Showing posts with label பாண்டவர்கள். Show all posts
Showing posts with label பாண்டவர்கள். Show all posts

Sunday, March 11, 2018

துரியோதனனின் துர்புத்தி



அஸ்தினாபுரத்தின் அரசவையில் கர்ணன், சகுனி, துரியோதனாதிகள் ஆகியோரும் இன்னும் சில ராஜாங்க சேவையில் உள்ளவர்களும் அமர்ந்திருந்தார்கள். ஸ்வயம்வரத்தில் தோற்றது ஆறாத ரணமாக அவர்கள் நெஞ்சை அறுத்துக்கொண்டிருந்தது. ஒற்றர் தலைவன் உள்ளே வந்தான். தலை குனிந்து வந்தனம் செய்தான்.
”ப்ரபோ! பாஞ்சால தேசத்தில் திரௌபதி பாண்டவர்களை தன் கணவர்களாக அடைந்தாள். வில்லால் லக்ஷியத்தை அறுத்தவன் அர்ஜுனன். மரத்தைப் பிடிங்கி அரசர்களைத் தாக்கி மத்ர ராஜாவாகிய சல்லியனைத் தூக்கிப் போட்டு மிதித்தவன் பீமன். துரியோதன மஹாராஜாவின் வில்லை அறுத்து அவரை துரத்தி அடித்தவன் தர்மராஜன். துரியோதனருடைய தம்பிகளுடன் யுத்தம் புரிந்தவர்கள் நகுல சகதேவர்கள்.”
பாண்டவர்கள்தான் பிராம்மண வேஷம் தரித்து அடக்கமாக அந்த ஸ்வயம்வர மண்டபத்தில் அமர்ந்திருந்து எல்லா வேலைகளையும் முடித்தனர் என்பதைக் கேள்விப்பட்டவுடன் சகுனி, துச்சாஸனன், துரியோதனன், கர்ணன் ஆகியோர் உள்ளம் குமுறினார்கள். தர்மம், நல்லொழுக்கம் மற்றும் தாயாரின் விருப்பப்படி நடந்துகொள்ளுதல் போன்ற குணங்கள் நிரம்பிய பாண்டவர்களை ஊராரும் மற்ற அரசர்களும் பாராட்டியதுடன் துரியோதனாதிகளையும் திருதராஷ்டிரனையும் இத்தனையையும் வேடிக்கைப் பார்த்துக்கொண்டிருந்த பீஷ்மரையும் இகழ்ந்தார்கள்.
திருதராஷ்டிர புத்திரர்களும் சகுனியும் கர்ணனும் இப்போது மந்திராலோசனையில் ஈடுபட்டார்கள்.
தந்திரத்திலும் துர்புத்தியிலும் முதலில் நிற்கும் சகுனி ஆரம்பித்தான்.
“சத்ருக்களை பலவகைகளில் நாம் அடக்கலாம். ஒரு வகை சத்ருக்களின் பலத்தைக் குறைக்கும் வேலைகளில் ஈடுபடவேண்டும். சில சத்ருக்களைப் பிடித்துக் கொண்டு வந்து சித்ரவதை செய்தால் வழிக்கு வந்துவிடுவார்கள். ஆனால், பாண்டவர்களை மட்டும் ஒழித்துக்கட்டிவிட வேண்டும். அதுதான் ஒரே சரியான உபாயம்”
துரியோதனன் மாமன் சகுனிய ஆதரிப்பது போல பார்த்தான். துரியோதனன் எவ்வழியோ அவனது தம்பிமார்கள் அவ்வழியே.
“துரியோதனா! நாம் பாண்டவர்களைப் பிடிப்பதற்கு இதுதான் சரியான சமயம். இதுதான் சிறந்த இடம் கூட. அந்தத் துருபதன் பராக்கிரமும் சைனியமும் குறைச்சலாக இருக்கிறவன். சேதி தேசத்தரசனான சிசுபாலன் துருபதனின் நண்பன். அந்த யாதவர்கள் பாண்டவர்கள் ஜீவித்து இருப்பதை அறியாதவர்கள். இப்போதே பாண்டவர்களை வதம் செய்துவிட வேண்டும். அரக்கு மாளிகையின் தீநாக்குகளில் இருந்து தப்பித்த அவர்களை இம்முறை விடக்கூடாது. உடனே பாஞ்சாலம் நோக்கிப் படையெடுப்போம். காலம் கனிந்திருக்கிறது. இது என்னுடைய அபிப்ராயம்”
அப்போது ஸோமதத்தனின் புத்திரன் ஸௌமதத்தி எழுந்து அவையோர் அதிசயிக்கும்படி சில சிலாக்கியமான வார்த்தைகள் பேசினான்.
“ராஜ்யாங்கங்கள் ஏழு. அரசன், அமைச்சன், மித்ரன், பொக்கிஷம், தேசம், துர்க்கம் (அரண்), படை. இவைகளை தன் பக்கத்திலும் எதிராள் பக்கத்திலும் இடத்தையும் காலத்தையும் பரிசோதித்து யுத்தத்தில் இறங்க வேண்டும். சத்ருவானவன் காமம் மற்றும் சூதாட்டம் போன்றவற்றில் ஈடுபடும்போது அவனை எதிர்க்க வேண்டும். ஆனால் பாண்டவர்கள் நற்செய்கைகளினால் ஜனங்களுக்குப் பிரியமானவர்களாக இருக்கிறார்கள். அர்ஜுனன் தனது வடிவத்தினாலேயே அனைவரின் கண்களையும் மனதையும் கவர்கிறான். யுதிஷ்டிரர் காலமறிந்து நடக்கிறார். பாண்டவர்களுக்காக கிருஷ்ணர் இருக்கிறார். இந்திராதி தேவர்களால் கூட அவர்களை ஜெயிக்கமுடியாது. ”
அவை முழுவதும் அவன் பேச்சைக் கேட்டுக்கொண்டிருந்தது. ஏற்கனவே ஸ்வயம்வரத்தில் தோற்ற துரியோதனனின் முகம் சிவந்து கொதிப்படைந்திருந்தான். கண்களில் நெருப்பு பறந்தது. ஸௌமதத்தி தொடர்ந்தான்.
“நான் சொல்வது உங்களில் எவருக்கும் பிடிக்காமலிருக்கலாம். இருந்தாலும் உங்கள் நன்மைக்காக மேலும் பேசுகிறேன். உயரமான கோபுரங்களினாலும் அகழிகளாலும் மதில்களாலும் இந்த நகரம் காப்பாற்றப்பட்டிருக்கிறது. யந்திரங்களும் ஆயுதங்களும் மருந்துகளும் நிரம்பிய கோட்டை அது. மதில்சிகரங்களில் சதக்னிகள் (பீரங்கிகள்) தயார் நிலையில் இருக்கின்றன. கற்கட்டும் மதிலும் பிரகாரங்களும் பின்னர் மதில்களும் அவர்களுக்கு தற்காப்பாக இருக்கின்றன. ஜனங்களுக்கு மஹாத்மாவான துருபதனிடத்தில் அன்பு நிரம்பி வழிகிறது. பாண்டவர்களுடன் ஸ்நேகிதம் ஏற்படுத்திக்கொள்வோம். அதுதான் நல்லது”
கர்ணன் எழுந்திருந்தான். வெறுப்பாகச் சிரித்தான்.
“ஸௌமதத்தி! நீதி சாஸ்திரங்கள் பேசுகிறாய். இதை நான் ஒத்துக்கொள்கிறேன். சேனையுடன் நிற்பது அழகல்ல. ஓடிச்சென்று மதிலை இடியுங்கள். அகழியில் புற்களையும் கழிகளையும் போட்டு தூர்வாரி விடுங்கள்.”
ஒருபக்கம் வீரர்கள் நின்றுகொண்டிருந்தார்கள். அவர்களைப் பார்த்து ஊக்கமூட்டும் விதத்தில் கர்ணன் பேசினான்.
“எதிரிகளின் யானை குதிரை வீரர்கள் இவற்றை எவன் கொல்வானோ அவனுக்கு தனம் பரிசளிக்கப்படும்.”
