Showing posts with label பீஷ்மர். Show all posts
Showing posts with label பீஷ்மர். Show all posts

Monday, March 12, 2018

பீஷ்மாதிகளின் அறவுரையும் பாண்டவர்களின் அஸ்தினாபுர பிரவேசமும்


பீஷ்மர் ராஜசிம்மமாக கம்பீரத்துடன் அமர்ந்திருந்தார். திருதராஷ்டிரனின் அழைப்பினால் துரோணர் மற்றும் விதுரர் அங்கே வந்திருந்தார்கள். கர்ணனும் துரியோதனனும் அருகருகே அமர்ந்து காதோடு காதாக ஏதோ பேசிக்கொண்டிருந்தார்கள். கண் தெரியாத திருதராஷ்டிரன் பீஷ்மரிடம் முதலில் கேட்டான்.

“பிதாமகரே! கர்ணன் பாஞ்சாலத்திற்கு படையெடுத்து பாண்டவர்களை அழித்துவிட வேண்டும் என்கிறான். துரியோதனனும் அதை செய்யவே துடிக்கிறான். சகுனிக்கும் இஷ்டம்தான். உம்முடைய ஆலோசனையை வழங்க வேண்டுகிறேன்”
இப்படிக் கேட்ட திருதராஷ்டிரனை கூர்ந்து சில கணங்கள் பார்த்தார் பீஷ்மர். கர்ணனும் துரியோதனனும் பீஷ்மரைப் பார்த்தார்கள். சகுனி கண்களால் விஷத்தை உமிழ்ந்து அவை நடவடிக்கைகளை நோக்கினான்.
”பாண்டு புத்திரர்களோடு துரியோதனன் விரோதம் வளர்ப்பதில் எனக்கு இஷ்டமில்லை.”
கர்ணனும் துரியோதனனும் ஒருவரையொருவர் பார்த்துக்கொண்டு சகுனியைப் பார்த்தார்கள். பீஷ்மர் தொடர்ந்தார்.
“எனக்கு திருதராஷ்டிரன் எப்படியோ அப்படியே பாண்டு. குந்தி புத்திரர்களுக்கும் காந்தாரி புத்திரர்களுக்கும் எனக்குப் பேதமில்லை. அவர்களுக்கு ராஜ்ஜியத்தில் பாதியை தருவதுதான் நியாயம். அவர்களோடு கலகம் புரிவது அநியாயம். அவர்களோடு சமாதானம் செய்துகொண்டு ராஜ்ஜியத்தைப் பகிர வேண்டும். துரியோதனா! உன்னைப் போலவே இது அவர்களுக்கும் பாட்டன், தகப்பன் வழியாக வந்த ராஜ்ஜியம்தான். நீ ராஜ்ஜியத்தை முறைதவறி அடைந்திருக்கிறாய்”
பீஷ்மரின் கடைசி வரியில் உருவி விட்டதுபோல நிமிர்ந்து உட்கார்ந்தான் திருதராஷ்டிரன். விதுரரும் துரோணரும் பீஷ்மரின் பிரகாசமான வார்த்தைகளில் கட்டுண்டு கிடந்தார்கள். சகுனியும் கர்ணனும் துரியோதனனும் இருக்கையில் நெளிந்தார்கள்.
”புருஷ ஸ்ரேஷ்டனே! ஜனங்களின் விருப்பம் இதுதான். இது போல நடக்காவிட்டால் உனக்கு அபகீர்த்தி உண்டாகும். புகழ்தான் சிறந்த வன்மை. புகழ் அழிந்தவன் அனைத்தையும் இழந்தவனே! நல்லவேளையாக குந்தியும் அவளது புத்திரர்களும் உயிர் பிழைத்தார்கள். பாபியான புரோசனன் போய்ச் சேர்ந்தான். இவையெல்லாம் உன் நன்மைக்காகவே நடந்திருக்கிறது என்று எடுத்துக்கொள்வோம். உன் சதித்திட்டத்தில் பாண்டவர்கள் தப்பிப் பிழைத்திருப்பது உன்னுடைய தவறுதலுக்குப் பரிகாரமாகிவிட்டது. இறுதியாகச் சொல்கிறேன். நீ தர்மத்தையும் என் விருப்பத்தையும் உன் க்ஷேமத்தையும் கடைபிடிப்பதாக இருந்தால் அவர்களுக்குப் பாதி ராஜ்ஜியம் கொடுத்துவிடு”
பீஷ்மர் நிறைவு செய்துவிட்டார். மீசையை ஒரு முறை தடவிக் கொடுத்து தாடியைக் கோதிக்கொண்டார்.
“திருதராஷ்டிர மஹாராஜனே! ராஜ்ய ஆலோசனைக்காக ஆப்தர்களாக எங்களை அழைத்திருக்கிறீர்கள். மஹாத்மாவான பீஷ்மரின் அபிப்ராயம்தான் என்னுடைய அபிப்பிராயமும். பாண்டவர்களுக்கு ராஜ்யபாகம் அளிக்கவேண்டும். அதுதான் தர்மம். உடனே நீ ஒரு தூதனை பாஞ்சால தேசம் அனுப்பு. அவனிடம் மிகுதியான பொருட்களைக் கொடுத்தனுப்பவேண்டும். அவன் துருபதனிடம் சென்று நீங்கள் அழைத்துவரச் சொன்னதாக பாண்டவர்களை இங்கே இங்கே அனுப்பவேண்டும். குந்திக்கும் திரௌபதிக்கும் அணிகலன்களைக் கொடுத்தனுப்பவேண்டும். அவர்களிடத்தும் உன் பிள்ளைகள் இடத்தும் இப்படிதான் நீ நடந்துகொள்ள வெண்டும். பீஷ்மர் கருத்தே என் கருத்தும்.”
துரோணரும் பீஷ்மரின் கருத்தையே சொன்னவுடன் கர்ணன் வெகுண்டெழுந்தான். அவையில் பெரியோர்கள் இருந்ததையும் மதிக்காமல் வெறுப்பைக் கக்க ஆரம்பித்தான்.
“ராஜாவே! உன்னுடைய பொருளையும் பெருமையையும் பெற்றுக்கொண்டு எல்லாக் காரியங்களிலும் உமக்கு அந்தரங்கமாக இருப்பவர்கள் கூட உம்முடைய நன்மையைக் கருதாமல் இருக்கிறார்களே! இதென்ன விந்தை!!”
பெருங்குரலுடன் அவை எதிரொலிக்கப் பேசினான் கர்ணன்.
“மனதில் கெடுதியை நிறைத்துக்கொண்டு வெளியில் ஆப்தர்கள் போல நடிக்கிறார்கள். காரியங்களில் கஷ்டம் வரும்போது நன்மை தீமைக்கு அணுக்கமானவர்கள் உபயோகமில்லை என்பதை நிரூபிக்கிறார்கள். எவனுக்குமே இன்பமும் துன்பமும் விதிப்படியே நடக்கும். புத்திசாலியோ நிர்மூடனோ பெரியவனோ சிறியவனோ சகாயமுள்ளவனோ இல்லாதவனோ எல்லாமே விதிப்படிதான் நடக்கிறது”
துரோணருக்கு கோபம் வந்தது. சபையின் மாண்பு கெடக்கூடாது என்பதற்காக அமைதியாக அமர்ந்திருந்தார். பீஷ்மருக்கு கர்ணனின் இப்பேச்சு வெறுப்பேற்றியது. துரியோதனனும் சகுனியும் தங்கள் பக்கம் கர்ணன் பேசுவதற்காக மகிழ்ச்சியடைந்தார்கள்.
“ராஜகிருகம் என்ற தேசத்துக் கதை உங்களுக்குத் தெரிந்திருக்கலாம். அம்புவீசன் என்பவன் அரசாட்சி செய்துகொண்டிருந்தான். அவன் எல்லாக் காரியங்களையும் மந்திரியிடம் ஒப்படைத்துவிட்டு வெறுமனே இருந்தான். மஹாகர்ணி என்ற அந்த மந்திரி தனக்கு பலம் கிடைத்துவிட்டதாக அந்த ராஜாவை அவமதித்தான். அந்த மூடன் ராஜபோகத்திற்கு உரிய ஸ்திரீகளையும், ரத்னங்களையும் தனங்களையும் ஐஸ்வர்யங்களையும் அதிகாரத்தையும் முழுமையாக எடுத்துக்கொண்டான். அது போதாதென்று அந்த ராஜ்ஜியத்தையே அபகரிக்க எண்ணம் கொண்டான். ஆனால் அவனால் எவ்வளவு முயற்சி செய்தும் அந்த ராஜ்ஜியத்தை அடையமுடியவில்லை.ஏன் தெரியுமா? அந்த ராஜாவுக்கு ராஜ்யாதிகாரம் விதிக்கப்பட்டிருக்கிறது. அதை யாராலும் தட்டிப் பறிக்க முடியாது. இவ்வாறே மந்திரிகளுடைய யோக்கிதைகளையும் அயோக்கியத்தனத்தையும் நீங்கள் அறிந்துகொள்ள வேண்டும்”
