிய மரம் ஒன்றை வேரோடு பிடிங்கி எடுத்துக்கொண்டு படைகள் சண்டையிடும் இடத்திற்குள் புகுந்தான். அந்த போர்வீரர்கள் நடுக்கமுற்று பயந்து தோற்று புறமுதுகிட்டு ஓடினார்கள்.
பயந்து ஓடியவர்களை பாண்டவர்கள் விரட்டவில்லை. தங்களுக்குள் சிரித்துக்கொண்டார்கள். ஜனங்கள் ஜயகோஷமிட்டு அவர்களை மீண்டும் நகரத்திற்குள் அழைத்துச் சென்றார்கள்.
பாண்டவர்களிடம் தோற்று ஹஸ்தினாபுரம் திரும்பும் கர்ணன் ஜயத்ரதன் கர்ணன் துரியோதனன் சகுனி போன்றோர் பேசிக்கொண்டது வீரர்களில் சிலருக்கு சிரிப்பை வரவழைத்தது.
“பாண்டவர்கள் நற்தவம் செய்திருக்கிறார்கள். அதனால்தான் ஜெயித்தார்கள்”
“இல்லையில்லை. அந்த திரௌபதி கணவர்களை காக்கும் பொருட்டு நோன்பு நோற்றாள்”
“ஊஹும். அந்த துருபதனும் அவர்களது புத்திரர்களும் பாண்டவர்களைக் காப்பாற்றிவிட்டார்கள்”
இங்கே பாஞ்சால நகரத்தினுள் பிரவேசித்த பாண்டவர்கள் குதிரைப் படை ஆட்கள் இருவரை அருகே அழைத்து “கிருஷ்ணனிடம் நாங்கள் நலமாக இருப்பதாகச் சொல்லுங்கள்” என்று அனுப்பினார்கள்.
“அனைத்தும் நான் அறிவேன்” என்று கண்களை மூடித் திறந்து சொன்னார் ஸ்ரீகிருஷ்ணர். பின்னர் ரதத்தைப் பூட்டி பாஞ்சால நகரத்திற்கு வந்தார். மங்கள வாத்தியங்கள் ஒலிக்க துருபதன் கோட்டை வாசலுக்கு வந்து அழைத்துப் போனான். நேரே அரண்மனை சென்று அத்தையாகிய குந்திக்கு நமஸ்காரம் செய்தார். திரௌபதிக்கு ஆடை ஆபரணங்கள் தந்தார். அவருடன் வந்திருந்த யாதவர்கள் பாஞ்சால தேசத்தில் தங்கி மகிழ்ந்திருந்தார்கள்.
**
பாண்டவர்கள் அந்த யுத்தத்தில் ஜெயித்தது, பிராமண வேஷமணிந்து திரௌபதியை ஸ்வயம்வரத்தில் வரித்தது போன்றவற்றால் துரியோதனன் உள்ளுக்குள் புழுங்கிக்கொண்டிருந்தான். மாமன் சகுனியையோ நண்பன் கர்ணனையோ பார்ப்பதற்குக்கூட அவனுக்கு வெட்கமாகயிருந்தது. அந்த சமயத்தில் துச்சாசனன் வந்து அவனிடத்தில் பேசினான்.
“குந்தி புத்திரர்களால் அரசர்களான நம் சிரசின் மேல் இடக்கால் வைக்கப்பட்டிருக்கிறது. அரக்கு மாளிகையிலிருந்து எப்படித் தப்பித்தார்கள்?”
துரியோதனன் அவனை எரித்துவிடுவது போல பார்த்தான். உடனே மாமன் சகுனியை நோக்கிப் பேசினான்.
“மாமா! புரோசனனை நம்பி நாம் கெட்டோம். அவனும் சேர்ந்து அந்தத் தீயில் வெந்து போனான். மாமா.. நம்மைவிட அவர்கள் புத்திசாலிகள். அரக்கு மாளிகையில் தப்பித்த பிறகு அவர்களுக்கு இப்போது மரணத்தில் பயமில்லை”
துச்சாசனனை அடித்து வெளுத்துவிடும் கோபம் துரியோதனனுக்குப் பிறந்தது. தம்பியைத் தாங்கிக்கொண்டு அரண்மனைக்குள் சென்றுவிட்டான்.
துரியோதனாதிகள் தோற்றுத் திரும்புகிறார்கள் என்ற செய்தி விதுரரின் காதுகளுக்கு எட்டியது. உடனே தனது கிரஹத்திலிருந்து கிளம்பி திருதராஷ்டிரனைக் காண விரைந்து வந்தார்.
“அரசனே! நல்ல காலம். கௌரவர்கள் விருத்தியடைகிறார்கள்” என்றார். அவர் அப்படி விஷமமாகச் சொன்னதை தனது மகன் துரியோதனன் திரௌபதியை ஸ்வயம்வரத்தில் மணந்து அழைத்துக்கொண்டு வருகிறான் என்று நினைத்த குருடனான திருதராஷ்டிரன் உடனே
“நல்லகாலம். நல்ல காலம். அந்த கிருஷ்ணையை அழைத்து வா. அவளுக்கு எல்லா ஆபரணங்களையும் எடுத்துப் பூட்டிக்கொள்ளக் கொடுங்கள்” என்று துரியோதனனுக்குக் கட்டளையிட்டான். உடனே விதுரர் குறுக்கே புகுந்தார்.
“கௌரவர்கள் என்ற பொதுச் சொல்லினால் உன் புத்திரர்கள் ஜெயித்துவிட்டார்கள் என்று எண்ணாதே! பாண்டவர்கள் சிறப்பிக்கப்பட்டார்கள். திரௌபதியை அடைந்து துருபதனால் பூஜிக்கப்பட்டு சந்தோஷமாக இருக்கிறார்கள்”
மனத்தினுள் ஏமாற்றமும் பொறாமையும் ஊற்றாகக் கிளம்பினாலும் அதை மறைத்து உத்திரத்தைப் பார்த்து நின்றிருந்த திருதராஷ்டிரன் “நல்லகாலம். நல்லகாலம். பாண்டவர்கள் ஜீவித்திருக்கிறார்களா? ஆஹா! உன் வாக்கு அமிர்தமாக என் செவிகளை நிறைக்கிறதே விதுரா! துருபதன் உபரிசரவஸுவின் மத்ஸ்ய குலத்தில் பெரியவன். மஹாராஜன். அவர்களும் பாண்டுபுத்திரர்களும் சேர்ந்திருப்பது எனக்கு மகிழ்ச்சியளிக்கிறது. விதுரா! பாண்டவர்கள் தீக்கிரையாகினர் என்ற செய்தி கேட்டதிலிருந்து நான் உண்ணவுமில்லை. உறங்கவுமில்லை. அவர்கள் துணையில்லாமல் சிறகொடிந்த பறவை போலக் கிடந்தேன்”
அப்படிப் பேசும் திருதராஷ்டிரனை விதுரர் மனதிற்குள் ஏளனம் பொங்கப் பார்த்தார். துரியோதனனுக்கு கோபம் உச்சியில் ஏறியது. விதுரர் திருதராஷ்டிரன் அருகில் வந்து அவனது தோளைத் தொட்டார். தொட்ட கையைத் தொட்டுப் பார்த்து விதுரன் என்றறிந்து கொண்ட திருதராஷ்டிரன் விதுரன் என்ன சொல்வானோ என்று கண நேரம் அமைதி காத்தான்.