அது என்ன பரிசு என்று வீரர்களின் கண்கள் கர்ணனையே குத்தியிருந்தன.
“ஒரு யானைக்கு பதினாயிரம் பொன். ஒரு குதிரைக்கும் காலாட்படை வீரனுக்கும் ஐயாயிரம் பொன். சிறுவர்கள் முதிந்தவர்கள் மேல் அம்பு போடாதீர்கள். நாம் பகைவரை வெல்வோம். காற்று நம் திசையிலேயே நடக்கிறது. பக்ஷிகள் நற்சகுனமாகவே பேசுகின்றன. வாருங்கள் தாக்குதல் செய்வோம்”
பெரும் சேனையாகப் புறப்பட்டு துருபதனின் கோட்டை வாசலை அடைந்தார்கள். ஜயத்ரதன், கர்ணன், துச்சாசனன், துரியோதனன் என்று மஹாரதர்கள் அந்த குறும்படையை தலைமை தாங்கினார்கள். துருபதனும் அவனது புத்திரர்களான த்ருஷ்டத்யும்னன் சிகண்டி சித்ரகேது ஸுகேது த்வஜகேது போன்றோர் கர்ஜனையுடன் களத்தில் குதித்தார்கள்.
துருபதன் வெண்மை விரும்பி. வெள்ளைத் தலைப்பாகை, வெள்ளைக் கொடி, வெள்ளைக் குதிரைகள், வெண் குடை என்று சூரியனுக்கு ஒப்பாக ஜொலித்தான். பாண்டவர்கள் வில்லோடும் அம்போடும் வெண்மையான ரதங்களில் ஏறி கௌரவர்களைத் தாக்கப் புகுந்தார்கள். அவர்களது வேகத்தைக் கண்டு அவர்களது சேனையில் உள்ளவர்களுக்கு உள்ளத்தில் உதறல் எடுத்தது. அர்ஜுனனின் பாணங்கள் அவர்களது சேனையை சிதறடித்தது.
பீமனின் சாரதியையும் தேர்க் குதிரைகளையும் கௌரவாதிகள் கொன்றார்கள். ரதத்திலிருந்து குதித்து இறங்கிய பீமஸேனன் கையில் கத்தியை எடுத்துக்கொண்டு எதிர்ப்படும் தலைகள் எல்லாவற்றையும் தரையில் சரித்தான். இரு சைனியங்களூம் சம பலத்தில் மோதிக்கொண்டது போல தோன்றியது. இழப்பு இரு இடத்திலும் இருந்தது.
அப்போது கர்ணன் வில்லெடுத்து அர்ஜுனன் பக்கம் வந்தான். ஒன்றிரண்டு பாணங்களினால் அர்ஜுனனை சீண்டினான். பதிலுக்கு கோபம் கொண்ட அர்ஜுனன் அவனைக் கொல்வதற்கு வஜ்ராயுதத்துக்கு ஒப்பாக மூன்று பாணங்களை எய்தான். அப்பாணங்களினால் அடிக்கப்பட்ட கர்ணன் தேரில் சாய்ந்துவிட்டான். உடனே அந்த சாரதி தேரை விரைவாக ஓட்டிக்கொண்டு சென்றுவிட்டான். கர்ணன் தோற்றதைக் கண்ட துரியோதனனுக்கு பீதி கிளம்பியது.
தூரத்தில் வீரர்களை துவம்சம் செய்துகொண்டிருந்த பீமஸேனன் துரியோதனனைப் பார்த்துவிட்டான். அவனுக்கு அரக்கு மாளிகை ஞாபகம் வந்து வெறி கிளம்பியது. அந்த போர் புரியும் இடத்தில் இருந்த ஐம்பதுதோள் உயரமுள்ளதாக நிற்கின்ற பெரிய மரம் ஒன்றை வேரோடு பிடிங்கி எடுத்துக்கொண்டு படைகள் சண்டையிடும் இடத்திற்குள் புகுந்தான். அந்த போர்வீரர்கள் நடுக்கமுற்று பயந்து தோற்று புறமுதுகிட்டு ஓடினார்கள்.
பயந்து ஓடியவர்களை பாண்டவர்கள் விரட்டவில்லை. தங்களுக்குள் சிரித்துக்கொண்டார்கள். ஜனங்கள் ஜயகோஷமிட்டு அவர்களை மீண்டும் நகரத்திற்குள் அழைத்துச் சென்றார்கள்.
பாண்டவர்களிடம் தோற்று ஹஸ்தினாபுரம் திரும்பும் கர்ணன் ஜயத்ரதன் கர்ணன் துரியோதனன் சகுனி போன்றோர் பேசிக்கொண்டது வீரர்களில் சிலருக்கு சிரிப்பை வரவழைத்தது.
“பாண்டவர்கள் நற்தவம் செய்திருக்கிறார்கள். அதனால்தான் ஜெயித்தார்கள்”
“இல்லையில்லை. அந்த திரௌபதி கணவர்களை காக்கும் பொருட்டு நோன்பு நோற்றாள்”
“ஊஹும். அந்த துருபதனும் அவர்களது புத்திரர்களும் பாண்டவர்களைக் காப்பாற்றிவிட்டார்கள்”
இங்கே பாஞ்சால நகரத்தினுள் பிரவேசித்த பாண்டவர்கள் குதிரைப் படை ஆட்கள் இருவரை அருகே அழைத்து “கிருஷ்ணனிடம் நாங்கள் நலமாக இருப்பதாகச் சொல்லுங்கள்” என்று அனுப்பினார்கள்.
“அனைத்தும் நான் அறிவேன்” என்று கண்களை மூடித் திறந்து சொன்னார் ஸ்ரீகிருஷ்ணர். பின்னர் ரதத்தைப் பூட்டி பாஞ்சால நகரத்திற்கு வந்தார். மங்கள வாத்தியங்கள் ஒலிக்க துருபதன் கோட்டை வாசலுக்கு வந்து அழைத்துப் போனான். நேரே அரண்மனை சென்று அத்தையாகிய குந்திக்கு நமஸ்காரம் செய்தார். திரௌபதிக்கு ஆடை ஆபரணங்கள் தந்தார். அவருடன் வந்திருந்த யாதவர்கள் பாஞ்சால தேசத்தில் தங்கி மகிழ்ந்திருந்தார்கள்.
**
பாண்டவர்கள் அந்த யுத்தத்தில் ஜெயித்தது, பிராமண வேஷமணிந்து திரௌபதியை ஸ்வயம்வரத்தில் வரித்தது போன்றவற்றால் துரியோதனன் உள்ளுக்குள் புழுங்கிக்கொண்டிருந்தான். மாமன் சகுனியையோ நண்பன் கர்ணனையோ பார்ப்பதற்குக்கூட அவனுக்கு வெட்கமாகயிருந்தது. அந்த சமயத்தில் துச்சாசனன் வந்து அவனிடத்தில் பேசினான்.
“குந்தி புத்திரர்களால் அரசர்களான நம் சிரசின் மேல் இடக்கால் வைக்கப்பட்டிருக்கிறது. அரக்கு மாளிகையிலிருந்து எப்படித் தப்பித்தார்கள்?”
துரியோதனன் அவனை எரித்துவிடுவது போல பார்த்தான். உடனே மாமன் சகுனியை நோக்கிப் பேசினான்.
“மாமா! புரோசனனை நம்பி நாம் கெட்டோம். அவனும் சேர்ந்து அந்தத் தீயில் வெந்து போனான். மாமா.. நம்மைவிட அவர்கள் புத்திசாலிகள். அரக்கு மாளிகையில் தப்பித்த பிறகு அவர்களுக்கு இப்போது மரணத்தில் பயமில்லை”
துச்சாசனனை அடித்து வெளுத்துவிடும் கோபம் துரியோதனனுக்குப் பிறந்தது. தம்பியைத் தாங்கிக்கொண்டு அரண்மனைக்குள் சென்றுவிட்டான்.
