Showing posts with label சந்தனு. Show all posts
Showing posts with label சந்தனு. Show all posts

Friday, March 9, 2018

ஸ்வச்சந்த ம்ருத்யு



சத்தியவதியுடன் அரண்மனை வாசலில் ரதத்தில் வந்திறங்கிய பீஷ்மரைப் பார்த்ததும் சந்தனு திடுக்கிட்டான். நகரமே பீஷ்மரின் பிரதிக்ஞையையும் தியாகத்தையும் பேசிப் பேசி மாய்ந்து போனார்கள்.

தனக்காக தன் பிள்ளை செய்த தியாகத்தை எண்ணியெண்ணி வருந்தினான். துயரத்தின் எல்லைக்குப் போய் அரண்மனை வாசலுக்கும் கங்கைக்கரைக்கும் வனத்திற்கும் விட்டேத்தியாகச் சுற்றித் திரிந்தான். பீஷ்மர் பிதாவுக்கு நன்மை செய்தும் சோகமாக இருக்கிறாரே என்று விஜாரித்து அவரைத் திருப்திப்படுத்தவே இவ்வாறு செய்ததாக அவரிடம் சென்று பேசினான். தனது விரதத்திலிருந்து மாறுவதற்கில்லை என்று கொண்ட கொள்கையில் வைராக்கியமாக இருந்தான்.
பின்னர் சந்தனு ஒருவாறாக தன்னைத் தேற்றிக்கொண்டு சகஜ நிலமைக்கு திரும்பினான். அப்போது ஒரு நாள் தனது மகன் பீஷ்மரை அழைத்து தலையைக் கோதி ஆதரவாக ஒரு வரம் அளித்தான்.
“குற்றமற்றவனே! இப்போது நான் உனக்கு ஒரு வரமளிக்கிறேன். நீ எவ்வளவுநாள் உயிருடன் இருக்க வேண்டும் என்று விரும்புகிறாயோ அவ்வளவு நாள் இருப்பாய். உன்னைக் கேட்காமல் யமன் உன்னை நெருங்கமுடியாது. நீ அனுமதித்தால் மட்டுமே தர்மராஜன் தன் காரியம் செய்வான்”
[இந்த வரத்திற்கு பெயர் ”ஸ்வச்சந்த ம்ருத்யு”]
சத்யவதியின் பூர்வாசிரமம் அறிந்து கொண்ட சந்தனு மிகவும் சந்துஷ்டி அடைந்தான். உபரிசரவஸ் என்ற க்ஷத்ரிய வீரியத்தில் பிறந்தவள் என்பதால் அந்த முறைப்படி அவளை விவாஹம் புரிந்து கொண்டான்.
பீஷ்மர் ராஜ்ஜியம் நடத்த சந்தனு சத்தியவதியின் அந்தப்புரத்திலேயே காலத்தைக் கழித்தான். அவர்களுக்கு சிறந்தபுத்தியும் வீரனுமான சித்ராங்கதன் என்னும் புத்திரன் பிறந்தான். சந்தோஷ நாட்கள் மீண்டும் தொடர்ந்தது. சில வருஷங்கள் கழிந்த பின்னர் விசித்ரவீரியன் என்று இரண்டாவது புத்திரனை பெற்றெடுத்தாள் சத்தியவதி.
விசித்ரவீரியன் யௌவனப் பருவம் அடைவதற்கு முன்பாகவே சந்தனுவின் காலம் முடிந்து ஸ்வர்க்கம் சென்றான். பீஷ்மர் சத்தியவதியின் ஜ்யேஷ்ட புத்திரனான சித்ராங்கதனுக்குப் பட்டாபிஷேகம் செய்து அரியணை ஏற்றினார். பக்கத்தில் அமர்ந்து அவனுக்கு உதவியாக ஹஸ்தினாபுர ஆட்சியை பார்த்துக்கொண்டார். சித்ராங்கதன் நல்ல வில்லாளி. தனது வீரத்தினால் நிறைய அரசர்களை வென்றான்.
சித்ராங்கதன் திக்விஜயம் செய்து பல தேசத்து அரசர்களை பணிய வைக்க கிளம்பினான். அப்போது வனத்தில் அவனது பெயரையேக் கொண்ட ஒரு கந்தர்வராஜன் எதிரில் வந்தான். அவன் சித்ராங்கதனின் பெருமை அறிந்திருந்தான்.
“ராஜகுமாரனே! உனக்கு ஏன் என் பெயரைச் சூட்டினார்கள். என் பெயரில் இன்னொருவன் இருக்கக்கூடாது. ஒன்று உனது பெயரை மாற்றிக்கொள். அல்லது என்னுடன் யுத்தம் செய். யார் ஜெயித்தாலும் ஒருவரே உயிர் வாழ்வோம்” என்று சண்டைக்கு அழைத்தான்.
“எங்கே யுத்தம் செய்யலாம். வா” என்று சீறினான் சித்ராங்கதன்.
“ஹிரண்வதி நதிக்கரையில் இருக்கும் குருக்ஷேத்திரம் வா..”
இருவரும் அங்கே விரைந்தார்கள். பகல் முழுவதும் சண்டையும் இரவில் ஓய்வும் எடுத்துக்கொண்டு மூன்று வருஷ காலங்கள் தொடர் யுத்தம் புரிந்தார்கள். கடைசியில் கந்தர்வராஜன் மாயாஜாலங்கள் புரிந்து சித்ராங்கதனைக் கொன்றான்.
செய்தி பீஷ்மரை அடைந்தது. சத்யவதி கதறினாள். பீஷ்மர் முன்னின்று அவனுக்கு இறுதிக்காரியங்களை நடத்தினார். பின்னர் பருவமே வராத அவனது தம்பியும் சத்தியவதியின் இரண்டாவது புத்திரனான விசித்ரவீரியனுக்கு கௌரவராஜ்ஜிய பட்டாபிஷேகம் செய்தார்.
“பீஷ்மா.. விசித்ரவீரியன் இன்னும் பாலகன் தான். நீதான் அவனுக்கு உதவியாக ராஜ்ய விவகாரங்களை மேற்பார்வையிட வேண்டும்” என்று கேட்டுக்கொண்டாள் சத்தியவதி.
பீஷ்மரின் சிரமேற்கொண்ட மேற்பார்வையில் விசித்ரவீரியன் தனது தகப்பன் பாட்டன் போல ராஜ்ஜியம் ஆள ஆரம்பித்தான். காலம் ஓடியது. விசித்ரவீரியன் யௌவனப் பருவம் அடைந்தான். அவனது விவாஹம் பற்றி பீஷ்மரும் சத்தியவதியும் மற்றும் அரண்மனை புரோகிதர்களும் ஆலோசித்துக்கொண்டிருந்தார்கள். அப்போது அங்கே வந்த ஒரு பிராமணர் “பிதாமகரே! காசி ராஜாவின் மூன்று மகள்களுக்கும் நாளை ஸ்வயம்வரம் நடக்கிறது. அப்ஸரஸுக்கு ஒப்பான அழகு மிக்கவர்கள்” என்றார்.
உடனே ஆலோசனை மண்டபத்தை விட்டு விடுவிடுவென்று வெளியே வந்தார்.
“யாரங்கே! சாரதியை ரதத்தைப் பூட்டச் சொல்..” என்று தேரை எடுத்துக்கொண்டு காசி தேசத்துக்கு விரைந்தார் பீஷ்மர். அரண்மனை மாடத்திலிருந்து தேர் விரைவதைப் பார்த்துக்கொண்டிருந்த சத்தியவதிக்கு பீஷ்மர் மேலிருந்த பாசத்தினாலும் மரியாதையினாலும் கண்களில் நீர் முட்டியது.
***
காசி தேசத்துக்குள் பீஷ்மரின் ரதம் புயலென நுழைந்தது. ஸ்வயம்வரத்துக்காக காசிதேசத்தவர்களும், கோலச தேசத்தவர்களும், வங்க தேசத்தவர்களும், கலிங்க தேசத்தவர்களுமான அரசர்கள் பட்டாடையும் விதம் விதமான அலங்காரங்களுடனும் கூட்டம் கூட்டமாக ஸ்வயம்வரம் நடக்கும் அரண்மனைக்கு சென்று கொண்டிருந்தார்கள். காசிராஜனின் அரண்மனையில் கூட்டம் நெட்டித் தள்ளியது. கிழவயது உள்ள பீஷ்மர் உள்ளே நுழைந்த போது அங்கிருந்தவர்கள் ஆச்சரியமாகப் பார்த்தார்கள். சிலர் வாயைப் பொத்திக்கொண்டு சிரித்தார்கள்.
“நரைப் பருவம் வந்த பின்னர் லஜ்ஜையை விட்டு இந்த பீஷ்மர் இங்கே வந்திருக்கிறாரே!” என்று இருவர் அவர் காதுபட பேசிக்கொண்டே நகர்ந்தார்கள். பீஷ்மர் விறுவிறுவென்று ஸ்வயம்வர மண்டபத்தை நோக்கி முன்னேறினார்.
“ஹே! இவர் ஊருக்காகப் பொய் பிரதிக்ஞை செய்துவிட்டு.. அப்ஸரஸ் போல பெண்களை வரித்துவிடலாம் என்று வந்துவிட்டார். இவர் பிரம்மச்சாரியாம்! “ என்று கேலி பேசி ஒரு கூட்டமாக இருந்த அரசர்களில் சிலர் சிரித்தார்கள். பீஷ்மர் ஒரு முறை அவர்களைக் கோபமாகப் பார்த்துக்கொண்டே ஸ்வயம்வர மண்டபத்தில் முதல் ஆசனத்தில் கம்பீரமாக ஒரு சிங்கம் போல அமர்ந்தார்.