“திருதராஷ்டிரா! இதே எண்ணத்தோடு இன்னும் நூறு வருஷ காலம் இரு!!” என்று சொல்லிவிட்டு விடுவிடுவென்று நடந்து அரண்மனையை விட்டு வெளியேறி தனது இல்லம் சென்றார்.
அவர் அந்த அறையை விட்டு அகர்ந்ததும் துரியோதனன் தனது குருட்டுத் தகப்பனை வறுத்து எடுத்துவிட்டான்.
“விதுரர் எதிரில் சொல்லவேண்டாம் என்றிருந்தேன். நம்முடைய எதிரிகளின் அபிவிருத்திக்கு பாடுபடுகிறீரா? உம்மையெல்லாம்......” என்று பற்களை நறநறவென்றுக் கடித்தான். எலும்புகள் உடைவது போல அந்த சத்தம் திருதராஷ்டிரனுக்குக் கேட்டது.
“மகனே! விதுரன் எதிரில் அப்படி நடந்துகொண்டேன். பாண்டவர்களின் மேல் அன்பினால் அல்ல. எது சரியென்று நீ சொல் துரியோதனா. ஏ கர்ணா நீயும் சொல். அதைச் செய்வோம்” என்றான் கைகளை காற்றில் துழாவியபடியே. வேண்டா வெறுப்பாக அதைப் பற்றிக்கொண்ட துரியோதனன் பேசினான்.
“தந்தையே! என் கைவசம் சில யோசனைகள் இருக்கிறது. இதையெல்லாம் கொண்டு நாம் ஜெயிக்கப்பார்ப்போம்”
“என்ன துரியோதனா? சொல்”
“சமர்த்தர்களாகவும் நம்பிக்கைக்கு உரியவர்களாகவும் இருக்கும் பிராம்மணர்கள் சிலரைக் கொண்டு குந்தி புத்திரர்களுக்கும் மாத்ரி புத்திரர்களுக்கும் மித்ரபேதம் உண்டு பண்ணுவோம்.”
“ஊஹும். சரிப்படாது”
“துருபதனுக்கு பெரும் திரவியக் குவியல் கொடுப்போம். அவன் அதில் மயங்கியபோது யுதிஷ்டிரனை வெளியில் விரட்டச் சொல்வோம்”
“பெண்ணைக் கொடுத்திருக்கிறான். செய்ய மாட்டான்”
“திரௌபதியை அவர்களிடமிருந்து பிரிப்போம். விரோதம் ஏற்படுத்துவோம்”
“கடினம்”
“பீமஸேனனைக் கொன்றுவிடுவோம். அவந்தான் அவர்களிடத்தில் பலசாலி. அவனை அழித்துவிட்டால் மற்றவர்களை மாய்த்துவிடலாம்”
“அவனை நெருங்கவே முடியாது”
”அழகிய ஸ்திரீகளைக் கொண்டு பாண்டவர்களை மயக்கச் சொல்வோம். இதில் திரௌபதி வெறுப்படைவாள்”
“திரௌபதிக்கு மேல் அழகி யார்?”
எல்லாவற்றிர்க்கும் பதில் இருந்தது. சலிப்படைந்த துரியோதனன் கர்ணனைப் பார்த்து “நீ என்ன நினைக்கிறாய்?” என்று கேட்டான்.
“துரியோதனா! உன்னுடைய இது போன்ற தந்திரங்கள் அவர்களிடம் செல்லாது. இங்கே சிறுவயதில் உன்னுடன் இருந்தபோதே அவர்களை உன்னால் எதுவும் செய்யமுடியவில்லை. இப்போது வளர்ந்துவிட்டார்கள். தொடமுடியாத உயரத்திற்கு வந்துவிட்டார்கள். “
“வேறு என்னதான் செய்ய முடியும் என்கிறாய்?” கோபத்தில் வெளியே சிதறிய வார்த்தைகளில் வெறுப்பு பீறிட்டது.
”யுத்தத்தில் வெல்லவேண்டும். பாண்டவரக்ளுக்கு ராஜ்ஜியம் பெற்றுத் தருவதற்காக யாதவ சேனையை அழைத்துக்கொண்டு கிருஷ்ணன் பாஞ்சாலம் செல்வான். அதற்கு முன்னதாக நாம் படையெடுத்துச் சென்று துருபதனையும் பாண்டவர்க்ளையும் அடிக்கவேண்டும். க்ஷத்ரியனுக்கு பராக்கிரமம்தான் சுயதர்மம். பரதசக்ரவர்த்தி பராக்கிரமத்தால் பூமி ஆண்டார். இந்திரன் பராக்கிரமத்தால் மூன்று லோகங்களையும் ஆண்டான். நாமும் பராக்கிரமத்தால் ஆள வேண்டும்.”
திருதராஷ்டிரன் இவ்விடத்தில் கர்ணனைப் புகழ்ந்தான்.
“சிறந்த வீரனான உன்னிடத்தில் இப்பேச்சு வருவது அதிசயமில்லை. ஆயினும் பீஷ்மர், துரோணர் விதுரன் நீங்கள் இருவரும் சேர்ந்து நமக்கு எது ஸௌக்கியம் என்பதை ஆலோசனை செய்யுங்கள்” என்ற திருதராஷ்டிரன் பீஷ்மர் மற்றும் பிற மந்திரிகளையும் வரவழைத்து ஆலோசனையை ஆரம்பித்தான்.
துரியோதனன் தனது தந்தையின் முட்டாள்தனமான போக்கைப் பார்த்து வாய் பேச முடியாமல் கல்லாய் அமர்ந்திருந்தான்.

வியாஸர் காட்டிய இந்திரர்கள்




சாப விமோசனத்தினால் சோகம் தோய்ந்த முகத்தோடு இருந்த நான்கு இந்திரர்களும் சங்கரரிடம் பின்வருமாறு முறையிட்டார்கள்.