துரியோதனாதிகள் தோற்றுத் திரும்புகிறார்கள் என்ற செய்தி விதுரரின் காதுகளுக்கு எட்டியது. உடனே தனது கிரஹத்திலிருந்து கிளம்பி திருதராஷ்டிரனைக் காண விரைந்து வந்தார்.
“அரசனே! நல்ல காலம். கௌரவர்கள் விருத்தியடைகிறார்கள்” என்றார். அவர் அப்படி விஷமமாகச் சொன்னதை தனது மகன் துரியோதனன் திரௌபதியை ஸ்வயம்வரத்தில் மணந்து அழைத்துக்கொண்டு வருகிறான் என்று நினைத்த குருடனான திருதராஷ்டிரன் உடனே
“நல்லகாலம். நல்ல காலம். அந்த கிருஷ்ணையை அழைத்து வா. அவளுக்கு எல்லா ஆபரணங்களையும் எடுத்துப் பூட்டிக்கொள்ளக் கொடுங்கள்” என்று துரியோதனனுக்குக் கட்டளையிட்டான். உடனே விதுரர் குறுக்கே புகுந்தார்.
“கௌரவர்கள் என்ற பொதுச் சொல்லினால் உன் புத்திரர்கள் ஜெயித்துவிட்டார்கள் என்று எண்ணாதே! பாண்டவர்கள் சிறப்பிக்கப்பட்டார்கள். திரௌபதியை அடைந்து துருபதனால் பூஜிக்கப்பட்டு சந்தோஷமாக இருக்கிறார்கள்”
மனத்தினுள் ஏமாற்றமும் பொறாமையும் ஊற்றாகக் கிளம்பினாலும் அதை மறைத்து உத்திரத்தைப் பார்த்து நின்றிருந்த திருதராஷ்டிரன் “நல்லகாலம். நல்லகாலம். பாண்டவர்கள் ஜீவித்திருக்கிறார்களா? ஆஹா! உன் வாக்கு அமிர்தமாக என் செவிகளை நிறைக்கிறதே விதுரா! துருபதன் உபரிசரவஸுவின் மத்ஸ்ய குலத்தில் பெரியவன். மஹாராஜன். அவர்களும் பாண்டுபுத்திரர்களும் சேர்ந்திருப்பது எனக்கு மகிழ்ச்சியளிக்கிறது. விதுரா! பாண்டவர்கள் தீக்கிரையாகினர் என்ற செய்தி கேட்டதிலிருந்து நான் உண்ணவுமில்லை. உறங்கவுமில்லை. அவர்கள் துணையில்லாமல் சிறகொடிந்த பறவை போலக் கிடந்தேன்”
அப்படிப் பேசும் திருதராஷ்டிரனை விதுரர் மனதிற்குள் ஏளனம் பொங்கப் பார்த்தார். துரியோதனனுக்கு கோபம் உச்சியில் ஏறியது. விதுரர் திருதராஷ்டிரன் அருகில் வந்து அவனது தோளைத் தொட்டார். தொட்ட கையைத் தொட்டுப் பார்த்து விதுரன் என்றறிந்து கொண்ட திருதராஷ்டிரன் விதுரன் என்ன சொல்வானோ என்று கண நேரம் அமைதி காத்தான்.
“திருதராஷ்டிரா! இதே எண்ணத்தோடு இன்னும் நூறு வருஷ காலம் இரு!!” என்று சொல்லிவிட்டு விடுவிடுவென்று நடந்து அரண்மனையை விட்டு வெளியேறி தனது இல்லம் சென்றார்.
அவர் அந்த அறையை விட்டு அகர்ந்ததும் துரியோதனன் தனது குருட்டுத் தகப்பனை வறுத்து எடுத்துவிட்டான்.
“விதுரர் எதிரில் சொல்லவேண்டாம் என்றிருந்தேன். நம்முடைய எதிரிகளின் அபிவிருத்திக்கு பாடுபடுகிறீரா? உம்மையெல்லாம்......” என்று பற்களை நறநறவென்றுக் கடித்தான். எலும்புகள் உடைவது போல அந்த சத்தம் திருதராஷ்டிரனுக்குக் கேட்டது.
“மகனே! விதுரன் எதிரில் அப்படி நடந்துகொண்டேன். பாண்டவர்களின் மேல் அன்பினால் அல்ல. எது சரியென்று நீ சொல் துரியோதனா. ஏ கர்ணா நீயும் சொல். அதைச் செய்வோம்” என்றான் கைகளை காற்றில் துழாவியபடியே. வேண்டா வெறுப்பாக அதைப் பற்றிக்கொண்ட துரியோதனன் பேசினான்.
“தந்தையே! என் கைவசம் சில யோசனைகள் இருக்கிறது. இதையெல்லாம் கொண்டு நாம் ஜெயிக்கப்பார்ப்போம்”
“என்ன துரியோதனா? சொல்”
“சமர்த்தர்களாகவும் நம்பிக்கைக்கு உரியவர்களாகவும் இருக்கும் பிராம்மணர்கள் சிலரைக் கொண்டு குந்தி புத்திரர்களுக்கும் மாத்ரி புத்திரர்களுக்கும் மித்ரபேதம் உண்டு பண்ணுவோம்.”
“ஊஹும். சரிப்படாது”
“துருபதனுக்கு பெரும் திரவியக் குவியல் கொடுப்போம். அவன் அதில் மயங்கியபோது யுதிஷ்டிரனை வெளியில் விரட்டச் சொல்வோம்”
“பெண்ணைக் கொடுத்திருக்கிறான். செய்ய மாட்டான்”
“திரௌபதியை அவர்களிடமிருந்து பிரிப்போம். விரோதம் ஏற்படுத்துவோம்”
“கடினம்”
“பீமஸேனனைக் கொன்றுவிடுவோம். அவந்தான் அவர்களிடத்தில் பலசாலி. அவனை அழித்துவிட்டால் மற்றவர்களை மாய்த்துவிடலாம்”
“அவனை நெருங்கவே முடியாது”
”அழகிய ஸ்திரீகளைக் கொண்டு பாண்டவர்களை மயக்கச் சொல்வோம். இதில் திரௌபதி வெறுப்படைவாள்”
“திரௌபதிக்கு மேல் அழகி யார்?”
எல்லாவற்றிர்க்கும் பதில் இருந்தது. சலிப்படைந்த துரியோதனன் கர்ணனைப் பார்த்து “நீ என்ன நினைக்கிறாய்?” என்று கேட்டான்.
“துரியோதனா! உன்னுடைய இது போன்ற தந்திரங்கள் அவர்களிடம் செல்லாது. இங்கே சிறுவயதில் உன்னுடன் இருந்தபோதே அவர்களை உன்னால் எதுவும் செய்யமுடியவில்லை. இப்போது வளர்ந்துவிட்டார்கள். தொடமுடியாத உயரத்திற்கு வந்துவிட்டார்கள். “
“வேறு என்னதான் செய்ய முடியும் என்கிறாய்?” கோபத்தில் வெளியே சிதறிய வார்த்தைகளில் வெறுப்பு பீறிட்டது.
”யுத்தத்தில் வெல்லவேண்டும். பாண்டவரக்ளுக்கு ராஜ்ஜியம் பெற்றுத் தருவதற்காக யாதவ சேனையை அழைத்துக்கொண்டு கிருஷ்ணன் பாஞ்சாலம் செல்வான். அதற்கு முன்னதாக நாம் படையெடுத்துச் சென்று துருபதனையும் பாண்டவர்க்ளையும் அடிக்கவேண்டும். க்ஷத்ரியனுக்கு பராக்கிரமம்தான் சுயதர்மம். பரதசக்ரவர்த்தி பராக்கிரமத்தால் பூமி ஆண்டார். இந்திரன் பராக்கிரமத்தால் மூன்று லோகங்களையும் ஆண்டான். நாமும் பராக்கிரமத்தால் ஆள வேண்டும்.”
திருதராஷ்டிரன் இவ்விடத்தில் கர்ணனைப் புகழ்ந்தான்.