கைகளில் மாலையுடன் மூன்று பெண்களும் சர்வ அலங்காரங்களுடன் அங்கு அமர்ந்திருக்கும் ராஜாக்களைப் பார்த்துக்கொண்டே நுழைந்தார்கள். அங்கு அமர்ந்திருக்கும் அரசர்களின் பெயர்கள் படிக்கப்பட்டது. அதில் முதலாவதாக கிழவரான பீஷ்மர் அமர்ந்திருப்பதைக் கண்டு அம்மூன்று பெண்களும் பயந்தார்கள். அவர் அருகில் அவர்கள் வந்தவுடன் உடனே மூவரையும் கைது செய்வது போல முன்னால் நின்று கொண்டு பீஷ்மர் பெருங்குரலெடுத்துப் பேசத் துவங்கினார்.
“ஹே அரசர்களே! குணமுள்ளவர்களை அழைத்து பொருள் கொடுத்து பெண்களை அவர்களுக்கு விவாஹம் செய்து கொடுக்கும் பிராம்ம விவாஹம் ரிஷிகளால் தர்மசாஸ்திரத்தில் சொல்லப்பட்டிருக்கிறது. இரண்டு பசுக்களைக் கொடுத்து கன்னிகளை மணம் புரிந்து கொள்ளும் ஆர்ஷ விவாஹம் சிலர் செய்கிறார்கள். செல்வமும் பொருளும் வாங்கிக்கொண்டு சிலர் கன்னிகளை ஆஸுரவிவாஹம் செய்துகொடுக்கிறார்கள். இன்னும் சிலர் தனது சாமர்த்தியத்தினால் காந்தர்வ விவாஹத்தில் வரித்துவிடுகிறார்கள்.”
அரசர்கள் கூட்டம் பீஷ்மரது கர்ஜனை போன்ற குரலுக்கு அடங்கிக் கட்டுப்பட்டு அவர் பேசுவதையே கேட்டுக்கொண்டிருந்தது.
“சிலர் தூங்கிக்கொண்டிருக்கும் கன்னிகைகளைத் தூக்கிக்கொண்டு பைசாசவிவாஹம் செய்துகொள்கிறார்கள். இன்னும் சிலர் பெற்றோரின் அனுமதியின் பேரில் பிராஜாபத்யம் என்னும் மணம் புரிகிறார்கள். இன்னும் சிலர் வேதோக்தமான தைவவிவாஹம் செய்துகொள்கிறார்கள். ஆனால் ராஜபுத்திரர்களே எட்டாவதாக சொல்லப்பட்ட ராக்ஷஸ விவாஹமே சிறந்தது என்றறியுங்கள்”
சபையோர் அனைவரும் மலைத்துப்போய் பீஷ்மரின் விவாஹ தர்மங்களீன் பேச்சைக் கேட்டுக்கொண்டிருந்தார்கள். அவரின் சிம்ம கர்ஜனை தொடர்ந்தது...
“பலாத்காரமாக கொண்டு செல்லப்பட்டவளே சிறந்தவள் என்று தர்மசாஸ்திரம் சொல்பவர்கள் கருத்துரைக்கிறார்கள். இதோ.. இப்போது.. இந்த மூன்று கன்னிகைகளையும் எனது இளைய சகோதரனுக்காக கவர்ந்து சென்று ராக்ஷஸ விவாஹம் செய்துவைக்கப்போகிறேன். உங்களில் யாருக்காவது தைரியமும் என்னிடம் யுத்தம் புரியும் வீரமும் இருந்தால் தடுத்துப் பாருங்கள்”
அங்கு அமர்ந்திருந்த ராஜாக்கள் அனைவரும் இருக்கைகளை விட்டு எழுந்துவிட்டார்கள். கூட்டம் சலசலத்தது. உடைவாளை உருவி கையில் எடுத்துக்கொண்டார். மதயானை போன்று அந்த சபையில் அவர் அந்த கன்னிகைகளுடன் சீறிக் கிளம்பிய போது அந்த அரசர்கள் அனைவரும் ஒரு பெரும் யுத்தத்துக்கு தயாராகினர்.
மூன்று கன்னிகைகளுடன் ரதத்தில் ஏறி குதிரைகளைத் தட்டி விட்டார். அசுவங்கள் வேகமாகக் கிளம்பியது. ஸ்வயம்வரத்தில் தாங்கள் தோற்கடிக்கப்பட்டதில் அவமானமடைந்த அரசர்கள் அவர்களது ரதங்களில் ஏறி பீஷ்மரைத் துரத்தினர். ஒரே சமயத்தில் அனைவரும் பீஷ்மர் மேல் அம்புமழை பொழிந்தார்கள். தனது தேரிலிருந்து பின்னால் திரும்பி நின்று கொண்டு பீஷ்மர் அவர்கள் போட்ட் அனைத்து பாணங்களை அழித்தார். பெரும் யுத்தம் நடந்தது.
தேவாசுர யுத்தம் போல நிகழ்ந்ததில் பல ரதங்களையும் கொடிகளையும் கிரீடங்களையும் கீழே தள்ளினார். சில தலைகள் தரையில் உருண்டது. பிரளயகால அக்னிக்கு ஒப்பாக அவர் சண்டையிட்டதில் சிலர் உயிர் பிழைத்தால் போதுமென்று ஓடினர். பின்னர் மீண்டும் தேரை ஹஸ்தினாபுரத்துக்கு செலுத்தினார் பீஷ்மர்.
“நில்...நில்..நில்..” என்று குதிரைகளின் குளம்பொலியையும் மீறி பின்னால் குரல் கேட்டது. ஒரு மரத்தடியில் ரதத்தை மெதுவாக்கித் திரும்பினால் சால்வன் எனும் ஸௌபல தேசத்து அரசன் துரத்தி வந்துகொண்டிருந்தான். பீஷ்மர் சண்டைக்கு தயாரானார். சால்வனின் பின்னால் வந்த சில அரசர்கள் அங்கே இன்னொரு யுத்தம் நிகழப்போகிறது என்றதும் கூடி நின்று வேடிக்கைப் பார்க்கத் துவங்கினர்.
சால்வனுக்கும் பீஷ்மருக்கும் அந்த காசி தேசத்துப் பெண்களின் பொருட்டு பெரும் யுத்தம் நடந்தது. சால்வன் ஆக்ரோஷத்துடன் போரிட்டான். முதலில் லக்ஷக்கணக்கான அஸ்திரங்களை வர்ஷித்தான் சால்வன். “யே சாரதி.. ரதத்தைத் திரும்பு.. இவனுக்கு தகுந்த பாடம் கற்பிக்கிறேன்” என்று சீறினார் பீஷ்மர். அவரின் வீரத்துடன் அவனால் மல்லுக்கு நிற்க முடியவில்லை. பீஷ்மர் வாருணாஸ்திரஸ்த்தைத் தொடுத்து அவனது தேரின் குதிரைகள் நான்கையும் கொன்றார். பின்னர் சால்வனின் சாரதியையும் அம்பெய்து கொன்றார்.
நிலைதடுமாறி சரிந்த ரதத்திலிருந்து கீழே குதித்தான் சால்வன். வில்லும் அம்பும் பீஷ்மரால் முறிக்கப்பட தோளிலும் மார்பிலும் இரத்தம் வழிய நிராயுதபாணியாக நின்றான் சால்வன். பெண்களின் முன்பாக அவனுக்கு எச்சரிக்கை விடுத்து “பிழைத்துப் போ...” என்று திரும்ப அனுப்பினார். ஸ்வயம்வரம் பார்க்க வந்து பீஷ்மரின் யுத்தத்தைக் கண்டு ரசித்த அரசர்களும் தமது தேசங்களுக்குத் திரும்பினர்.
**
பீஷ்மரின் ரதம் ஹஸ்தினாபுரத்திற்குள் நுழைந்த போது அந்தக் கன்னிகைகளை நகர மக்கள் அனைவரும் வேடிக்கை பார்த்தனர். விரைவாக அரண்மனைக்குள் நுழைந்தார். தனது தம்பிக்காக கன்னிகைகளை கவர்ந்து வரும் பீஷ்மரைப் பார்த்து ஆனந்தக் கண்ணீர் வடித்தாள் சத்தியவதி.
விசித்ரவீரியனுக்கு அவர்களை விவாஹம் செய்து வைக்க சத்தியவதியும் பீஷ்மரும் ஆலோசனையில் இறங்கினார்கள். அவர்கள் அமர்ந்திருக்கும் அந்த பெரிய மண்டபத்தினுள் காசி ராஜனின் மூத்த மகள் அலட்சியமாக உள்ளே நுழைந்தாள்.
பீஷ்மரும் சத்தியவதியும் தங்கள் ஆலோசனையை நிறுத்திவிட்டு அவள் பக்கம் திரும்பினர். இடுப்பில் கை வைத்துக்கொண்டு பீஷ்மரை உதாசீனப்படுத்துவதுப் போல பார்த்தாள். என்ன வேண்டும் என்று கேட்க எண்ணிய பீஷ்மர் வாயைத் திறக்காமல் அமர்ந்திருந்தார். சத்தியவதிக்குக் கோபம் வந்தது. அப்போது....