“துர்லபமான சாபவிமோசனம் எங்களுக்கு மனுஷ்ய லோகத்தில் விதிக்கப்பட்டிருக்கிறது. ஆனால் நாங்கள் நேரடியாக மனுஷ்யர்களின் கர்ப்பத்திலிருந்து ஜனிக்க மாட்டோம். ஆனால் தர்மன், வாயு, இந்திரன், அசுவினி தேவர்கள் ஆகிய தேவர்களே எங்களை ஒரு தாயினிடத்தில் கர்ப்பாதானம் செய்யவேண்டும்”
புதிதாக அங்கு வந்திருந்த இந்திரன் ஈஸ்வரனிடம் “நான் என்னுடைய வீரியத்தினால் பிறப்பவனை இவர்களுக்கு ஐந்தாமவனாகக் கொடுப்பேன்” என்றான்.
அந்த ஐந்து இந்திரர்களுள் முதலாமவன் விஸ்வபுக்; இரண்டாமவன் பூததாமன்; மூன்றாமவன் பராக்கிரமசாலியான சிபிச்சக்கரவர்த்தி, நாலாமவன் சாந்தி; ஐந்தாமவன் தேஜஸ்வி. ராஜலக்ஷ்மியாகிய அந்த பெண்ணை அவர்களுக்கு பாரியையாக பூலோகத்தில் கொடுத்தார்.
பிறகு அந்த ஈஸ்வரர் அவர்களுடன் சேர்ந்து திருமாலிடம் சென்றனர். அளவற்ற அவதாரங்கள் எடுக்கும் அவரும் ஈஸ்வரர் சொன்னபடியே நியமித்தார். தேவர்களில் முதன்மையானவனான நரன் என்னும் தேவதையை இந்திரனுக்கு ஜனிக்கும்படியான ஜிஷ்ணு என்பவனாக நிச்சயித்தார் நாராயணர். அவனே அர்ஜுனன்.
அவர்கள் அனைவரும் கூடியிருக்கும் பொழுது திருமால் தலையிலிருந்து ஒரு வெண்மையான கேசமும் ஒரு கறுப்பான கேசத்தையும் எடுத்தார். அந்த இரண்டு கேசங்களும் தேவகி ரோகிணி என்னும் இரண்டு யாதவகுலத்து ஸ்த்ரீ கர்ப்பங்களில் பிரவேசித்தன. அந்த இரண்டு கேசங்களில் வெண்மையாக இருந்த ஒன்று பலராமனாகவும் கறுத்த நிறமான கேசம் கேசவனாகவும் பிறந்தது.
வியாஸரின் இந்தக் கதையை ஆடாமல் அசையாமல் உட்கார்ந்து கேட்டுக்கொண்டிருந்தான் துருபதன். திருஷ்டத்யும்னனை இதைச் சொல்வதற்கு முன்னர் வெளியே அனுப்பியிருந்தார் வியாஸர்.
“துருபதா! அந்த மலையின் குகையில் இந்திர ரூபத்துடன் அடைக்கப்பட்டவர்களே இங்கே வீரர்களான பாண்டவர்களாக இருக்கிறார்கள். திவ்யரூபத்துடன் இருக்கும் இந்த திரௌபதி அவர்களுக்காக முன்னரே நிச்சயிக்கப்பட்டவள்தான். இவளுடைய ரூபம் சந்திரனையும் சூர்யனையும் போல ஒளியுள்ளதாக இருக்கிறது. தேகமணம் வெகுதூரம் வீசுகிறது. உன் மேல் எனக்கிருக்கும் அன்பின் காரணமாக உனக்கு சிறிது நேரம் திவ்ய திருஷ்டியைத் தருகிறேன். தேவ ரூபத்துடன் கூடிய பாண்டவர்களை நீ காண்பாயாக”
வியாஸர் இப்படிச் சொன்னதும் துருபதனுக்கு திவ்ய திருஷ்டி சித்தித்தது. வியாஸருக்கு வலதுபுறம் இருந்த சுவற்றில் நேரில் காண்பது போலக் காட்சிகள் ஓடியது. துருபதனுக்கு மட்டும் பிரத்யேகமாகத் தெரிந்தது. அதில்...
தேவதேகங்களோடு க்ரீடமும் பொன்னாடைகளும் ஆபரணங்களும் தரித்த திவ்ய புருஷர்கள் ஐவர் இருந்தார்கள். வாடாத மலர் மாலைகள் தரித்திருந்தார்கள். இங்கே பிராமண ரூபத்தில் மிகவும் எளிமையாக அமர்ந்திருந்தவர்கள் பொற் கிரீடங்களை அணிந்துகொண்டு சுந்தர புருஷர்களாக காட்சியளித்தார்கள். அதில் அர்ஜுனனும் இருக்கக்கண்டு ஆனந்தமடைந்தான் துருபதன்.
இது தேவ மாயை. தனது சிற்றறிவுக்கு எட்டாது என்று உணர்ந்த துருபதன் ராஜலக்ஷ்மியாகிய அந்த திரௌபதியை பாண்டவர்களுக்கு விவாஹம் செய்துகொடுக்க முடிவுசெய்துவிட்டான்.
தனது ஆசனத்திலிருந்து எழுந்து வியாஸர் இருக்குமிடத்திற்கு ஓடினான். அவரது காலடியில் பொதேர் என்று விழுந்து அவரது பாதசரணங்களைப் பிடித்துக்கொண்டான். அவர்மேல் எழுந்த மரியாதையிலும் பக்தியிலும் அவன் கண்ணில் உருவான கங்கையைக் கொண்டு அவரது பாதத்தை கழுவினான்.
“ரிஷி ஸ்ரேஷ்டரே! இப்படி காண்பிப்பது உமக்கு புதுமையல்லவே!” என்று மீண்டும் மீண்டும் நமஸ்கரித்தான் துருபதன்.
“ராஜனே! இதில் நீ திருப்தியடைந்திருந்தாலும்... பூர்வகாலத்து ராஜரிஷிகளின் பூர்வ சரித்திரத்தையும் சொல்கிறேன் கேள்”
இப்புவியில் நிதந்து என்ற ராஜரிஷியொருவன் இருந்தான். அதிவீரன். பராக்கிரமசாலி. அவனுக்கு ஐந்து புத்திரர்கள். இனியன செய்வார்கள். இன்சொல் பேசுவார்கள். தர்மம் தெரிந்தவர்கள். சூரர்கள். வேள்விகள் புரிபவர்கள். ஸால்வேயன், சூரஸேனன், ஸ்ருதஸேனன், திந்து ஸாரன், அதிஸாரன் ஆகிய அந்த ஐந்து வீரர்களும் வில்லாளிகள்.