துரோணரின் இரத்தம் கொதித்தது. மந்திரிகளின் யோக்கியதை என்பது பற்றி கர்ணன் சொன்ன கதை நேரடியாக அவரையும், விதுரரையும், பீஷ்மரையும் குறிப்பதாகப்பட்டது. கோபாவேசமாக தனது ஆசனத்தில் இருந்து எழுந்தார்.
“துஷ்டா! கர்ணா!!” இடியிடிப்பது போல குரல் எழுப்பினார். சபை நிசப்தமானது.
”பாண்டவர்களுக்காக நாங்கள் பேசினோம் என்பதால் எங்கள் மேல் குற்றம் சுமத்தப் பார்க்கிறாயா? குல நன்மைக்காக நாங்கள் பேசுகிறோம். எது நன்மை தீமையென்று திருதராஷ்டிரன் முடிவு செய்யட்டும். நாங்கள் சொல்லும் சிறந்த நன்மைக்கு மாறாக செயல்பட்டால் கௌரவர்கள் வெகுசீக்கிரத்தில் அழிந்து போவார்கள்”
பொத்தென்று அமர்ந்துவிட்டார்.
இப்போது விதுரரின் முறை. மென்மையான குரலில் நிதானமாகப் பேச ஆரம்பித்தார் விதுரர்.
“பீஷ்மரும் துரோணரும் உமக்கு நன்மை தரும் சொல்லைச் சொன்னார்கள். அதில் உமக்கு விருப்பம் இல்லையென்றாலும் அதுதான் சத்தியம். பீஷ்மதுரோணர்களான இந்த இரண்டு புருஷ சிம்மங்களைக் காட்டிலும் அறிவில் சிறந்தவர்கள் உன்னிடத்தில் யார் உளர்? உமக்கு எந்த சமயத்திலும் தீங்கு சொல்லாதவர்கள். இருவரும் தோல்வியடையாத பராக்கிரமம் உள்ளவர்கள். உனது நன்மைக்காக சொல்கிறார்கள். துரியோதனன் முதலியோர் எப்படி உன் புத்திரர்களோ அதுபோலவே பாண்டவர்களும்.”
துரியோதனன் எரிச்சலடைந்தான். கர்ணன் வெறுப்புற்று சபைக்கு வெளியே பார்க்க ஆரம்பித்தான். சகுனிக்கு ஏமாற்றம்.
“பீஷ்மதுரோணர்கள் சொன்னது போல பாண்டவர்களை வெற்றி கொள்வது எளிதல்ல. தனஞ்சயன் ஸவ்யஸாசி*. அவனை வெல்வதற்கு இந்திரனாலும் முடியாது. பீமஸேனன் பதினாயிரம் யானை பலம் கொண்டவன். ஜெயிக்கும் கரங்களை உடையவன். தேவர்களே இறங்கி வந்தாலும் அவனை தோற்கடிக்கமுடியாது. அவர்கள் பக்ஷத்தில் இருப்பவர்களைப் பார்த்தால் எத்தனை சைனியம் வந்தாலும் வெற்றிகாண முடியாது.”
திருதராஷ்டிரன் விதுரருக்குக் காதுகளைக் கொடுத்துவிட்டு ஆடாமல் அசையாமல் கேட்டுக்கொண்டிருந்தான்.
“புரோசனனால் உனது கீர்த்திக்கு களங்கம் ஏற்பட்டது. பாண்டவர்களுக்கு பாதி ராஜ்ஜியம் தருவதால் அதை நீ துடைத்தெறிந்துவிடலாம். யாதவர்கள், துருபதன், அவனது புத்திரர்கள், சேதி தேசத்தரன் சிசுபாலன் என்று பாண்டுவின் புத்திரர்களுக்கு பெரும் ஆதரவு இருக்கிறது. கடைசியாக ஒன்று சொல்லட்டுமா?”
அவை முழுவதும் விதுரரைக் கவனித்தது. திருதராஷ்டிரன் விதுரர் குரல் நின்ற திக்கைப் பார்த்தான். பீஷ்மரும் துரோணரும் கவனம் குவித்தார்கள். துரியோதனன் தரப்பு எல்ல சொல்லப்போகிறார் என்ற எதிர்பார்ப்பில் விதுரர் மேல் கண்களை நிலை குத்தியது.
“கிருஷ்ணன் எங்கேயோ அங்கேயே ஜயம். கிருஷ்ணன் பாண்டவர்கள் பக்கம்”
பீஷ்மரும் துரோணரும் அதை ஆமோதிப்பது போல சிரித்தார்கள். திருதராஷ்டிரன் செய்வதறியாது அப்படியே அமர்ந்திருந்தான்.
“துரியோதனனும் ஸுபலபுத்திரனான சகுனியும் கெட்ட எண்ணத்துடன் இருக்கிறார்கள். புத்தி கெட்டவர்கள். சிறார்கள். அவர்கள் சொல்வதைக் கேட்காதே. துரியோதனன் ஒருவனால் இந்தக் குலமே அழியப்போகிறது என்பதை நான் உனக்கு முன்னமே கூறியிருக்கிறேன்.”
விதுரர் அமர்ந்துவிட்டார்.
தொண்டையைச் செருமிக்கொண்டு திருதராஷ்டிரன் பேச ஆரம்பித்தான்.
”விதுரா! நீயும் பிதாமகரும் துரோணாசாரியாரும் எனக்கு நன்மையையே சொல்கிறீர்கள். துரியோதனன் எப்படியோ அப்படியே எனக்கு பாண்டவர்களும். அவர்களும் எனது புத்திரர்கள்தான். நீ பாஞ்சாலம் செல் விதுரா. நீ சென்று குந்தியையும் திரௌபதியையும் பாண்டவர்களையும் அழைத்து வா. இரத்தினங்களையும் தனங்களையும் கொண்டு செல். அவர்களுக்குக் கொடுத்து அழைத்துவா. நம்மிடத்தில் ராஜதர்மம் நன்றாகத் தெரிந்தவன் நீ. ”
சில ரதங்களில் ரத்னங்களும் தனங்களும் ஏற்றிக்கொண்டு சில வீரர்கள் புடைசூழ வேகமாகச் செல்லக்கூடிய ஒரு ரதத்தில் ஏறினார் விதுரர். இரவுபகல் தொடர்ந்து பயணித்து பாஞ்சாலம் வந்தடைந்தார். துருபதனுக்கு விதுரர் வந்த செய்தி தெரிவிக்கப்பட்டது.
“யாதவ அரசர் கிருஷ்ணர் வந்திருக்கிறார். துருபதராஜாவின் அரண்மனையில் தங்களுக்காக பாண்டவர்களுடன் காத்திருக்கிறார்”
விருந்தினர் மாளிகையில் தங்கியிருந்த விதுரருக்குத் தெரிவிக்கப்பட்டது. ரதம் ரதமாக கொண்டு வந்திருந்த ரத்தினங்களும் பவளங்களும் பொற்காசுகளோடும் துருபதன் அரண்மனைக்குச் சென்றார். ஆசனத்திலிருந்து எழுந்து வந்து எதிர்கொண்டு அழைத்துப் போனான் துருபதன். ஒருவருக்கொருவர் மரியாதை செய்துகொண்டார்கள். யோகக்ஷேமம் விசாரித்துக்கொண்டார்கள். கொண்டு வந்த செல்வங்களைக் கொடுத்தார்.
“அரசனே! உனது சம்பந்தத்தினால் திருதராஷ்டிர மஹாராஜா மிகுந்த சந்தோஷத்தில் இருக்கிறான். சந்தனுபுத்திரரான பீஷ்மர் குசலம் விசாரிக்கச்சொன்னார். பரத்வாஜ புத்திரர் துரோணாசாரியார் உன்னைத் தழுவிக்கொண்டு குசலப்ரசனம் செய்கிறார். கௌரவர்களும் திருதராஷ்டிரனனும் பாண்டவர்களைக் காணத் துடிக்கிறார்கள். குந்தியையும் கிருஷ்ணையையும் கௌரவ ராஜஸ்திரீகள் பார்ப்பதற்கு ஆவலாக இருக்கிறார்கள். தேசம் விட்டு வந்த பாண்டவர்களுக்கும் மீண்டும் அந்த மண்ணையும் மக்களையும் பார்ப்பதற்கு ஆர்வமாக இருப்பார்கள். அவர்களுக்கு விடை கொடு. "