பீஷ்ம....பீஷ்ம...பீஷ்ம....

பருத்த தோள்களும் மதயானை போன்ற நடையும் அநேக ராஜலக்ஷணங்கள் பொருந்திய சந்தனு ராஜநீதியிலும் தர்மத்தையும் வழுவாத ஆட்சி செலுத்திக்கொண்டிருந்தான். [சங்கு போன்ற கழுத்தையுடவன் என்று ஒரு வரி வருகிறது. அதாவது மூன்று ரேகைகளோடு இருக்கும் கழுத்தாம்.] பார்வைக்கு சந்திரனுக்கு ஒப்பாகவும், தேஜஸில் சூரியனுக்கும், வேகத்தில் வாயுவுக்கும், கோபத்தில் யமனுக்கும் பொறுமையில் பூமிக்கும் ஒப்பானவனாக இருந்தான் சந்தனு.
கங்காதேவி தன்னுடைய ஒரு புத்திரனை ஆளாக்கிக் கொண்டு வந்து தருவதாக வாக்குதத்தம் செய்து அழைத்துச் சென்றுவிட்டதால் அதன் நினைவாகவே காலம் கழித்தான். தேவர்களுக்கான யாகமான அக்னிஹோத்ரமும் ரிஷிகள் வேதமோதும் யாகமும் பிதிர்களுக்கு ஸ்ராத்தம் போன்றவைகளும் தங்குதடையில்லாமல் நடைபெற்றது. பெரும்பாலான நேரங்களில் வனத்திலேயே திரிந்துகொண்டிருந்தான் சந்தனு. அரசர்களுக்கெல்லாம் அரசனான அவன் நகரத்தில் இருந்தாலும் இல்லையென்றாலும் அரசாட்சி செம்மையாக நடந்துகொண்டிருந்தது.