சிபியின் புதல்வி பௌமாஸ்வி என்பவள் இந்த ஐந்து ராஜபுத்திரர்களையும் ஸ்வயம்வரத்தில் வரித்தாள். அவளே அந்த ஐந்து வீரர்களுக்கும் பாரியையாக இருந்தாள். நிதந்து புத்திரர்களுக்கு ஐந்து புதல்வர்களை ஐந்து காலங்களில் ஈன்றாள். அப்படிப் பிறந்த பௌமாஸ்வியின் புத்திரர்களுக்கு பிறந்தவர்களின் வம்சத்திற்கு ஸால்வேயர்கள், சூரஸேனர்கள், ஸ்ருதஸேனர்கள், திந்துஸாரர்கள் மற்றும் அதிஸாரர்கள் என்று பெயர் பெற்றனர்.
இப்படி பௌஸ்மாவி அநேகருக்கு ஒரு மனைவியாக பூமியில் பெயர் பெற்றிருந்தாள். அந்த பௌஸ்மாவி போலவே உன் மகளான கிருஷ்ணையும் ஐவருக்காக விதிக்கப்பட்டிருக்கிறாள்.
பூர்வ ஜென்மத்தில் அவள் ஒரு ரிஷிகன்னிகை. அழகாகயிருந்தும் கணவன் வாய்க்காததால் கடுந்தவம் புரிந்து சங்கரரைத் தோன்றச் செய்தாள். அவரிடம் ”பதியைக் கொடும்” என்று ஐந்து முறை வரம் கேட்டாள். அவரும் “அப்படியே ஆகட்டும்:” என்று சொல்லி மறைந்தார். ஆகவே அவளுக்கு ஐந்து பதிகள் விதிக்கப்பட்டிருக்கிறார்கள். இவளேதான் நாளாயனியாகப் பிறந்து மௌத்கல்யரை அடைந்து பின்னர் சிவபெருமானைத் துதித்து அவரிடம் வரம் பெற்றவள். இது தேவ ரஹஸ்யம். ஆகையால் உனக்கு மட்டும் சொன்னேன். இதன் ரஹஸ்யத்தை நீ காக்க வேண்டும். தேவர்களுடைய ராஜலக்ஷ்மிதான் உனது யாகத்தில் பிறந்தாள். அதுவும் பாண்டவர்களுக்காகத்தான். ஐவருக்கு ஒரு மனைவியாக பிரம்மதேவரால் படைக்கப்பட்டிருக்கிறாள். இனிமேல் உன் விருப்பம் போலச் செய்”
வியாஸர் எழுந்துவிட்டார்.
“மஹரிஷியே! சங்கரரிடத்திலேயே இப்படி இவள் வரம் வாங்கியமையால் நான் என்னச் சொல்லக் கடவது? விதியினால் இது இப்படிச் செய்யப்படுகிறது. நானென்ன நடுவில் செய்வது? ஈஸ்வரரால் இது விதிக்கப்பட்டிருக்கிறது. தர்மமோ அதர்மமோ என்னுடைய தவறு ஏதுமில்லை. இவர்கள் நிச்சயித்தப்படியே பாணிக்கிரஹணம் செய்துகொள்ளட்டும்”
என்று சொல்லிவிட்டு அவரை வணங்கினான் துருபதன்.
வியாஸர் பின்னர் அவனை எச்சரிக்கும்படி பேசினார்.
“வெறும் மானிடர்களின் விவாஹத்தில் இது நியாயமாகாது. இவர்கள் தேவர்கள். அவளும் தன் முன் ஜென்ம தவத்தால் ஐவருக்கு பாரியையானாள். தெய்வத்தன்மையுள்ள திரௌபதி மற்றும் பாண்டவர்கள் போல உள்ளவர்களுக்கே இந்த விவாஹம் சாஸ்திர விஹிதமாகும்.”
இதன் பின்னர் தனியாக அமர்ந்திருந்த துருபதனும் வியாஸரும் குந்தியும் அவளது புத்திரர்களும் திருஷ்டத்யும்னனும் அமர்ந்திருந்த இடத்திற்கு வந்தார்கள்.
கிருஷ்ணத்வைபாயனர் யுதிஷ்டிரரின் கையைப் பிடித்துக்கொண்டு “ஜ்யேஷ்டனே! புஷ்ய நக்ஷத்திரமான இந்த சுபதினத்தில் க்ருஷ்ணையைப் பாணிக்கிரஹணம் செய்துகொள்” என்றார்.
பின்பு பீமன் மற்றும் அர்ஜுனாதிகளைப் பார்த்து “தருமனுக்குப் பின்னர் நீங்களும் முறையே திரௌபதியின் கரம் பற்றிக்கொள்ளுங்கள்”
வியாஸரின் இந்த வாக்கு அவர்களுக்கு அமுதானது. திரௌபதியை மங்கள ஸ்நானம் செய்வித்துப் பட்டாடைகளையும் ஆபரணங்களையும் பூட்டுவதற்காக அழைத்துச்சென்றார்கள். ராஜாவின் ஸ்நேகிதர்களும் பிராமணர்களும் மந்திரிப்பிரதானிகளும் விவாஹம் பார்க்கக் குவிந்தார்கள். ஐவரும் மங்கள ஸ்நானம் செய்துவிட்டு புத்தாடைகளையும் அங்கமெங்கும் வளையல்கள் மற்றும் கவசங்களை அணிந்துகொண்டும் ராஜகம்பீரத்தோடு அங்கே வந்தார்கள்.
தௌமியர் அக்னி வளர்த்தார். கிருஷ்ணையின் கரத்தை தர்மரிடத்தில் கொடுத்தார். வேதத்தில் கரைகண்ட தௌமியர் பாணிக்கிரஹணம் செய்துகொண்ட யுதிஷ்டிரரையும் க்ருஷ்ணையையும் அக்னியை வலம் வரச் செய்தார். அப்போது விண்ணிலிருந்து பூமாரி பொழிந்தது. மங்கள வாத்தியங்கள் முழங்கின.
”அரசே! இனி மற்ற ராஜகுமாரர்களும் இதுபோல பாணிக்கிரஹணம் செய்துகொள்ளலாமே” என்று துருபதனைப் பார்த்துக் கேட்டார் தௌமியர்.
”அப்படியே செய்யுங்கள்” என்றான் துருபதன்.
பின்னர் ஒவ்வொரு நாளும் ஒவ்வொருவராக கிருஷ்ணையைப் பாணிக்கிரஹணம் செய்துகொண்டார்கள்.
அங்கு ஒரு ஆச்சரியம் நிகழ்ந்தது. மனிதர்களுடைய விவாஹம் அல்ல அது என்பதை அது பறைசாற்றியது.