“சிறந்த வீரனான உன்னிடத்தில் இப்பேச்சு வருவது அதிசயமில்லை. ஆயினும் பீஷ்மர், துரோணர் விதுரன் நீங்கள் இருவரும் சேர்ந்து நமக்கு எது ஸௌக்கியம் என்பதை ஆலோசனை செய்யுங்கள்” என்ற திருதராஷ்டிரன் பீஷ்மர் மற்றும் பிற மந்திரிகளையும் வரவழைத்து ஆலோசனையை ஆரம்பித்தான்.
துரியோதனன் தனது தந்தையின் முட்டாள்தனமான போக்கைப் பார்த்து வாய் பேச முடியாமல் கல்லாய் அமர்ந்திருந்தான்.

வியாஸர் காட்டிய இந்திரர்கள்




சாப விமோசனத்தினால் சோகம் தோய்ந்த முகத்தோடு இருந்த நான்கு இந்திரர்களும் சங்கரரிடம் பின்வருமாறு முறையிட்டார்கள்.
“துர்லபமான சாபவிமோசனம் எங்களுக்கு மனுஷ்ய லோகத்தில் விதிக்கப்பட்டிருக்கிறது. ஆனால் நாங்கள் நேரடியாக மனுஷ்யர்களின் கர்ப்பத்திலிருந்து ஜனிக்க மாட்டோம். ஆனால் தர்மன், வாயு, இந்திரன், அசுவினி தேவர்கள் ஆகிய தேவர்களே எங்களை ஒரு தாயினிடத்தில் கர்ப்பாதானம் செய்யவேண்டும்”
புதிதாக அங்கு வந்திருந்த இந்திரன் ஈஸ்வரனிடம் “நான் என்னுடைய வீரியத்தினால் பிறப்பவனை இவர்களுக்கு ஐந்தாமவனாகக் கொடுப்பேன்” என்றான்.
அந்த ஐந்து இந்திரர்களுள் முதலாமவன் விஸ்வபுக்; இரண்டாமவன் பூததாமன்; மூன்றாமவன் பராக்கிரமசாலியான சிபிச்சக்கரவர்த்தி, நாலாமவன் சாந்தி; ஐந்தாமவன் தேஜஸ்வி. ராஜலக்ஷ்மியாகிய அந்த பெண்ணை அவர்களுக்கு பாரியையாக பூலோகத்தில் கொடுத்தார்.
பிறகு அந்த ஈஸ்வரர் அவர்களுடன் சேர்ந்து திருமாலிடம் சென்றனர். அளவற்ற அவதாரங்கள் எடுக்கும் அவரும் ஈஸ்வரர் சொன்னபடியே நியமித்தார். தேவர்களில் முதன்மையானவனான நரன் என்னும் தேவதையை இந்திரனுக்கு ஜனிக்கும்படியான ஜிஷ்ணு என்பவனாக நிச்சயித்தார் நாராயணர். அவனே அர்ஜுனன்.
அவர்கள் அனைவரும் கூடியிருக்கும் பொழுது திருமால் தலையிலிருந்து ஒரு வெண்மையான கேசமும் ஒரு கறுப்பான கேசத்தையும் எடுத்தார். அந்த இரண்டு கேசங்களும் தேவகி ரோகிணி என்னும் இரண்டு யாதவகுலத்து ஸ்த்ரீ கர்ப்பங்களில் பிரவேசித்தன. அந்த இரண்டு கேசங்களில் வெண்மையாக இருந்த ஒன்று பலராமனாகவும் கறுத்த நிறமான கேசம் கேசவனாகவும் பிறந்தது.
வியாஸரின் இந்தக் கதையை ஆடாமல் அசையாமல் உட்கார்ந்து கேட்டுக்கொண்டிருந்தான் துருபதன். திருஷ்டத்யும்னனை இதைச் சொல்வதற்கு முன்னர் வெளியே அனுப்பியிருந்தார் வியாஸர்.
“துருபதா! அந்த மலையின் குகையில் இந்திர ரூபத்துடன் அடைக்கப்பட்டவர்களே இங்கே வீரர்களான பாண்டவர்களாக இருக்கிறார்கள். திவ்யரூபத்துடன் இருக்கும் இந்த திரௌபதி அவர்களுக்காக முன்னரே நிச்சயிக்கப்பட்டவள்தான். இவளுடைய ரூபம் சந்திரனையும் சூர்யனையும் போல ஒளியுள்ளதாக இருக்கிறது. தேகமணம் வெகுதூரம் வீசுகிறது. உன் மேல் எனக்கிருக்கும் அன்பின் காரணமாக உனக்கு சிறிது நேரம் திவ்ய திருஷ்டியைத் தருகிறேன். தேவ ரூபத்துடன் கூடிய பாண்டவர்களை நீ காண்பாயாக”
வியாஸர் இப்படிச் சொன்னதும் துருபதனுக்கு திவ்ய திருஷ்டி சித்தித்தது. வியாஸருக்கு வலதுபுறம் இருந்த சுவற்றில் நேரில் காண்பது போலக் காட்சிகள் ஓடியது. துருபதனுக்கு மட்டும் பிரத்யேகமாகத் தெரிந்தது. அதில்...
தேவதேகங்களோடு க்ரீடமும் பொன்னாடைகளும் ஆபரணங்களும் தரித்த திவ்ய புருஷர்கள் ஐவர் இருந்தார்கள். வாடாத மலர் மாலைகள் தரித்திருந்தார்கள். இங்கே பிராமண ரூபத்தில் மிகவும் எளிமையாக அமர்ந்திருந்தவர்கள் பொற் கிரீடங்களை அணிந்துகொண்டு சுந்தர புருஷர்களாக காட்சியளித்தார்கள். அதில் அர்ஜுனனும் இருக்கக்கண்டு ஆனந்தமடைந்தான் துருபதன்.
இது தேவ மாயை. தனது சிற்றறிவுக்கு எட்டாது என்று உணர்ந்த துருபதன் ராஜலக்ஷ்மியாகிய அந்த திரௌபதியை பாண்டவர்களுக்கு விவாஹம் செய்துகொடுக்க முடிவுசெய்துவிட்டான்.
தனது ஆசனத்திலிருந்து எழுந்து வியாஸர் இருக்குமிடத்திற்கு ஓடினான். அவரது காலடியில் பொதேர் என்று விழுந்து அவரது பாதசரணங்களைப் பிடித்துக்கொண்டான். அவர்மேல் எழுந்த மரியாதையிலும் பக்தியிலும் அவன் கண்ணில் உருவான கங்கையைக் கொண்டு அவரது பாதத்தை கழுவினான்.
“ரிஷி ஸ்ரேஷ்டரே! இப்படி காண்பிப்பது உமக்கு புதுமையல்லவே!” என்று மீண்டும் மீண்டும் நமஸ்கரித்தான் துருபதன்.
“ராஜனே! இதில் நீ திருப்தியடைந்திருந்தாலும்... பூர்வகாலத்து ராஜரிஷிகளின் பூர்வ சரித்திரத்தையும் சொல்கிறேன் கேள்”
இப்புவியில் நிதந்து என்ற ராஜரிஷியொருவன் இருந்தான். அதிவீரன். பராக்கிரமசாலி. அவனுக்கு ஐந்து புத்திரர்கள். இனியன செய்வார்கள். இன்சொல் பேசுவார்கள். தர்மம் தெரிந்தவர்கள். சூரர்கள். வேள்விகள் புரிபவர்கள். ஸால்வேயன், சூரஸேனன், ஸ்ருதஸேனன், திந்து ஸாரன், அதிஸாரன் ஆகிய அந்த ஐந்து வீரர்களும் வில்லாளிகள்.