"ஞானவானான விதுரரே! இந்த சம்பந்தம் செய்ததில் எனக்கும் அதீத சந்தோஷம். இந்த மஹானுபாவர்களான பாண்டவர்கள் தேசம் போவது உசிதம்தான். ஆனால் நான் என் வாக்கினால் அதைச் சொல்லலாகாது. வீரர் யுதிஷ்டிரரும் அர்ஜுனரும் பீமரும் நகுலசகதேவர்களும் இதோ இங்கே வீற்றிருக்கும் பலராமகிருஷ்ணரும் என்ன நினைக்கிறார்களோ அதன்படி செய்யட்டும்.”
துருபதன் அடக்கமாகச் சொன்னான்.
“ராஜாவே! நீர் அன்புடன் எதைச் சொன்னாலும் செய்வோம்” என்றார் துருபதனை நோக்கி யுதிஷ்டிரர்.
“துருபதராஜாவின் எண்ணமென்ன?” என்று கேட்டான் கிருஷ்ணன்.
கிருஷ்ணர் கேட்டதும் துருபதன் சரேலென்று எழுந்துவிட்டான்.
“புருஷோத்தமராகிய கிருஷ்ணர் பாண்டவர்களுக்கு நன்மையைச் சிந்திப்பதுபோல யுதிஷ்டிரர் கூட சிந்திப்பதில்லை. உம்முடைய முடிவு இறுதியானது ப்ரபோ” என்று கைகூப்பினான் துருபதன்.
இவ்வளவு நேரமாக குந்தி விதுரரையே உற்றுப் பார்த்துக்கொண்டிருந்தாள். அவர் பார்வையில் நன்றி தோய்ந்திருந்தது. விதுரரின் அறிவுரை இல்லாவிட்டால் அரக்குமாளிகையில் தீக்கிரையாகியிருப்போம் என்ற உணர்வில் அவள் கண்களில் நீர் தாரைதாரையாய் வழிந்தது. இவ்வளவு நேரத்துக்குப் பின்னர்தான் விதுரர் குந்தியிருக்கும் பக்கம் வந்தார். தரை தலையில் பட விழுந்து வணங்கினார். மைத்துனர் இப்படிச் செய்ததும் குந்தி இன்னும் உணர்ச்சிப் பெருக்கில் தேம்பினார். அவை நாகரீகம் கருதி கண்களைத் துடைத்துக்கொண்டு பேச ஆரம்பித்தாள்.
“விசித்ரவீரிய புத்திரரே! நீர்தான் உம் குழந்தைகளை பிழைப்பித்தீர். அரக்குமாளிகையில் போயிருக்கவேண்டியவர்கள் உமது கருணையினால் இங்கு இருக்கிறார்கள். ஆமை எந்த விதத்தில் தான் இருந்தாலும் குஞ்சுகளைப் பற்றியே நினைவில் இருக்குமாம். அதுபோல உம்முடைய நினைவினால் இவர்கள் க்ஷேமமாக இருக்கிறார்கள். குயில் குஞ்சுகளைக் காக்கை வளர்ப்பது மாதிரி நீர் என் புத்திரர்களைக் காப்பாற்றுகிறீர்கள். இதற்குமேல் எனக்கு என்ன சொல்வது என்று தெரியவில்லை. அநேக தர்மம் தெரிந்த நீரே இதற்கு வழி சொல்வீர்” என்று கைகூப்பினாள். சபை உணர்ச்சிப்பெருக்கில் நிறைந்தது. குந்தியின் சொற்களில் பாண்டவர்களின் கண்களிலும் கங்கை. விதுரரும் அந்த அன்பில் விக்கித்துப்போனார்.
“குந்தி! இவ்வுலகில் உன் புத்திரர்கள் மஹா பலசாலிகள். அவர்கள் ராஜ்ஜியம் அடைவார்கள். நீ துயரப்படாதே!”
துருபதன் அனுமதி கொடுத்தான். புக்ககம் செல்லும் தன் பெண்ணிற்கு கணக்கிலடங்கா சீர்கள் கொடுத்தான்.
பொன் மயமான கச்சைகள் கழுத்துப்பட்டைகள் பொன்னாபரணங்கள் எல்லா ஆயுதங்களும் கூடிய ஆயிரம் யானைகள் திடகாத்திரமான பாகர்களுடன் முன்னே சென்றது. பொன்னாலும் ரத்தினத்தாலும் சித்திரமாகச் செய்த நாலு குதிரைகள் பூட்டப்பட்ட பிரகாசமுள்ள ஆயிரம் தேர்கள் வீதியை அடைத்து நகர்ந்தன. உயர்ந்த சாமரங்களை உடைய ஐம்பதினாயிரம் உயர்ந்த ஜாதிக்குதிரைகள் இருபுறமும் அணி வகுத்தன. சிறந்த அணிகலன்களோடு பதினாயிரம் தாதிமார்களும் சிறந்த வீரர்களான பதினாயிரம் வீரர்களையும் ஐவருக்கும் சீதனமாகக் கொடுத்தான்.
பொனாலான படுக்கைகள், ஆஸனங்கள் பாத்திரங்கள் என்று வண்டிவண்டியாக தனியாகச் சென்றது. கோடி கோடியான பசுக்கள் “ம்மா...” என்று கன்றுகுட்டிகளுடன் இரண்டு ஊர்கள் அளவிற்கு ஐவருக்கு சீர் பொருளாக நிறுத்தப்பட்டிருந்தது. நூறு பல்லக்குகளும் அதை எடுப்பதற்கு ஐநூறு மனிதர்களையும் தயாராக நிறுத்தியிருந்தான்.
ஆயிரக்கணக்கான வாத்தியகோஷங்கள் முழங்கின. திருஷ்டத்யும்னன் தன்னுடன் பிறந்தவளை அழைத்துக்கொண்டு வந்தான். தயாராக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சீர்வரிசைகள் சுற்றும் முற்றும் நகர அவனும் திரௌபதியுடனும் பாண்டவர்களுடனும் குந்தியுடனும் ஹஸ்தினாபுரம் வந்தடைந்தான்.
**
அஸ்தினாபுர எல்லைக்கு கௌரவர்கள் அநேகம் பேர் வந்திருந்தார்கள். விகர்ணன் சித்ரசேனன் இருவரும் வரவேற்புகளைக் கவனித்துக்கொண்டார்கள். துரோணரும் கிருபரும் வந்திருந்து ஆசி வழங்கி நகருக்குள் பிரவேசிக்கச் சொன்னார்கள். அவர்களைக் கண்டதும் உற்சாகமடைந்த பாண்டவர்கள் மெல்ல மெல்ல அஸ்தினாபுரத்திற்குள் பிரவேசித்தார்கள். பாண்டவர்களின் வருகையைக் கேள்வியுற்ற ஜனங்கள் நகரத்தை அலங்கரித்தார்கள். தெருவெங்கும் தோரணங்கள். வாழைமரங்கள் நட்டார்கள். வீதிகளில் தண்ணீர் தெளித்துக் கோலமிட்டார்கள். சங்கம் பேரி போன்ற பற்பல வாத்தியங்கள் இசைக்கப்பட்டன.
யுதிஷ்டிரைக் கண்ட மக்கள் “பாண்டு மஹராஜாவே திரும்ப வனத்திலிருந்து வந்ததுபோலிருக்கிறது” என்று சந்தோஷப்பட்டார்கள். வயது முதிர்ந்த பிராமணன் ஒருவன் “நாம் செய்த தானமும் ஹோமமும் தவமும் பயன் அளிக்குமாயின் இந்தப் பாண்டவர்கள் இன்னும் நூறாண்டு காலம் வாழ்ந்து இங்கு ஆட்சி புரியவேண்டும்” என்றான். அவனைச் சுற்றி அமர்ந்திருந்த அனைவரும் அதை ஆமோதிப்பது போல ஜெயகோஷமிட்டார்கள்.
பாண்டவர்கள் அரண்மனையை அடைந்தார்கள். திருதராஷ்டிரனுக்கும் பீஷ்மருக்கும் பாதவந்தனம் செய்தார்கள். திருதராஷ்டிரன் அவர்களுடைய கிருஹத்திற்கு பிரவேசம் செய்ய கேட்டுக்கொண்டான்.
*இருகைகளினாலும் பாணம் விடுபவன்.