புத்திரன் என்று வருவானோ என்கிற ஆசை அவனை வாட்டியது. வனத்திற்கு வேட்டைக்குச் செல்லும்போதெல்லாம் கங்கைக் கரை வரை சென்று கைகட்டி நின்றுகொண்டு அதன் கரைபுரளும் நீரையும் அதன் வேகத்தையும் பார்த்துக்கொண்டு நிற்பான். கங்காதேவி என்று வந்து தன் புத்திரனை ஒப்படைப்பாள் என்று நாள் எதிர்பார்த்துக் காத்திருப்பான். ஒரு வருஷமல்ல.. இரண்டு வருஷமல்ல.. முப்பத்தாறு வருஷ காலங்கள் ஸ்திரீ சம்பந்தம் இல்லாமலேயே வேறு விஷயங்களில் நாட்டத்தைச் செலுத்திச் சீறும் சிறப்புமாக ஆண்டு கொண்டிருந்தான்.
ஒருநாள் மான் வேட்டையாடிக்கொண்டு வனம் புகுந்தவன் சிறிது நேரத்தில் சலிப்புற்று கங்கைக்கரைக்கு குதிரையைச் செலுத்தினான். காற்று முகத்தில் மோதி கேசத்தைக் கலைத்தது. அன்றும் வழக்கம்போல நதியைப் பார்த்துக்கொண்டே நின்றுகொண்டிருந்தான். நெஞ்சில் மகன் நினைவு அலைமோதியது. எப்போதும் கரைபுரளும் கங்கையின் பிரவாகம் குறைந்தது போலத் தோன்றியது. இதென்ன அதிசயம் என்று கரையோரமாகவே சிறிது தூரம் நடந்து சென்றான்.
நல்ல ஆகிருதியான இளைஞன் ஒருவன் அம்புகளால் கங்கைக்கு அணை அமைத்துக்கொண்டிருந்தான். அவன் மின்னல் வேகத்தில் அம்பெடுக்கும் வேகமும் கண்ணிமைக்கும் நேரத்தில் அதை கங்கைக்குள் செலுத்தும் ஆற்றலும் சந்தனுவைப் பிரமிக்க வைத்தது. கரையிரண்டையும் படகில் கடக்கவே பல மணி நேரம் பிடிக்கும். அதை அம்புகள் கொண்டு அணைபோடுகிறான் ஒரு இளைஞன்.
யாரிவன்?
அருகில் சென்று விசாரிக்கலாம் என்று நெருங்கினான். கண்ணிமைக்கும் நேரத்தில் அவனைக் காணவில்லை. ஆச்சரியமாக இருந்தது. அம்புகளுக்கு அடங்கிய கங்கை அன்னநடையில் சென்றுகொண்டிருந்தாள். சந்தனு கரையிலிருந்து கொஞ்சம் நீரின் உள்ளே சென்றான். அவன் மனதிற்குள் அது தன் புத்திரன் தான் என்று அடித்துக்கொண்டது. கண்களை மூடி கங்காதேவியை நினைத்துக்கொண்டான்.
ரூபவதியாக கங்காதேவி தனது கையில் அந்த இளைஞனைப் பிடித்துக்கொண்டு அவனெதிரே கங்கையிலிருந்து எழுந்து வந்தாள்.
“பிரபு! இவன் நம் இருவருக்கும் பிறந்த எட்டாவது புத்திரன். தேவவிரதன்.”
சந்தனுவுக்கு கொள்ளை மகிழ்ச்சி. தன்னிலும் உயரமாகவும் ஆகிருதியாகவும் இருந்த அந்த இளைஞனை ஆரத் தழுவிக்கொண்டான்.
“தேவி! இவன் எங்கே இந்த அஸ்திரவித்தைகளைக் கற்றுக்கொண்டான்? அபாரமாக இருக்கிறதே!”
கங்கைக்குப் பெருமையாக இருந்தது.
“இவன் வசிஷ்டரிடம் வேதம் பயின்றான். பரசுராமரிடம் அஸ்திர பாடங்கள் கற்றுக்கொண்டான். சுக்ராசாரியார் அறிந்தவைகள் அனைத்தும் அறிவான். ப்ருஹஸ்பதியிடம் சாஸ்திரங்கள் கற்றான். ராஜநீதியில் தேர்ந்தவன். ராஜதர்மத்தில் சிறந்து விளங்குவான். இந்திரனுக்கு ஒப்பானவன். தேவர்களும் அசுரர்களும் போற்றுபவனாக திகழப்போகிறவன். இவனை உன் அரண்மனைக்கு அழைத்துப்போ.”
சந்தனு தேவவிரதனை பாதாதிகேசம் பார்த்தான். கண்களில் சுடர் இருந்தது. தோள்கள் யானை தாங்கும் வலிமையில் விரிந்திருந்தது. சூரியனைப் போல தகதகவென்று நின்றிருந்தான். மீண்டும் ஒரு முறை கட்டித்தழுவிக்கொண்டான். பின்னால் நின்றுகொண்டிருந்த கங்கை வந்த வேலை முடிந்ததென்று தண்ணீருக்குள் இறங்கி கலந்து மறைந்து ஓடினாள்.
அரண்மனைக்கு அழைத்துவந்தான். மன்னன் வெகுநாட்களுக்குப் பிறகு சந்தோஷத்தில் திளைப்பதில் அரண்மனை ஒளி பெற்றது. கோயிலெங்கும் லட்சதீபம் ஏற்றப்பட்டது. ஹஸ்தினாபுரம் விழாக் கோலம் பூண்டு இந்திரபுரி ஆனது. சந்தனு தேவவிரதனுக்கு யுவராஜா பட்டாபிஷேகம் செய்தான்.
தேவவிரதன் தன் தந்தையைக் காட்டிலும் நீதியிலும் நேர்மையிலும் வீரதீரபராக்கிரமத்திலும் மிகுந்திருந்ததால் குடிமக்கள் கவலையற்று இருந்தார்கள். நாடு சுபிக்ஷமாக இருந்தது. இப்படியாக நாலு வருஷங்கள் நாலு கணங்கள் போலக் கடந்தது.
அரசாங்கத்தை புத்திரன் தேவவிரதன் கவனித்துக்கொள்ள யௌவனம் ததும்பும் இளவரசன் போல சுற்றித் திரிந்தான் சந்தனு. திரும்பவும் துடிப்புடன் வனத்திற்கு வேட்டையாடச் சென்றான். இம்முறை குதிரையில்லாமல் சாரதியோடு ரதமேறிச் சென்றான். பின்னர் அங்கே யமுனை ஆற்றங்கரைப் பக்கம் ரதத்தைச் செலுத்தக் கட்டளையிட்டு மெதுவாக வந்துகொண்டிருந்தான். எங்கிருந்தோ மூக்கைத் துளைக்கும் சுகந்தம். அதுவரை அப்படியொரு மணம் அவன் வாழ்க்கையில் அனுபவித்ததில்லை.
எதனோடும் ஒப்பிடமுடியாத அந்த வாசம் வீசும் இடம் நோக்கி ரதத்தை ஓட்டச் சொன்னான். அங்கு தேவதை போல ஒரு செம்படவப் பெண் ஓடத்தின் அருகில் அமர்ந்திருந்தாள். அவளது அழகில் ஒரு கணம் தடுமாறினான் சந்தனு. ரதத்திலிருந்து இறங்கினான். சாரதி ராஜா பேசுவது காதுகளுக்கு எட்டாத தூரம் ரதத்தை விட்டு நடந்து சென்றான். கண்ணுக்கும் நாசிக்கும் விருந்தளித்தவளின் குரலைக் கேட்டு காதுகளுக்கு அமுதூற்ற ஆசைப்பட்டான்.
“அழகியே! நீ யார்? எதற்காக இங்கே அமர்ந்திருக்கிறாய்?”
“நான் செம்படவப் பெண். என்னுடைய தந்தை செம்படவர்க்கு அரசன். அவரது கட்டளையின் பேரில் நான் இங்கு ஓடம் நடத்துகிறேன்.” என்றாள் பணிவாக.
இனிமையான குரல் கேட்டு அவனது காதுகளுக்கு மோட்சம் கிடைத்தது.
உடனே அவளுடைய இருப்பிடம் கேட்டு தெரிந்துகொண்டான். சாரதியை ரதத்தை அவளது வீட்டுக்கு விடச்சொனான். நேரே செம்படவ ராஜனிடம் சென்று அவளை தனக்கு மணம் முடித்துக்கொடுக்கக் கேட்டான். வயது போன ராஜா ஆசையில் வெட்கமறியாது கேட்டான். முப்பத்தாறு வருடங்கள் ஆசையற்று இருந்தவனை சுண்டி இழுத்தாள் அந்த செம்படவப் பெண்.
”அரசே! பெண்ணாகப் பிறந்தவளை ஒருவனுக்குக் கொடுக்க வேண்டும் என்பது அவள் ஜனித்தவுடனேயே நிச்சயிக்கப்படுகிறது. ஆனால்...”
“என்ன ஆனால்?” ஆசை அவனை அவசரவசரமாக ”ஆனால்” கேட்க வைத்தது.
“எனக்கு ஒரு விருப்பம் இருக்கிறது. அதை நிறைவேற்றினால்... அதற்கு தாங்கள் ஒத்துக்கொண்டால் இவளை உமக்கு மணம் முடித்துவைப்பதில் தடையேதுமில்லை...” என்றான் உறுதியாக.
“தாசராஜனே! உன்னுடைய விருப்பத்தைச் சொல். என்னால் அதை நிறைவேற்றமுடியுமென்றால் மேலும் பேசலாம். இல்லையென்றால் நான் சென்றுவிடுவேன்... ம்.. சொல்...” ராஜாவுக்கே உரிய பாணியில் கர்ஜ்ஜனையாகக் கேட்டான்.
”உமக்கு ஏற்கனவே ஒரு புத்திரன் இருக்கிறான். ஆனால் இவளது வயிற்றில் பிறக்கும் புத்திரனுக்குதான் உமக்குப் பின் ராஜ்ஜியம் ஆளும் உரிமையைத் தர வேண்டும்” என்றான் தீர்க்கமாக.
சப்தநாடியும் அடங்கிப்போனான் சந்தனு. வேறெதுவும் பேசவில்லை. ஏற்கனவே மன்மதன் மலர் அம்பு வீசி அவனது மனதைத் தைத்திருந்தான். செம்படவப்பெண்ணின் சௌந்தர்யமான முகம் மனக்கண்ணில் வந்து வந்து மறைந்தது. தாபம் தலைக்கு மேலே ஏறியது. பித்து நிலையில் குதிரை ஏறி அரண்மனை திரும்பினான் சந்தனு.
பகலும் இரவும் செம்படவப் பெண்ணின் நினைவாகவே இருந்தான் சந்தனு. சாப்பிடப் பிடிக்கவில்லை. வேட்டைக்குப் போகவில்லை. பகல்நேரத்திலேயே பஞ்சணையிலிருந்து எழுந்திருக்காமல் படுத்துக்கிடந்தான். எதிலும் எண்ணம் செல்லாமல் திண்டாடினான். தேவவிரதன் இதை கூர்ந்து கவனித்துக்கொண்டிருந்தான். பிதா சோகமாக இருப்பது அவனுக்கு சஞ்சலம் ஏற்படுத்தியது.