சிபியின் புதல்வி பௌமாஸ்வி என்பவள் இந்த ஐந்து ராஜபுத்திரர்களையும் ஸ்வயம்வரத்தில் வரித்தாள். அவளே அந்த ஐந்து வீரர்களுக்கும் பாரியையாக இருந்தாள். நிதந்து புத்திரர்களுக்கு ஐந்து புதல்வர்களை ஐந்து காலங்களில் ஈன்றாள். அப்படிப் பிறந்த பௌமாஸ்வியின் புத்திரர்களுக்கு பிறந்தவர்களின் வம்சத்திற்கு ஸால்வேயர்கள், சூரஸேனர்கள், ஸ்ருதஸேனர்கள், திந்துஸாரர்கள் மற்றும் அதிஸாரர்கள் என்று பெயர் பெற்றனர்.
இப்படி பௌஸ்மாவி அநேகருக்கு ஒரு மனைவியாக பூமியில் பெயர் பெற்றிருந்தாள். அந்த பௌஸ்மாவி போலவே உன் மகளான கிருஷ்ணையும் ஐவருக்காக விதிக்கப்பட்டிருக்கிறாள்.
பூர்வ ஜென்மத்தில் அவள் ஒரு ரிஷிகன்னிகை. அழகாகயிருந்தும் கணவன் வாய்க்காததால் கடுந்தவம் புரிந்து சங்கரரைத் தோன்றச் செய்தாள். அவரிடம் ”பதியைக் கொடும்” என்று ஐந்து முறை வரம் கேட்டாள். அவரும் “அப்படியே ஆகட்டும்:” என்று சொல்லி மறைந்தார். ஆகவே அவளுக்கு ஐந்து பதிகள் விதிக்கப்பட்டிருக்கிறார்கள். இவளேதான் நாளாயனியாகப் பிறந்து மௌத்கல்யரை அடைந்து பின்னர் சிவபெருமானைத் துதித்து அவரிடம் வரம் பெற்றவள். இது தேவ ரஹஸ்யம். ஆகையால் உனக்கு மட்டும் சொன்னேன். இதன் ரஹஸ்யத்தை நீ காக்க வேண்டும். தேவர்களுடைய ராஜலக்ஷ்மிதான் உனது யாகத்தில் பிறந்தாள். அதுவும் பாண்டவர்களுக்காகத்தான். ஐவருக்கு ஒரு மனைவியாக பிரம்மதேவரால் படைக்கப்பட்டிருக்கிறாள். இனிமேல் உன் விருப்பம் போலச் செய்”
வியாஸர் எழுந்துவிட்டார்.
“மஹரிஷியே! சங்கரரிடத்திலேயே இப்படி இவள் வரம் வாங்கியமையால் நான் என்னச் சொல்லக் கடவது? விதியினால் இது இப்படிச் செய்யப்படுகிறது. நானென்ன நடுவில் செய்வது? ஈஸ்வரரால் இது விதிக்கப்பட்டிருக்கிறது. தர்மமோ அதர்மமோ என்னுடைய தவறு ஏதுமில்லை. இவர்கள் நிச்சயித்தப்படியே பாணிக்கிரஹணம் செய்துகொள்ளட்டும்”
என்று சொல்லிவிட்டு அவரை வணங்கினான் துருபதன்.
வியாஸர் பின்னர் அவனை எச்சரிக்கும்படி பேசினார்.
“வெறும் மானிடர்களின் விவாஹத்தில் இது நியாயமாகாது. இவர்கள் தேவர்கள். அவளும் தன் முன் ஜென்ம தவத்தால் ஐவருக்கு பாரியையானாள். தெய்வத்தன்மையுள்ள திரௌபதி மற்றும் பாண்டவர்கள் போல உள்ளவர்களுக்கே இந்த விவாஹம் சாஸ்திர விஹிதமாகும்.”
இதன் பின்னர் தனியாக அமர்ந்திருந்த துருபதனும் வியாஸரும் குந்தியும் அவளது புத்திரர்களும் திருஷ்டத்யும்னனும் அமர்ந்திருந்த இடத்திற்கு வந்தார்கள்.
கிருஷ்ணத்வைபாயனர் யுதிஷ்டிரரின் கையைப் பிடித்துக்கொண்டு “ஜ்யேஷ்டனே! புஷ்ய நக்ஷத்திரமான இந்த சுபதினத்தில் க்ருஷ்ணையைப் பாணிக்கிரஹணம் செய்துகொள்” என்றார்.
பின்பு பீமன் மற்றும் அர்ஜுனாதிகளைப் பார்த்து “தருமனுக்குப் பின்னர் நீங்களும் முறையே திரௌபதியின் கரம் பற்றிக்கொள்ளுங்கள்”
வியாஸரின் இந்த வாக்கு அவர்களுக்கு அமுதானது. திரௌபதியை மங்கள ஸ்நானம் செய்வித்துப் பட்டாடைகளையும் ஆபரணங்களையும் பூட்டுவதற்காக அழைத்துச்சென்றார்கள். ராஜாவின் ஸ்நேகிதர்களும் பிராமணர்களும் மந்திரிப்பிரதானிகளும் விவாஹம் பார்க்கக் குவிந்தார்கள். ஐவரும் மங்கள ஸ்நானம் செய்துவிட்டு புத்தாடைகளையும் அங்கமெங்கும் வளையல்கள் மற்றும் கவசங்களை அணிந்துகொண்டும் ராஜகம்பீரத்தோடு அங்கே வந்தார்கள்.
தௌமியர் அக்னி வளர்த்தார். கிருஷ்ணையின் கரத்தை தர்மரிடத்தில் கொடுத்தார். வேதத்தில் கரைகண்ட தௌமியர் பாணிக்கிரஹணம் செய்துகொண்ட யுதிஷ்டிரரையும் க்ருஷ்ணையையும் அக்னியை வலம் வரச் செய்தார். அப்போது விண்ணிலிருந்து பூமாரி பொழிந்தது. மங்கள வாத்தியங்கள் முழங்கின.
”அரசே! இனி மற்ற ராஜகுமாரர்களும் இதுபோல பாணிக்கிரஹணம் செய்துகொள்ளலாமே” என்று துருபதனைப் பார்த்துக் கேட்டார் தௌமியர்.
”அப்படியே செய்யுங்கள்” என்றான் துருபதன்.
பின்னர் ஒவ்வொரு நாளும் ஒவ்வொருவராக கிருஷ்ணையைப் பாணிக்கிரஹணம் செய்துகொண்டார்கள்.
அங்கு ஒரு ஆச்சரியம் நிகழ்ந்தது. மனிதர்களுடைய விவாஹம் அல்ல அது என்பதை அது பறைசாற்றியது.
ஒவ்வொருநாள் கடந்த பின்னர் கிருஷ்ணை மீண்டும் கன்னித்தன்மை அடைந்தாள். கணவனின் மூத்த சகோதரனிடத்தில் (அர்ஜுனன் கணவன் என்று வைத்துக்கொண்டால்) கணவனும் மாமனும் என்னும் எண்ணத்தையும், கணவனின் கடைத் தம்பியினிடத்தில் கணவனும் மைத்துனனும் என்ற எண்ணத்தையும் இதற்கிடையில் இருப்பவர்களிடம் கணவன் மாமன் மைத்துனன் என்னும் மூவகை எண்ணத்தையும் வைத்திருந்தாளாம்.
விவாஹம் முடிந்ததும் துருபதன் சீர் நிறையச் செய்தான். பொற்கடிவாளங்கள் போட்டு நான்கு குதிரைகள் பூட்டிய நூறு ரதஙக்ள், பொற்குன்றுகள் போல பொன்னால் தாமரைப்பூ வடிவான பொன் அம்பாரிகள் போட்ட நூறு யானைகள், ஆடை ஆபரணங்கள், நூறு தாதிப்பெண்கள் என்று தாராளமாகச் செய்தான். விவாஹத்திற்குப் பின்னர் ரத்னங்கள் நிரம்பிய அந்த பாஞ்சால நகர மாளிகையில் சந்தோஷமாக இருந்தனர்.
குந்திக்கு கிருஷ்ணை தினமும் நமஸ்காரம் செய்வாள். துருபதன் அளித்த தாதிப்பெண்கள் பணிவிடைகள் செய்ய ராஜமாதாவாக வலம் வந்தாள் குந்தி. திரௌபதியை வாழ்த்தி பல உபதேசங்கள் செய்தாள்.