Friday, March 9, 2018

கிந்தம முனிவர் கொடுத்த சாபம்


வஸுஷேணனின் சொப்பனத்தில் சூரியன் பிராமண ரூபத்தில் வந்தான்.

“வீரனே! நாளைக் காலை இந்திரன் ஒரு பிராமணனாக உன் க்ரஹம் வருவான். உன்னுடைய கவச குண்டலங்களை பிக்ஷையாகக் கேட்பான். கொடுத்துவிடாதே!ஞாபகம் இருக்கட்டும்”
“என்னிடத்தில் பிராமணன் கேட்டு இல்லையென்று எப்படிச் சொல்வேன்? அதுவும் அவன் தேவர்களுக்குத் தேவன். என்னால் மறுக்க இயலாது.”
“அப்படியென்றால் அந்த இந்திரனும் உனக்கு ஒரு வரம் அருளுவான். அப்போது சக்தியாயுதம் வேண்டும் என்று கேள். வருங்காலத்தில் உன் சத்ருக்களை அழிக்க அது பயன்படும்”
சட்டென்று அந்த உருவம் மறைந்துவிட்டது. திடுக்கிட்டு மஞ்சத்திலிருந்து எழுந்து உட்கார்ந்த வஸுஷேணன் தூக்கத்தில் தானும் உளறியதை நினைத்துப்பார்த்தான். பொழுது விடிந்ததும் முக்கியமான ஏதோ ஒன்று நடக்கப்போகிறது என்று உணர்ந்தான். கனவில் வந்த பிராமணன் யார்? என்ற யோசனையில்ஆழ்ந்து போனான். மீண்டும் உறங்கப்போனான்.
பொழுது புலர்ந்தது. நித்யானுஷ்டானங்களை செய்தான் வஸுஷேணன்.
தேஜோன்மயமான ஒரு பிராமணன் வஸுஷேணனிடம் வந்தான்.
“ப்ரபோ! உங்களுடைய கவசமும் குண்டலங்களும் பிரமாதமாக இருக்கின்றன. எனக்கு தானமாகத் தருவீர்களா?” என்று இருகை ஏந்தினான்.
வஸுஷேணன் சிரித்தான். தருவானோ தரமாட்டானோ என்று எதிர்பார்ப்பில் ஏக்கத்தோடு காத்திருந்தான் பிராமண வேடத்தில் வந்த இந்திரன்.
சட்டென்று இடுப்பிலிருந்த உடைவாளை உருவினான். சரக்சரக்கென்று தோளோடு ஒட்டியிருந்த கவசங்களை அறுத்தான். நெஞ்சில் குருதி பெருகியது. காதுகளோடு சேர்த்து மாட்டியிருந்த குண்டலங்களையும் சேதித்து அவனிடத்தில் கொடையாக அளித்தான்.
மேனி முழுவதும் உதிரம் சொட்ட நின்றவனைப் பார்த்த இந்திரனனுக்கு தூக்கிவாரிப் போட்டது. இப்படி ஒரு அரிய செய்கை செய்தவனை நோக்கி ”ஆஹா.. இதில் நான் பரம திருப்தியடைந்தேன். உனக்கு எதாகிலும் வேண்டுமானால் கேள்” என்றான்.
“எதிரிகளை சம்ஹாரம் செய்யும் சக்தியாயுதம் ஒன்றை நீங்கள் தர வேண்டும்” என்று கேட்டுக்கொண்டான் வஸுஷேணன்.
சக்தியாயுதத்தை வஸுஷேணன் இடத்தில் கொடுத்துவிட்டு “தேவர்கள், அஸுரர்கள், யக்ஷர்கள், கந்தர்வர்கள், நாகர்கள், ராக்ஷசர்கள் என்று எவர் மேல் இதை நீ பிரயோகித்தாலும் அவர்கள் மடிவது உறுதி” என்றான் இந்திரன்.
மகிழ்ந்த வஸுஷேணனிடம் மீண்டும் பேசினான் இந்திரன்.
“ஆனால் யாரையாவது ஒருவரைக் கொன்ற பின் மீண்டும் இந்த சக்தி ஆயுதம் என்னிடம் வந்துவிடும்”
கைகூப்பி அதை ஏற்றுக்கொண்ட வஸுஷேணன் பார்க்கும்போதே வாசல் வரை நடந்து சென்று பின்னர் காற்றோடு காற்றாக மறைந்து போனான் இந்திரன்.
[க்ருணு, க்ரதீ என்றால் சேதிப்பது. கவசகுண்டலங்களை அறுத்து தனது உடலை சேதித்துக்கொண்டதனால் கர்ணன் என்ற பெயர் பெற்றான். ராதை எடுத்து வளர்த்ததினால் ராதேயன் என்ற ஒரு பெயரும் அவனுக்கு உண்டு.]
**
குந்திபோஜனின் புத்ரியான ப்ருதை யௌவனம் அடைந்து விவாஹத்திற்கு தயாரானாள். பல ராஜகுமாரர்கள் அவளை அடைய பிரியப்பட்டார்கள். குந்திபோஜன் ஸ்வயம்வரத்திற்கு நாள் குறித்து அனைவரையும் அழைத்தான். ஸ்வயம்வர மண்டபத்தில் எல்லா தேசத்து அரசர்களும் அமர்ந்திருந்தார்கள். அவர்களுள் ஒளி பொருந்தியவனும் இரண்டாவது இந்திரனைப் போன்று இருந்தவனான பாண்டுவை பார்த்தவுடனேயே மனதில் வரித்தாள் குந்தி.
கையிலிருந்த மாலையை பாண்டுவின் கழுத்தில் அணிவித்து அவளது விருப்பத்தைத் தெரிவித்தாள். ஸ்வயம்வரத்தில் கலந்து கொண்ட பிற அரசர்கள் தத்தம் தேசங்களுக்கு வருத்தத்துடன் திரும்பினர். குந்திபோஜன் வெகு விமரிசையாக பாண்டுவுக்கு குந்தியை விவாஹம் செய்துகொடுத்தான். கௌரவஸ்ரேஷ்டனான பாண்டுவும் குந்தியும் இந்திரனும் இந்திராணியும் போன்று ரதமேறி அஸ்தினாபுரம் சென்றனர். குந்திபோஜன் ஒரு பெரிய ராஜவீதி நிறையும் அளவிற்கு ரதங்களிலும் வண்டிகளிலும் பொன்னும் பொருளும் கொடுத்து ஹஸ்தினாபுரத்துக்கு அனுப்பி வைத்தான். பாண்டு அவளை பட்டத்தரசியாக்கிக்கொண்டான்.
**
பாண்டு ராஜ்ஜியம் ஆண்டு கொண்டிருந்த போது பீஷ்மர் அவனுக்கு இன்னொரு விவாஹத்துக்கு ஏற்பாடு செய்யப் புறப்பட்டார். பிராமணர்கள் மஹரிஷிகள் முதிர்ந்த மந்திரிகள் மற்றும் சதுரங்கசேனைகளுடன் மத்ரராஜனின் தேசம் சென்றார். நகரத்தின் வாயிலில் மத்ரராஜன் சல்யன் பீஷ்மரை எதிர்கொண்டு அழைத்தான்.
அரண்மனைக்கு அழைத்து வந்து அவரது சிரமம் போக மதுபர்க்கம் கொடுத்தான். பிறகு சபைக்கு அழைத்து வந்து உயர்ந்த ஆசனம் கொடுத்து அவர் வந்ததன் காரணத்தைக் கேட்டான்.
”மத்ரதேசத்து அதிபதி சல்யனே! உன் சகோதரியான கற்புக்கரசி மாத்ரியை நான் பாண்டுவுக்காக கேட்கிறேன். நீயும் நானும் சம்பந்தம் செய்துகொள்ள தகுதியானவர்கள். என்ன சொல்கிறாய்?” என்று கம்பீரமாக கேட்டார் ராஜசிம்மமாகிய பீஷ்மர்.
“உங்களை விட சிறந்த சம்பந்தி யாராக இருக்க முடியும்? மிகவும் சந்தோஷம். ஆனால்...”
சல்லியன் சற்று தயங்கினான். பீஷ்மர் கண்களை உருட்டிப் பார்த்தார்.
“ஆனால்...” அவரும் கேட்டார்.
“எங்களது குலவழக்கப்படி பொன்னோ பொருளோ பெற்றுக்கொண்டுதான் பெண்ணைக் கொடுப்பது வழக்கம். இப்படி திடுதிப்பென்று கொடு என்றால் எப்படி?” என்று இழுத்தான் சல்லியன்.
இடியிடியென்று அரண்மனை கூரை இடிந்து கீழே விழுமளவிற்கு சிரித்தார் பீஷ்மர். சல்லியன் ஒன்றும் புரியாமல் பார்த்தான். தனது ஆசனத்திலிருந்து கைதட்டி அவருடன் வந்த ஒரு வயதான மந்திரியைக் கூப்பிட்டார். அந்த மந்திரி அவரருகில் ஓடி வந்தார். அவரது காதில் கிசுகிசுத்தார் பீஷ்மர்.
”இது ஆர்ஷம் எனப்படும் விவாஹம். இரண்டு கோக்களை வாங்கிக்கொண்டு பெண் தருவார்கள். உன் அரண்மனை வாசலில் சென்று பார். கட்டிக்கட்டியாக தங்கப்பாளங்கள், ரதம் ரதமாக ரத்னங்கள், பெட்டி பெட்டியாக மணிகள், மூட்டை மூட்டையாக முத்துகள் என்று பல்வேறு ரதங்களில் கொண்டு வந்திருக்கிறேன். அவற்றைப் பெற்றுக்கொண்டு உனது சகோதரியைக் கொடு”