ஒவ்வொருநாள் கடந்த பின்னர் கிருஷ்ணை மீண்டும் கன்னித்தன்மை அடைந்தாள். கணவனின் மூத்த சகோதரனிடத்தில் (அர்ஜுனன் கணவன் என்று வைத்துக்கொண்டால்) கணவனும் மாமனும் என்னும் எண்ணத்தையும், கணவனின் கடைத் தம்பியினிடத்தில் கணவனும் மைத்துனனும் என்ற எண்ணத்தையும் இதற்கிடையில் இருப்பவர்களிடம் கணவன் மாமன் மைத்துனன் என்னும் மூவகை எண்ணத்தையும் வைத்திருந்தாளாம்.
விவாஹம் முடிந்ததும் துருபதன் சீர் நிறையச் செய்தான். பொற்கடிவாளங்கள் போட்டு நான்கு குதிரைகள் பூட்டிய நூறு ரதஙக்ள், பொற்குன்றுகள் போல பொன்னால் தாமரைப்பூ வடிவான பொன் அம்பாரிகள் போட்ட நூறு யானைகள், ஆடை ஆபரணங்கள், நூறு தாதிப்பெண்கள் என்று தாராளமாகச் செய்தான். விவாஹத்திற்குப் பின்னர் ரத்னங்கள் நிரம்பிய அந்த பாஞ்சால நகர மாளிகையில் சந்தோஷமாக இருந்தனர்.
குந்திக்கு கிருஷ்ணை தினமும் நமஸ்காரம் செய்வாள். துருபதன் அளித்த தாதிப்பெண்கள் பணிவிடைகள் செய்ய ராஜமாதாவாக வலம் வந்தாள் குந்தி. திரௌபதியை வாழ்த்தி பல உபதேசங்கள் செய்தாள்.
“இந்திரனுக்கு இந்திராணி போலவும், அக்னிக்கு ஸ்வாஹா தேவி போலவும், சந்திரனுக்கு ரோஹிணி போலவும், நளனுக்கு தமயந்தி போலவும், குபேரனுக்கு பத்ராதேவி போலவும், வசிஷ்டருக்கு அருந்ததி போலவும் திருமாலுக்கு ஸ்ரீதேவி போலவும் நீ உன் கணவர்களுக்கு இருப்பாயாக. தீர்க்காயுள் உள்ள புத்திரர்களைபொ பெறுவாயாக. யாகத்திற்குரிய பத்னியாகவும் பதிவிரதையாகவும் இருப்பாய். நம்மைத் தேடி வந்த விருந்தினர்கள், முனிவர்கள், இளைஞர்கள், முதியோர்கள், பெரியோர்களை முறைப்படி ஆதரி. தர்மத்தில் அன்புள்ள நீ ராஜ்ஜாபிஷேகம் பெறுவாய்.”
அன்பாய் ஆசீர்வதித்த மாமியாரைக் கண்ட திரௌபதிக்கு கண்களில் ஜலம் கட்டியது. மீண்டுமொருமறை குந்திக்கு பாத வந்தனம் செய்யும் போது கண்ணீர்ச் சொட்டுகளினால் பாதத்தை ஈரமாக்கினாள்.
”இப்போது பட்டு உடுத்தின உன்னைக் கண்டு எப்படி சந்தோஷிக்கிறேனோ அதுபோலவே உனக்குப் புத்திரர்கள் பிறந்தவுடன் மகிழ்வேன்” என்றாள் குந்தி ஆனந்தக் கண்ணீர் வடித்துக்கொண்டே.
பாண்டவர்களுக்குத் திருமணம் ஆன பின்னர் ஸ்ரேயஸ்பதியான கிருஷ்ண பகவான் நிறைய பரிசுகளை அனுப்பினார். கோடிக்கணக்கான பொன் நாணயங்கள் தங்கக் கட்டிகள் விசித்திரமான பொன் ஆபரணங்கள், நூற்றுக்கணக்கான பாத்திரஙக்ள், பற்பல தேசத்து பணிப்பெண்கள், பத்ரங்கள் எனப்படும் யானைகள், உயர்ந்த குதிரைகள் என்று யுதிஷ்டிரரை அன்பு வெள்ளத்தில் திணற்டித்தார்.
மாளிகை முழுவதும் பரிசுப் பொருட்களோடு யுதிஷ்டிரரும் பீமனும் அர்ஜுனனும் நகுல சகதேவர்களும் மகிழ்ந்திருந்தார்கள். குந்திக்கும் துருபதனுக்கும் மன நிறைவு.
[வைவாஹிக பர்வம் முடிந்தது]

நாளாயனியின் கதை


"துருபதா! தன் மகள் ஐவருக்கு மனைவியா என்கிற அவஸ்தை உனக்கு வேண்டாம்”
தாடி அசைய இதைச் சொன்ன வியாஸரை கூர்ந்து நோக்கினான் த்ருஷ்டத்யும்னன். தந்தை என்ன சொல்வார் என்று துருபதனையும் பார்த்தான். சலனமில்லாமல் அமர்ந்திருந்தான் துருபதன். க்ருஷ்ணையின் வாழ்க்கை பந்தயத்தால் தோற்கடிக்கப்பட்டுவிட்டதோ என்று உள்ளுக்குள் அவனுக்கு அச்சம் பிறந்தது. இது என்ன தர்மம்? என்று குழம்பிப்போனான்.
“ஒன்று சொல்லட்டுமா?”
என்ன என்பது போல வியாஸரைப் பார்த்தான் துருபதன்.
“யாஜ உபயாஜர்களை வைத்து நீ யாகம் செய்தபோது யாகசாலைக்குள் நுழையாத உன் மனைவி ‘என் பெண் ஐவருக்கு பாரியையாக இருக்க வேண்டும்’ என்று மனதில் வேண்டிக்கொண்டாள். தர்மம் தவறாத அந்த ரிஷிகள் உன் புத்ரிக்கு ஐவர் பதியாக ஆகும்படி செய்தார்கள். வருந்தாதே! உன் குலம் மகிழ் வேண்டும். இப்படி இவள் ஐவருக்குப் பத்னியாவதற்கு இன்னொரு காரணம் இருக்கிறது. உன் துயரத்தை மூட்டைக்கட்டி வை. சொல்கிறேன் கேள்”
நிமிர்ந்து உட்கார்ந்தான் துருபதன். தந்தைக்கு அருகில் அமர்ந்தான் த்ருஷ்டத்யும்னன். பாண்டவர்கள் வியாஸரைப் பார்த்தபடி கவனம் குவித்தார்கள்.