“இந்திரனுக்கு இந்திராணி போலவும், அக்னிக்கு ஸ்வாஹா தேவி போலவும், சந்திரனுக்கு ரோஹிணி போலவும், நளனுக்கு தமயந்தி போலவும், குபேரனுக்கு பத்ராதேவி போலவும், வசிஷ்டருக்கு அருந்ததி போலவும் திருமாலுக்கு ஸ்ரீதேவி போலவும் நீ உன் கணவர்களுக்கு இருப்பாயாக. தீர்க்காயுள் உள்ள புத்திரர்களைபொ பெறுவாயாக. யாகத்திற்குரிய பத்னியாகவும் பதிவிரதையாகவும் இருப்பாய். நம்மைத் தேடி வந்த விருந்தினர்கள், முனிவர்கள், இளைஞர்கள், முதியோர்கள், பெரியோர்களை முறைப்படி ஆதரி. தர்மத்தில் அன்புள்ள நீ ராஜ்ஜாபிஷேகம் பெறுவாய்.”
அன்பாய் ஆசீர்வதித்த மாமியாரைக் கண்ட திரௌபதிக்கு கண்களில் ஜலம் கட்டியது. மீண்டுமொருமறை குந்திக்கு பாத வந்தனம் செய்யும் போது கண்ணீர்ச் சொட்டுகளினால் பாதத்தை ஈரமாக்கினாள்.
”இப்போது பட்டு உடுத்தின உன்னைக் கண்டு எப்படி சந்தோஷிக்கிறேனோ அதுபோலவே உனக்குப் புத்திரர்கள் பிறந்தவுடன் மகிழ்வேன்” என்றாள் குந்தி ஆனந்தக் கண்ணீர் வடித்துக்கொண்டே.
பாண்டவர்களுக்குத் திருமணம் ஆன பின்னர் ஸ்ரேயஸ்பதியான கிருஷ்ண பகவான் நிறைய பரிசுகளை அனுப்பினார். கோடிக்கணக்கான பொன் நாணயங்கள் தங்கக் கட்டிகள் விசித்திரமான பொன் ஆபரணங்கள், நூற்றுக்கணக்கான பாத்திரஙக்ள், பற்பல தேசத்து பணிப்பெண்கள், பத்ரங்கள் எனப்படும் யானைகள், உயர்ந்த குதிரைகள் என்று யுதிஷ்டிரரை அன்பு வெள்ளத்தில் திணற்டித்தார்.
மாளிகை முழுவதும் பரிசுப் பொருட்களோடு யுதிஷ்டிரரும் பீமனும் அர்ஜுனனும் நகுல சகதேவர்களும் மகிழ்ந்திருந்தார்கள். குந்திக்கும் துருபதனுக்கும் மன நிறைவு.
[வைவாஹிக பர்வம் முடிந்தது]

Friday, March 9, 2018

பாண்டவர்கள் ஜனனமும் பாண்டுவின் மரணமும்



பலவானாகிய பீமன் பிறந்தபிறகு பாண்டு உலகிலேயே சிறந்த மற்றொரு புத்திரனை உற்பத்தி செய்வதற்கு தகுந்த தேவதை யார் என்று சிந்தித்துக்கொண்டு காட்டில் ஒரு கற்பாறையில் அமர்ந்திருந்தான். மாத்ரியும் குந்தியும் இரு குழந்தைகளோடும் குடில் வாசலில் விளையாடிக்கொண்டிருந்தார்கள்.

பாண்டு குந்தியை அருகில் அழைத்தான். குழந்தைகளை மாத்ரியிடம் பார்த்துக்கொள்ளும்படி ஒப்படைத்துவிட்டு பாண்டுவிடம் வேகமாக வந்தாள்.
“மனிதனின் முயற்சியும் தெய்வத்தின் செயலையும் ஆதாரமாகக் கொண்டு இயங்குகிறது இந்த உலகம். காலாகாலத்திற்கு செய்யும் கருமங்களினால் தெய்வத்தின் செயல் கைக்கூடுகிறது. தெய்வங்களில் முதன்மையானவன் இந்திரன். அவன் சோர்வேயடையாதவன் என்றும் பராக்கிரமசாலி என்று கேள்விப்பட்டிருக்கிறோம். நாம் அவனை வேண்டுவோம். அவனால் உண்டாகும் புத்திரன் மிகச்சிறந்தவனாகயிருப்பான்.”
மஹரிஷிகளையும் சில பிராமணோத்தமர்களையும் கலந்து ஆலோசித்தான். பின்னர் குந்தியை கடும் நியமங்களோடு ஒரு வருஷகாலம் இருக்கச் சொன்னான். பின்னர் பாண்டு தானும் ஒற்றைக்காலில் நின்றுகொண்டு இந்திரனை நோக்கித் தவமிருந்தான். உதயம் முதல் அஸ்தமனம் வரை இப்படி ஒற்றைக்காலில் நின்று கொண்டு கடுமையான தியானம் செய்தான்.
ஒரு நாள் அந்திசாயும் நேரத்தில் அந்த காடே கோடி சூர்யபிரகாசமாக மாறியது. ஒற்றைக்காலில் நின்றுகொண்டிருந்த பாண்டுவின் முன் இந்திரன் தோன்றினான்.
“பாண்டு! மூன்று உலகங்களிலும் பெயர் பெறப்போகும் ஒரு தலைசிறந்த புத்திரனை நான் உனக்கு கொடுப்பேன்” என்று வாக்கு தத்தம் செய்தான்.
நியமங்களோடு குந்தி காத்திருந்ததின் பலன் கிடைத்தது என்று மகிழ்ந்தாள்.
“குணவதி குந்தியே! இந்திரன் உனக்கு அனுக்ரஹம் செய்து நாம் விரும்பியபடியான புத்திரனை தரப்போகிறான். தேவேந்திரனை அழை” என்று கேட்டுக்கொண்டான்.
இருகை கூப்பி துர்வாஸஸ் சொல்லிக்கொடுத்த மந்திரத்தைச் சொன்னாள். மனதில் இந்திரனை ஆவாஹனம் செய்தாள். இந்திரன் தோன்றினான். குந்தியுடன் தேவலோகம் போனான். சிறிது நேரத்தில் அர்ஜுனனை உண்டு பண்ணினான். பூர்வ பல்குனியும் உத்தரபல்குனியும் சேர்ந்த பகலில் பால்குன (பங்குனி) மாஸத்தில் பிறந்ததனால் அவன் பால்குனன் அல்லது பல்குனன் என்று பெயர்பெற்றான். அவன் பிறந்ததும் மிகக் கம்பீரமான ஒரு அசரீரீ வாக்கு விண்ணிலிருந்து ஒலித்தது.
“குந்தியே! கார்த்தவீர்யனுக்கு ஒப்பானவனும் சிவனுக்கு ஈடான பராக்கிரம் உடையவனும் தேவேந்திரனைப் போல ஜயிக்க முடியாதவனுமாகிய இந்தப் புத்திரன் உனக்கு நீங்காப் புகழை பெற்று உன் வம்சத்தை பெருமைப்படுத்தப் போகிறான். விஷ்ணு எப்படி ஆனந்தத்தை விருத்தி செய்வாரோ அதே போல விஷ்ணுவுக்கு ஒப்பான அர்ஜுனன் உன் மகிழ்ச்சியை அபிவிருத்தி செய்வான். சிறந்த பலமுள்ள இவன் தலைமையில் அரசர்களை ஜயித்து சகோதரர்களுடன் சேர்ந்து மூன்று அசுவமேதங்களை நடத்துவான். காண்டவ வனத்தை அழித்து அக்னிக்கு திருப்தியேற்படுத்துவான். சங்கரரை யுத்தத்தில் சந்தோஷப்படுத்தி அவரிடமிருந்து பாசுபதம் என்கிற அஸ்திரத்தை அடையப்போகிறான்.”