“பிதாவுக்கு வந்தனம்! நாட்டில் மும்மாரி பொழிந்து வளமாகயிருக்கிறது. எதிரி ராஜாக்கள் நம்மிடம் சண்டை வைத்துக்கொள்ள பயப்படுகிறார்கள். எல்லா வர்ணத்தவரும் ஒருவருக்கொருவர் அன்பாயிருக்கிறார்கள். எங்கும் சுபிக்ஷமாக இருக்கும் இத் தருணத்தில் நீங்கள் ஏன் வருத்தமுற்று இருக்கிறீர்கள்? என்னால் உங்கள் சோகத்தை தீர்க்க முடியும் என்றால் என்னிடம் சொல்லுங்கள். இக்கணமே நிறைவேற்றுகிறேன்”
சந்தனு தன்னுடைய பெண்ணாசையை பெற்ற மகனிடம் எப்படி உரைப்பது என்று தயங்கினான். அது தகாது என்றும் உணர்ந்தான். பின்னர்..
“தேவவிரதா! என் கவலைக்குக் காரணம் நீதான்.” என்றான்.
தேவவிரதனுக்கு தூக்கிவாரிப் போட்டது. பிதாவின் கவலைக்குத் தான் காரணமா என்று பதைபதைத்து “நானா?” என்று அதிர்ச்சியாய்க் கேட்டான்.
“ஆமாம். நமது பரந்த குலத்திற்கு நீ தனியொருவனாய் இருக்கிறாய். தர்மசாஸ்திரங்கள் ஒரேயொரு புத்திரன் இருப்பதும் இல்லாமல் இருப்பதும் ஒன்றுதான் என்று சொல்கின்றன. புத்திர சந்தானத்தில்தான் பிதிர் கடன் தீர்க்கப்படுகிறது. கங்காபுத்திரனே! உனக்கு எதாவது அபாயம் வந்தால் நமது குலம் நாசமடைந்துவிடும். உனக்கு போர் செய்வதில் அபார பிரியம் இருக்கிறது. அப்போது உனக்கு எதாவது கெடுதி நேர்ந்துவிட்டால் என்ன செய்வது என்கிற வருத்தம் என்னை வாட்டுகிறது” என்று பூடகமாகச் சொன்னான் சந்தனு.
தேவவிரதன் இந்த பதில்களால் சமாதானமடையவில்லை. என்றிலிருந்து தந்தை இதுபோல இருக்கிறார் என்று யோசித்தான். பின்னர் அந்த குறிப்பிட்ட தேதியைக் கண்டறிந்து அன்று அவருடன் எந்த சாரதி தேரோட்டிச் சென்றான் என்று கேட்டான். அந்த சாரதியைக் கூப்பிட்டு பேசினான்.
“என் தந்தையுடன் நீதான் கடைசியாக தேரோட்டிச் சென்றாய்? அவர் ஏன் இப்படி இருக்கிறார்? ஏதாவது நடந்ததா சொல்?” என்றான்.
அன்று யமுனா நதிதீரத்தில் நடந்த அனைத்தையும் ஒன்றுவிடாமல் சொன்னான் அந்த சாரதி.
“ராஜாவுக்கு அந்தப் பெண்ணிடத்தில் விருப்பம் இருக்கிறது. அந்த விருப்பம் நிறைவேறாது என்பதினால் தாபமடைந்திருக்கிறார்” என்று கைகட்டி நின்று சொன்னான்.
“நீ போகலாம்” என்று அவனை அனுப்பிவிட்டு பிதாவின் சோகத்தைக் களைவதற்கு தயாரானான் தேவவிரதன்.
வெண்ணிறப் புரவியில் ஏறி நேரே அந்த யமுனைக்கரையோரம் அமைந்திருந்த செம்படவர்களின் இருப்பிடத்துக்கு சென்றான். யுவராஜா வரும் செய்தி கேட்டு அவன் வாசலில் வந்து நின்று மரியாதைகள் செய்து வந்தனம் சொல்லி வீட்டிற்குள் அழைத்துச் சென்றான்.
“தாசராஜனே! உனது கன்னிகையை எனது பிதாவுக்கு மணமுடித்துக் கொடு” என்று நேரடியாகக் கேட்டார். குரலில் அரச தொணி நிறைந்திருந்தது. பிதாவுக்கு புத்திரன் பெண் கேட்டதை அவன் ஆச்சரியம் கலந்த அதிர்ச்சியோடு பார்த்தான்.
“இவளுக்குப் பிறக்கும் புத்திரன் தான் உமது பிதாவுக்குப் பிறகு ராஜ்ஜியம் ஆள வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். அப்படியென்றால் ராஜாவுக்கு என் பெண்ணை மணம் முடித்துத் தருவதில் ஆட்சேபணையில்லை.” என்றான் செம்படவராஜன் திட்டவட்டமாக. சத்தியவதியை அருகில் வந்து நிற்கச் சொன்னான்.
தேவவிரதன் மௌனமாக இருந்தார். நதிக்கரையிலிருந்து புறப்பட்ட காற்று வீசு செம்படவக் குடிசைகள் சடசடத்தன. அந்த மௌனத்தைக் கலைத்து மீண்டும் தாசராஜன் பேச ஆரம்பித்தான்.
”இந்த சத்தியவதி என் போன்ற செம்படவனின் மகளல்ல. உம்மைப் போன்ற க்ஷத்திரியர்களின் குணங்கள் நிரம்பியவள். இவளது தந்தை உபரிசரவஸ் ஏற்கனவே உமது தந்தையைப் பற்றிச் சொல்லி “தர்மவானான அந்த அரசன் இவளை விவாஹம் செய்துகொள்ள தகுதியுள்ளவன்” என்று சொல்லியிருக்கிறார். கந்தர்வர்கள், தேவர்கள் ,அஸுரர்கள் என்று எவராகயிருந்தாலும் யுத்தத்தில் ஜெயிக்கும் திறன் படைத்த நீர் இருக்க இவளுக்குப் பிறக்கப்போகும் வாரிசுகளுக்கு ராஜ்யபலன் இல்லாமல் போகும்.. அதனால்...” என்று மஞ்சளடர்ந்த பற்கள் தெரிய சிரித்தான் அந்த தாசராஜன்.
பக்கத்தில் தலைகுனிந்து நின்றிருந்தாள் சத்யவதி.
தேவவிரதன் உடனே “இப்போது சொல்கிறேன். இது சத்தியம். இவளுக்குப் பிறக்கப்போகும் புத்திரனே ராஜ்ஜியம் ஆள்வான்.” என்று உறுதி கூறிவிட்டு சத்தியவதியைக் கூட்டிக்கொண்டு அரண்மனை போகத் தயாரானார்.
செம்படவனின் இன்னும் தயங்கினான்.
“இன்னும் என்ன வேண்டும் உனக்கு? என் மீது நம்பிக்கையில்லையா?” குரலை உயர்த்தி கடுகடுப்பாகக் கேட்டார் தேவவிரதன்.
“இல்லை பிரபோ! உம்மீது நம்பிக்கை உள்ளது. நீர் சத்தியம் தவறாதவர். தர்மவான். சொன்ன சொல்லை காப்பாற்றுவீர். ஆனால் பிற்காலத்தில் உமக்குப் பிறக்கும் சந்ததியினர் இந்த ராஜ்ஜியத்திற்காக சண்டையிட மாட்டார்கள் என்பது என்ன நிச்சயம்?” என்ற பெருங் கேள்வியையும் சந்தேகத்தையும் எழுப்பினான்.
செம்படவத் தரப்பிலிருந்த பெரியவர்கள் அவன் கேள்வியில் சற்றே கோபமுற்றார்கள். ராஜ சம்பந்தம் கிடைத்தும் பிடிவாதம் செய்கிறானே என்று வருந்தினார்கள்.
அப்போது யாருமே எதிர்பாராத வகையில் தேவவிரதர் அங்கே ஒரு பிரதிக்ஞை செய்தார்.
“இங்குள்ள எல்லோரும் கவனமாகக் கேட்டுக்கொள்ளுங்கள். இப்போது நான் ஒரு சத்தியம் செய்கிறேன். இங்குள்ள ரிஷிகளும் தேவர்களும் கண்ணுக்குத் தெரியாமல் இருக்கும் பூதங்கள் அனைத்தும் கேட்டுக்க்கொள்ளட்டும். நான் இந்த தேகம் உள்ள வரைக்கும் பிரம்மச்சாரியாகவே இருப்பேன். விவாஹம் செய்துகொள்ள மாட்டேன். இந்திரியம் அடக்குவேன். வீரியத்தை வெளியில் விடேன். புத்ரோற்பத்தி செய்ய மாட்டேன். பெண் கலவியை விடுகிறேன். இது சத்தியம். நீ உன் கன்னிகையை என் தந்தைக்குக் கொடு” என்றார்.
அவரது அந்த சத்தியத்தைக் கேட்ட செம்படவராஜனும் அவனது கூட்டமும் மயிர் சிலிர்த்தார்கள்.
”கொடுத்தேன்.. கொடுத்தேன்” என்றான் சத்தியவதியின் தந்தை படபடப்பு அடங்காமல்.
இந்த பயங்கர விரதத்தினால் பஞ்சபூதங்களும் நடுங்கின. விண்ணில் கண்ணைப் பறிக்கும் ஒரு ஒளி பிரகாசமாகத் தோன்றியது. அதிலிருந்து “பீஷ்ம.. பீஷ்ம...பீஷ்ம...” என்று அசரீரி ஒலித்தது. உடனே தேவர்களும் அப்ஸரஸுகளும் ரிஷிக்கூட்டங்களும் ஆகாயத்திலிருந்து மலர்மாரி பொழிந்தார்கள்.
தலையில் மலர்கள் விழுந்த கோலத்தோடு அங்கே தனது பிதாவின் அருகில் ஒதுங்கி நின்ற சத்தியவதியை நோக்கி “தாயே! தேரில் ஏறுங்கள். நம்முடைய இல்லம் செல்வோம்” என்று அழைத்தார்.
ஹஸ்தினாபுரம் நோக்கி புழுதி பறக்க ரதம் விரைந்தது. ரதம் கண்ணிலிருந்து மறையும்வரை செம்படவர்கள் அது செல்லும் திக்கையே பார்த்துக்கொண்டு அங்கேயே நின்றார்கள்.
**
அடிக்குறிப்புகள்:
1.தாசன் - செம்படவன் என்று குறிக்கப்படுகிறது. தாசராஜன் - செம்படவ ராஜன்
2. பீஷ்மர் - யாரும் பயப்படத்தக்கவர்; பயங்கர விரதத்தை மேற்கொண்டவன்.