“இவள் பூர்வ ஜென்மத்தில் நாளாயனி. அழகு கொஞ்சும் எழில் வடிவானவளாக இருந்தாள். கிழவரும் குஷ்டரோகியுமான மௌத்கல்யர் இவளது கணவர். அவருக்கு சிறப்பாக பணிவிடைகள் செய்துவந்தாள். எலும்பும் தோலுமாக இருந்தாலும் கடும் முன்கோபி. நேற்றிருந்தது போல இன்று இருக்க மாட்டார். நாளை முழுவதும் புது மனிதன். அவரோடு குடும்பம் நடத்துவது இயலாத காரியம்.
நெருங்கவே முடியாதது போல வாயில் துர்கந்தமடிக்கும். சதையெல்லாம் மடிந்து தொங்கும். தலையெங்கும் வெண்காடாய் நரைமயிர். குஷ்டரோகியானதால் அருவருக்கத்தக ரூபத்தோடு இருந்தார். நகங்களும் தோல்களும் உதிர்ந்துவிடும். அவர் உண்ட மிச்சத்தை உண்டு ஜீவனம் செய்துகொண்டிருந்தாள் நாளாயனி. அவளது சகிப்புத்தன்மைக்கும் புருஷன் மேல் கொண்ட பக்திக்கும் ஒரு உதாரணம் சொல்லட்டுமா?”
நிறுத்தினார் வியாஸர். என்ன சொல்வாரோ என்று குந்தி அவரையே உற்று நோக்கினாள். அவர்கள் அந்தரங்கமாக அமர்ந்திருந்த சபை அமைதியானது. நிசப்தம். ஆளுயர அலங்கார விளக்குகளின் தீபச்சுடரொளியை விஞ்சியது வியாஸரின் கண்ணொளி.
“ஒரு நாள் மௌத்கல்யர் போஜனம் செய்துகொண்டிருந்தார். அருகில் அமர்ந்து பரிமாறிக்கொண்டிருந்தாள் நாளாயனி. குஷ்டரோகியான அவரது கட்டைவிரல் அவர் சாப்பிட்டுக்கொண்டிருந்த இலையில் உதிர்ந்துவிட்டது. போதும் என்று அவர் எழுந்துவிட்டார். அந்த உதிர்ந்த கட்டைவிரலை இலையிலிருந்து எடுத்துப் போட்டுவிட்டு அருவருப்பின்றி அந்த எச்சில் அன்னத்தை புசித்தாள் அந்த கற்புக்கரசி.
இதற்கு மேல் அவளை சோதித்துப் பார்க்க விரும்பாத மௌத்கல்யர் அவளிடம் ‘உனக்கு என்ன வரம் வேண்டும். கேள்’ என்றார். குனிந்த தலை நிமிராமல் அவர் பக்கத்தில் அழகுச்சிலையாக அவள் அமர்ந்திருந்தாள்.
‘பெண்ணே! நான் கிழவனல்ல. கோபிஷ்டனல்ல. கொடியவனல்ல. பொறாமைக்காரனல்ல. வாயில் துர்நாற்றமில்லாதவன். உன்னை நான் எவ்வாறு இன்புறமுறச் செய்யவேண்டும். சொல். அப்படியே செய்கிறேன்”
மௌத்கல்யர் இவ்வளவு பேசிய பிறகு வாய் திறந்தாள் நாளாயனி.
“உலகங்களிலெல்லாம் புகழ் பெற்ற பகவானாகிய நீர் உமது சரீரத்தை ஐந்து பாகங்களாக்கியும் மற்றுமொரு ரூபத்தையும் எடுத்துக்கொண்டு என்னிடம் ரமிக்க வேண்டும்”
மௌத்கல்யர் உடனே “அப்படியே ஆகட்டும்” என்று வரமருளி ஐந்து விதமான சரீரங்களை எடுத்துக்கொண்டு அவளுடன் ரமித்துக்கொண்டிருந்தார். பின்னர் ஸ்வர்க்கம் ஏகினார். அங்கே தேவலோகத்தில் அமிர்தபானம் செய்துகொண்டு தேவலோக ரிஷிகளுடன் சஞ்சரித்துக்கொண்டிருந்தார்.
இந்திரனுடைய கிருஹத்தில் மஹேந்திரசேனை என்ற அந்த நாளாயனியினால் பூஜிக்கப்பெற்று ரமித்துக்கிடந்தார். அங்கிருந்து சூர்யனுடைய திவ்ய ரதத்தில் ஏறி மஹாமேருவை அடைந்து அங்கே வசிக்க எண்ணினார். அப்போது அவர் ஆகாய கங்கையில் ஸ்நானம் செய்து சந்திரனுடைய கிரணங்கள் படும்படியாக காற்றைப் போல நாளாயினியுடன் வாசம் செய்தார். பின்னர் அவர் மலை உருவம் எடுத்தார். அப்போது அந்த நாளாயினியை மலைநடுவில் மஹாநதியாக்கினார். அவர் மலர்கள் நிரம்பிய மரமாக ஆனபோது நாளாயினை அந்த மரத்தைச் சுற்றிய கொடியானாள். அவர் எந்த உருவம் எடுத்தாலும் அவளும் அதற்கு ஒத்த உருவத்தை எடுத்தாள்.
இருவருடைய அன்பும் பன்மடங்கு விருத்தியாயிற்று. அவள் தமது தாயாராகிய தமயந்தியைக் காட்டிலும் மேன்மையடைந்தாள். அந்த நாளாயனிதான் எதோ ஒரு விதிவசத்தால் கிருஷ்ணையாக உனது யாகத்தீயில் பிறந்திருக்கிறாள். அந்த மௌத்கல்ய முனிவரிடத்தில் பற்று வைத்த அவளது மனம் லேசில் மாறுவதில்லை”
நீண்ட நேரம் இந்தக் கதை கேட்டபடி அனைவரும் அமர்ந்திருந்தனர். சாளரங்கள் வழியாக வெளியே மழை பொழிவது கேட்டது. வியாஸர் கதையை நிறுத்தியதும் தூறலின் சப்தமும் நீரின் சலசலப்பும் தெளிவாகக் கேட்டது.
துருபதன் அந்த அறையை விட்டு இயற்கையின் அழைப்புக்காக வெளியே சென்றுவிட்டு சிறிது நேரத்தில் திரும்பினான்.
“பிராமணோத்தமரே! நாளாயனி என் யாகத்தில் வந்து ஏன் கிருஷ்ணையாகப் பிறக்க வேண்டும்?”