கிட்டத்தட்ட ஒரு கட்டளை போலவே தொனித்தது பீஷ்மரின் குரல்.
மாத்ரியை நன்கு அலங்கரித்து மன மகிழ்ச்சியுடன் பீஷ்மரிடம் ஒப்படைத்தான் சல்லியன். அவளுடன் ரதமேறி ஹஸ்தினாபுரம் வந்தடைந்தார் பீஷ்மர். அரண்மனை புரோகிதர்கள் நல்ல நாள் பார்த்துக்கொடுக்க முறைப்படி பாண்டுவுக்கு மாத்ரியையும் விவாஹம் செய்துவைத்தார். குந்தி மற்றும் மாத்ரியுடன் மகிழ்ச்சியாக காலம் கழித்துவந்தான் பாண்டு.
முப்பது நாட்கள் இன்பமயமாகக் கடந்தது. பின்னர் இப்புவியை வெல்வதற்கு திக்விஜயம் புறப்பட்டான் பாண்டு. பீஷ்மர், திருதராஷ்டிரன் மற்றும் அரண்மனைப் பெரியோர்களை நமஸ்கரித்து ரதகஜதுரகபதாதிகளுடன் சென்றான். முதலில் தசார்ண தேசத்தரசனை வென்றான். பின்னர் ராஜகிருஹம் என்னும் நகரம் சென்றான். அது மகததேசத்துக்கு உட்பட்டது. அங்கு தீர்க்கன் என்னும் அரசன் தான் பெரிய வீரன் என்ற மமதையில் திரிந்துகொண்டிருந்தான். அவனைக் கொன்றான்.
பின்னர் மிதிலாபுரிக்குச் சென்று அங்கு விதேகராஜர்களை வென்றான். காசிதேசம் ஸும்ஹ தேசம் என்று எல்லா தேசங்களுக்கும் திக்விஜயம் செய்து அனைவரையும் வென்றான். அந்தந்த தேசத்திலிருந்து கிடைத்த பொன்னும் ரத்னங்களும் முத்துக்களும் பவழங்களும் குதிரைகளும் யானைகளும் கணக்கிலடங்கா. அஸ்தினாபுரத்தை தலைநகராகக் கொண்ட கௌரவர்கள் தேசத்து எல்லைகளை பெரிதாக்கினான். நாடு விஸ்தாரமானது.
அனைத்து தேசங்களிலும் வென்றவைகளை ஹஸ்தினாபுரத்துக்கு பாண்டு கொண்டு வரும் போது அந்த ஊரே நின்று வேடிக்கை பார்த்தது. பாண்டு முதலில் வர அவன் வென்ற பொருட்கள் பல ரதங்களிலும் குதிரைகளிலும் நீள் வரிசையாக நீண்டு இரண்டு மூன்று கிராமம்வரை நின்றது. பீஷ்மர் ஹஸ்தினாபுர எல்லைக்கு ஓடிவந்து கட்டிப் பிடித்து உச்சிமோந்தார். சத்யவதியும் அவனது தாயார் அம்பாலிகையும் ஒருவருக்கொருவர் கண்களில் சந்தோஷம் மிதக்க பார்த்துக்கொண்டனர்.
“இந்தப் பொருட்கள் அனைத்தும் உங்களுக்கே சமர்ப்பணம்” என்று சத்யவதி, அம்பாலிகை பீஷ்மர் ஆகியோரைப் பார்த்துச் சொல்லி குனிந்து நிமிர்ந்தான். பாண்டுவின் இந்த பராக்கிரமத்தால் திருதராஷ்டிரன் அஸ்வமேதயாகம் போன்ற அநேக யாகங்களைச் செய்தான்.
தூரதேசங்களுக்குத் திக்விஜயம் செய்து பல யுத்தங்கள் செய்து வெற்றிபெற்ற வீரனான பாண்டுவிற்கு ஹஸ்தினாபுர நகர வாழ்வு பிடிக்கவில்லை. மீண்டும் ஒரு திக்விஜயம் செய்யலாம் என்று நினைத்தான். ஆனால் இம்முறை அவனது இருமனைவிகளுக்கும் இதில் உடன்பாடில்லை. ஆகையால் அவர்கள் இருவரையும் அழைத்துக்கொண்டு இமயமலையின் தென்பக்கமிருக்கும் வனம் சென்றான்.
கவசத்தோடும் ராஜ அலங்காரங்களுடன் பாரியைகளுடன் அந்த வனத்தில் திரிந்துகொண்டிருந்தவனை தேவதை என்று வனத்தில் வசிப்பவர்கள் எண்ணினார்கள். அவனுக்குப் பிரியமானவைகளை திருதராஷ்டிரன் நாட்டிலிருந்து காட்டிற்கு தினமும் அனுப்பிக்கொண்டிருந்தான்.
பத்னிகளுடன் ஆரண்யத்தில் ஆனந்தமாகப் பொழுது போக்கிக்கொண்டிருந்தான் பாண்டு. வேட்டையாடுதலை முதன்மையாக வைத்திருந்தான். இப்படி ஒரு நாள் வனத்தில் வேட்டையாடிக்கொண்டிருந்தபோது தூரத்தில் இரு மான்கள் புணர்ச்சியில் இருப்பதைக் கண்டான்.
உடனே வில்லை வளைத்து ஐந்து அம்புகளை அந்த ஆண் மான் மீதும் பெண் மான் மீதும் எய்தான்.
“ஐயோ!” என்று ஒரு ஆணின் கதறல் சப்தம் கேட்டதும் பயந்து வில்லை கீழே போட்டான் பாண்டு.
கிந்தம முனிவர் என்னும் ரிஷிகுமாரர் ஆண் மான் உரு எடுத்து பெண் மான் உருவில் இருந்த தனது மனைவியுடன் சேர்ந்திருந்தார். வலியால் துடித்த அவர் மிகுந்த வேதனையுடன் மான் உருவிலிருந்தே பேசத் தொடங்கினார்.
“விபரீத புத்தியுள்ளவர்களும் பாபகாரியங்களிலேயே எப்போதும் மூழ்கியிருப்பவர்கள் கூட இப்படி ஒரு காரியத்தைச் செய்யத் தயங்குவார்கள். மதி எப்போதுமே விதிலை வெல்லமுடியாது. விதிதான் மதியை வெல்கிறது. விதிவசமாக வரும் பயன்களை மதியுள்ளவன் கூட அனுபவிக்கிறான். தர்மத்தையே ஆதாரமாகக் கொண்ட பரதவம்சத்தில் பிறந்த நீ இப்படிச் செய்யலாமா?”
“மானே! வேந்தர்களுக்கு சத்ருவதம் போலத்தான் மிருக வதமும். க்ஷத்ரியனின் சாஸ்திரபிரஹாரம் அது ஒன்றும் செய்யக்கூடாததல்ல. மேலும் ஸத்ரயாகம் செய்யும் பொருட்டு எல்லா தேவதைகளின் நலனையும் உத்தேசித்து அகஸ்திய மாமுனி ஜலத்தைத் தெளித்து காட்டிலிருந்த மிருகங்களை வேட்டையாடினார். எல்லாம் செத்து மடிந்தன. நீ என்னை தூஷிக்காதே!” பாண்டு தெளிவாகத் தனது தரப்பு வாதத்தை வைத்தான்.
“அரசனே! மிருகங்களைக் கொல்பவனைப் பற்றி நான் தூஷிக்கவில்லை. நான் புணரும் காலம் வரைக்கும் நீ பொறுமையுடன் இருந்திருக்க வேண்டும். சந்ததி விருத்திக்காக இந்த பெண் மானுடன் உத்ஸாகமாக சேர்ந்திருந்தேன். உயர்ந்த பௌரவ வம்சத்தில் பிறந்தவனான நீ செய்த இக்காரியம் மிகவும் கொடியது. ஸ்வர்க்கத்துக்கும் புகழுக்கும் விரோதமானது.”
“இவ்வளவு பேசும் நீர் யார்? ஏன் மான் உருவில் இருந்தீர்?” கையைப் பிசைந்துகொண்டே கேட்டான் பாண்டு.
“நான் கிந்தமன் என்னும் முனிவன். காமஸுகத்தில் ஆசையிருந்தும் மானிடரிடத்தில் ஏற்பட்ட வெட்கத்தினால் மான் உரு எடுத்துக்கொண்டு பெண் மானாகிய என் பத்னியிடம் சேர்ந்திருந்தேன். நான் முனிவன் என்று தெரியாமல் அம்பு எய்தி கொன்றதால் உன்னை பிரம்மஹத்தி தோஷம் தீண்டாது. ஆனால்....”
கிந்தம மஹரிஷி நிறுத்தினார். மானின் கண்களிலிருந்து நீர் அருவியாய்க் கொட்டியது.
“ஆனால்.. நீயும் காமஸுகத்தில் மூழ்கி கலவியிருக்கும்போது உனது உயிர் பிரிந்துவிடும்” என்று சாபம் கொடுத்தார். அடுத்த கணம் அவரது உயிர் அதாவது அந்த மானின் உயிர் பிரிந்துவிட்டது.
இருபுறமும் அழகான மனைவிகள் அமர்ந்திருக்க இந்த சாபமே தனது காதுகளில் மீண்டும் மீண்டும் ஒலிக்க அந்தக் காட்டுக் குடிலின் வாசலில் சோகத்தில் ஆழ்ந்திருந்தான் பாண்டு.