Saturday, December 16, 2017

வஸுக்களுக்கு வசிஷ்டர் இட்ட சாபம்

”கங்காதேவி உனது புத்திரனை நான் பர்த்தாவாக அடையப் போகிறேன்” என்று மறைந்து போன பெண்ணையே நினைத்துக்கொண்டு அரண்மனை சென்றான் பிரதீபன். ஏற்கனவே வயதாகியிருந்த பிரதீபனும் அவனது மனைவியும் புத்திரனை விரும்பி தவம் இருந்தார்கள்.

பிரதீபனின் பாரியை கர்ப்பமுற்றாள். பத்தாவது மாதத்தில் குழந்தை பிறந்தது. மஹாபிஷக் அவர்களுக்கு புத்திரனாகப் பிறந்தான். பிரதீபனுக்கு முதுமையில் அந்தக் குழந்தை பிறந்ததால் சந்தனு என்று அழைக்கப்பட்டான். (சம்=சாந்தமானபோது; தனு=உண்டாக்கப்பட்டவன்). தனுர்வேதத்திலும் வேதங்களிலும் உயர்ந்த ஞானத்தை அடைந்தான். யௌவனம் எட்டினான்.

வெற்று மார்போடு கங்கைக்கரையில் நின்றுகொண்டிருந்தான் பிரதீபன். சந்தனு ஒரு தேரில் வந்து இறங்கினான். பக்கத்தில் கங்கை பிரவாகமாக ஓடிக்கொண்டிருந்தது.

“சந்தனு...” என்று அழைத்தான் பிரதீபன். ஆகிருதியானவன் அருகில் வந்து கைகட்டி நின்றான்.

“ஒரு நாள் நான் இதே கங்கைக்கரையில் நான் ஓய்வாக அமர்ந்திருந்தபோது ஒரு தேவலோகத்துப் பெண் வந்தாள். அவள் உனது ஸ்ரேயஸ்ஸுக்காகவும் புத்திரனை பெற வேண்டியும் உன்னிடம் வந்தால் நீ யார்? யாருடைய பெண்? என்றெல்லாம் கேட்காதே. அவள் எந்தக் காரியம் செய்தாலும் அவளை நீ கேள்வி கேட்காதே. இதை என் கட்டளையாக ஏற்றுக்கொள். அவளை திருமணம் புரிந்துகொள்”

இருவரும் அரண்மனை திரும்பினார்கள். பிரதீபன் சந்தனுவிற்கு பட்டாபிஷேகம் செய்து வைத்தான். அடுத்த முகூர்த்தத்தில் அவனும் பாரியாளும் வானபிரஸ்தம் கிளம்பினார்கள். சந்தனு சிறப்பாக ஆட்சி செலுத்திக்கொண்டிருந்தான். பிரஜைகள் கவலையின்று வாழ்க்கை நடத்தினார்கள். எல்லோருக்கும் பாதுகாப்பாக இருந்தான்.