இப்படி பலவாறாக அப்போது பிறந்த அர்ஜுனனைப் பற்றி அசரீரீ ஒலிக்கும் போது ஆகாயத்தில் துந்துபி வாத்தியஒலி கேட்டது. தேவர்கள் பூமாரி பொழிந்தார்கள். கத்ருவின் புதல்வர்களாகிய நாகர்களும் வினதையின் புத்திரர்களான கருடன் முதலியவர்களும், கந்தர்வர்களும், அப்ஸரஸுகளும், பரத்வாஜர், கஸ்யபர், கௌதமர், விஸ்வாமித்ரர், ஜமதக்னி, வஸிஷ்டர், அத்ரி பகவான் என்று ஒரு பெரும் கூட்டமே வந்தது. அனைவரும் புஷ்பமாலைகளைத் தரித்திருந்தனர். அலங்காரங்களுடன் அவர்கள் கானம் செய்தார்கள். அதற்கு அப்ஸரஸ்கள் நர்த்தனம் ஆடினார்கள். மஹரிஷிகள் வேதம் சொன்னார்கள்.
இவையெல்லாம் பார்த்துக்கொண்டிருந்த பாண்டு மிகவும் மகிழ்ந்தான். அங்கு கூட்டம் கூட்டமாக குழுமியிருந்த தேவர்களை பூஜித்தான். அப்படி பூஜிக்கப்பட்ட தேவர்கள் பாண்டுவை ஆசீர்வதித்தார்கள்.
“பாண்டுவே! தேவர்களின் அனுக்ரஹத்தால் தர்மதேவதையின் அம்சமாக முதல் புத்திரன் பிறந்தான். வாயுவே பலசாலியான பீமனாய்ப் பிறந்திருக்கிறான். தேவேந்திரன் அனுக்ரஹஞ்செய்து அர்ஜுனனாகப் பிறந்தான். நீ தேவர்களுக்கே பிதாவாகிவிட்டாய். நீ புண்ணிய புருஷன். உனக்கு மேல் யாருமில்லை. பிதிர்களின் கடனிலிருந்து நீ விடுபட்டாய்”
பின்னர் அனைவரும் புறப்பட்டு தேவலோகம் சென்றடைந்தனர். மகிழ்ச்சிக்கடலில் மூழ்கினான் பாண்டு. தனிமையில் இருந்த குந்தியை அழைத்தான்.
“குந்தி! என்னுடைய மகிழ்ச்சிக்கு இப்போது எல்லையேயில்லை! அழகான புத்திரர்கள் வேண்டும் என்று நினைக்கிறேன்.” என்று சிரித்துக்கொண்டே அவள் கைகளைக் கோர்த்துக்கொண்டான்.
குந்தி கலவரமடைந்தாள்.
“நான்காம் புத்திரனை எந்த ஆபத்தர்மமும் விதிக்கவில்லை. இதற்குமேல் ஆசைப்படும் பெண் கற்பில்லாதவளாவாள். ஐந்தாம்புத்திரனை விரும்பினாள் வேசியாவாள். இதற்கு மேல் வேண்டாமே” என்று அவனிடம் கைக் கூப்பினாள்.
குந்திக்கும் காந்தாரிக்கும் புத்ரர்கள் பிறந்தபின் ஒரு நாள் மாத்ரி பாண்டுவிடம் ரஹஸ்யமாக “வீரரே! குந்தியே சிறந்தவள். நான் அவளுக்கு ஒரு படி கீழே தான். எனக்கு அதனால் வருத்தமில்லை. காந்தாரிக்கு நூறு பிள்ளைகள் பிறந்தது. எனக்கு துக்கமில்லை. நீங்கள் என்னை குந்திக்கு சமமாக மதிக்கிறேன் என்று சொன்னதால் கேட்கிறேன்... குந்திபோஜன் மகள் எனக்கும் அனுக்ரஹம் செய்தால்... உமக்கு இன்னமும் சந்ததி விருத்தியாகும்” என்றாள்.
பாண்டு நெருங்கி நின்ற மாத்ரியின் தலையைத் தூக்கினான். கண்களில் நீர் கட்டியிருந்தது. கண்ணிரைத் துடைத்தான்.
“குந்தியிடம் நான் கேட்பதற்கு மிகவும் அவமானமாக இருக்கிறது. என்னைப் பார்த்து நீர் பரிதாபப்பட்டால் நீரே எனக்காக அவளிடம் பேச வேண்டும்:” என்று வேண்டிக்கொண்டாள்.
வனத்தில் இருந்த நீர்வீழ்ச்சியின் அருகில் குந்தி ஸ்நானம் செய்து தலை உலர்த்திக்கொண்டிருந்தாள். பாண்டு அவளிடம் நெருங்கி...
“குந்தி! மாத்ரி மிகவும் விசனப்படுகிறாள். உன்னையும் அவளையும் நான் வேறுவேறாகப் பார்த்ததில்லை. இந்திரன் தேவராஜ்யத்தை அடைந்த பிறகும் கீர்த்திக்காக பல யாகங்கள் செய்தான். மந்திரங்களை அறிந்த பிராமணர்கள் புகழுக்காக பெரியோர்களிடம் படிந்து போகிறார்கள். அவளுக்கு புத்திரபாக்கியம் அளிக்கும் அந்த மந்திரத்தை உபதேசித்து நீயும் பெரும் புகழ் பெறுவாயாக”
பத்துப் பன்னிரெண்டு மரங்களுக்கு அப்பால் நின்றிருந்த மாத்ரியை அங்கே அழைத்தாள் குந்தி. அனுகூலமாக அவளின் தோளில் கைபோட்டு அருவிக்கு அழைத்துச்சென்றாள். ஸ்நானம் செய்துவிட்டு வந்த மாத்ரிக்கு சாஸ்திரோக்தமாக அனுஷ்டானுத்துடன் துர்வாஸஸ் அருளிய அந்த மந்திரத்தை உபதேசம் செய்தாள்.
சயனத்தில் படுத்து அஸ்வினி தேவர்களை மனதில் நினைத்தாள் மாத்ரி. அவர்கள் இருவரும் வந்து அழகில் சிறந்த்வர்களான நகுலன் மற்றும் ஸஹதேவன் என்ற இரட்டையர்களை உண்டு பண்ணினர். அப்போதும் அசரீரி ஒலித்தது.
“இவர்கள் இருவரும் அஸ்வினி தேவர்களுக்கு மேல் தர்மமும், பக்தியும், ஒழுக்கமும் கல்வியும் பலமும் அழகும் குணங்களும் பொருந்தியவர்களாக இருப்பார்கள். இவர்களைவிட அழகானவர்கள் இந்தப் பூமியில் கிடையாது”
இதற்குப் பின் சதஸ்ருங்கமலையில் வசிக்கும் ரிஷிகள் கூட்டமாக பாண்டுவின் குடிலுக்கு வந்து நாமகரணம் செய்தார்கள்.
குந்தியின் ஜ்யேஷ்ட புத்திரனுக்கு யுதிஷ்டிரன் (யுத்தத்தில் புறங்காட்டாதவன்) என்றும் ,நடுவனை பீமஸேனன் (எல்லோரும் பயப்படத்தக்கவன்) என்றும், மூன்றாமவனை அர்ச்சுனன் (சுத்தன் = குற்றமில்லாதவன்) என்றும், மாத்ரியின் புத்திரர்களில் முதலாமவனை நகுலன் (ஸர்ப்பங்களுக்குக் கீரியைப் போல் பகைவர்களுக்குப் பயங்கரமானவன்) இரண்டாமவனை ஸகதேவன் (தாயாரைப் பற்றிய வேற்றுமையின்றி மற்ற ஸகோதரர்களுடன் ஒத்திருப்பவன்) என்று மனமகிழ்ந்து சொன்னார்கள்.
ஒவ்வொரு வருஷத்துக்கு ஒருவராக அனைவரும் பிறந்தார்கள். தேவர்களைப் போல ரூபத்துடன் இருந்தார்கள். மிகுந்த பராக்கிரமசாலிகளான தனது புத்திரர்களைக் கண்டு பாண்டு மிகுந்த உத்ஸாகத்துடனும் திருப்தியாகவும் இருந்தான். அந்த இமயமலைக் குன்றில் இருந்த ரிஷிகளும் ரிஷிபத்னிகளும் பாண்டவர்கள் ஐவரையும் தங்கள் பிள்ளைகளைப் போல வளர்த்தார்கள்.