பதிவ்ரதா காந்தாரியும் குந்தியின் அதிதி பூஜையும்


திருதராஷ்டிரன், பாண்டு மற்றும் விதுரன் ஆகியோர் கிடுகிடுவென்று வளர்ந்து யௌவனப் பருவத்தை அடைந்தார்கள். இப்போது பீஷ்மருக்கு ஒரு பெரும் கடமை வந்தது. இவர்கள் மூவருக்கும் விவாஹம் செய்துவைக்க வேண்டும். பல்வேறு தேசங்களுக்கு ஒற்றர்களையும் பிராமணர்களையும் அனுப்பி பெண் தேடும் படலத்தில் ஈடுபட்டார்.

குந்திபோஜராஜனுக்கு அழகு நிரம்பிய பெண்ணொருத்தி இருந்தாள். காந்தாரதேசத்து ஸுபலனுக்கு ஒரு பெண் யௌவனமும் அழகும் நிரம்பி விவாஹத்துக்குக் காத்திருந்தாள். மத்திரதேசத்தில் இப்பூமியிலேயே இல்லாத அளவுக்கு சௌந்தர்யமான பெண்ணொருத்தி இருப்பதாக அந்த தேசம் சென்றுவந்த பிராமணர்கள் பீஷ்மரிடம் தெரிவித்தார்கள்.
பீஷ்மரின் தர்பார் தாண்டி இருந்தது அந்த மண்டபம். சிவப்பு வர்ணத்தில் இருந்த உயர்ந்த ஆசனத்தில் பீஷ்மர் அமர்ந்திருந்தார். பக்கத்தில் இளைஞனான விதுரன் இருந்தார்.
“விதுரா! என்னாலும் ஸத்யவதியினாலும் மஹாத்துமாவான வியாஸராலும் இந்தக் குலம் கெடுதி அடையாமல் காப்பாற்றப்பட்டது. நீங்கள் பிறந்தவுடன் எங்களுடைய மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை”
விதுரர் அமைதியாக பீஷ்மரைப் பார்த்துக்கொண்டிருந்தார்.
“அப்படிப்பட்ட இந்தக் குலம் கடல் போல பெருக வேண்டும் என்று நினைக்கிறேன். யதுகுலத்தில் ஒருத்தியும் ஸுபலனின் பெண்ணும் மத்திரதேசத்தவனின் பெண்ணும் நமக்கு தகுதியானவர்கள். அந்த க்ஷத்ரிய அரசர்களிடம் கேட்டு விவாஹம் செய்யலாமென்று இருக்கிறேன். நீ என்ன நினைக்கிறாய்?”
“நீங்களே எங்கள் தந்தை. நீங்களே எங்கள் தாய். ஆசாரியரும் நீங்களே. ஆகையால் இக்குலத்திற்கு எது நன்மையோ அதை நீங்களே முடிவு செய்து எங்களுக்கு அருள வேண்டும்”
கைகூப்பினார் விதுரர்.

“யாரங்கே!” கனத்த குரலுடன் கை தட்டினார் பீஷ்மர்.
வாயிற்காப்போன் ஓடிவந்தான்.
“காந்தார தேசத்துக்குச் சென்று வந்த பிராமணரை இங்கே அழைத்து வா!”
அவன் விரைவாக வெளியேறி அந்த பிராமணருடன் வந்தான்.
“ஸுபலனின் புத்ரி பெயர் என்ன?”
“காந்தாரி”
“அவளது குண விசேஷங்கள் என்ன?”
“வரப்பிரசாதியான ஈஸ்வரனைத் துதித்து புண்ணியவதியான அந்த காந்தாரி நூறு புத்திரர்களைப் பெற வரம் பெற்றுள்ளாள்” அடக்கமாகவும் அளவாகவும் பேசினார் அந்த பிராமணர்.
அவர் வெளியேறிய பின்னர் பீஷ்மர் விதுரனின் பக்கம் திரும்பினார். அவர் அதை ஆமோதிப்பது போல தலையசைத்தார்.
**
பீஷ்மர் காந்தார தேசத்துக்கு தூது அனுப்பினார். ஸுபலன் திருதராஷ்டிரனுக்குப் பெண் பார்ப்பதாகக் கேள்விப்பட்டவுடன், ஒரு குருடனுக்கு தனது பெண்ணைத் தருவதா? என்று தயங்கினான். மனைவியுடன் விவாதம் செய்தான். கடைசியில் பீஷ்மரின் பராக்கிரமங்களுக்குப் பயந்து காந்தாரியை திருதராஷ்டிரனுக்குத் தருவதாக வாக்களித்தான்.
தான் மணக்கவிருப்பவருக்கு கண் இல்லை என்று தெரிந்தவுடன் பதிவ்ரதா தர்மத்தை அனுசரிப்பவளான காந்தாரி ஒரு துணியை எடுத்து பல மடிப்பாக மடித்து கண்களைக் கட்டிக்கொண்டாள். பக்கத்திலிருந்த தோழி ஒருத்தீ அவளது கைகளைப் பற்றி “ஏன் கண்களை மூடிக்கொண்டாய்?” என்று கேட்டாள்.
“அவரை எந்த வகையிலும் இகழாமல் இருக்க வேண்டும் என்று கட்டிக்கொண்டேன். அவருக்குத் தெரியாமல் எனக்கு மட்டும் எதற்கு கண்கள் இருக்க வேண்டும்?” என்று பதில் கேள்வி கேட்டாள்.
ஸுபலனின் புத்திரன் சகுனி தனது சகோதரியோடும் ரதம் ரதமாய் பொருட்களும் தானியங்களும் பசுக்களையும் அழைத்துக்கொண்டு கௌரவர்களின் தலைநகரான அஸ்தினாபுரம் வந்தான். காந்தாரியின் பத்து தங்கைகளும் அக்காளின் விவாஹம் காண கூடவே வந்திருந்தார்கள்.
காந்தாரி திருதராஷ்டிரன் விவாஹம் பல தேசத்து அரசர்களும் சிற்றரசர்களும் மஹாஜனங்களும் பங்கு பெற வெகு விமரிசையாக நடைபெற்றது.
ஸகோதரியுடன் வந்த சகுனிக்கு பதில் மரியாதைகள் செய்து மீண்டும் காந்தார தேசத்துக்கு அனுப்பினார் பீஷ்மர். சிறந்த பெண்ணாகிய காந்தாரி தனது வணக்கத்தினாலும் ஒழுக்கத்தினாலும் நன்மதிப்பைப் பெற்றாள். இருவருக்கும் கண் இல்லை என்று ஆகிவிட்டபடியால் பீஷ்மர் மிகவும் விசனப்பட்டார்.
தனது ஜ்யேஷ்ட புத்ரி இப்படி ஒரு குருடனுடன் தானும் கண்களை இழந்தக் கஷ்டப்படுவதை காணச் சகியாத ஸுபலன் அவளது பத்து சகோதரிகளையும் திருதராஷ்டிரனுக்கு பாணிக்கிரஹணம் செய்துகொடுத்தான். பின்னரும் பீஷ்மர் நூற்றுக்கும் மேற்பட்ட ராஜபுத்ரிகளைத் தேடிக் கூட்டிவந்து திருதராஷ்டிரனுக்கு விவாஹம் செய்துவைத்தார்.
**
[பாண்டுவின் திருமணத்திற்கு முன்னர் குந்தியின் கதை வருகிறது. அதைப் பார்த்துவிட்டு பின்னர் பாண்டுவின் விவாஹம் பற்றிப் பார்ப்போம்]
**
வஸுதேவரின் பிதா சூரன். யாதவ ஸ்ரேஷ்டன். அவனுக்கு ப்ருதை என்று ஒரு பெண் பிறந்தாள். அந்த சூரனின் ஸ்நேகிதன் குந்திபோஜன். அவனுக்கு சந்ததியில்லை. ஆகையால் தனக்குப் பிறக்கும் முதல் குழந்தையை உனக்கு தத்தாகக் கொடுப்பேன் என்று ஸத்தியம் செய்திருந்தான். அதன்படி அந்த ப்ருதை என்பவளை குந்திபோஜனுக்கு தத்துக் கொடுத்தான்.