”துருபதா! முன் ஜென்மத்தில் இந்திரசேனை என்னும் நாளாயனி மௌத்கள்யரின் பாரியை. ஒரு கவலையில் இல்லாமல் சுகமாக இருந்தாள். அவருடன் அநேக வருஷகாலங்கள் கூடிக் கழித்தது ஒரு நொடி போல ஓடிவிட்டது. திடீரென்று ஒரு நாள் மௌக்லக்யர் காம ஸுகங்களை விட்டொழித்து வரைக்கியம் அடைந்துவிட்டார். கண்களை மூடி தியானத்தில் அமர்ந்துவிட்டார். நாளாயினி யார் என்பதையே மறக்குமளவிற்கு தியானம். காஷ்ட மௌனம்.
அவரது காலடியில் விழுந்தாள் நாளாயினி.
“தபோதனரே! இதுவரையில் விரும்பினவற்றையெல்லாம் அனுபவித்தேன். இருந்தாலும் போகங்களில் திருப்தி ஏற்படவில்லை” என்றாள்.
“நீ என் தவத்திற்கு இடையூறாக இருக்கிறாய். நீ மனுஷ்ய லோகத்தில் துருபதனுக்கு பாஞ்சால ராஜ புத்ரியாக ஜனிப்பாய். அந்த ஜன்மத்தில் புகழபெற்ற ஐந்து கணவர்கள் வாய்ப்பார்கள். அவர்களுடன் நெடுங்காலம் இன்பம் அடைவாய்” என்றார் மௌத்கல்யர்.
நாளாயனி இப்படி சபிக்கப்பட்டதால் மிகவும் துயரமடைந்து வனாந்திரங்களில் சுற்றித் திரிந்தாள். காமஸுகங்களை அவளை அலைக்கழித்தது. இந்திரியங்களை அடக்கி தேவதேவரான மஹேஸ்வரரை நோக்கி தவமியற்றினாள். உணவை மறந்து காற்றைப் புசித்தாள். பசுபதி அவள்முன் தோன்றினார். அப்போது அவள் “பதியைக் கொடும்.. பதியைக் கொடும்.... பதியைக் கொடும்.. பதியைக் கொடும்.. பதியைக் கொடும்” என்று ஐந்து முறை கேட்டாள்.
“புண்ணியவதியே உனக்கு அடுத்த ஜென்மம் வரப்போகிறது. அப்போது அழகும் திடமும் உள்ள ஐந்து கணவர்களை நீ அடைவாய்” என்று வரமருளினார். பதைபதைத்த நாளாயினி “ஸ்வாமி! எதற்கு ஐந்து கணவர்கள்?” என்று கேட்டாள். நீ பதியைக் கொடும் என்று ஐந்து முறை கேட்டாய். அதனால் உனக்கு ஐந்து கணவர்கள். அவர்கள் அனைவரும் உனக்கு இன்ப சுகத்தைத் தருபவர்களாக இருப்பார்கள்” என்றார் சங்கரர்.
“ஐயனே! ஒருத்தி ஒரு பர்த்தாவுக்கே துணையாக இருந்து தர்மானுஷ்டானம் செய்ய வேண்டும். இதுதான் முதலிலேயே ரிஷிகளால் விதிக்கப்பட்ட ஸ்த்ரீதர்மம். பெண்களுக்கு ஒரு கணவன் இருப்பதுதான் முறை. சந்ததி இல்லாத காலங்களில் கணவனீன் கட்டளையின் பேரில் பெண்ணுக்கு இரண்டாவது புருஷன் சொல்லப்பட்டிருக்கிறான். மூன்றாவது கணவனை அவள் வரிக்கக்கூடாது. ஆனாலும் அதற்கும் பிராயச்சித்தம் சொல்லப்பட்டிருக்கிறது. நான்காமவனைச் சேர்ந்தால் ஸ்த்ரீ பதிதையாகிறாள். ஐந்தாவது ஆடவனைச் சேர்ந்தால் அவள் விபசாரியாவாள். இதுவே தர்ம மார்க்கம். ஆகையால் உலகத்தில் அனுஷ்டிக்கப்படாத அந்த அதர்மத்திலிருந்து நான் எப்படி விடுபடுவேன்?”
மஹேஸ்வரர் சிரித்தார்.
“முன்பு பெண்கள் கட்டில்லாமல் இருந்தார்கள். நீ பதியைக் கொடும் என்று ஐந்துமுறை கேட்டதால் உனக்கு ஐவரைக் கொடுத்தேன். இது அதர்மம் ஆகாது.
“அப்படியென்றால் நான் அவர்களுடன் தனித்தனியே ரமிக்கவே விரும்புகிறேன். அவர்கள் ஒவ்வொருவருடனும் சேர்க்கை நேரும்போதெல்லாம் நான் இளமைப்பருவமே அடையவேண்டும். போகசுகம் மட்டும் எனக்குத் தீரவேயில்லை”
புண்ணியவதியே! காமஸுகமும் தவப்பயனும் சேர்ந்து வராது. ஆனால் நீ மட்டும் இவையிரண்டையும் சேர்ந்து பெரும் பயனை அடைவாய். இப்போது ஒன்று செய். இங்கிருந்து நீ செல். கங்கா ஜலத்தில் நீ இருக்கும்;போது எவனைப் பார்க்கிறாயோ அவனை என்னிடத்திற்கு அழைத்துவா” என்றார் ஈஸ்வரன்.
மூன்று முறை அவரை பிரதக்ஷிணம் செய்தாள் நாளாயனி. காற்றோடு கலந்து மறைந்தார் சங்கரர். கங்கையை நோக்கிச் செல்லலானாள் நாளாயனி.
**
நைமிசாரண்யத்தில் தேவர்கள் ஒரு சத்ரயாகம் செய்தார்கள். அதில் யமன் சாமித்ரம் என்னும் பசுவைக் (யாகத்தில் பலியாகக் கொடுப்பது எதுவும் பசு எனப்படும். சாமித்ரம் என்பது என்ன என்று தேடிக்கொண்டிருக்கிறேன். பசுமாடு அல்ல) கொல்லும் வேலையைச் செய்தான். யமன் அந்த யாகத்தில் முனைப்போடு ஈடுபட்டதால் மனிதர்களைக் கொல்லும் வேலையை விட்டுவிட்டான். அதனால் ஜனங்கள் அதிகமாக விருத்தியானார்கள். யாரும் மரணமடையவில்லை. தேவாதிதேவர்கள் குழுவாகக் கிளம்பி பிரம்மதேவரிடம் முறையிடுவதற்கு சென்றார்கள்.
“தேவாதிதேவா! பிரஜா விருத்தி அதிகமாகயிருக்கிறது. எங்களுக்குப் பயம் வந்துவிட்டது. நீங்கள்தான் சுகம் தரவேண்டும்” என்று கைகூப்பித் தொழுதார்கள்.