பாண்டு திரும்பவும் மாத்ரி விஷயமாக குந்தியிடம் வந்து மீண்டும் ஒருமுறை அந்த மந்திரத்தை உபதேசம் செய்ய கேட்டான்.
“மன்னவா! கெட்ட நடத்தையுள்ளவள் மாத்ரி. ஒரு முறை உபதேசித்தால் இரு தேவர்களை வேண்டி இரு பிள்ளைகளைப் பெற்றுக்கொண்டாள். இன்னொரு முறை உபதேசித்தால் அவளிடம் நான் தோற்றுவிடுவேன். இன்னும் இரண்டு பிள்ளைகள் பெற்றுவிடுவாள். தயவுசெய்து என்னை வற்புறுத்தாதீர்கள்” என்று கைகூப்பி ஒதுங்கிக்கொண்டாள் குந்தி.
நாளொரு வண்ணமும் பொழுதொரு மேனியுமாக அந்த ஐவரும் வளர்ந்தார்கள்.
வஸுதேவர் மற்றும் யாதவர்கள் பாண்டுவிற்கு வனத்தில் புத்திரலாபம் ஏற்பட்டதை அறிந்தார்கள். அனைவருக்கும் சந்தோஷம். பின்னர் யாதவர்கள் வஸுதேவரிடம் ‘பாண்டுவின் புத்திரர்களுக்கு ஜாதகர்மம் முதலிய சம்ஸ்காரஙக்ள் செய்வதற்கு நம்முடைய புரோகிதரை வனத்துக்கு அனுப்பவேண்டும்:” என்று சொன்னார்கள்.
ஒரு புரோகிதரை வனத்துக்கு அனுப்ப முடிவு செய்த வஸுதேவர் பொன் வெள்ளி உணவு பதார்த்தங்கள் மற்றும் நிறைய வேலைக்காரிகள் மற்றும் வேலைக்காரர்களையும் அனுப்பினார். அவையெல்லாம் கொண்டு வந்த புரோகிதரை பூஜித்தான். உபநயனம் உபாகர்மா முதலியவை அங்கே செய்விக்கப்பட்டது. உபநயனம் ஆன பின்பு வேதாத்தியயனத்தில் கரைகண்டவர்களாயினர்.
அந்த சதஸ்ருங்கமலை ரிஷிக்கூட்டத்தில் சர்யாதியின் ஜ்யேஷ்ட குமாரனாகிய சுக்ரனும் இருந்தான். கடல்சூழ்ந்த இந்த பூமியை வில்லினால் ஜெயித்தவன் அவன். நூறு அஸ்வமேத யாகங்களைச் செய்தவன். பிதிர்களை குளிர்வித்து இந்த மலையில் காய் கனிகள் புசித்துக்கொண்டு தவமியற்றிக்கொண்டிருக்கிறான். அவன் அந்த பாண்டவர்களுக்கு தனுர்வேதமாகிய வில்வித்தையை பயிற்றுவித்தான். அர்ஜுனன் அதில் மிகவும் சிறப்பாக தேர்ச்சியுற்றான். பீமஸேனனுக்கு கதாயுத்தம் சொல்லிக்கொடுத்து பெரியாளாக்கினான். யுதிஷ்டிரர் ஈட்டியில் தேர்ந்தார். நகுலசகதேவர்கள் கத்தி கேடயங்களில் விற்பன்னர் ஆனார்கள்.
அர்ச்சுனனின் வில்லாற்றலைக் கண்டு பிரமித்த சுக்ரன் “இவன் வில் வித்தையில் எனக்கு சமமானவன்” என்று பாராட்டிவிட்டு பளபளக்கும் பெரிய வில்லையும், கத்தியையும், மஹாஸர்ப்பங்களுக்கு ஒப்பான பிரகாசமுள்ள விபாடம், க்ஷுரம், நாராசம் என்னும் பாணங்களை சந்தோஷத்துடன் அவனுக்குக் கொடுத்தான்.
குருவம்சத்தை விருத்தி செய்பவர்களாகிய பாண்டவர்கள் ஐவரும் திருதராஷ்டிர புத்திரர்கள் நூறு பேரும் ஜலம் நிறைந்த பெரிய தடாகத்தில் தாமரை புஷ்பங்கள் வளருவது போல கொஞ்ச காலத்திற்குள் வளர்ந்தார்கள்.
**
வருடங்கள் உருண்டோடின. அது ஒரு வசந்த காலம். வனம் எங்கும் புஷ்பித்திருந்தது. திரும்பிய பக்கமெல்லாம் பச்சை. வனத்தில் தனியாக சஞ்சரித்துக்கொண்டிருந்த பாண்டுவுக்கு காமம் மேலிட்டது. நடந்து வந்துகொண்டிருந்தான். அப்பொது எதிரே ஸ்நானம் செய்து மெல்லிய வஸ்திரத்துடன் மாத்ரி எதிரில் வந்துகொண்டிருந்தாள்.
மாத்ரியின் எழிலைக் கண்டதும் காமஸுகம் பாண்டுவுக்கு தலைப்பட்டது. உடனே அவளை அருகில் அழைத்து அணைத்துக்கொள்ள முற்பட்டான். மாத்ரி அவனை விடுத்து விலகினாள். அவளை பலாத்காரமாகக் கட்டியணைத்து புணர்ச்சியில் ஈடுபட்டான் பாண்டு. மான் வடிவில் இருந்த கிந்தம முனிவர் கொடுத்த சாபத்தை மறந்தான்.
மாத்ரியை விட்டு எழுந்தவுடன் காலதேவன் அவனது கணக்கை முடித்து அழைத்துக்கொண்டு போனான். மாத்ரி திடுக்கிட்டாள். அவனது பிரதேதத்தின் மீது படுத்து அழுதாள். பின்னர் பெருங்குரலெடுத்து புத்திரர்களைக் கூப்பிட்டாள். காய் கனிகளை பறித்துக்கொண்டிருந்த குந்தியின் காதுக்கு அவளது அழுகுரல் எட்டியது. பதறியடித்துக்கொண்டு குரல் வந்த திக்கில் ஓடினாள். பாண்டவர்கள் ஐவரும் அவள் பின்னாலேயே ஓடினார்கள்.
சற்று தூரத்தில் புல்தரையில் அமர்ந்திருந்த மாத்ரி தென்பட்டாள்.
“புத்திரர்களே நீங்கள் அங்கேயே நில்லுங்கள். நீங்கள் மட்டும் அருகில் வாருங்கள்” என்று குந்தியை அழைத்தாள்.
பக்கத்தில் வந்த குந்தியிடம் நடந்ததை தெரிவித்தாள். பின்னர் இருவரும் பாண்டுவின் பிரேதத்தின் மீது கிடந்து அழுதார்கள். புத்ரர்களும் அருகில் வந்து பார்த்து கண்ணீர் உகுத்தார்கள். ரிஷிகள் ஏற்பாடுகள் செய்ய அந்த வனத்திலேயே பாண்டுவுக்கு யுதிஷ்டிரர் சிதை மூட்டினார். அனைவரும் பார்த்துக்கொண்டிருக்கும் போதே “என்னால் தானே அவருக்கு இப்படி ஆயிற்று” என்று சொல்லிக்கொண்டே மாத்ரி சிதையில் எரியும் தனது பர்த்தாவான பாண்டுவுக்கு நமஸ்காரம் செய்தாள். பின்னர் சடசடவென்று அந்த சிதையுள் இறங்கி தனது உயிரையும் மாய்த்துக்கொண்டாள்.
பதின்ம வயதில் இருந்த பாண்டவர்கள் ஐவரும் குந்தியும் கதறிக் கதறி அழுதார்கள். தீ ஜ்வாலையில் ஐவரின் அழுத முகங்களும் சிவப்பாக பழுத்திருந்தது.