குந்திபோஜன் அரண்மனையில் எப்போதும் அதிதிகள் கூட்டம் இருக்கும். அப்படி அதிதிகளாக வரும் பிராமணர்களை பூஜித்து அவர்களது தேவைகளை நிவர்த்தி செய்யும் பொறுப்பை தன் மகளான ப்ருதையிடம் கொடுத்திருந்தான் குந்தி போஜன். நித்தமும் வரும் ரிஷிகளுக்கு பணிவிடைகள் செய்துகொண்டிருந்தாள்.
ஒரு நாள் துர்வாஸஸ் என்ற மிகவும் கோபக்கார ரிஷி அவர்கள் அரண்மனைக்கு வந்தார். குந்திபோஜன் ப்ருதையிடம்...
“மகளே! இவர் மிகவும் சினம் கொள்பவர். இவரது மனம் கோணாமல் நடந்துகொள்ளம்மா” என்று அறிவுறுத்தி அவரிடம் அனுப்பி வைத்தான். ப்ருதை அம்முனிவருக்கு ஒரு வருஷ காலம் போஜனம் கொடுத்து தயிர் நெய் போன்றவைகளைக் கொடுத்து சிஷ்ருஷை செய்துவந்தாள். அவருக்குத் துளிக்கூட கோபம் வரவில்லை.
அந்த துர்வாஸஸ் முனி த்ரிகால ஞானி. எதிர்காலத்தில் ப்ருதைக்கு வரும் ஆபத்தை நினைத்து அவளுக்கு ஒரு வரம் அருளினார்.
“குந்தி! உனக்கு நான் ஒரு மந்திரம் சொல்லிக்கொடுக்கிறேன். அந்த மந்திரத்தினால் நீ எந்த தேவதையை ஆவாஹனம் செய்கிறாயோ.. அந்தத் தேவதையின் மஹிமையோடு ஒரு புத்ரன் உனக்குப் பிறப்பான்”
ஆசீர்வாதம் செய்து அவளுக்கு அந்த மந்திரத்தை காதோடு உபதேசம் செய்தார். உபதேசம் பெற்றவுடன் அவருக்கு நமஸ்காரம் செய்தாள் குந்தி. மனசுக்குள் ஏதோ குறுகுறுவென்று இருந்தது. இளம் பெண். மேனியெங்கும் ஏதோ புதுரத்தம் பாய்வது போல உணர்ந்தாள். துர்வாஸ மஹரிஷி வாழ்த்திவிட்டு சென்றார்.
கொஞ்ச காலம் நகர்ந்தது. அவளது மனசுக்குள் துர்வாசமஹரிஷி உபதேசம் செய்த மந்திரம் ஓடிக்கொண்டே இருந்தது. ஒரு நாள் காலை அரண்மனை மாடத்தில் நின்றிருந்தவளுக்கு அந்த மந்திரம் ஞாபகம் வந்தது. மனசுக்குள்ளே அந்த மந்திரத்தின் மகிமையை எப்படி அறிவது என்கிற தேடல் ஏற்கனவே இருந்துகொண்டே இருந்ததால் அதை பரீக்ஷித்துப் பார்க்க எண்ணினாள்.
ஸ்நானம் செய்து தலை கோதிக்கொண்டு இருந்தவள் நேரே தெரிந்த சூரியனை தியானித்தாள். மேகங்கள் சூரியனைச் சூழ்ந்து கொண்டு அவளது மாடத்துக்கு அருகில் ஜோதிர்மயமாக கண்ணைப் பறிக்கும் ஒளி வந்தது. அந்த அற்புதத்தைப் பார்த்து திகைத்துக்கொண்டு நின்றவள் முன் ஒரு தேவன் தோன்றினான்.
“நீங்கள் யார்?” என்று நாணத்துடன் விஜாரித்தாள் குந்தி.
“நான் தான் சூரியன். ரிஷியின் மந்திரத்தினால் என்னை அழைத்துள்ளாய். உனக்கு நானொரு புத்திரனை இப்போது தரப்போகிறேன்”: என்றான்.
குந்தி நடுங்கினாள்.
“நானொரு கன்னிகை. இது தர்மம் ஆகாது. நான் அவரது மந்திரத்தை பரீக்ஷித்துப் பார்க்கவே அதை தியானம் செய்தேன். என்னை மன்னித்துவிடுங்கள்” என்று கெஞ்சினாள்.
சூரியதேவனுக்கு கோபம் வந்தது.
“ஏ பெண்ணே! ஏனிப்படி அந்த துர்வாஸ ரிஷியையும் என்னையும் அவமானம் செய்கிறாய். இப்போது என்னிடமிருந்து புத்ரசந்தானத்தை நீ ஏற்றுக்கொள்ள மாட்டேன் என்றால் உங்கள் குலத்தையே சபித்துவிடுவேன்” என்று மிரட்டினான்.
“நானின்னும் விவாஹம் ஆகாதவள். என்னுடைய கன்னித்தன்மை கெட்டுவிடுமே” என்று சோகத்துடன் கேட்டாள் குந்தி.
:”அதுபற்றிக் கவலைப்படாதே! நாமிருவரும் கலந்து ஒரு பிள்ளை இப்போது பெற்றவுடன் நீ மீண்டும் கன்னிகை ஆகிவிடுவாய். கலங்க வேண்டாம்” என்று ஆறுதல் கூறி அவளுடன் கலந்தான் சூரியன்.
உடனே அவர்களுக்கு அந்த மாடத்திலேயே ஒரு புத்ரன் பிறந்தான். அவனுக்கு பிறந்த போதே காதில் கர்ணகுண்டலங்களும் மார்பில் ஒரு கவசமும் இருந்தது. அவன் பிற்காலத்தில் கர்ணன் என்று பெயர் பெற்றான். சூரியன் குந்திக்கு உடனே கன்னித்தன்மையை அளித்தான்.
கையில் குழந்தையுடன் கன்னிமாடத்தில் நின்றிருந்த அந்த யதுவம்சத்து புத்ரியாகிய குந்தி ஒன்றும் புரியாமல் நின்றாள். குனிந்து பார்த்தாள். அந்தக் குமாரன் சிரித்தான். நெஞ்சைக் கல்லாகிக்கொண்டு ஊரார் பார்த்தால் தனது பெயருக்கு களங்கம் ஏற்பட்டுவிடும் என்று அந்தக் குழந்தையை ஒரு பெட்டியில் வைத்தாள். அந்தப் பெட்டி நிறைய ரத்னங்களை நிரப்பினாள். தன்னுடைய அணிகலன்களையெல்லாம் கழற்றி அவனுக்குப் பக்கத்தில் இட்டாள்.
யார் கண்ணிலும் படாமல் அந்தப் பெட்டியைத் தூக்கிக்கொண்டு வந்து பக்கத்தில் ஓடும் நதியில் விட்டாள். அந்தப் பெட்டி எந்த சுழலிலும் மாட்டிக் கவிழாமல் பத்திரமாக நீரில் சென்றது.
வெகுதூரத்திற்கு அப்பால் நதியில் முகம் அலம்ப வந்தான் ஒரு ஸூதபுத்திரன். ராதை என்பவளின் கணவன். இருவரும் புத்திர சந்தானம் இல்லாமல் வெகுநாளாக மனவருத்தத்துடன் இருந்தார்கள். பெட்டியில் சிரித்தபடி வரும் குழந்தையைக் கண்டவுடன் அவனுக்கு எல்லையில்லா மகிழ்ச்சி. குழந்தையைப் பெட்டியோடு தூக்கிக்கொண்டு வீட்டிற்கு ஓடினான்.
ராதையும் அந்த ஸூதபுத்திரனும் அவனுக்கு பெயர் சூட்டுவதற்கு அமர்ந்தார்கள்.
“இவன் தனத்துடன் கூடப் பிறந்திருக்கிறான். அதனால் வஸுஷேணன் என்று பெயர் சூட்டுவோம்” [ வஸு = த்ரவ்யம்; ஸேனன்=சம்பந்தப்பட்டவன் ; ரத்னங்களோடும் கவச குண்டலங்களோடும் கிடைத்தவன்]
நாட்கள் ஓடியது. அவன் எல்லா அஸ்திரங்களையும் கற்றுத் தேர்ந்தான். பிராமணர்களுக்கு என்றால் எதையும் தந்துவிடுவேன் என்று சங்கல்பம் செய்துகொண்டு வளர்ந்தான். சூரியன் சாயும் வரை சூர்யோபாசனை செய்வான்.
ஒரு நாள் இரவு வஸுஷேணன் தூக்கத்தில் சொப்பனம் ஒன்று கண்டான்.
அதில்...