ஒரு சமயம் தனிமையில் கங்கைக்கரையோரம் நடந்துகொண்டிருந்தான். அப்போது அவனெதிரே உத்தம ஸ்திரீ ஒருத்தி வந்தாள். மெல்லிய ஆடை அணிந்திருந்தாள். முத்துக் கோர்த்தாற்போல பற்கள். சிவந்த அதரங்கள். மின்னலிடை. அன்னநடை. கடைக்கண் பார்வை கட்டி இழுத்தது. அவனை அடித்துப்போட்ட அழகு. அவள் மீது வைத்த கண்ணை எடுக்காமல் பார்த்தான் சந்தனு. நேரம் ஆகிக்கொண்டே இருந்தது

அப்ஸரஸ் போலிருந்த கங்கையும் இவனை விழுங்கிவிடுவது போல பார்த்துக்கொண்டேயிருந்தாள். எவ்வளவு நேரம் அப்படி ஒருவரை ஒருவர் குடித்துவிடுவது போல பார்த்தார்கள் என்று கணக்கில் இல்லை. கடைசியில் சந்தனு மௌனத்தைக் கலைத்து

”அழகான இடையுள்ளவே! நீ அப்ஸரஸா? அஸுரப்பெண்ணா? கந்தர்வப்பெண்ணோ? மானிடப் பெண்ணா? நாக கன்னிகையா? நீ யாராக இருந்தாலும் பரவாயில்லை. எனக்கு மனைவியாகிவிடு. என் தனம் உயிர் இரண்டும் உனக்கு சமர்ப்பணம்”

கங்காதேவி மகிழ்ந்தாள். அவளது உதடு சுழிப்பிலும் பற்கள் தெரிய சிரித்ததிலும் மயங்கினான் சந்தனு.

“ராஜாவே! நீயோ மற்றவர்களோ எந்த வழியிலும் என்னைப் பற்றித் தெரிந்துகொள்ள ஆர்வம் காட்டக்கூடாது. நல்லதோ கெட்டதோ... நான் என்ன செய்தாலும் அதை கேள்வி கேட்கக்கூடாது. தடுக்கக்கூடாது. இப்படியிருந்தால் நன் உன்னுடம் இருப்பேன். இதை மீறும் பொழுது உன்னை விட்டுச் சென்றுவிடுவேன். இதற்கு சம்மதமா?” என்று கேட்டாள்.

இரு கண்களையும் காமத்தைக் குழைத்துச் சேர்த்த காதல் மறைத்தது. எல்லாவற்றுக்கும் சரி என்பதைப் போல தலையாட்டினான்.

“உன் பிதாவினால் நான் அங்கீகரிக்கப்பட்டிருக்கிறேன். என்னுடைய நிபந்தனைகளை ஏற்றுக்கொண்டாய். உன்னை நான் பர்த்தாவாக அடைகிறேன்” என்று சந்தனுவுடன் கரம் கோர்த்தாள். பக்கத்திலிருந்த கங்கை ஒரு முறை பொங்கி அடங்கியது போலிருந்தது.

கைபிடித்த கங்காதேவியை தேரில் ஏற்றிக்கொண்டு நகரத்திற்கு விரைந்தான் சந்தனு. மனிதரூபம் எடுத்துள்ள கங்காதேவியுடன் களித்திருந்தான். எப்போதும் அவளது காலடியிலேயே தவம் இருந்தான். அவளும் புணர்ச்சியினாலும் முகமலர்ச்சியினாலும் தினமும் விளையாடி சந்தோஷிக்கச் செய்தாள். அவளது குணங்களினால் ஈர்க்கப்பட்டு சந்தனு போகத்திலேயே திளைத்திருந்தான்.

ருதுஸ்நானம் கழிந்து சந்தனுவுடன் கலந்து கர்ப்பமுற்றாள். நகரமே பட்டமஹிஷியின் பிள்ளைப் பேறு பற்றிப் பேசியது. பிறக்கும் நாளன்று விழா எடுத்துக் கொண்டாட தயாரானது. அழகான ஆண் குழந்தை பிறந்தது. சேடிப்பெண்கள் ஓடிப்போய் சந்தனுவிடம் விஷயம் சொல்லி அந்தப்புரத்துக்குள் அழைத்து வருவதற்குள் குழந்தையின் குரல்வளையைப் பிடித்து அப்படியே தூக்கிச்சென்று கங்கையில் வைத்து அழுத்திக் கொன்று விட்டாள்,.

இதைக் கேள்விப்பட்ட சந்தனு செய்வதறியாது திகைத்தான். இவள் பேயா? பெண்ணா? என்று சந்தேகித்தாலும் அவளிடம் ஏன்? யார்? என்று கேட்டால் தன்னை விட்டுப் போய்விடுவாளோ என்று அஞ்சி வாய்பொத்தி பேசாதிருந்தான். காமம் கண்ணை மறைத்தது.

ஒவ்வொரு முறையும் குழந்தை பிறந்தது என்பார்கள், சந்தனு ஓடிப்போய் பார்ப்பதற்குள் கங்கையில் குழந்தையை விட்டுவிட்டு வந்திருப்பாள். சந்தனுவைப் பார்த்தால் ஓடி வந்து கட்டிக்கொள்வாள். ஆனால் சந்தனுவால் ஏனிப்படி செய்தாய்? என்று கேட்க அச்சமாக இருந்தது.

இது போல ஏழு முறை நடந்தது.

எட்டாவது பிள்ளை பிறந்தது. இவள் அதைக் கொல்ல குரல்வளை நோக்கிக் கையைக் கொண்டு போன போது சந்தனு உள்ளே வந்தான்.

“கொல்லாதே! நீ யார்? பெற்ற பிள்ளைகளையே கொல்கிறாயே பாதகி... உன்னை பாபம் வந்து சேரட்டும்” என்று சத்தம் போட்டான்.

“நாம் செய்துகொண்டிருந்த ஒப்பந்தத்தை மீறிவிட்டாய். நாம் இனி சேர்ந்து வாழ முடியாது. நான் கிளம்புகிறேன்”

“சற்று நேரம் நில்! இவ்வளவு நாட்களாக உன்னிடம் கேட்கவேண்டும் என்று துடித்துக்கொண்டிருந்தேன். இப்போதாவது பதில் சொல்லிவிட்டுப் போ. நீ யார்?”

“ராஜாவே! நான் ஜன்ஹு மஹரிஷியின் புத்ரி. கங்கை.”

“எதற்காக குழந்தைகளைக் கொன்றாய்? அந்த பாபக் காரியத்தை ஏன் செய்தாய்?” கேட்டபோது சந்தனுவின் மீசை துடித்தது. நா தழுதழுத்தது.

“அவர்கள் அனைவரும் தேவர்கள். மிகுந்த புண்ணியமும் சக்தியும் கொண்ட அஷ்ட வஸுக்கள். வசிஷ்டருடைய சாபத்தால் மனுஷ்யர்களாகப் பிறந்தார்கள். சாப நிவர்த்திக்காக அவர்கள் என்னிடம் கர்ப்பவாஸம் செய்தார்கள். அவர்களைப் பெற்றதினால் நீயும் அழியா லோகங்களை ஜெயித்தாய். இந்த புத்திரனை கங்காதத்தன் என்று வளர்ப்பாயாக!”