“மனிதர்களின் இடம் வேறு. உங்கள் தேவலோகத்தில் அவர்களைப் பற்றிய பயம் எதற்கு?
“இறப்பவர்கள் இறக்காதவர்களாகி எங்களைப் போன்று ஆகிவிட்டார்கள். அவர்களுக்கும் எங்களுக்கும் ஒன்றும் வித்யாசமில்லை.”
பிரம்மதேவர் “யமன் சத்ரயாகத்தில் இருக்கிறான். அவனாலேதான் இவர்கள் இறப்பதில்லை. யாகம் முடிந்ததும் திரும்பவும் தொழிலை ஆரம்பித்துவிடுவான்.” என்று சொன்னார்.
பிரம்மதேவரின் சொல்லைக்கேட்டு யமன் சத்ரயாகம் செய்யும் இடத்திற்கு சென்றார்கள். அவர்கள் எல்லோரும் சேர்ந்து உட்கார்ந்திருக்கும்போது பக்கத்தில் ஓடிய கங்கையில் ஒரு அதிசய பொற்றாமரைப் பூவைக் கண்டார்கள். தேவர்களில் சூரனான இந்திரன் கிளம்பி அந்த பூ மிதந்து வந்த திசையை நோக்கிப் போனான்.
கங்கை பிரவாகமாக பொங்கிக்கொண்டிருந்த இடத்தில் ஒரு பெண்ணைக் கண்டான். அந்தப் பெண் தனது இடை வரை கங்கையில் இறங்கி நின்று கொண்டு அழுதுகொண்டிருந்தாள். அவளது கண்ணீர்த் துளி கங்கையில் விழுந்தவுடன் பொற்றாமரையாக மாறியது. இந்திரன் ஆச்சரியமடைந்தான். அவளை நெருங்கினான்.
“பெண்ணே! நீ யார்? எதற்காக அழுகிறாய்?” என்று கேட்டான்.
“அரசனே! நான் முன்னே செல்கிறேன். நீ என் பின்னே வா. நான் எதற்காக அழுகிறேன் என்று உனக்குப் புரியும்” என்றாள் அந்தப் பெண்.
அவள் முன்னே செல்ல இந்திரன் பின் தொடர்ந்தான். அவர்கள் பெரிய மலையை அடைந்தார்கள். அங்கே சித்தாசனம் போட்டு வீற்றிருந்த ஒரு சிறுவன், சிறுமி ஒருத்தியுடன் சொக்கட்டான் ஆடிக்கொண்டிருந்தான். இந்திரனான தன்னைக் கண்டு கொள்ளாமல் சொக்கட்டான் ஆடும் சிறுவன் மேல் இந்திரனுக்கு கோபம் பொத்துக்கொண்டு வந்தது.
“ஏய்! யார் நீ? இந்த உலகம் என் வசத்தில் உள்ளது. நான் இவ்வுலகிற்கு ஈஸ்வரன்.” என்று அந்தச் சிறுவனை விரட்டினான். அந்தச் சிறுவனாக அமர்ந்து ஆடிக்கொண்டிருந்த சங்கரர் நகைத்தார். அவனை ஏறிட்டுப் பார்த்தார். அவ்வளவுதான். அவன் அசைவில்லாமல் சிலைபோல நின்றுவிட்டான். அவனை அங்கேயே அந்தக் கோலத்தில் நிற்கவைத்து இன்னும் சிறிது நேரம் சொக்கட்டான் ஆடினார். பக்கத்தில் அழுதுகொண்டு நின்றாள் அந்த நாளாயினி.
“நீ அவனைத் தொட்டு இங்கே கொண்டு வா” என்றார் சங்கரர்.
நாளாயினி கற்சிலையாக சமைந்து நின்ற இந்திரனைத் தொட்டாள். பொலபொலவென்று கற்கள் உதிர்ந்து அவன் சங்கரர் எதிரில் தரையில் சாஷ்டாங்கமாக விழுந்தான்.
“இந்திரா! இனிமேல் இப்படி இறுமாப்பாக எதையும் செய்யாதே! இந்த பர்வதத்தில் ஒரு குகை உள்ளது. அதனுள் நுழை. உன்னைப் போன்றவர்கள் சூரியனைப் போல பிரகாசித்துக்கொண்டு இருக்கிறார்கள்.”
அந்தப் பர்வதத்தின் குகை இருக்குமிடத்திற்கு ஓடினான் இந்திரன். வெளியே ஒளி வீசிக்கொண்டிருந்த அந்த குகையினுள் நுழைந்ததும் அவனைப்போல ஒளியுள்ள நால்வரைக் கண்டான். ஸ்தம்பித்துப்போய் நின்றான். நாமும் இவர்களைப் போல இந்தக் குகையினுள் கைதிபோல ஆகிவிடுவோமோ என்று எண்ணினான்.
ஈஸ்வரர் பின்னால் வந்து நின்றுகொண்டு “இந்திரா! சிறுபிள்ளைத்தனமாக என்னை அவமதித்தாய். இங்கு இருப்பவர்களும் உன்னைப் போலவே நடந்துகொண்டவர்கள்தான். போ.. இந்த குகையில் நுழை...” என்று கட்டளையாகச் சொன்னார். அரச இலை புயல் காற்றில் அடித்துக்கொண்டு நடுநடுங்குவதைப் போல இந்திரன் நடுங்கினான்.
ஈஸ்வரரை நோக்கிக் கை கூப்பினான். மண்டியிட்டான்.
“நீரே உலகங்களுக்கெல்லாம் ஈஸ்வரன். முதன்மையானவர்” என்று தொழுதான்.
மஹேஸ்வரர் நகைத்தார்.
“இந்த உலகத்தில் உங்களுக்கு அனுக்ரஹம் கிடையாது. இங்கிருக்கும் இவர்களும் உன்னைப் போலவே நடந்தவர்கள். நீயும் இந்த குகையினுள் செல். நீங்கள் அனைவரும் மானிட ஜென்மம் அடைந்து இவளை பாரியையாக அடையுங்கள். மனிதஜென்மத்தில் பகைவர்களை மடியச்செய்து பூபாரம் காப்பீர். யுத்தங்கள் பல செய்து புண்ணியகாரியங்களில் ஈடுபட்டு பின்னர் சிறந்த இந்த இந்திரலோகத்திற்கு திரும்புவீர்கள்”
புதியதாய் அந்த குகைக்குள் நுழைந்த இந்திரனை அங்கேயே இருந்த இதர நான்கு இந்திரர்கள் அவனை அனுகூலமாகப் பார்த்தார்கள்.
அவர்கள் அப்போது....