ஆணி மாண்டவ்யர்


மாண்டவ்யர் என்ற பிராமணர் ஒரு தீர்த்தயாத்திரை விரும்பி. எல்லாத் தர்மங்களும் தெரிந்தவர். ஸத்யமும் தவமும் அவருக்கு இரு கண்கள். தேசந்தோறும் இருக்கும் கிராமங்களில் தங்கி தீர்த்தயாத்திரை செய்துவந்தார். அப்படியிருக்கும்போது ஒரு புண்ணிய தீர்த்தத்தின் அருகில் ஆஸ்ரமம் கட்டிக்கொண்டு வசிக்கலானார்.

ஒரு நாள் மௌன விரதம். ஆஸ்ரம வாசலில் இருக்கும் அரசமரத்தின் அடியில் கையிரண்டையும் தலைக்குமேலே கூப்பியவண்ணம் தூக்கிக்கொண்டு கண்களை மூடி தவமாய் நின்றிருந்தார். அப்படி தவத்திலிருக்கும்போது பொருட்களை கொள்ளையடித்து மூட்டையாய்க் கட்டி தூக்கிக்கொண்டு திருடர்கள் சிலர் ஓடிவந்தார்கள். தூரத்தில் ராஜாங்க காவலாளிகள் துரத்தியபடி வந்தார்கள்.
திருடிய பொருட்களோடு அந்தக் கொள்ளையர்கள் ஆஸ்ரமத்தின் உள்ளே அடைக்கலம் புகுந்தார்கள். குதிரையில் துரத்திக்கொண்டு வந்த சேனையாட்களும் அங்கே வந்து சேர்ந்தார்கள். மஹரிஷி இன்னமும் தவம் கலையாமல் நின்றிருந்தார். சுற்றும்முற்றும் பார்த்த அவர்கள் மாண்டவ்ய மஹரிஷியைப் பார்த்து....
“பிராம்மணோத்தமரே! கொள்ளையர்கள் எங்கே சென்றார்கள்? நீங்கள் பார்த்தீர்களா?” என்று கேட்டார்கள். காவலாளிகள் நாலாபுறமும் கண்களால் அலைந்துபார்த்துக்கொண்டிருந்தார்கள். மௌனவிரதத்திலிருந்த மாண்டவ்ய மஹரிஷி பதிலேதும் சொல்லாமல் தவத்தில் நின்றிருந்தார்.
இரண்டு காவலர்கள் ஈட்டியோடு ஆஸ்ரமத்திற்குள் சென்று தேடினர். கொள்ளையர்கள் அங்கே ஒளிந்திருந்தார்கள். அனைவரும் சேர்ந்து கொள்ளையர்களைக் கைது செய்து நகரம் அழைத்துச்சென்றார்கள். அப்போது அங்கிருந்த சில காவலாளிகளுக்கு மாண்டவ்யர் மேலே சந்தேகம் பிறந்தது. மாண்டவ்யர் கொள்ளையர்களின் கூட்டாளியோ என்று நினைத்துக்கொண்டு கொள்ளையர்களோடு சேர்த்து அவரையும் கைது செய்து அரசனிடம் கொண்டு சென்றார்கள்.
அரசன் கொதிப்படைந்தான். அந்தத் திருடர்களுடன் சேர்த்து மாண்டவ்யரையும் கழுவிலேற்ற உத்தரவிட்டான். காவலாளிகளின் மடத்தனத்தால் அவரையும் சூலத்தில் ஏற்றினார்கள். பக்கத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சூலங்களில் ஏற்றப்பட்ட திருடர்கள் உடனே உயிரிழக்க மாண்டவ்யர் மட்டும் ஆகாரமில்லாமல் உயிரையும் விடாமல் கழுவிலேயே சூலம் சொருகிய நிலையில் தவமியிற்றி நின்றிருந்தார். ரிஷிகள் அநேகம் பேர் சூழ்ந்துகொண்டு இப்படியிருப்பவரிடம் இரக்கம் கொண்டார்கள்.
“பிராமணரே! நீர் இந்த சூலத்தில் ஏற்றப்படுவதற்கு என்ன பாபம் செய்தீர்கள்?” என்று கேட்டார்கள்.
“நான் எந்தக் குற்றமும் செய்யவில்லை. யாருக்கு தீங்கும் ஏற்படுத்தவில்லை” என்று பதிலுரைத்தார்.
இன்னும் கொஞ்ச காலம் கழிந்தது. முன்னர் திருடனை துரத்திக்கொண்டு வந்த அதே காவலாளிகள் மாண்டவ்யரின் ஆஸ்ரமம் வழியாக வந்தார்கள். சூலம் நட்டு அதில் கழுவில் ஏற்றிய மாண்டவ்யர் இன்னமும் உயிரோடு இருப்பதைப் பார்த்தார்கள். அந்த ஆணி சொருகிய நிலையிலும் தவமியற்றும் அவரைப் பார்த்ததும் பயந்து அரசனிடம் ஓடினார்கள்.
ராஜாவுக்கு தான் ஏதோ தவறு செய்துவிட்டோம் என்று தோன்றியது. அவரும் மாண்டவ்யரின் இடத்திற்கு விரைந்தார்.
“நான் உங்களுக்கு அநீதி இழைத்துவிட்டேன். தவறு செய்துவிட்டேன். நீங்கள் என்னை மன்னிக்கவேண்டும்” என்று அவரை ஏற்றியிருக்கும் கழுவின் முன் மண்டியிட்டான். அவரும் அவ்வரசனை மன்னித்தார்.
“இவரை கழுவிலிருந்து இறக்குங்கள்” என்று உத்தரவிட்டான். சூலத்தைப் பெயர்த்து நான்கைந்து பேர்களாய் அவரை இறக்கி அந்த சூலத்தை அவரது உடலிலிருந்து உருவினார்கள். கழுத்துக்கும் விலா எலும்புக்கும் நடுவில் சிக்கியிருந்த இரும்பை அகற்ற இயலவில்லை. அதனால் அதை அடியில் வெட்டிவிட்டான் அந்த அரசன்.
அந்த சூலத்துண்டுடன் அவர் எங்கும் சஞ்சரித்தார். ஸ்வாமிக்கு அர்ச்சனை செய்வதற்கு மலர் பறித்து வைத்திருக்கும் புஷ்பக்குடலையை அதில் மாட்டிக்கொண்டு பகவானையே நினைத்துத் திரிந்தார். அந்த சூலம் அவருடனேயே ஒட்டி இருந்ததால் அவரை ஆணி மாண்டவ்யர் என்று அழைத்தார்கள்.
அவர் தர்மதேவதையின் க்ரஹத்திற்கு சென்றார். அங்கே உயர்ந்த ஆசனத்தில் தர்மதேவதை அமர்ந்திருந்தான்.
“ஏ தர்மதேவதையே! நான் இப்படிப்பட்ட கஷ்டத்தை அனுபவிக்க அறியாமல் செய்த தீவினை என்ன? உடனே எனக்குச் சொல்” என்று கடுகடுவென்று கேட்டார். அவர் பிரம்மஞானி. தர்மதேவதை தன் வீட்டின் படியேறிக் கேட்ட ஆணி மாண்டவ்யரிடம்
“தவசிரேஷ்டரே! நீங்கள் சிறு வயதில் தட்டாணைப் பிடித்து அதன் வாலில் எஃகுவைக் கட்டி இம்சித்தீர். ஆகையால் இதை அனுபவிக்கிறீர். ” என்றான்.
“எந்த வயதில்?”
“நீர் குழந்தைப் பருவத்தில் செய்தது”
“பன்னிரெண்டு வயது வரை எதைச் செய்தாலும் அதனால் பாபம் வந்து சேராது.”
“ஏன்?”
“அந்தப் பிராயம் வரை சாஸ்திரங்களை அவன் அறியான். உபதேசங்களை ஏற்றுக்கொள்ளும் பக்குவம் கிடையாது. சிறிய குற்றத்திற்கு இவ்வளவு பெரிய தண்டனையா? பிராம்மணவதம் மிகப் பெரியது”
தர்மதேவதை ஆணி மாண்டவ்யரின் குரலுக்கு நடுங்கினான். பெரிய தவறு இழைத்துவிட்டோம் என்று இப்போது வருந்தினான்.
“நீ மனுஷ்ய ஜென்மம் எடுப்பாய்” என்று சாபமிட்டார். பின்னர் பாபம் வந்து சேர்வதற்கு ஒரு வரம்பு ஏற்படுத்தினார்.
:இதுமுதல் இந்த உலகத்தில் தான் செய்த வினைக்கு ஒரு பயன் உண்டாவதற்கு ஒரு வயது வரம்பு சொல்கிறேன். பதினான்கு பிராயங்கள் வரை பாபம் வந்து சேராது”
தர்மதேவதை அதனால் விதுரர் வடிவமாக மனுஷ்ய ஜென்மம் எடுத்தார். தர்மசாஸ்திரத்திலும் ராஜநீதியிலும் சிறந்து விளங்கினார் விதுரர். எல்லோருக்கும் நன்மை பயக்கும் காரியங்களில் ஈடுபட்டார்.
**
திருதராஷ்டிரன், பாண்டு மறும் விதுரர் பிறந்ததும் நாடு செழித்தது. பிரஜைகள் கவலைகள் இன்றி சந்தோஷமாக இருந்தனர். தர்மம் தழைத்தோங்கியது. ஏழைகள் யாருமில்லை. விதவைகள் யாருமில்லை. ஹஸ்தினாபுரம் மேகக்கூட்டம் போன்ற கோபுரங்களோடும் மாட மாளிகைகளோடும் அரண்மனைகள் நெருங்கியிருந்ததால் தேவேலோகம் போல காட்சியளித்தது. அந்த ராஜ்ஜியத்தில் பிஷ்மரால் ஏற்படுத்தப்பட்ட தர்மசக்கரம் சுழன்றுகொண்டே இருந்தது. மூவரையும் தனது புத்திரர்களைப் போல பார்த்துக்கொண்டார்.
பிரம்மசாரிகளாக அத்தியயனஞ் செய்துவைக்கப்பட்டார்கள். சாஸ்திரங்கள் பயிற்றுவிக்கப்பட்டது. சரீரப் பயிற்சியில் தேர்ச்சியடைந்தார்கள். யௌவனப் பருவம் அடைந்தார்கள். தனுர் வேதத்திலும் வேதத்திலும் கதாயுத்தத்திலும் கத்தி கேடயங்களிலும் யானைப் பழக்கத்திலும் ராஜ நீதி சாஸ்திரங்களிலும் கரைகண்டவராயினர்.
திருதராஷ்டிரன் வேதாத்தியயனத்தில் ஊக்கம் நிறைந்தவன். ராஜநீதி சாஸ்திரத்தில் கரைகண்டவனானான். யானை பலம் நிரம்பியவன். தனுர்வேதத்திலும் குதிரையேறுவதிலும் கதாயுத்தத்திலும் கத்திகேடகங்களிலும் யானை பழக்கத்திலும் பலவகையான அஸ்திரசஸ்திரங்களிலும் நீதி சாஸ்திரம் மற்றும் ராஜநீதிகளிலும் கரைகண்டவன் பாண்டு. தாஸியிடம் பிறந்த விதுரர் பால்ய வயதில் இருக்கும்போதே எல்லா தர்மங்களையும் உபதேசிக்கும் மந்திரியாக திருதராஷ்டிரனுக்கு பீஷ்மரால் நியமிக்கப்பட்டார்.
தேசங்களில் அறிஞர்களால் “அவனியில் சிறந்தவை எவை?” என்று பேசப்பட்டவைகளில் “வீரப்புத்திரர்களைப் பெற்றதில் அம்பிகா அம்பாலிகா இருவரும், தேசங்களுக்குள் குருஜாங்கலதேசமும், தர்மம் தெரிந்தவர்களுள் பீஷ்மரும், நகரங்களில் ஹஸ்தினாபுரமும்” சிறந்தவையாக இருந்தது.
கண்ணில்லாமல் பிறந்ததனால் திருதராஷ்டிரனுக்கு ராஜ்யாபிஷேகம் செய்ய இயலவில்லை. தாஸிக்குப் பிறந்ததனால் விதுரருக்கும் மணிமுடி தரிக்கும் தகுதியில்லை. அதனால் பாண்டு ராஜாவானான்.