“எட்டு வசுக்களில் எழுவர் சாபம் நீங்கிச் சென்றுவிட்டார்கள். எட்டாவதாகப் பிறந்த இவன் மட்டும் ஏன் மேலுலகம் செல்லவில்லை?”: என்று கேட்டான் சந்தனு.

அரண்மனையின் மேல் மாடத்திற்கு வந்தாள் கங்கை. மன்னன் அவளைப் பின் தொடர்ந்தான். தூரத்தில் கங்காநதி கரைபுரண்டு ஓடிக்கொண்டிருந்தது. அதைப் பார்த்துக்கொண்டே அஷ்டவஸுக்கள் சாபம் பெற்றக் கதையைச் சொல்லத் துவங்கினாள் கங்காதேவி.

“வருணனின் புத்திரர் வசிஷ்டர். அவர் ஆபவர் என்றும் பிரசித்திப் பெற்றார். மேரு பர்வதத்தின் சரிவில் அவரது ஆஸ்ரமம் இருந்தது. வருண புத்திரர் வசிஷ்டர் அந்தச் சரிவில் காய்கனிகள் காய்த்துக் குலுங்கும் நந்தவனத்தில் தவமியற்றிக்கொண்டிருந்தார். தக்ஷ புத்ரி ஸுரபி கஸ்யபரின் மனைவி. அவள் நினைத்தையெல்லாம் கறக்கின்ற சிறந்த பசுவை பெற்றாள். அந்தப் பசுவை தனது ஹோமத்திற்கு தேவைப்படும் பாலைக் கறந்துகொள்வதற்காக வசிஷ்டர் வைத்துக்கொண்டார்.

அந்த தபோவனத்தில் அந்த தேனு சஞ்சரித்துக்கொண்டிருந்தது. அப்போது தேவர்களாகிய வஸுக்கள் அந்தப் பக்கமாக வந்தார்கள். தனது பத்னிகளுடன் அந்த வனத்தில் விளையாடிக்கொண்டிருந்தார்கள். ப்ரபாஸன் என்ற வஸுவின் பத்னி மடி பெருத்து புஷ்டியாக எல்லா வகையிலும் சிறப்பாக இருந்த அந்த தேனுவை அவனிடம் காட்டினாள்.

“எவ்வளவு அழகாக இருக்கிறது!! பார்த்தாலே மனம் கொள்ளை போகிறது” என்றாள்.

“இந்த தேனு வசிஷ்ட மஹரிஷியுடையது. இதன் சுவையான பாலைக் குடித்தால் பதினாயிர வருஷகாலம் யௌவனம் அழியாமல் வாழலாம்”

இதைக் கேட்ட ப்ரபாஸனின் பத்னிக்குக் கண்கள் ஒளிர்ந்தன. முகம் சந்தோஷத்தில் மலர்ந்தது. அவள் ப்ரபாஸனைக் கட்டிக்கொண்டு ஒரு விண்ணப்பம் செய்தாள்.

“இந்த கோவை அதன் கன்றோடு தூக்கிச் செல்ல வேண்டும்” என்றாள்.

“ஏன்?” என்று பதற்றத்துடன் கேட்டான் ப்ரபாஸன்.

“பூலோகத்தில் ஜிதவதி என்று என் தோழி இருக்கிறாள். அழகுக்கு அழகானவள். அவளது யௌவனம் கரையாமல் இருக்க இந்த பசுவையும் கன்றையும் அவளுக்குப் பரிசளித்து மகிழ்வேன்” என்றாள்.

[பெண்டாட்டி சொன்னா தட்டக்கூடாது என்பதில் தேவலோகத்துக் கதையும் விலக்கல்ல.]

ப்ருது என்ற வஸுவும் அவன் சகோதரர்களும் ப்ரபாஸனுக்கு உதவி புரிய களம் இறங்கினார்கள்.

அந்த மேரு பர்வத சரிவில் மேய்ந்துகொண்டிருந்த நந்தினி என்ற தேனுவையும் அதன் கன்றையும் சேர்த்துக் கவர்ந்து கொண்டு வந்து தனது மனைவியிடம் கொடுத்து “உன் ஸ்நேகிதிக்குப் பரிசு” என்று சிரித்தான் ப்ரபாஸன்.

அந்த நந்தவனத்தின் மூலையில் தவம் செய்துகொண்டிருந்த வசிஷ்டர் தவம் முடிந்தவுடன் அங்கே மேய்ந்துகொண்டிருந்த நந்தினியைக் காணாது தவித்தார். பின்னர் தன்னுடைய ஞானதிருஷ்டியினால் அஷ்ட வஸுக்கள் அதைக் கவர்ந்து சென்றதைக் கண்டுபிடித்தார்.

“எனது பசுவைக் கவர்ந்து சென்ற அஷ்டவசுக்கள் அனைவரும் பூலோகத்தில் மானிடர்களாக பிறக்கக்கடவது” என்று சபித்தார்.

வசிஷ்டரால் சபிக்கப்பட்டதை அறிந்து அனைவரும் அடுத்த கணம் அவரது காலடியில் கிடந்தார்கள்.பின்னர் எழுந்து நின்று ப்ருது சொன்னான்

“முனிவரே! நாங்கள் இந்தக் களவுக்குத் துணை போனோம். ஆனால் இதைக் கவர்ந்தது ப்ரபாஸன் என்னும் இவன் தான்.. ஆகையால் எங்களை நீங்கள் உங்கள் சாபத்திலிருந்து விடுவிக்க வேண்டும்” என்றார்கள்.

“என்னுடைய வாக்கு பொய்க்காமல் போகாது. ஆனால் நீங்கள் ஏழு பேரும் மண்ணில் பிறந்ததும் உடனே மேலுலகம் வந்தடைவீர்கள். இந்தப் ப்ரபாஸன் மட்டும் நீண்ட காலங்கள் திருமணம் புரிந்துகொள்ளாமல், ஸ்திரீ போகங்களை விட்டு, தன் தந்தையின் விருப்பங்களை நிறைவேற்றி வைத்து வாழ்வான்” என்று சாபத்தை திருத்தியமைத்தார்.

அந்த வஸுக்கள் மேலுலகத்தில் என்னைப் பார்த்து என் வயிற்றில் பிறப்பதாகவும் அவர்கள் பிறக்கப் பிறக்க ஜலத்தில் வீசியெறிந்து காப்பாற்றும்படியும் வேண்டிக்கொண்டார்கள். அதன்படி நானும் செய்தேன். இவன் ஒருவன் மட்டும் இந்தப் பூமியில் வெகுகாலம் ஜீவித்திருப்பான். இப்போது இவனை நான் எடுத்துச்செல்கிறேன். இவன் பெரியவனானதும் உன்னிடம் வருவான்.நானும் நீ அழைத்தால் மீண்டும் உன் முன் தோன்றுவேன்”

கங்காதேவி கதையைச் சொல்லிவிட்டு அந்தக் குழந்தையும் தூக்கிக் கொண்டு கங்கையில் இறங்கினாள். அப்படியே நீரோடு கரைந்து கலந்து மறைந்துபோனாள்.

சந்தனு எல்லாவற்றையும் இழந்துவிட்டோம் என்ற ஸ்திதியில் உறைந்து போய் அங்கேயே நின்றிருந்தான். கங்கையின் வேகமான நீரோட்டத்தினால் அங்கே இரைச்சல் நிரம்பியது.


#ஸ்ரீவியாஸ_பாரதம்
#மஹாபாரதம்
#ஆதிபர்வம்
#சந்தனு
#கங்காதேவி
#ஸம்பவபர்வம்
#பகுதி_40